Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி இட ஒதுக்கீட்டிற்கு பிறகு விமர்சனங்களை கடந்து சிகரம் தொட்ட வரலாறு
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டெம்பா பவுமாஎழுதியவர், க. போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
“உலகை மாற்றும் சக்தி, ஊக்கமளிக்கும் சக்தி விளையாட்டுக்கு இருக்கிறது. வேறு எதையும் விட மக்களை ஒன்றிணைக்கும் சக்தி விளையாட்டுக்கு இருக்கிறது. விரக்தி மட்டுமே இருக்கும் இடத்தில் விளையாட்டு நம்பிக்கையை விதைக்கும். விளையாட்டு, மக்களை ஊக்குவிக்கவும் ஒன்றிணைக்கவும் வேண்டுமென்றால், அது முதலில் அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.”
– இது தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர், நோபல் பரிசு வென்ற நெல்சன் மண்டேலாவின் வார்த்தைகள்.
கிரிக்கெட் என்பது 11 பேர் ஆடும் விளையாட்டு. இதில் திறமையுள்ள அனைத்து தரப்பினருக்கும் சமமான வாய்ப்பு வழங்கினால்தான் அது “ஜென்டில்மேன் கேமாக” இருக்க முடியும்.
தென் ஆப்ரிக்காவில் நிறவெறி
தென் ஆப்ரிக்காவில் 1991-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை நிலவிய நிறவெறி காரணமாக அந்த அணியே சர்வதேச கிரிக்கெட்டில் தடை செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு கிரிக்கெட்டில் தடம் பதித்த தென் ஆப்ரிக்கா தான் விளையாடிய முதல் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்டிலேயே சிறப்பாக ஆடி அரையிறுதி வரை முன்னேறியது. இங்கிலாந்துக்கு எதிரான அந்த அரையிறுதியில்தான் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற 13 பந்துகளில் 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆட்டம் மழையால் தடைபட, பின்னர் அந்த இலக்கு ஒரு ரன்னில் 21 ரன்கள் என்று மாற்றியமைக்கப்பட்டது சர்ச்சையாகி இன்று வரையிலும் பேசப்படுகிறது.
பட மூலாதாரம், Craig Golding/Fairfax Media via Getty Images
படக்குறிப்பு, 1992 ஒருநாள் உலகக்கோப்பையில் இங்கிலாந்து – தென் ஆப்ரிக்கா அரையிறுதி ஆட்டத்தில் ஒரு காட்சி. அதுமுதல் கிரிக்கெட் உலகில் தென் ஆப்ரிக்கா வலுவான அணியாக வலம் வந்தாலும் கூட நாக் அவுட் என்றாலே அந்த அணி நெருக்கடிக்குள்ளாகி கோட்டை விட்டு விடுகிறது. லீக் ஆட்டங்களில் அனைத்திலுமே வென்றிருந்தாலும் கூட, ஐசிசி தொடர்களின் அரையிறுதி, இறுதிப்போட்டிகளில் முற்றிலும் வேறு விதமாக ஆடி தொடரை விட்டே வெளியேறிவிடுவது வாடிக்கையாகவே தொடர்ந்தது. அதனால்தான், அந்த அணி ‘சோக்கர்ஸ்’ (chokers) என்ற பெயரையும் பெற்றது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
மறைந்த ஹன்சி குரோனியே தலைமையில் கடந்த 1998ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றபின் 27 ஆண்டுகளாக தென் ஆப்ரிக்கா அணி ஐசிசி கோப்பைக்காக காத்திருந்தது. அந்த கனவை 27 ஆண்டுகளுக்குப் பிறகு கருப்பினத்தைச் சேர்ந்த டெம்பா பவுமா கேப்டனாகி உலகக்கோப்பையையே அந்த அணிக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.
டி20, ஒருநாள், டெஸ்ட் என சர்வதேச அளவில் ஆடப்படும் மூன்று வகை கிரிக்கெட்டிலும் டெஸ்ட் வெற்றிகளே மிகவும் மதிப்பு வாய்ந்தவையாக கிரிக்கெட் நிபுணர்களால் கருதப்படுகிறது. அந்த டெஸ்டில் உலக சாம்பியனாக, அதுவும் கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சாதித்திருப்பது தனிச்சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பட மூலாதாரம், Craig Prentis /Allsport
படக்குறிப்பு, 1999 உலகக்கோப்பை சூப்பர் சிக்ஸ் சுற்றில் தென் ஆப்ரிக்கா – ஆஸ்திரேலியா ஆட்டம் டை ஆனது.தென் ஆப்ரிக்காவில் கிரிக்கெட் வந்தது எப்படி?
தென் ஆப்ரிக்காவின் பூர்வீகக்குடி ஆப்ரிக்க கருப்பினத்தவர்கள்தான். ஆனால், 1652ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதியில் இருந்து தென்ஆப்ரிக்காவில் ஐரோப்பிய காலனி ஆதிக்கம் தொடங்கியது. டச்சு கிழக்கிந்திய நிறுவனம் கேப்டவுனில் தடம் பதித்தது. அந்த நிறுவனம் படிப்படியாக தனது கிளைகளையும், அதிகாரத்தையும் விஸ்தரிப்பு செய்து, 17 மற்றும் 18ம் நூற்றாண்டில் ஆழப் பதித்தது.
பிரெஞ்சு புரட்சி நடந்தபோதுதான், ஆங்கிலேயர் ஜேம்ஸ் ஹென்றி தலைமையில் 1795ல் கேப்டவுனை கைப்பற்றினர். இங்கிலாந்தில் விளையாடப்பட்டு வந்த கிரிக்கெட் தென் ஆப்ரிக்காவில் அறிமுகமானது. 1843-ம் ஆண்டில் போர்ட் எலிசபெத்தில் முதல் கிரிக்கெட் கிளப் தொடங்கப்பட்டது. 1889-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக டெஸ்ட் விளையாடும் அணியாக தென் ஆப்ரிக்கா மாறியது.
தென் ஆப்ரிக்காவில் கிரிக்கெட் அணி உருவான காலத்தில் இருந்து 100 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த அணியில் வெள்ளையின வீரர்கள் மட்டுமே நிரம்பி இருந்தனர். 80 சதவிகிதம் கருப்பின மக்கள் வாழும் நாட்டின் தேசிய கிரிக்கெட் அணியில் அவர்களுக்கு இடம் தரப்படவில்லை.
பட மூலாதாரம், Getty Images
நிறவெறியால் தடை
தென் ஆப்ரிக்காவில் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்திய நிறைவெறி, விளையாட்டில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது. 1956-ஆம் ஆண்டில் முதன்முதலாக விளையாட்டுக் கொள்கையை தென் ஆப்ரிக்க அரசு வெளியிட்டது.
அதில் தென் ஆப்ரிக்க அணி சார்பில் வெள்ளையினத்தவர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. நிறவெறிச் சட்டம் 1960களில் தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிறவெறியால் ஒலிம்பிக், ரக்பி, பிஃபா ஆகியவை தென் ஆப்ரிக்க அணியை தடை செய்தன.
1970 முதல் 1990ம் ஆண்டுவரை ஐசிசி அமைப்பும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தென் ஆப்ரிக்க அணிக்கு தடை விதித்திருந்தது.
இடஒதுக்கீடு அறிமுகம்
தென் ஆப்ரிக்காவில் நிறவெறி முடிவுக்கு வந்து தடைகள் விலக்கப்பட்ட போதிலும்கூட, அனைத்து விளையாட்டுகளிலும் வெள்ளையின வீரர்களே நிரம்பியிருந்தனர்.
1998-ஆம் ஆண்டு நிறவெறி தடைச் சட்டமும், விளையாட்டுகளில் கருப்பினத்தவருக்கான இடஒதுக்கீடும் கொண்டு வரப்பட்ட பின்புதான் தென் ஆப்ரிக்காவில் மாற்றத்துக்கான துளிர்விட்டது.
விளையாட்டில் இடஒதுக்கீடு முறை
இதன் தொடர்ச்சியாக 2013-ம் ஆண்டு தென் ஆப்ரிக்க அணியில் வீரர்கள் தேர்வு குறித்து அந்நாட்டு அரசே வகுத்தது. அதன்படி 11 வீரர்கள் கொண்ட தென் ஆப்ரிக்க தேசிய கிரிக்கெட் அணியில் 6 வீரர்கள் கருப்பு கலப்பின வீரர்கள் இருக்க வேண்டும், அதில் 2 பேர் ஆப்ரிக்க கருப்பின வீரர்களாக இருக்க வேண்டும், 5 பேர் வெள்ளையின வீரர்களாக இருக்கலாம்.
இந்த இடஒதுக்கீடு முறை வந்த பின்பே சமூகத்தின் அனைத்து பிரிவு வீரர்களும் தென் ஆப்ரிக்க அணியில் இடம் பெற்றனர். கருப்பின வீரர்கள் அணிக்குள் வந்தபோதிலும்கூட சக வெள்ளையின வீரர்களின் நிறவெறிப் பேச்சும் செயலும் தொடர்ந்ததாக சர்ச்சைகள் உண்டு.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தென் ஆப்ரிக்க அணியில் இடஒதுக்கீடு முறை நடைமுறைக்கு வந்தபின் அணிக்குள் வந்த முதல் கருப்பின ஆப்ரிக்க வீரர் வேகப்பந்துவீச்சாளர் மகாயா என்டினிமகாயா என்டினி குற்றச்சாட்டு
தென் ஆப்ரிக்க முன்னாள் வீரர் என்டினி, சக வீரர்களால் எவ்வாறு நிறவெறியுடன் நடத்தப்பட்டேன், கேலி கிண்டலுக்கு ஆளானேன் என்று தென் ஆப்ரிக்க ஒளிபரப்பு கழகத்துக்கு அளித்த ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
என்டினி பேசுகையில் “நான் அணிக்குள் வந்த நேரத்தில் தனிமையாகவே உணர்ந்தேன். இரவு சாப்பிட வேண்டுமென்றால் சக வீரர்கள் யாரும் என்னை உடன் அழைத்துச் செல்லமாட்டார்கள், ‘சாப்பிடப் போகிறோம் வா’ என்று கூட அழைக்க என் அறைக் கதவை தட்டமாட்டார்கள்.
என் கண் முன்னே, என்னிடம் ஆலோசனை கேட்காமலே, சக வீரர்கள் திட்டங்களை அவர்களாகவே வகுப்பார்கள். காலை உணவு சாப்பிட சென்றால் என் அருகேகூட எந்த வீரரும் அமரமாட்டார். சக வீரர்களால் புறக்கணிக்கப்பட்டு தனிமையாக இருப்பதால் சக வீரர்களுடன் பேருந்தில் செல்வதற்கு பதிலாக நடந்தே மைதானத்துக்கு செல்லலாம் எனத் தோன்றியது. என்னை எந்த வீரரும் புரிந்து கொள்ளவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
வெள்ளையர் அல்லாத முதல் கேப்டன்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தென் ஆப்ரிக்க அணிக்கு வெள்ளைய இனத்தவர் அல்லாத முதல் கேப்டனாக ஆஸ்வெல் பிரின்ஸ் நியமிக்கப்பட்டார்.தென் ஆப்ரிக்க அணிக்கு வெள்ளைய இனத்தவர் அல்லாத முதல் கேப்டனாக ஆஸ்வெல் பிரின்ஸ் நியமிக்கப்பட்டார். அவரும் சக வீரர்களால் நிறவெறிப் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டதாக ஒருமுறை வேதனையுடன் பகிர்ந்திருந்தார்.
தென் ஆப்ரிக்க சமூக நீதி மற்றும் தேசிய கட்டமைப்புக்கான விசாரணையில் பிரின்ஸ் பேசுகையில், “தென் ஆப்ரிக்க அணி வெள்ளையினத்தவர் அல்லாதவருக்கு தனிமையான இடம். ஒரு புதிய வீரர் வெள்ளையராக இருந்தால் வீரர்கள் உங்களை விரும்புகிறார்களா அல்லது இல்லையா என்பதை நடக்கும் சம்பவங்களை வைத்து புரிந்து கொள்ளலாம். ஆனால் வீரர் வெள்ளையராக இல்லாவிட்டால் இது எதுவுமே நடக்காது” எனத் தெரிவித்தார்.
தென் ஆப்ரிக்காவில் இடஒதுக்கீடு முறை கொண்டு வரப்பட்டு கருப்பின வீரர் என்டினி, கருப்பு கலப்பின வீரர்கள் ஹாசிம் அம்லா, டுமினி, ஆஷ்வெல் பிரின்ஸ் உள்ளிட்ட பல திறமையான வீரர்கள் தென் ஆப்ரிக்காவுக்கு கிடைத்த போதிலும் அவர்கள் “கோட்டா ப்ளேயர்ஸ்”, அதாவது ‘இடஒதுக்கீடு வீரர்கள்’ என்ற விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஹாசிம் ஆம்லாதொடர்ந்த நிறவெறி
2021-ஆம் ஆண்டில் தென் ஆப்ரிக்க அணியின் பயிற்சியாளராக இருந்த மார்க் பவுச்சர் தன்னை நிறவெறியுடன் நடத்தினார் என்ற ஆடம்ஸ் குற்றம்சாட்டினார்.
உலகளாவிய பிளாக் லிவ்ஸ் மேட்டர்ஸ் இயக்கத்தின் போது, தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் 30 பேர் தாங்கள் எவ்வாறு நிறவெறியால் பாதிக்கப்பட்டோம் என்பதை உலகுக்கு வெளிப்படுத்தினர்.
கருப்பினத்தவருக்கும் வாய்ப்புகளை வழங்க இடஒதுக்கீடு முறை தீவிரமாக அமல்படுத்தப்பட்ட நிலையில், தென் ஆப்ரிக்காவின் தோல்விகளுக்கு இந்த இட ஒதுக்கீடே காரணம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 2015-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் நியூசிலாந்திடம் தென் ஆப்ரிக்கா அடைந்த தோல்விக்கு கருப்பின கலப்பு வீரர் பிலாண்டர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
2007-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம், தென் ஆப்ரிக்கா தோல்வி அடைந்தது. அந்த ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் என்டினி சேர்க்கப்படவில்லை.
இந்த ஆட்டம் பற்றி கிரேம் ஸ்மித் ஒருமுறை நினைவுகூர்கையில் ” நண்பர்களே, நான் விளையாடக் கூடாது என சொன்னீர்கள் என்றால் என் முகத்தைப் பார்த்து நான் விளையாடக் கூடாது என்று சொல்லுங்கள். இட ஒதுக்கீடு முறைதான் பிரச்னை என சொல்லாதீர்கள். முடிவுகள் தவறாக நடந்த போது, இட ஒதுக்கீட்டால் அணிக்குள் வந்த வீரர்கள் மீது தவறு. விஷயங்கள் சரியாக நடந்த போது, மற்றவர்கள் ஹீரோக்கள். நான் தேசிய அணிக்காக விளையாடிய வரைக்கும், அது ஒரு அணியே இல்லை. நாங்கள் ஒன்றுமில்லை” என வேதனையுடன் தெரிவித்திருந்தார்.
என்டினி தனது 100வது டெஸ்டுக்குப் பிறகு, முறையான மரியாதையின்றி அணியிலிருந்து நீக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்தது, ஒரு மாதத்துக்குள் அவரது ஒப்பந்தத்தையும் அணியிலிருந்து இழந்தார். அப்போது என்டினி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் “நாங்கள் எப்போது வென்றாலும், அது மகிழ்ச்சியாக இருந்தது, ஆனால் நாங்கள் தோற்ற போதெல்லாம் முதலில் குற்றம் சாட்டப்பட்டது நான்தான்” என்று தெரிவித்தார்.
இடஒதுக்கீடு முறை தேவையா?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 2019ம் ஆண்டு தென் ஆப்ரிக்க ரக்பி அணிக்கு முதல் முறையாக கருப்பினத்தைச் சேர்ந்த சியா கோலிசி கேப்டனாக நியமிக்கப்பட்டார்.தென் ஆப்ரிக்க அணி நீண்டகாலம் ஐசிசி உலகக் கோப்பையை வெல்ல முடியாமைக்கு அணிக்குள் நிலவிய இடஒதுக்கீடு முறைதான் காரணம் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தது.
ரக்பி உலகக் கோப்பையை 1995 மற்றும் 2007ம் ஆண்டுகளில் தென் ஆப்ரிக்கா வென்ற போது அதில் பெரும்பாலும் வெள்ளையின வீரர்கள்தான் இருந்தனர், ஒன்று அல்லது இருவர் மட்டுமே கருப்பின வீரர்கள் இருந்தார்கள். இடஒதுக்கீடு முறை இல்லாத அணிதான் ரக்பி உலகக் கோப்பையை வென்றது என்ற வாதம் வைக்கப்பட்டது.
ஆனால், 2019ம் ஆண்டு தென் ஆப்ரிக்க ரக்பி அணிக்கு முதல் முறையாக கருப்பினத்தைச் சேர்ந்த சியா கோலிசி கேப்டனாக நியமிக்கப்பட்டார். அணியில் 11 வெள்ளையர் அல்லாத வீரர்கள் இருந்தார்கள். இந்த புதிய மாற்றத்துக்கான தென் ஆப்ரிக்க அணியில் இருந்த வீரர்கள் பெரும்பாலும் நிறவெறி தடைக்குப்பின் பிறந்த இளம் வீரர்கள், இவர்கள் தங்கள் தேசத்துக்காக பங்களிப்பு செய்ய கிடைத்த வாய்பை சரியாகப் பயன்படுத்தி, உலக சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
அதன் மூலம் இடஒதுக்கீடு முறையால்தான் தென் ஆப்ரிக்கா கோப்பையை வெல்ல முடியாமல் போனது என்ற வாதத்தை அவர்கள் தவிடுபொடியாக்கினர்.
தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணிக்குள்ளும் படிப்படியாக கருப்பின வீரர்கள், கலப்பின வீரர்கள் கொண்டுவரப்பட்டு படிப்படியாக மாற்றம் நடந்தது.
மாற்றத்துக்கான வெற்றி
தென் ஆப்ரிக்காவின் இந்த இடஒதுக்கீடு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றிக்கு காரணமாக அமைந்ததா என்பது குறித்து விளையாட்டுப் பிரிவு மூத்த பத்திரிகையாளர் முத்துகுமார் பிபிசி தமிழிடம் கூறுகையில், “இட ஒதுக்கீட்டால் திறமையற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துவிடும் என்ற வாதத்தை இந்த வெற்றி மாற்றியுள்ளது. தென் ஆப்ரிக்காவில் கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீடு முறை கருப்பினத்தவர் மற்றும் கலப்பின மக்களுக்கும் சமமான வாய்ப்பளிக்கிறது, வெள்ளையின மக்களுக்கும் வாய்ப்பளிக்கிறது.
தென் ஆப்ரிக்காவின் இந்த சாம்பியன்ஷிப் வெற்றியை கிரிக்கெட் வெற்றியாக, கிரிக்கெட் தொழில்நுட்பம் சார்ந்த வெற்றியாக மட்டும் பார்க்கக்கூடாது. சமூக மாற்றத்துக்கான வெற்றியாகவும் இதை பார்க்க வேண்டும். கருப்பின வீரர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டிருந்த ஒரு தேசத்தில், கருப்பின கேப்டன் தலைமையில் அந்த அணி சாம்பியன்ஷிப் வென்றது மாற்றத்துக்கான வெற்றியாகும்” என்றார்.
யார் இந்த பவுமா?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அணியினருடன் டெம்பா பவுமாகேப்டவுன் நகரில் உள்ள லாங்கா எனும் புறநகர் பகுதியைச் சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் டெம்பா பவுமா. முறையான கிரிக்கெட் பயிற்சிக் கூடத்துக்கு செல்ல முடியாமல் தெருக்களிலும், சாலைகளிலும் கிரிக்கெட் விளையாடி பவுமா பயிற்சி எடுத்தார். சான்டன் நகரில் புனித டேவிட் பள்ளியில் பள்ளிப் படிப்பையும், நியூலாந்தில் கல்லூரிப் படிப்பையும் பவுமா முடித்தார்.
2008ம் ஆண்டிலிருந்துதான் பவுமாவின் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது. கட்டெங், லயன்ஸ் போன்ற உள்நாட்டு அணிகளில் பவுமா விளையாடத் தொடங்கினார். இவரின் ஆட்டத்தைப் பார்த்து, 2012ம் ஆண்டு தென் ஆப்ரிக்க ஏ அணியில் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாட வாய்ப்புக் கிடைத்தது.
இந்த தொடரிலும் பவுமா சிறப்பாக செயல்படவில்லை, இருப்பினும் ஆஸ்திரேலிய ஏ, இந்தியா ஏ அணிக்கு எதிரான தொடர்களில் பவுமாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதில் அவரின் திறமை வெளிப்பட்டது. 2017ம் ஆண்டில் கேப் கோப்ராஸ் அணிக்காக பவுமா ஆடத்தொடங்கி, அதன்பின் லயன்ஸ், டர்பன் ஹீட், ஜோஸி ஸ்டார்ஸ் அணிகளுக்காக பவுமா விளையாடினார்.
2014ம் ஆண்டில் தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணியில் பவுமாவுக்கு வாய்ப்புக் கிடைத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். 2016ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்து, தென் ஆப்ரிக்க கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் கருப்பினத்தவர் என்ற பெருமையை பவுமா பெற்றார்.
2016ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்க அணிக்காக பவுமா அறிமுகமாகினார். அறிமுக போட்டியிலேயே பவுமா சதம் அடித்து அசத்தி, ஒருநாள் போட்டியில் சதம் அடித்த முதல் கருப்பினத்தவ வீரர் என்ற பெருமையை பவுமா பெற்றார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்டெஸ்ட் கேப்டன் பொறுப்பு
2019ம் ஆண்டில்தான் டி20 போட்டியில் பவுமா அறிமுகமானார். 2019, செப்டம்பர் 18ம் தேதி இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் பவுமா அறிமுகமாகினார். 2021, மார்ச் 4ம் தேதி, தென் ஆப்ரிக்க ஒருநாள் அணிக்கு கேப்டனாக பவுமா நியமிக்கப்பட்டார். தென் ஆப்ரிக்க அணிக்கு முழுநேர, நிரந்தர கேப்டனாக நியமிக்கப்பட்ட முதல் கருப்பின வீரர் என்ற பெருமையை பவுமா பெற்றார்.
2022ம் ஆண்டு தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணியின் கேப்டனாக பவுமா நியமிக்கப்பட்டு, 10 போட்டிகளில் அணியை வழிநடத்தினார். இதில், 9 வெற்றிகளுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார். பவுமா இதுவரை 42 ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு அதில் 22 வெற்றிகளையும், 25 டி20 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து 15 வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.
கனவிலும் நினைக்கவில்லை
சாதாரண பின்புலத்தில் பிறந்து, வளர்ந்த பவுமா இன்று கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லார்ஸ்ட் மைதானத்தில், தனது தேசத்துக்காக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று அவர் அசத்தினார்.
லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடியது குறித்து பவுமா கூறுகையில், “லார்ட்ஸ் மைதானத்தில் நான் விளையாடுவேன் என்று கனவில் கூட நினைத்தது இல்லை.” எனத் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு