Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ரணில், சஜித், டக்ளஸ் ஆகியோரின் தலைமையிலான தமிழ்த் தேசியத்தை ஏற்றுக் கொள்ளாத கட்சிகள் வழங்கிய ஆதரவினால் வடக்கு, கிழக்கின் பிரதான மாநகர சபைகளில் தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றது என்பதே உண்மை. தமிழரசிலுள்ள எக்கராஜ்ஜிய கொள்கையாளருக்கான நன்றிக்கடனாகவே இந்த ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. இது, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு பிசகின்றித் தொடருமென நம்ப முடியுமா?
ஈழப்போரின்போது பல களங்களைக் கொண்டதாக அமைந்தது ஓயாத அலைகள். இந்த நெடுஞ்சமர் 1,2,3 என்று வெவ்வேறு நிலப்பரப்புகளில் தொடர்ந்தது.
நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல்களுக்கான சபைகளை அமைப்பதில் தொடரும் இழுபறிகள், இணைப்புகள், கூட்டுகள், கூட்டணிகள், விட்டுக்கொடுப்புகள், ஏமாற்றுகள், சரணாகதிகள் என்று ஒவ்வொன்றையும் பார்க்கும்போது இதனை தேர்தல் கால ஓயாத அலைகள் என அழைக்கலாமோ என்று எண்ண வைக்கிறது.
தேர்தல்கள் முடிந்து ஒரு மாதம் ஆகின்ற போதிலும், வென்றவர் தோற்றவராகவும், தோற்றவர் வென்றவராகவும் ஆக்கப்படும் நாடகங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு சபையிலும் இறுதி வெற்றி பெற்றவர் – பெறப்போகிறவர் எவர் என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாதவாறு கடலலை மேலே செல்லும் காகித ஓடம் போன்று தள்ளாட்டம் காணப்படுகிறது.
கடந்த வாரத்தில் சில சபைகள், அவை அறுதிப் பெரும்பான்மை பெற்றதால் சுலபமாக தங்களின் தவிசாளரையும், உதவித் தவிசாளரையும் தெரிவு செய்தன. தமிழரசுக் கட்சிக்குள் தனிக்காட்டு ராஜாவாக திகழும் சிவஞானம் சிறீதரன் தமது கிளிநொச்சித் தொகுதியின் மூன்று சபைகளும் இவரது ஆளுமையால் அறுதிப் பெரும்பான்மையை பெற்றதால் தெரிவுகளை முடித்துவிட்டார்.
மற்றைய சபைகளில் அதிகப்படியான உறுப்பினர்களைப் பெற்ற (இது அறுதிப் பெரும்பான்மை அல்ல) சில சபைகளுக்கு தலைவருக்கான போட்டிகள் இடம்பெற்றன. இதற்கான முதலாவது கூட்டம் அந்தந்த பிரதேச உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தலைமையில் இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 13ம் திகதி வெள்ளிக்கிழமை மூன்று சபைகளுக்கான தெரிவுகள் இடம்பெற்றன. இதற்கு முன்னரான சில நாட்கள் ஆள்பிடி படலம் இடம்பெற்றது.
இந்தக் காலம் ஊடகங்களுக்கு அளவுக்கு மிஞ்சிய தீனி கிடைத்தது. சில ஊடகங்கள் தாமே முடிவை தீர்மானிப்பவைகள் போன்று விடயங்களை ஊதிப் பெருப்பித்தன. வேறு சில ஊடகங்கள் காண்டம் வாசிப்பவர்களாகவும், கைரேகை சாத்திரிகளாகவும் மாறிக்கொண்டன. கனாக்கால வேடிக்கையாக இந்நாட்கள் நகர்ந்தன.
கடந்த வார பத்திகளில் குறிப்பிட்டவாறு தமிழ்த் தேசியத்துக்கு தீண்டப்படாதவர்கள் என பட்டியலிடப்பட்டவர்களின் படிகளில் ஏறிச் சென்று ஆதரவு கேட்ட காட்சிகளையும் காணமுடிந்தது. விடுதலைப் புலிகளின் நம்பிக்கைக்குரியவராகவும், திலீபனின் சாத்வீக போராட்டக் காலத்தில் அமைக்கப்படவிருந்த இடைக்கால நிர்வாகத்துக்கு விடுதலைப் புலிகளால் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டவருமான சி.வி.கே.சிவஞானம், யாழ்நகரிலுள்ள ஸ்ரீதர் தியேட்டருக்குள் சென்றதை பலராலும் ஜீரணிக்க முடியாதிருந்தது. இவரை கொள்கை ரீதியாக ஏற்காதவர்களும் இவரது படியேற்றத்தைக் கண்டித்தனர்.
பன்றியோடு கூடினால் பசுவும் அதனை பழகிவிடுமென்று தமிழரசின் கிழக்கு மாகாண பிரமுகர் ஒருவர் கூறிவிட்டு நெடுமூச்சு விட்டார். சீ.வி.விக்னேஸ்வரன் வடமாகாண முதலமைச்சராகவிருந்தபோது அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதில் முன்னின்று ஈடுபட்ட சுமந்திரன், கடந்த வாரம் கொழும்பிலுள்ள விக்னேஸ்வரனின் வீட்டுக்கு படி தாண்டிச் சென்று அவரது தமிழ் மக்கள் கூட்டணி ஆதரவு வேண்டி ஒப்பந்தம் செய்தார். விக்கியர் புத்திசாலி. சுமந்திரனுக்கு சட்டக்கல்லூரியில் பாடம் போதித்தவர் அல்லவா? செய்யப்பட்ட ஒப்பந்தம் நல்லூர் பிரதேச சபைக்கு மட்டுமே என்று எழுத்தில் வரையறை செய்துவிட்டார்.
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான மேயர், உதவிமேயர், நல்லூர் பிரதேச சபைக்கான தவிசாளர், உதவித்தவிசாளர் தெரிவுகள் அனைவராலும் உன்னிப்பாக எதிர்நோக்கப்பட்டவை. யாழ்ப்பாணம் மாநகர சபையில் தமிழரசு கட்சி 13 ஆசனங்களைக் கொண்டது. தமிழ்த் தேசிய பேரவை எனும் கஜேந்திரகுமார் தலைமையிலான அணி 12 பேரைக் கொண்டது. டக்ளசின் ஈ.பி.டி.பி.யும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும் தலா நான்கு ஆசனங்களைக் கொண்டவை. இதில் ஈ.பி.டி.பி. ஏற்கனவே தமிழரசுடன் இணைய ஏற்பாடாகயிருந்தது. மறுதரப்பில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கஜேந்திரகுமார் அணியோடு இணைந்திருந்தது. அதேசமயம் ஒவ்வொரு ஆசனங்களைக் கொண்டிருந்த ரணிலின் ஐக்கிய தேசிய முன்னணியும் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியும் அமைதியாக இருந்துவிட்டு தமிழரசை ஆதரிக்குமென்ற எதிர்பார்ப்பும் இருந்தது. அதுவே நடைபெற்றதும்.
19 வாக்குகளைப் பெற்ற தமிழரசுக் கட்சி மேயர், உபமேயர் பதவிகளைக் கைப்பற்றிக் கொண்டது. 10 ஆசனங்களில் வெற்றி பெற்றிருந்த அநுர குமரவின் தேசிய மக்கள் சக்தி நடைபெறுபவைகளை பார்த்துக்கொண்டு எவரையும் ஆதரிக்காது அமைதியாக இருந்தது.
45 உறுப்பினர்களைக் கொண்ட இந்த மாநகர சபையில் 13 பேரை மட்டும் கொண்டிருந்த தமிழரசு, 2 சிங்களத் தலைமை கட்சிகளதும், தமிழ்த் தேசியம் என்ற வட்டகைக்குள் அடங்காத ஈ.பி.டி.பி.யின் ஆதரவுடனும் தனது கதிரை ஆசையை நிறைவேற்றிக் கொண்டது. இதனை, கஜேந்திரகுமாரின் தமிழ்க் காங்கிரசை யாழ்;ப்பாணம் மாநகர சபையை கைப்பற்றாமல் தடுத்துக் கொண்டது என்றும் சொல்ல முடியும். தமிழரசு பெற்றுக் கொண்ட 19 என்பது மொத்த எண்ணிக்கையான 45ல் ஐம்பது வீதத்துக்கும் குறைவானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நல்லூர் பிரதேச சபையில் விக்னேஸ்வரன் – மணிவண்ணன் கூட்டிலான தமிழ் மக்கள் கூட்டணிக்கு 6 ஆசனங்கள் கிடைத்தன. தமிழரசுக் கட்சிக்கு 7 ஆசனங்கள் கிடைத்தது. அனுரவின் தேசிய மக்கள் சக்திக்கும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் தலா 3 கிடைத்தன. அநுர அணி எவரையும் ஆதரிக்காது என்பதால் தமிழரசு இங்கு தனித்து ஆட்சியமைத்திருக்க முடியும். ஆனால் சிலசமயம் தமிழ் மக்கள் கூட்டணியும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்துவிட்டால் அவர்கள் ஆட்சியமைத்து விடுவார்கள் என்ற அச்சம் தமிழரசுக்கு இருந்தது. அதனைத் தடுப்பதற்காக விக்னேஸ்வரனைச் சந்தித்து அவருடன் ஒப்பந்தம் செய்து முதல் இரண்டு வருடங்களையும் அவரது முன்னணிக்குக் கொடுத்துவிட்டது. இதனால் முன்னணியின் மயூரன் இச்சபையின் தலைவராகியுள்ளார். இதுதான் சுமந்திரன் சொல்லிவரும் தேர்தல் கோட்பாடு என்பது போலும்.
சாவகச்சேரி நகரசபைக்கான தெரிவு லொத்தர் அதிர்ஸ்டம் போன்றது. இங்கு தமிழ் தேசிய பேரவைக்கும், தமிழரசு கட்சிக்கும் தலா 7 வாக்குகள் ஆதரவாகக் கிடைத்தன. பேரவையில் இடம்பெற்ற பெண் உறுப்பினர் மீது உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்ததால் அவர் வாக்களிப்பில் பங்கேற்க முடியவில்லை. பேரவையின் சார்பில் தவிசாளர் பதவிக்கு போட்டியிட்ட சிறீபிரகாசுக்கும், தமிழரசின் வேட்பாளர் கைலாசபிள்ளைக்கும் போட்டியில் சமமான வாக்குகள் கிடைத்தன. திருவுள சீட்டு முறையில் சிறீபிரகாஸ் தவிசாளராகவும், கிஷோர் உபதவிசாளராகவும் தெரிவாகினர். அதிர்ஸ்ட தேவதையால் கஜேந்திரகுமாரின் பேரவை சாவகச்சேரி சபையை கைப்பற்றிவிட்டது.
மட்டக்களப்பு மாநகரசபை மேயராக ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன் தெரிவாகியுள்ளார். தமிழரசுக் கட்சியைச் சார்ந்த இவரிடம் 16 வாக்குகள் மட்டும் இருந்தன. சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியின் இருவர் இவரை ஆதரித்தனர். பிரதி மேயர் தினேசும் இவ்வாறே 18 வாக்குகளால் தெரிவானார்.
மட்டக்களப்பின் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையை தமிழரசுக் கட்சி இம்முறை இழந்துள்ளது. பந்து சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக் குழுவும், பிள்ளையான் தலைமையிலான கிழக்கு தமிழர் கூட்டணியும் இணைந்து தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் கோபாலபிள்ளை சுரேந்திரனை தோற்கடித்துள்ளனர். இவருக்கு 6 வாக்குகள் கிடைத்துள்ளன. வெற்றிபெற்ற சுரேந்திரனுக்கு 9 வாக்குகள் கிடைத்தன. கடந்த முறை இச்சபையில் வெற்றி பெற்ற தமிழரசுக் கட்சிக்கு இ;ம்முறை எதிர்பாராத தோல்வி கிடைத்துள்ளது.
வடக்கிலும் கிழக்கிலும் பல சபைகளுக்கான தவிசாளர், உதவித் தவிசாளர் தெரிவுகள் வரும் நாட்களில் இடம்பெறவுள்ளன. தனிக்கட்சிகளும் கூட்டுகளும் சில சபைகளில் போட்டியிடும் சாத்தியம் காணப்படுகிறது.
தேர்தலின் பின்னர் தமிழ்த் தேசிய கட்சிகளின் கோட்பாடு அடிப்படையில் இணைந்து ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்று கூறிய தமிழரசுக் கட்சியின் சுமந்திரன், தேர்தல் முடிவுகளின் பின்னர் தேசியம் என்பதை மறைத்துவிட்டு (அழித்துவிட்டு) தமிழ்க் கட்சிகளுடன் இணைவோம் என்று தீர்மானம் எடுத்தது, வசதி கருதிய ஒரு நிலைப்பாடு. இது ஈ.பி.டி.பி.யுடன் தாலி கட்டாத சம்பந்தம் செய்வதற்கான முன்னேற்பாடு.
அது மட்டுமன்றி ரணிலின் ஐக்கிய தேசிய முன்னணி, சஜித்தின் ஐக்கிய தேசிய சக்தி ஆகியவற்றின் ஆதரவு யாழ்ப்பாணம் மாநகர சபையிலும், சஜித்தின் ஐக்கிய தேசிய சக்தியின் ஆதரவு மட்டக்களப்பு மாநகர சபையிலும் தமிழரசு கட்சியால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இது சுமந்திரனின் எக்கராஜ்ஜியத்துக்குக் கிடைத்த ஆதரவாக பார்க்கப்பட வேண்டியது என்பதற்கு மாற்றுக்கருத்திருக்க முடியாது.
இனி இடம்பெறப்போகும் பல சபைகளின் தெரிவுகளும், முக்கியமாக கொழும்பு மாநகர மேயர் தெரிவும் அரசியல்வாதிகளதும் கருத்துருவாக்கிகளதும் கழுகுப் பார்வையில் உள்ளது.