“துப்பாக்கி இருந்திருந்தால் சுட்டிருப்பார்” அன்புமணியை விமர்சிக்கும் ராமதாஸ் – மோதல் முற்றுவது ஏன்?

பட மூலாதாரம், @draramadoss/x

படக்குறிப்பு, ராமதாஸ் உடன் அன்புமணி ராமதாஸ்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

பாமக நிறுவனர் ராமதாஸூக்கும் அவரின் மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மோதல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அன்புமணியையும் அவரது ஆதரவாளர்களையும் பொறுப்பில் இருந்து நீக்கும் நடவடிக்கைகளை ராமதாஸ் எடுத்து வரும் வேளையில் அதற்கு எதிர் நடவடிக்கைகளை அன்புமணி தரப்பு எடுத்து வருகிறது.

“தேர்தலுக்குப் பின் தலைவர் பதவியை அன்புமணிக்குக் கொடுப்பதாகக் கூறினேன். ஆனால் நடப்பதைப் பார்க்கும்போது என் மூச்சுக் காற்று அடங்கும் வரை பதவியைக் கொடுக்க மாட்டேன்” – ஜூன் 13 அன்று செய்தியாளர் சந்திப்பில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இவ்வாறு கூறினார்.

முன்னதாக, ஜூலை 25 முதல் மக்கள் உரிமை மீட்புப் பயணத்தைத் தொடங்க உள்ளதாக அன்புமணி அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு எதிர்வினையாற்றிய ராமதாஸ், தன்னை நடைபிணமாக்கிவிட்டு நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக விமர்சித்தார். தந்தை – மகன் மோதல் தொடர்வதன் பின்னணி என்ன?

பா.ம.கவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம், விழுப்புரத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி நடந்தது. அப்போது இருந்தே ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் தொடங்கிவிட்டது.

ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் மகன் முகுந்தன் பரசுராமனை, பா.ம.கவின் இளைஞரணி தலைவராக நியமிப்பது என ராமதாஸ் எடுத்த முடிவுக்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இதன் தொடர்ச்சியாக, கடந்த ஏப்ரல் மாதம் தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அறிவித்த ராமதாஸ், தலைவர் பொறுப்பில் தானே தொடர்வதாக அறிவித்தார்.

கடந்த சில வாரங்களாக ராமதாஸும் அன்புமணியும் தனித்தனியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஜூன் 11ம் தேதி மட்டும் முன்னூறுக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளைச் சந்தித்ததாக, செய்தியாளர் சந்திப்பில் ராமதாஸ் தெரிவித்தார்.

படக்குறிப்பு, தலைவர் பதவி பற்றி அன்புமணி கூறியது என்ன?அடுத்தடுத்து நீக்கப்பட்ட நிர்வாகிகள்

தொடர்ந்து, மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களை நீக்கும் பணிகளில் அவர் தீவிரம் காட்டி வருகிறார். தற்போது வரை சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களை ராமதாஸ் நீக்கியுள்ளார்.

ஆனால், பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவர் என்ற முறையில் நிர்வாகிகளை நியமிப்பதற்கு தனக்கு அதிகாரம் உள்ளதாகக் கூறி, ராமதாஸ் நீக்கிய நிர்வாகிகளை மீண்டும் நியமிக்கும் வேலைகளை அன்புமணி செய்து வருகிறார்.

“ராமதாஸ் மனசாட்சிக்கு தெரியும்” – க.பாலு

இந்தநிலையில், பா.ம.க ஊடக தொடர்பாளரும் அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவான சமூக நீதிப் பேரவையின் தலைவராகவும் இருந்த வழக்கறிஞர் க.பாலுவை, ஜூன் 10 அன்று பேரவையில் இருந்து ராமதாஸ் நீக்கினார்.

அன்புமணியின் ஆதரவாளராக க.பாலு செயல்பட்டு வந்ததால், இப்படியொரு முடிவை ராமதாஸ் எடுத்ததாகப் பார்க்கப்பட்டது. இதற்கு எதிராக புதன்கிழமையன்று வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையினர் நடத்திய செயற்குழுவில் மீண்டும் பாலுவை தலைவராக தேர்வு செய்வதாக அறிவித்தனர்.

“வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவையின் புரவலராக அன்புமணி செயல்பட இருக்கிறார். நிறுவனராக ராமதாஸ் செயல்படுவார்” என, செய்தியாளர் சந்திப்பின்போது க.பாலு தெரிவித்தார்.

அவரிடம் பிபிசி தமிழ் பேசியது. “பாட்டாளி மக்கள் கட்சிக்காக சட்டப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளேன். எனது பணியை பல்வேறு தருணங்களில் ராமதாஸ் பாராட்டியிருக்கிறார். அது அவரின் மனசாட்சிக்கு தெரியும்” என்று மட்டும் பதில் அளித்தார்.

பாலு நீக்கம் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்த ராமதாஸ், “தலைவர் பொறுப்பில் ஒருவரே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதற்கு முன்னாலும் வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை இருந்தது. அதில், திறமையான வழக்கறிஞர்கள் பலர் இருந்தனர்” எனக் கூறினார்.

பட மூலாதாரம், X/PMK

படக்குறிப்பு, ராமதாஸ் உடன் அன்புமணி ராமதாஸ்தொடர்ந்து, கடந்த இரு நாட்களாக மருத்துவர் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை மருத்துவர் ராமதாஸ் முன்வைத்துள்ளார்.

வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராமதாஸ், “நல்ல தந்தையாக வழிகாட்டியாக இருந்திருக்கிறேன். மாநாட்டின்போதும் (மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் சங்க மாநாடு) அதன் பிறகும் நடக்கும் செயல்களைப் பார்க்கும்போது மிகவும் வருத்தமாக உள்ளது” எனக் கூறினார்.

கடைசி வரை நான் தலைவர் பதவியில் இருக்க வேண்டும் என 99 சதவீதம் பேர் கூறுவதாகக் குறிப்பிட்ட ராமதாஸ், “அவர்களின் விருப்பத்துக்கேற்ப என் மூச்சுக் காற்று நிற்கும் வரை அந்தப் பதவியில் இருப்பேன்” எனத் தெரிவித்தார்.

“என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எந்தப் பொறுப்புக்கும் வரக் கூடாது எனக் கூறினேன். ஆனால் அதைக் காப்பாற்ற முடியவில்லை” எனவும் ராமதாஸ் குறிப்பிட்டார்.

“கட்சியின் சார்பில் மத்திய அமைச்சர்களாக இருந்த தலித் எழில்மலை, பொன்னுசாமி ஆகியோரின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை. ஆகவே, அன்புமணிக்கு பதவியைக் கொடுக்க வேண்டும் எனக் கட்சி நிர்வாகிகள் கூறியதாலேயே அவருக்கு அமைச்சர் பதவியை பெற்றுத் தந்தேன்” எனவும் தெரிவித்தார்.

“நீயா… நானா பார்த்துவிடலாம்”

முன்னதாக, வியாழன் (ஜூன் 12) அன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், “எனக்கும் செயல் தலைவருக்கும் இடையே உள்ள பிரச்னை என்ன என்பது மற்றவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. இரண்டு ஆளுமைகள் (ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோரை குறிப்பிடுகிறார்) வந்தார்கள். இறுதியில் பிரச்னை டிராவில் முடிந்துவிட்டது” என்றார்.

“அன்புமணி உடனான பிரச்னை முடிவுக்கு வரவில்லை” எனக் கூறிய ராமதாஸ், “இதுதொடர்பாக 16 பஞ்சாயத்துகள் நடந்தன. நான் தொடங்கிய 34 அமைப்புகளில் இருந்து ஒன்றிரண்டு பேர் எனக்கு பஞ்சாயத்து செய்தனர். அதையும் ஏற்றுக் கொண்டேன்” என்கிறார்.

“நான் இங்கே இருந்து கொள்ள வேண்டும். அவர் (அன்புமணி) வெளியில் சென்று மக்களைப் பார்ப்பார் எனக் கூறினர். அந்த இருவர் யார் என்று உங்களுக்குத் தெரியும். அதைச் சொல்ல வேண்டிய தேவையில்லை” என ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோரை மறைமுகமாக குறிப்பிட்டுப் பேசினார்.

அன்புமணிக்குத் தலைவர் பதவியை விட்டுத் தான் தர தயாராக உள்ளதாகக் கூறிய ராமதாஸ், “சமூக தலைவர்களிடம் இதைப் பற்றிக் கூறினேன். எழுதியே கொடுப்பதாக நான் கூறியதாக அவர்கள் கூறியும், என்னை நம்ப முடியாது என அன்புமணி கூறியுள்ளார். இதனால், ‘நீயா… நானா?’ எனப் பார்த்துவிடுவோம் என்ற முடிவுக்கு வந்தேன்” எனத் தெரிவித்தார்.

எல்லாம் தனக்கே வேண்டும் எனவும் கேட்டை சாத்திவிட்டு கொள்ளுப் பேரன், பேத்திகளோடு ராமதாஸ் கொஞ்சி விளையாடட்டும் என அன்புமணி கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“46 ஆண்டுகள் உழைத்துக் கட்டிக் காத்த கட்சியில் இன்னும் ஓரிரு ஆண்டுகள் தலைமையேற்பதற்கு எனக்கு உரிமை இல்லையா?” எனக் கேள்வி எழுப்பிய ராமதாஸ், ” இவ்வாறு கேட்பதே அவமானமாக உள்ளது. ஒவ்வொரு செங்கல்லாக பார்த்துப் பார்த்து கட்டிய கட்சி என்ற மாளிகையில் நான் குடியமர்த்தியவரே என்னைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகின்ற அளவுக்கு அவருடைய செயல்பாடுகள் இருந்தன” என்கிறார்.

“குலசாமி என்கிறார்கள்…நெஞ்சில் குத்துகிறார்கள்”

பட மூலாதாரம், Ramadoss/Facebook

படக்குறிப்பு, ராமதாஸ் உடன் அன்புமணி ராமதாஸ்மாவட்ட செயலாளர்களின் வருகையைத் தடுத்து நிறுத்தி, என்னைப் பார்க்கக் கூடாது என ஒவ்வொருவரிடமும் அன்புமணி பேசியதாகக் கூறும் ராமதாஸ், “அன்று அமைதி காத்திருந்தால் அன்புமணிக்கு அதிகாரம் தானாக வந்திருக்கும். தன்னை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப் போவதாக அவர் கூறியுள்ளார். அவரை நீக்கும் வேலையை யாராவது செய்வார்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.

“ஓரிரு ஆண்டுகளில் அவருக்கு முடிசூட்டு விழாவை நடத்தியிருப்பேன்” எனக் கூறியுள்ள ராமதாஸ், “என்னை குலசாமி எனக் கூறிக் கொண்டே நெஞ்சில் குத்துகிறார்கள். எல்லாம் அய்யா தான் எனக் கூறிக் கொண்டு அதலபாதாளத்தில் தள்ள நினைக்கின்றனர். நான் உருவாக்கிய சமூக வலைதளப் பிரிவு மூலமாக என்னை அவமானப்படுத்துகின்றனர்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசும்போது, “என் கை விரலைக் கொண்டே என் கண்ணைக் குத்திக் கொண்டேன். உயிருள்ள என்னை எல்லாவகையிலும் உதாசீனம் செய்துவிட்டு உற்சவம் செய்கின்றனர். என்னை நடைபிணமாக்கி என் பெயரில் நாடு முழுவதும் நடைபயணம் செய்யப் போகிறாராம். இவையெல்லாம் நாடகம். அதில் ஒவ்வொருவரும் நடிகர்கள் தான்” என விமர்சித்தார்.

“அரசியல் என்பது வாரிசு அல்ல”

“நீயா… நானா எனும் அளவுக்கு விவகாரம் போனது ஏன்?” என ராமதாஸிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “இருவர் வந்து அவரிடம் பேசியும் நல்ல பதில் வரவில்லை. தேர்தல் முடிந்த பிறகு அவர் தான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளப் போகிறார். அரசியல் என்பது வாரிசு அல்ல. யாரிடம் வேண்டுமானாலும் பொறுப்பை கொடுத்துவிட்டுப் போகலாம்” எனக் கூறினார்.

“அன்புமணியின் பின்புலத்தில் பா.ஜ.க உள்ளதா?” எனக் கேட்டபோது, “யாரும் பின்புலத்தில் இல்லை. அவர் யார் சொன்னாலும் கேட்க மாட்டார். முயலுக்கு மூன்று கால்கள் என்று கூறுவார். நான்கு கால்கள் தான் என அவர் பதில் அளித்தால் பிரச்னை முடிந்துவிடும்” எனத் தெரிவித்தார்.

தன் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் யாரும் அரசியலுக்கு வரக் கூடாது என பொதுக்குழுவில் பேசப்பட்டதாகக் கூறிய ராமதாஸ், “தருமபுரியில் வேட்பாளராக ஒருவரை அறிவித்துவிட்டேன். ஆனால், குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கெஞ்சி, ‘சௌமியா நிற்கட்டும்’ எனக் கூறி என்னைக் கையெழுத்து போட வைத்தனர்” எனக் கூறினார்.

“தந்தை-மகன் மோதலால் தொண்டர்கள் சோர்ந்து போக மாட்டார்களா?” எனக் கேட்டபோது, “அப்படியெல்லாம் இல்லை. அவர்கள் தொண்டர்கள் அல்ல. மக்களுக்கு தொண்டு செய்கிறவர்கள். அவர்கள் வணங்கப்பட வேண்டியவர்கள்” என்று மட்டும் ராமதாஸ் பதில் அளித்தார்.

“துப்பாக்கி இருந்திருந்தால் சுட்டிருப்பார்” – ராமதாஸ்

பட மூலாதாரம், X/GKMAN

படக்குறிப்பு, ராமதாஸ் உடன் அன்புமணி ராமதாஸ்”சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு எல்லாவற்றையும் அவர் (அன்புமணி)எடுத்துக் கொள்ளட்டும்” எனக் கூறிய ராமதாஸ், ” அதுவரை நான் தான் தலைவர். வெறும் தலைவர் பதவி தான். கூட்டணியில் இணைந்து அமைச்சர் பதவி என்றெல்லாம் போக மாட்டேன்” என்றார்.

கட்சியின் நிர்வாக குழு கூட்டத்தில் அன்புமணியை நிர்வாகி ஒருவர் விமர்சனம் செய்ததைக் குறிப்பிட்ட ராமதாஸ், “அப்போது அன்புமணியிடம் துப்பாக்கி இருந்திருந்தால் அவரைச் சுட்டிருப்பார். தலைவருக்கு தலைமைப் பண்பு இல்லை என வெளிப்படையாகவே கூறினேன்” என்கிறார்.

“தலைவர் பதவியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை முறைப்படி தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்படும். பிரச்னை முடிந்துவிடும் என்ற நம்பிக்கையில் இதுவரை தெரிவிக்கவில்லை” எனவும் ராமதாஸ் குறிப்பிட்டார்.

“வாக்களிக்கும் மக்கள் என் பக்கம் உள்ளனர். எனக்கு மக்கள் தான் முக்கியம். இது ஒரு சாதிக்கான கட்சி அல்ல” எனக் கூறிய ராமதாஸ், “தலைவர் பதவி என்பது மூன்று வருடங்கள் தான். மீண்டும் பொதுக்குழு கூடி முடிவெடுக்கும். கூட்டணி தொடர்பாக நான் தான் முடிவெடுக்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

உரிமை மீட்பு பயணம் தொடங்கும் அன்புமணி

ராமதாஸின் பேட்டி குறித்து எந்தப் பதிலையும் தெரிவிக்காத அன்புமணி, வரும் ஜூலை 25 முதல் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் இந்தப் பயணம் தொடங்க உள்ளதாகவும் சமூக நீதி, மகளிர் வாழ்வு, வேலை, விவசாயம், வளர்ச்சி, கல்வி, நலவாழ்வு ஆகியவற்றுக்கான உரிமைகளை மீட்டெடுப்பது தொடர்பாக பயணம் அமைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

“மோதலில் மர்மம் உள்ளது”

“ராமதாஸிடம் தான் கட்சி உள்ளது. அவர் பக்கம் தான் வன்னியர் சமூகத்தின் வாக்காளர்கள் உள்ளனர். ராமதாஸை பார்த்து தான் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சி, இடங்களை ஒதுக்கும். அன்புமணியிடம் யாரும் பேசப் போவதில்லை” எனக் கூறுகிறார், அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.

X பதிவை கடந்து செல்ல, 1

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 1

“2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியை ராமதாஸ் முடிவு செய்தார். அதற்கு விருப்பம் தெரிவித்தால் அதற்கடுத்து வரும் கூட்டணிகளை அன்புமணி முடிவு செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்” எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அதேநேரம், “பா.ம.கவுக்குள் நடக்கும் அரசியலில் கருத்துரீதியான மோதல்கள் எதுவும் இல்லை” எனக் கூறும் மூத்த பத்திரிகையாளர் சிகாமணி திருப்பதி, ” இதில் ஏதோ மர்மம் உள்ளதாகவே தோன்றுகிறது” எனக் கூறுகிறார்.

கூட்டணிக் கட்சிகளிடம் பேர அரசியலை யார் நடத்தப் போவது என்ற போட்டியாகவே தான் இதைப் பார்ப்பதாகக் கூறும் அவர், “இருவருக்கும் இடையில் பிரச்னை முடிவுக்கு நீடித்துக் கொண்டே செல்கிறது. சமூக நீதியை வலியுறுத்தி வந்த கட்சிக்கு ஏற்பட்ட அவலமாக இதைப் பார்க்கிறேன்” என்கிறார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.”சொந்த சாதி மக்களை ஏமாற்ற முடியாது”

படக்குறிப்பு, பாமக உட்கட்சி “2016 சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க தனித்துப் போட்டியிட்டு ஐந்து சதவீத வாக்குகளைப் பெற்றது. தற்போது நடக்கும் மோதலால் 2026 சட்டமன்றத் தேர்தலில் வாக்கு சதவீதம் குறைவதற்கு வாய்ப்புள்ளது” எனக் கூறுகிறார் சிகாமணி திருப்பதி.

தொடர்ந்து பேசிய அவர், “வடமாவட்டங்களில் வன்னியர் சமூக மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டதாகக் கூறினாலும், பா.ம.க நிர்வாகிகளின் வளர்ச்சியையும் அச்சமூக மக்கள் பார்ப்பார்கள். சொந்த சாதியைக் காட்டி அவர்களைத் தொடர்ச்சியாக ஏமாற்ற முடியாது என்றே கருதுகிறேன்” என்கிறார்.

இதே கருத்தை முன்வைக்கும் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், “வடமாவட்டங்களில் உள்ள மக்கள் யாரும் முன்புபோல இல்லை. பா.ம.க தலைவர்களின் வளர்ச்சியைக் கவனிக்கிறார்கள். இதை அக்கட்சியின் நிர்வாகிகள் புரிந்து கொள்ள வேண்டும்” எனக் கூறுகிறார்.

X பதிவை கடந்து செல்ல, 2

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 2

தொடர்ந்து பேசிய அவர், “இருவருக்கும் இடையே சமாதானம் ஆனதுபோல ஒரு தோற்றம் ஏற்பட்டது. ஆனால், இருவரும் சமாதானம் ஆகவில்லை. மாவட்டம்தோறும் பொதுக்குழுவை அன்புமணி கூட்டுவதை தேர்தல் ஆணையம் ஏற்பதற்கு வாய்ப்பில்லை” என்கிறார்.

மாவட்ட பொதுக்குழு கூட்டங்களில் அன்புமணிக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றுவதற்கு வாய்ப்புள்ளதாகக் கூறும் ஷ்யாம், “ஒட்டுமொத்த பொதுக்குழுவை கூட்டுவதற்கு அன்புமணி பயப்படுவதாகவே இதைப் பார்க்க முடியும்” எனவும் குறிப்பிட்டார்.

ராமதாஸின் செய்தியாளர் சந்திப்பு குறித்து, பா.ம.க ஊடக தொடர்பாளர் க.பாலுவிடம் பேச பிபிசி தமிழ் முயற்சித்தது. “பேச விரும்பவில்லை” என்று மட்டும் பதில் அளித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு