Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தமிழ்நாட்டில் கடன் வசூல் முறையை நெறிப்படுத்த புதிய சட்டம் – கடன் செயலிகள் கட்டுக்குள் வருமா?
பட மூலாதாரம், Getty Images
எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
குறிப்பு: இதில் இடம் பெற்றிருக்கும் தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.
தமிழ்நாடு அரசின் ‘கடன் வழங்கும் நிறுவனங்கள் – நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்’ (Tamil Nadu Money Lending Entities-Prevention of Coercive Actions Act, 2025) அமலுக்கு வந்துள்ளது.
கடன் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதுடன், ‘பொதுமக்களிடம் இருந்து கடன் வசூல் செய்யும் போது நிதி நிறுவனங்கள் நெருக்கடி கொடுத்தால் ஐந்தாண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும்’ என்றும் புதிய சட்டம் கூறுகிறது.
புதிய சட்டத்தின் படி, கடனை வசூலிக்க எந்தெந்த வழிமுறைகளைக் கையாள்வது குற்றமாகும்? அதற்கு என்ன தண்டனை? அதனால் கடன் செயலிகள் (app) கட்டுக்குள் வருமா?
கடன் தொல்லையால் தொடரும் தற்கொலைகள்
கடன் தொல்லை காரணமாக, கடந்த ஜனவரி மாதம் சேலம் அரிசிபாளையத்தைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி பால்ராஜ் தனது மனைவி, மகளுடன் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்த புத்தேரியை சேர்ந்த யுவராஜ் என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். சில மாதங்களாக வேலையில்லாமல் தவித்த அவர், கடன் செயலியில் கடன் பெற்றுள்ளார். கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் கடன் செயலி நிறுவனத்தினர் அளித்த மனஉளைச்சலால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்கிறது செங்கல்பட்டு டவுன் காவல்நிலையத்தில் பதிவான எஃப்.ஐ.ஆர். சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்
இத்தகைய சூழலில், கடன் வசூலிப்பதில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதாவை, கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி தாக்கல் செய்தார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
அந்த மசோதாவில், “கடன் வழங்குவோர், அடகு கடைகள் ஆகியவை அதிக வட்டி பெறுவதை ஒழுங்குபடுத்தி, தமிழ்நாடு அடகுக் கடைக்காரர்கள் சட்டம் 1943, தமிழ்நாடு பணக்கடன் வழங்குவோர் சட்டம் 1957, தமிழ்நாடு கந்துவட்டி தடைச் சட்டம் 2003 ஆகியவற்றை அரசு அமல்படுத்தியுள்ளது.
ஆனால், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், நடைபாதை வியாபாரிகள், விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், கட்டட பணியாளர்கள் ஆகியோர் கடன் வழங்கும் நிறுவனங்களால் ஈர்க்கப்பட்டு கடன் சுமைக்கு ஆளாகின்றனர்.
இந்நிறுவனங்களின் வசூல் முறைகளால் மக்கள் பாதிக்கப்படுவதால், அவர்களைப் பாதுகாப்பதற்கு சட்டத்தை இயற்றுவது அவசியமாகக் கருதுகிறது தமிழ்நாடு அரசு,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அன்றைய தினமே விவாதங்களுக்குப் பின் இந்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
புதிய சட்டத்தில் என்ன உள்ளது?
அந்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்குப் பின் சட்டமாகியுள்ளது. அதன்படி, கடன் வழங்கும் நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுப்பது நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
கடன் வழங்கும் நிறுவனத்தின் பதிவு (Registration of money lending Entity)கடன் வழங்கும் நிறுவனத்தை முறைப்படுத்துதல் (Regulations of money lending entity)பதிவு செய்யும் நிறுவனங்களின் அதிகாரம் (Powers of registering authority)குற்றங்களும் அபராதமும் (Offences and penalties)எவையெல்லாம் குற்றம்?
ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ள வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் (NBFC), கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் தவிர அனைத்து பணம் வழங்கும் நிறுவனங்களுக்கும் புதிய சட்டம் பொருந்தும்.
கடன் பெற்ற நபரிடம் கட்டாய வசூல் செய்யும் நடவடிக்கையில் இறங்குதல். வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகளுக்கும் இவை பொருந்தும்.கடன் வாங்கிய நபரின் பெற்றோர், கணவர், மனைவி, குழந்தைகள் ஆகியோரிடம் நிறுவனமோ அதன் பிரதிநிதிகளோ கட்டாய வசூல் நடவடிக்கையில் ஈடுபடுதல்கடன் வாங்கிய நபரின் குடும்பத்தினர் மீது வன்முறையைப் பயன்படுத்துவது, அவர்களை அவமதிப்பது, மிரட்டுவது, பின்தொடர்வது போன்ற செயல்களில் ஈடுபடுதல்கடன் பெற்ற நபருக்கு சொந்தமான அல்லது அவர்கள் பயன்படுத்தும் சொத்துகளில் தலையிடுதல், அதைப் பயன்படுத்த முடியாமல் இடையூறு செய்தல்கடன் பெற்ற நபரின் சொத்துகளை பறிமுதல் செய்தல், வீடு, வேலை பார்க்கும் இடங்களுக்குச் சென்று பேசுதல் போன்றவை குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், @rajbhavan_tn/x
படக்குறிப்பு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 5 ஆண்டு சிறைத் தண்டனை
கடன்களை வசூலிப்பதற்கு தனியார் நிறுவனங்கள் அல்லது வெளி முகமைகளைப் (private Agency) பயன்படுத்துதல், வீட்டு உடைமைகளை எடுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளக் கூடாது என புதிய சட்டம் கூறுகிறது.கடன் வாங்கிய நபரின் குடும்பத்தைச் சேர்ந்த எவரேனும் கடன் வசூலிப்பு நடவடிக்கையால் தற்கொலை செய்து கொண்டதாக நிரூபிக்கப்பட்டால் பிஎன்எஸ் சட்டம் 108ன்படி குற்றமாக பார்க்கப்படும். இப்பிரிவு, தற்கொலைக்குத் தூண்டுவதை குறிக்கிறது.கடன் வாங்கிய நபருக்கு இன்னல் ஏற்படுத்தும் வகையில் மிரட்டுவது, பின்தொடர்வது ஆகியவற்றை மேற்கொண்டால் மூன்று ஆண்டு சிறைத்தண்டனை அல்லது 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.ஆவணங்களை எடுப்பது, கடன் வசூலிப்புக்கு வெளியாட்களை பயன்படுத்துவது போன்ற குற்றங்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 5 லட்ச ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து தண்டனையாக விதிக்கப்படும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.கடன் செயலிகள் கட்டுக்குள் வருமா?
“வங்கி மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் (Non-Banking Financial Company) ஆகியவற்றுக்கு அரசின் சட்டம் பொருந்தும். உடனடி கடன் செயலிகளால் மக்கள் அதிக சிரமத்துக்கு ஆளாகின்றனர். ஆனால், இவை எதுவும் நிறுவனங்களாக நடத்தப்படுவதில்லை” எனக் கூறுகிறார், சைபர் தொழில்நுட்ப வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இது ஒரு மென்பொருள். உலகில் யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து கடன் பெறலாம். ஐந்தாயிரம், பத்தாயிரம் உடனடியாக கடன் கொடுத்துவிடுகின்றனர்” எனக் கூறுகிறார்.
கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகியவற்றில் இதுபோன்ற கடன் செயலிகள் அதிகம் உள்ளதாகக் கூறும் அவர், “ஃபேஸ்புக், யூட்யூப் ஆகியவற்றில் விளம்பரம் செய்து இந்நிறுவனங்கள் மக்களை ஈர்க்கின்றன. இதனை முறைப்படுத்த வேண்டும்” எனக் கூறுகிறார்.
“ஒருவருக்குக் கடன் கொடுக்கும் போது ஆவணங்களை சரிபார்த்து நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்கின்றன. ஆனால், கடன் செயலிகளுக்கு இந்த விதிகள் எதுவும் இல்லை. பணம் கொடுத்து மிரட்டிப் பணம் பெற வேண்டும் என்பதே அவர்களின் இலக்காக உள்ளது,” எனக் கூறுகிறார் கார்த்திகேயன்.
ஆன்லைன் ரம்மியை தமிழ்நாடு அரசு முறைப்படுத்தியதுப் போல, கடன் செயலிகளுக்கும் ஓர் ஒழுங்குமுறைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் இறங்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Facebook
படக்குறிப்பு, கடன் செயலிகளுக்கும் ஓர் ஒழுங்குமுறைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் இறங்கலாம் என்று கூறுகிறார் சைபர் தொழில்நுட்ப வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன் “கடன் செயலியாக இருந்தாலும் பதிவு செய்வது கட்டாயம்”
இதனை மறுக்கும் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் துணைத் தலைவர் சி.பி.கிருஷ்ணன், “கடன் செயலிகளை யார் நடத்துகிறார்கள் என்பது தெரிய வாய்ப்பில்லை. ஆனால், புதிய சட்டத்தின்படி தமிழ்நாட்டில் கடன் வழங்கும் தொழில் செய்வோர் அனைவரும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிவு செய்வது கட்டாயமாகிறது. அவ்வாறு பதிவு செய்யப்படாமல் இயங்கும் கடன் செயலிகளை முடக்கலாம். அதன் சார்பாக, செல்போனில் பேசி கடனை வசூலிக்க முயற்சிப்பவர்கள் மீது சைபர்கிரைம் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கலாம். கடன் செயலிக்காக நேரில் சென்று பணத்தை வசூலிக்க முயலும் நபர்களை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுக்கலாம்” என்று குறிப்பிட்டார்.
“அவ்வாறு பதிவு செய்யாமல் கடன் கொடுத்தால் மூன்று ஆண்டு சிறைத் தண்டனையை வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. கடன் வழங்கும் அனைவரையும் பதிவு செய்ய வைத்து முறைப்படுத்தும் வேலையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள உள்ளது” எனவும் சி.பி.கிருஷ்ணன் தெரிவித்தார்.
இதற்காக, தமிழ்நாடு அரசின் புதிய சட்டத்தில் ஒழுங்குமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டுகிறார். அதன்படி,
கடன் வழங்கும் நிறுவனத்தை ஒருவர் நடத்த விரும்பினால் அந்தந்த பகுதிகளில் உள்ள பதிவு செய்யும் அமைப்பிடம் மின்னணு படிவம் மூலம் பதிவு செய்ய வேண்டும்.கடன் வழங்கும் நிறுவனத்தை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும்.மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும்.வட்டி வீதம், இணையதள முகவரி, அலுவலக விவரங்கள் ஆகியவற்றை விளம்பர அறிவிப்புகளில் தெளிவாக கூற வேண்டும்.அரசிடம் பதிவு சான்றிதழ் பெறாமல் கடன் வழங்கினால் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
பட மூலாதாரம், Facebook
படக்குறிப்பு, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் துணைத் தலைவர் சி.பி.கிருஷ்ணன் தீர்வு கிடைக்குமா?
2003 ஆம் ஆண்டில் கந்துவட்டி தடைச் சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்ததை மேற்கோள் காட்டிப் பேசிய சி.பி.கிருஷ்ணன், “அதில், எத்தனை சதவீதத்துக்கு மேல் வட்டி வாங்கக் கூடாது என்ற விவரம் இல்லை. ‘மிகவும் அதிகமான’, ‘மனதை உலுக்கும்’ ஆகிய வார்த்தைகள் மட்டும் இடம்பெற்றிருந்தன” எனக் கூறுகிறார்.
“கடன் செலுத்த முடியாவிட்டால் குடும்பத்தினரை தற்கொலைக்கு தூண்டுவது, பலர் முன்னிலையில் தாக்குவது போன்றவற்றை தடுக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது சாமானிய மக்களுக்கு மிகப் பெரிய தீர்வாக அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளன” எனவும் அவர் தெரிவித்தார்.
இதே கருத்தை வலியுறுத்தும் ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி, ” கடன் வசூலிப்பதில் காட்டப்படும் கெடுபிடியால் தற்கொலைகள் நடக்கின்றன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது மிரட்டல்கள் குறைய வாய்ப்புகள் உள்ளன” எனக் கூறுகிறார்.
கல்வி, வியாபாரம் ஆகியவற்றுக்கு அதிகளவில் கடன் பெறப்படுவதாகக் கூறுகிறார், நுகர்வோர் நலன் வழக்குகளைக் கையாளும் வழக்கறிஞர் நடராஜன்.
கடன் தவணையைத் திருப்பிச் செலுத்தும்போது சிக்கல் ஏற்படுவதாகக் கூறும் நடராஜன், “ஒருவருக்குக் கடன் கொடுக்கும் போது அவருக்கு கடனைத் திரும்பச் செலுத்தும் திறன் உள்ளதா என்பதை நிதி நிறுவனங்கள் பார்ப்பதில்லை. அதைக் கவனித்தாலே பிரச்னைகள் குறைந்துவிடும்” என்கிறார்.
தொடர்பு கொள்க…
நீங்களோ அல்லது உங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பது தெரிய வந்தால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு மையத்தின் உதவி எண்ணான 044-24640050-க்கு அழைப்பு விடுக்கவும்.மாநில சுகாதாரத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தற்கொலை தடுப்பு மையத்திற்கு அழைப்புவிடுக்க 104 என்ற எண்ணையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு