டிரம்ப் நடத்திய ராணுவ அணிவகுப்புக்கு எதிர்ப்பு எழுவது ஏன்? ‘நோ கிங்ஸ்’ அமைப்பின் கோரிக்கை என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மிச்சிகனின் லான்சிங்கில் உள்ள மிச்சிகன் கேபிட்டலில் நடைபெற்ற போராட்டம் எழுதியவர், பெர்ன்ட் டெபுஸ்மன், ஜான் சுட்வர்த்& கேலா எப்ஸ்டெயின் பதவி, வாஷிங்டன், லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் நியூயார்க்கிலிருந்து Twitter, @ 26 நிமிடங்களுக்கு முன்னர்

அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக அமெரிக்கா முழுதும் பல்வேறு நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன, “நோ கிங்ஸ்” (No Kings) என அழைக்கப்படும் குழு இந்த போராட்டங்களை ஒருங்கிணைத்தது.

வாஷிங்டன் டிசியில் டிரம்ப் நடத்திய அரிதான ராணுவ அணிவகுப்புக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் மற்ற பகுதிகளில் நடைபெற்று வரும் போராட்டங்களைத் தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

டிரம்பை விமர்சிக்கும் வகையிலான பதாகைகள் மற்றும் அமெரிக்க கொடிகளை ஏந்திய மக்கள் கூட்டத்துக்கு நடுவே நியூயார்க், ஃபிலடெல்ஃபியா உட்பட பல நகரங்களில் மக்கள் பிரதிநிதிகள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

அமெரிக்க ராணுவத்தின் 250வது ஆண்டை கொண்டாடும் விதமாக சனிக்கிழமை மாலை இந்த ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது. அன்றைய தினம் டிரம்புடைய பிறந்த தினமும் ஆகும். அணிவகுப்பின் போது ஏதேனும் போராட்டங்கள் நடத்தப்பட்டால் அவை “கடுமையாக ஒடுக்கப்படும்” என, டிரம்ப் ஏற்கெனவே எச்சரித்திருந்தார்.

பல லட்சக்கணக்கானோர் பங்கேற்ற நூற்றுக்கணக்கான போராட்டங்கள் நடைபெற்றதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.போராட்டங்கள் ஏன்?

ஃபிலடெல்ஃபியாவில் மக்கள் லவ் பார்க் பகுதியில் ஒன்றுதிரண்டனர். “நமது ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் என நான் நினைத்தேன்,” என 61 வயது செவிலியர் கரென் வான் டிரைஸ்டே ஏ.பி. செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

பொது சுகாதார நிறுவனங்களுக்கு டிரம்ப் நிர்வாகம் ஆட்குறைப்பு செய்தது தான் இந்த போராட்டத்தில் தான் கலந்துகொண்டதற்கான காரணங்களுள் ஒன்று என அவர் தெரிவித்தார்.

சமீப காலமாக நடைபெற்றுவரும் போராட்டங்கள் காரணமாக, தலைவர்கள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்த லாஸ் ஏஞ்சலஸ் மக்கள் அதிகமானோர் திரண்ட நகரங்களுள் ஒன்றாக உள்ளது.

ஆளுநர் கவின் நியூசமின் விருப்பத்துக்கு எதிராகவும், உள்ளூர் அதிகாரிகளின் கோபத்துக்கு எதிராகவும் டிரம்ப் ஒரு வாரத்துக்கு முன்பு தேசிய காவல்படையை அனுப்பினார்.

டிரம்பின் குடியேற்ற கொள்கைதான் தன்னை தெருவில் இறங்கி போராட தூண்டியதாக, பிரவுன் பேரெட்ஸ் (Brown Berets) எனப்படும் சிவில் உரிமைகள் குழுவின் உறுப்பினர் ஜோஸ் ஆஸெட்க்லா லாஸ் ஏஞ்சலஸில் பிபிசியிடம் தெரிவித்தார்.

“அது மிகவும் கொடுமையானது. நீங்கள் குடும்பங்களை பிரிக்கக் கூடாது,” என தெரிவித்தார்.

பெடரல் கட்டடத்துக்கு அருகே தேசிய காவல் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அப்போது கண்ணீர் புகையைப் பயன்படுத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

ஆனால், சிறிது தொலைவில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் அமைதியாக பேரணியில் ஈடுபட்டனர்.

பட மூலாதாரம், Getty Images

டிரம்பின் செல்வாக்கு எப்படி உள்ளது?

டிரம்ப் மீண்டும் அதிபரானதிலிருந்து பெருமளவில் போராட்டங்கள் நடைபெற்றாலும், டிரம்பின் குடியேற்ற கொள்கைகள் மக்களிடையே பிரபலமாக உள்ளதாக கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.

அமெரிக்காவில் சட்ட விரோதமாக இருப்பவர்களை அவர்களின் நாட்டுக்கு அனுப்பும் கொள்கையை அங்கீகரிப்பதாக 54% பேரும் நிராகரிப்பதாக 46% பேரும் தெரிவித்ததாக, கடந்த வாரம் நடத்தப்பட்ட CBS/YouGov கருத்துக்கணிப்பில் தெரிவித்தனர்.

டிரம்பின் திட்டங்கள் தங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக 42% பேரும், ஆபத்தான குற்றவாளிகளை நாடு கடத்துவதற்கு அவர் முன்னுரிமை அளிப்பதாக 53% பேரும் தெரிவித்துள்ளனர்.

தன்னுடைய இரண்டாவது ஆட்சிக் காலத்தில் அதிபருக்கு உண்டான அதிகாரங்களை டிரம்ப் மீறிவிட்டதாக எழுந்துள்ள விமர்சனத்தைக் குறிக்கும் வகையில், இந்த போராட்டங்களுக்கு “நோ கிங்ஸ்” என பெயரிடப்பட்டுள்ளது.

அணிவகுப்பில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான சீருடை அணிந்த வீரர்களில் சிலர், டஜன் கணக்கான பீரங்கி வாகனங்கள் மற்றும் ராணுவ வாகனங்கள், அணிவகுப்பு இசைக்குழுக்களுடன் அணிவகுத்துச் சென்றபோது, ​​அமெரிக்க அதிபர் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராணுவ அணிவகுப்பில் டொனால்ட் டிரம்ப் ராணுவ அணிவகுப்பு ஏன்?

அந்த அணிவகுப்பில் கலந்துகொண்டவர்களுக்கு அதிபர் சுருக்கமாக நன்றி தெரிவித்தார்.

“நம் வீரர்கள் எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். எப்போதும் போராடிக் கொண்டே இருப்பார்கள், எப்போதும் வெற்றியையே பெறுவார்கள்.”

இந்த நிகழ்ச்சி, மிகவும் செலவுகரமான தற்பெருமை திட்டம் என, அரசியல்வாதிகள் மற்றும் ராணுவ முன்னாள் தலைவர்கள் சிலரும் விமர்சித்தனர். இதற்கு 25 மில்லியன் டாலர்கள் முதல் 45 மில்லியன் டாலர்கள் வரை செலவானதாக ராணுவம் கூறுகிறது.

அதில் கலந்துகொண்ட சிலர் பிபிசியிடம் கூறுகையில், ராணுவத்தைக் கொண்டாடும் விதமாக அதில் பங்கேற்றதாக தெரிவித்தனர், சிலருக்கு ராணுவத்துடன் ஆழமான தொடர்பும் உள்ளது.

வியட்நாமில் சண்டையிட்டு நாடு திரும்பிய பின் தனக்கு இத்தகைய அணிவகுப்பு நடத்தப்படவில்லை என கூறும் மெல்வின் கிரேவ்ஸ், இது அதற்கு மிக நெருக்கமான ஒன்றாக இருந்ததாக தெரிவித்தார்.

அந்நிகழ்வில் அரசியலும் ஒரு பங்கு வகித்ததாக ஒப்புக்கொள்ளும் கிரேவ்ஸ், “நாட்டுக்காக சேவை செய்த ஆண்கள் மற்றும் பெண்களை பெருமைப்படுத்துவது மற்றும் அவர்களின் சேவைக்காக நன்றி செலுத்தும் நிகழ்வு இதுவாகும்,” என்றார்.

படக்குறிப்பு, இது ராணுவத்தினருக்கு நன்றி சொல்லும் நிகழ்வு என்றார் மெல்வின் கிரேவ்ஸ் அமெரிக்காவில் கடைசியாக 1991ம் ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய அதிபர் ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷ் தலைமையில், வளைகுடா போரில் அமெரிக்கா தலைமையிலான வெற்றியை கொண்டாடும் விதமாக இத்தகைய ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது.

ராணுவத்தினரை கொண்டாடும் விதமாக சுமார் 2,00,000 பேர் இதில் பங்கேற்றதாகவும் வாணவேடிக்கைகளை அதிகபட்சமாக 8,00,000 பேர் கண்டுகளித்ததாகவும், எல்ஏ டைம்ஸ் அந்த சமயத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

சனிக்கிழமை நடைபெற்ற அணிவகுப்பில் அதற்கும் குறைவான மக்களே கலந்துகொண்டனர், கனமழைக்கான முன்னெச்சரிக்கை மற்றும் ஈரப்பதமான வானிலை காரணமாக குறைவானவர்கள் பங்கேற்றுள்ளனர்.

ராணுவத்தில் உள்ள இளைய வீரர்கள் தங்களுடைய பணி காலத்தில் இத்தகையை அணிவகுப்பை பார்த்திருக்க மாட்டார்கள்.

வர்ஜீனியாவைச் சேர்ந்த முன்னாள் காலாட்படை வீரரான பிரையன் ஏஞ்சல், 2014 மற்றும் 2017க்கு இடையில் ராணுவத்தில் பணியாற்றினார், இதில் தென் கொரியா மற்றும் வட கொரியா இடையேயான எல்லையில் பணியாற்றியதும் அடங்கும், இந்த அணிவகுப்பை மேலும் பார்க்க விரும்புவதாக பிபிசியிடம் கூறினார்.

“எந்தவொரு பிரிவும் இத்தகைய அணிவகுப்பு அல்லது அங்கீகாரத்தைப் பெற வேண்டும்.”

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லாஸ் ஏஞ்சலஸில் போராட்டக்காரர் ஒருவர் காவல்துறையை நோக்கி கண்ணீர்ப்புகையை வீசுகிறார் லாஸ் ஏஞ்சலஸில் போராட்டங்களைச் சமாளிக்க அதிபரால் துருப்புக்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தலைநகர் வழியாக அணிவகுத்துச் செல்லும் அமெரிக்க வீரர்களுக்கு இடையே ஒரு சங்கடமான சூழ்நிலையை சில நிபுணர்கள் கண்டனர்.

“இந்த குடியேற்ற விவாதத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பிரிவினை மற்றும் ஆயுதங்களுடன் சீருடை அணிந்த துருப்புக்களின் பயன்பாடு காரணமாக, ராணுவத்தால் முதலில் கற்பனை செய்யப்படாத வகையில் இந்த அணிவகுப்பின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டதாக நான் நினைக்கிறேன்,” என்று பாதுகாப்பு நிபுணர் பார்பரா ஸ்டார் பிபிசியிடம் கூறினார்.

மினசோட்டா மாகாணத்தில் நடைபெறவிருந்த “நோ கிங்ஸ்” ஆர்ப்பாட்டங்களில் சில, மாகாண அரசியல்வாதியையும் அவரது கணவரையும் சுட்டுக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபரின் காரில் ஆர்ப்பாட்டத்துக்கான துண்டுப்பிரசுரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாட்டாளர்களால் ரத்து செய்யப்பட்டது.

சந்தேக நபர் கைது செய்யப்படும் வரை மக்கள் போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம் என்று ஆளுநர் டிம் வால்ஸ் வலியுறுத்தினார், ஆனாலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு