உள்ளுராட்சி மன்றங்களுக்கான தலைவர்கள், பிரதி தலைவர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பின் போது  உள்ளுராட்சிமன்றங்களுக்கான ஆணையாளர்கள் சர்வாதிகாரத்துடன் செயற்படுகின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உகறுப்பினர் நளின் பண்டார எச்சரித்துள்ளார்.

குருணாகலில் நேற்றைய தினம் சனிக்கிழமை  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு  தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில் 

வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலுள்ள உள்ளுராட்சிமன்றங்களுக்கான தலைவர்கள், பிரதி தலைவர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பின் போது குறித்த உள்ளுராட்சிமன்றங்களுக்கான ஆணையாளர்கள் சர்வாதிகாரத்துடன் செயற்படுகின்றனர். 

இந்த தெரிவுகள் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சினால் ஆலோசனை வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதற்கமைய இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமா இல்லையா என்பது குறித்து கருத்து கோரல் பகிரங்கமாகவே முன்னெடுக்கப்பட வேண்டும். 

இதற்கு இரகசிய கருத்து கோரலை கோர முடியாது. உறுப்பினர்கள் பகிரங்கமாக தமது கைகளை உயர்த்தி வாக்களிக்க வேண்டும்.

ஆனால் குருணாகல், புத்தளம், அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் உள்ளுராட்சி ஆணையாளர்கள் அராசங்கத்துக்கு சார்பாக அரசாங்கத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக தவறான முறைமையை நடைமுறைப்படுத்துகின்றனர்.

நீதிமன்றத்தை நாடி இந்த அநீதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம். அத்தோடு கொழும்பு மாநகரசபை மேயர், பிரதி மேயர் தெரிவுக்கான வாக்கெடுப்பின் போது ஆணையாளர்கள் முறையாக செயற்படுவார்கள் என்று நம்புகின்றோம் என்றார்.