யாழ்ப்பாணத்தில் மட்டுமே சீ.வீ.கே.சிவஞானம்-எம்.ஏ.சுமந்திரனின் கட்டுப்பாட்டை தமிழரசு பேண முற்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி தொடங்கி வவுனியா,முல்லைத்தீவு மற்றும் திருகோணமலையென கைகள் கடந்து செல்ல தொடங்கியுள்ளது.

இதனிடையே வவுனியாவை தொடர்ந்து திருகோணமலை மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளில் தமிழரசுடன் இணைந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைப்பது குறித்த இறுதி முடிவு இன்று எடுக்கப்படும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தமிழர்கள் ஆட்சி அமைக்கக்கூடிய பகுதிகளில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேராமல் ஆட்சி அமைக்க முடியாத நிலை இன்று ஏற்பட்டிருக்கிறது.

அதன் அடிப்படையில் ஆரம்பத்தில் எமது கோரிக்கையை தமிழரசுக் கட்சியின் யாழ்.தலைமையிடம் வைத்த போதிலும் அவர்களிடம் இருந்து தகுந்த பதில் எதுவும் பெறப்படவில்லை.

அதன் பின்னராக தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்மை பலதடவைகள் தொடர்புகொள்ள முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்காது எந்தவொரு தனிப்பட்ட முடிவும் எம்மால் எடுக்க முடியாதிருக்கின்றது.

இன்றைய தினம் அது குறித்த தீர்க்கமான முடிவெடுக்கப்படும். அது தொடர்பில் தமிழரசுக் கட்சியிடமும் அறிவிக்கப்படுமென செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திருகோணமலை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசன் தனித்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினது ஆதரவுடன் கதிரைகளை கைப்பற்ற திட்டமிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.