காஸா போர் நிறுத்தம்: ஐ.நா.வில் அமெரிக்காவின் நட்பு நாடுகளே ஆதரித்த போதும் இந்தியா புறக்கணித்தது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமர் மோதியிடம் வெள்ளிக்கிழமை தொலைபேசி மூலமாக பேசினார்.41 நிமிடங்களுக்கு முன்னர்

காஸாவில் உடனடியாக நிபந்தனையற்ற, நிரந்தரமான போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் ஐநா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா கலந்துகொள்ளவில்லை.

காஸா போர் நிறுத்தம் தொடர்பாக கடந்த வியாழக்கிழமை ஐநாவில் ‘பொதுமக்களை பாதுகாத்தல் மற்றும் சட்டப்பூர்வ மற்றும் மனிதநேய உறுதிமொழிகளை காத்தல்’ எனும் தலைப்பில் தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டது.

193 நாடுகளில் 149 நாடுகள் இதற்கு ஆதரவாக வாக்களித்தன. இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காத 19 நாடுகளுள் இந்தியாவும் ஒன்று.

அமெரிக்காவின் நட்பு நாடுகளாக அறியப்படும் பல நாடுகள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. தெற்காசியாவில் இந்தியாவை தவிர மற்ற நாடுகள் இதற்கு ஆதரவாக வாக்களித்தன.

படக்குறிப்பு, தீர்மானத்துக்கு ஆதரவாக 149 வாக்குகள் கிடைத்துள்ளன.ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான பர்வதனேனி ஹரிஷ், பேச்சுவார்த்தை மற்றும் ராஜ்ஜீய வழியில் மட்டுமே இப்பிரச்னையை தீர்க்க முடியும் என்றார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இதைத் தொடர்ந்து, மத்திய அரசை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இந்த நடவடிக்கை, இந்தியாவை தனிமைப்படுத்தியுள்ளதாக” விமர்சித்துள்ளார்.

இதனிடையே, வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான பிரியங்கா காந்தி, இந்த நடவடிக்கையை “அவமானகரமானது, ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது” என தெரிவித்திருந்தார்.

ஐநா வாக்கெடுப்பில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், Hassan Jedi/Anadolu via Getty Images

படக்குறிப்பு, ஐ.நா. நிறுவனம் காஸாவில் மனிதநேய உதவிகள் தொடர்பான பணிகளை நிறுத்திய பிறகு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் ஆதரிக்கப்படும் ஒரு நிறுவனம் அங்கு நிவாரணப் பொருட்களை விநியோகித்து வருகிறது.காஸாவில் உடனடியாக, நிபந்தனையற்ற மற்றும் நிரந்தரமான போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான தீர்மானம் ஐநாவில் முன்மொழியப்பட்டது. காஸாவில் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிப்பதற்கும் அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

20க்கும் மேற்பட்ட நாடுகளால் முன்மொழியப்பட்ட இந்த தீர்மானத்தில், பசிக்கொடுமையை ஓர் ஆயுதமாக பயன்படுத்துவது கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. மனிதநேய உதவிகளை அனுப்புவதில் உள்ள தடைகளை நீக்க வேண்டும் என்றும் சர்வதேச சட்டத்தின்படி காஸாவில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இஸ்ரேலை அந்த தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.

இந்த தீர்மானம் குறித்து ஐநா இணையதள தகவலின்படி, கடந்த வாரம் இதேபோன்ற தீர்மானத்தை அமெரிக்கா தன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரித்ததால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதை நிறைவேற்ற முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 149 வாக்குகள் கிடைத்துள்ளன. ஐநாவின் கூற்றுப்படி, 12 நாடுகள் இதற்கு எதிராக வாக்களித்துள்ளன, 19 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த நாடுகள்: அர்ஜெண்டினா, ஃபிஜி, ஹங்கேரி, இஸ்ரேல், மைக்ரோனீசியா (Micronesia), நவ்ரு (Nauru), பலாவ் (Palau), பபுவா நியூ கினி, பராகுவே, டோங்கா (Tonga), துவாலு (Tuvalu) மற்றும் அமெரிக்கா.

தீர்மானம் மீது வாக்களிக்காத நாடுகள்: அல்பேனியா, கேமரூன், வட கொரியா, டொமினிகா, ஈக்வடார், எத்தியோப்பியா, ஜார்ஜியா, இந்தியா, கிரிபாடி (Kiribati), மலாவி, மார்ஷல் தீவுகள், வடக்கு மாசிடோனியா, பனாமா, ருமேனியா, ஸ்லோவாக்கியா, தெற்கு சூடான், டிமோர் லெஸ்டே மற்றும் டோகோ.

அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகள் என கருதப்படும் ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா, சௌதி அரேபியா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.

தெற்காசிய நாடுகளான வங்கதேசம், பூடான், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை மற்றும் மாலத்தீவு போன்ற நாடுகளும் இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.

ஐநாவில் இந்தியா கூறியது என்ன?

பட மூலாதாரம், IndiaUNNewYork @x

படக்குறிப்பு, காஸாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையில் பர்வதனேனி ஹரிஷ் தெரிவித்தார்.வாக்கெடுப்புக்கு முன்னதாக, ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான பர்வதனேனி ஹரிஷ் ஐநா முன்பு இந்தியாவின் நிலைப்பாட்டை முன்வைத்தார்.

அமைதி மற்றும் மனிதநேயத்துக்கு ஆதரவாக இந்தியா எப்போதும் இருந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “மக்களை பாதுகாத்தல் மற்றும் மனிதநேய உதவிகள் சென்றடைவதை உறுதி செய்தல் ஆகியவற்றை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். காஸா மக்களுக்கு உரிய நேரத்தில் தொடர்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் மனிதநேய உதவிகள் சென்றுசேர வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்.” என்றார்.

பர்வதனேனி ஹரிஷ் மேலும் கூறுகையில், “மீதமுள்ள பணயக்கைதிகளை விடுவிப்பதும் போர் நிறுத்தமும் காஸாவில் மனிதநேய சூழலை மேம்படுத்துவதற்கு முக்கியம் என்பதை இந்தியா நம்புகிறது. பேச்சுவார்த்தை மற்றும் ராஜ்ஜீய ரீதியில் மட்டுமே அதை அடைய முடியும் என இந்தியா நம்புகிறது.” என்றார்.

“இஸ்ரேல்-பாலத்தீன விவகாரத்தைப் பொருத்தவரையில், இரு நாடுகள் தீர்வை இந்தியா எப்போதும் ஆதரித்துவந்துள்ளது. அதன்படி, இஸ்ரேலுடன் இறையாண்மை மற்றும் சுதந்திரமான பாலத்தீன நாடு அமைய வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “இந்தியா இதற்கு முன்னதாக ஐ.நா தீர்மானங்கள் A/RES/77/247 மற்றும் A/RES/79/232 மீது வாக்களிக்காமல் இருந்துள்ளது. அதேபோன்று தான் இப்போதும் இருக்க இந்தியா விரும்புகிறது. பேச்சுவார்த்தை மற்றும் ராஜ்ஜீய ரீதியில் மட்டுமே மோதல்களை தீர்க்க முடியும் என நாங்கள் நம்புகிறோம். இருநாடுகளை நெருக்கமாக கொண்டு வருவதில் தான் நம் முயற்சிகள் இருக்க வேண்டும். இந்த தீர்மானத்தின் மீது இந்தியா பங்கேற்கவில்லை.” என கூறினார்.

மோதியுடன் பேசிய நெதன்யாகு

பட மூலாதாரம், MIGUEL MEDINA/AFP via Getty Images

படக்குறிப்பு, வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்இரானுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதலை தொடங்கிய சமயத்தில் இத்தீர்மானம் ஐ.நாவில் முன்வைக்கப்பட்டது.

இந்த தாக்குதல்களுக்கு மத்தியில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமர் மோதியிடம் வெள்ளிக்கிழமை தொலைபேசி மூலமாக பேசினார்.

இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட பிரதமர் மோதி, “இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு என்னை அழைத்தார். தற்போதைய சூழல் குறித்து என்னிடம் தெரிவித்தார். நான் இந்தியாவின் கவலைகள் குறித்தும் பிராந்தியத்தில் விரைவில் அமைதி மற்றும் நிலைத்தன்மை ஏற்பட வேண்டும் என்றும் அவரிடம் கூறினேன்.” என பதிவிட்டிருந்தார்.

மற்றொருபுறம், வெளியுறவு துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், பிரான்ஸில் நடைபெறும் மத்திய கிழக்கு பிராந்தியம் குறித்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார். பிரான்ஸ் இத்தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.

அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த நடவடிக்கையால் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தன்னுடைய சமூக வலைதளத்தில், “இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத 19 நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. இந்த நடவடிக்கையால் நாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம்.” என பதிவிட்டுள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே, “நமது வெளியுறவு கொள்கையில் தவறுகள் இருப்பது இதனால் தெளிவாகிறது. தனது வெளியுறவு அமைச்சரின் தொடர்ச்சியான தவறுகளுக்கு பொறுப்பேற்று பிரதமர் அதனை சரிசெய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

ஒரு பிராந்தியம் மோசமான வன்முறை, மனிதநேய பேரழிவு மற்றும் நிலையற்ற சூழலை எதிர்கொள்ளும் போது இந்தியா அமைதியாக இருந்திருக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “மேற்கு ஆசியாவில் போர் நிறுத்தம், அமைதி மற்றும் பேச்சுவார்த்தையை ஆதரிக்கும் நிலைப்பாட்டை இந்தியா கைவிட்டுவிட்டதா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தன்னுடைய சமூக ஊடகப் பக்கத்தில், “இந்த தீர்மானம் மீது வாக்களிக்காமல் இருக்க இந்தியா முடிவு செய்தது அவமானகரமானது, ஏமாற்றத்தைத் தருகிறது. ஏற்கெனவே 60,000 பேர் இறந்துள்ளனர், அதில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள். ஒட்டுமொத்த மக்களும் பணயக்கைதிகளாக உள்ளனர், பசியால் இறக்கின்றனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்க நாம் மறுக்கிறோம்.” என பதிவிட்டுள்ளார்.

இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து குறிப்பிட்டுள்ள அவர், “ஒரு பகுதியே அழிக்கப்படுவது குறித்து நாம் அமைதியாக இருக்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.

“உலகத்துக்கே அமைதி மற்றும் மனிதநேயத்துக்கான வழியைக் காட்டிய நம் அரசியலமைப்பு சட்டம் மற்றும் நம் சுதந்திர போராட்டத்தின் விழுமியங்களின் கொள்கைகளை நாம் ஒரு தேசமாக எப்படி கைவிட முடியும்?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் அவர், “நீதிக்கு ஆதரவாக எப்போதும் இந்தியா நின்றுள்ளது. பெரிதும் பிளவுபட்ட உலகத்தில் மனிதநேயத்துக்காக நாம் மீண்டும் ஒருமுறை குரல் கொடுக்க வேண்டும், உண்மை மற்றும் அகிம்சைக்காக அச்சமின்றி எழுந்து நிற்க வேண்டும்,” என அவர் தெரிவித்துள்ளார்.

கே.சி. வேணுகோபால் மற்றும் பவன் கேரா போன்ற மற்ற காங்கிரஸ் தலைவர்களும் ஐநாவில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் நிலைப்பாடு குறித்து சமூக ஊடகங்களில் எழுந்த விவாதம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2018 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை பிரதமர் மோதி வரவேற்கும் புகைப்படம்.இந்தியா இத்தீர்மானம் மீது வாக்களிக்காதது குறித்து சமூக ஊடகங்களிலும் விவாதிக்கப்படுகின்றது. எதிர்க்கட்சி தலைவர்களை தவிர, வெளியுறவு கொள்கை மற்றும் ராஜ்ஜீய உறவு தொடர்பான நிபுணர்களும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

மூத்த பத்திரிகையாளர் சுஷாந்த் சிங், “இந்த தீர்மானம் மீது பூடான் கூட ஆதரவாக வாக்களித்துள்ளது, ஆனால் இந்தியா வாக்களிக்காமல் விலகியுள்ளது. ‘உலகளாவிய தெற்கு’ (Global South) என்பதைக் கூட விட்டுவிடலாம், ஆனால் தெற்காசியாவில் உங்களின் நெருங்கிய கூட்டாளியுடன் கூட உங்களால் ஒத்துச் செல்ல முடியவில்லை. இந்தியாவின் குறைந்துவரும் செல்வாக்கு குறித்த உண்மை இதுதான்.” என தெரிவித்துள்ளார்.

“இதேபோன்ற தீர்மானத்தில் வாக்களித்த 6 மாதங்களுக்குப் பிறகு, ஐ.நா.வில் காஸா போர்நிறுத்த தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து இந்தியா விலகியுள்ளது,” என தி இந்து செய்தித்தாளின் வெளிநாட்டு உறவுகள் ஆசிரியர் சுஹாசினி ஹைதர் தெரிவித்துள்ளார்.

“தெற்காசியாவின் மற்ற நாடுகள், பிரிக்ஸ் (BRICS) நாடுகள், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகள், அனைத்து ஜி7 நாடுகள் (அமெரிக்கா தவிர்த்து) அனைத்திலிருந்தும் வித்தியாசமான முடிவை இந்தியா எடுத்துள்ளது. இந்தியா பேச்சுவார்த்தைக்கு ஆதரவாக இருப்பதாக, இந்தியாவின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.”

2024ம் ஆண்டு டிசம்பர் மாதம், காஸாவில் உடனடியாக மனிதநேய உதவிகளை வழங்குவது தொடர்பான தீர்மானம் ஐ.நாவில் முன்வைக்கப்பட்டது. அச்சமயத்தில் அதற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.

மூத்த பத்திரிகையாளர் பங்கஜ் பசௌரி, இது ராஜ்ஜீய ரீதியிலான தோல்வி என தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “தாக்குதல் நடத்துபவர்களை இந்தியா விமர்சிக்கவும் இல்லை, காஸாவில் போர் நிறுத்தத்துக்காக ஐ.நாவில் வாக்களிக்கவும் இல்லை. ஆனால், நாம் உலகத்தை வழிநடத்த வேண்டும் என விரும்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு