‘சோக்கர்ஸ்’ தென் ஆப்ரிக்கா சாம்பியன்ஸ் ஆனது எப்படி? வெற்றிக்கு பாதை அமைத்த முக்கூட்டணி எது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முதல்முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தென் ஆப்ரிக்கா கைப்பற்றியது.எழுதியவர், க.போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காக14 ஜூன் 2025, 14:30 GMT

புதுப்பிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் போட்டிகளில் 27 ஆண்டுகளுக்குப்பின் தென் ஆப்ரிக்கா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று முதல்முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தென் ஆப்ரிக்கா கைப்பற்றியது.

இது ஐசிசி சார்பில் நடத்தப்படும் போட்டிகளில் தென் ஆப்ரிக்கா வெல்லும் 2வது சாம்பியன்ஷிப் பட்டமாகும். இதற்கு முன் 1998ல் நாக்அவுட் (சாம்பியன்ஸ் டிராபி) கோப்பையை வென்றிருந்தது.

இனியும் பதற்றத்தில் தோல்வியடையும் அணி அல்ல

ஐசிசி பைனல், அரையிறுதி என்றாலே தென் ஆப்ரிக்க அணி பதற்றத்தில் வெற்றியை நழுவவிடுவார்கள் என்ற அவப்பெயர் கடந்த காலங்களி்ல் அந்த அணி மீது இருந்தது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று அது அனைத்தையும் தென் ஆப்ரிக்க அணியினர் மாற்றிவிட்டனர்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

தென் ஆப்ரிக்க அணியில் இருக்கும் அனைத்து வீரர்களும் 27 வயதுக்குள் இருப்பவர்கள். இவர்கள் அனைவரும் தங்கள் தேசத்தின் அணி ஐசிசி அரையிறுதியிலும், இறுதிப்போட்டியிலும் தோல்வி அடைந்ததைத்தான் பார்த்திருந்தார்கள்.

ஆனால், இந்த இளம் வீரர்கள்தான் முதல்முறையாக தென் ஆப்ரிக்க அணிக்கு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று கொடுத்துள்ளனர்.

கடைசியாக தென் ஆப்ரிக்க அணி 1998ம் ஆண்டு ஐசிசி நாக்அவுட் (சாம்பியன்ஸ் டிராபி) கோப்பையை வென்றிருந்தது. அதன்பின், 27 ஆண்டுகளாக பலமுறை ஐசிசி நடத்தும்போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டும் தென் ஆப்ரிக்க அணியால் ஒரு கோப்பையைக் கூட வெல்ல முடியவில்லை. கடந்த ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் பைனலுக்கு முன்னேறிய நிலையில் இந்திய அணியிடம் தோற்றது.

ஆனால், கால் நூற்றாண்டுக்கும் மேலாக காத்திருப்பின் பலனாக இப்போது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தென் ஆப்ரிக்கா அணி முதல்முறையாக வென்றது.

இதுவரை நடந்த ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிக்கு அடுத்தார்போல் 3வது அணியாக தென்ஆப்ரிக்கா சாம்பியனானது.

மார்க்ரம் ஆட்டநாயகன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருதை வென்றார் எய்டன் மார்க்ரம்தென் ஆப்ரிக்க அணியின் வரலாற்று வெற்றிக்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் எய்டன் மார்க்ரம்மின் (136) ஆகச்சிறந்த ஆட்டம் மற்றும் கேப்டன் பவுமாவின்(66) பொறுப்பான பேட்டிங் முக்கியக் காரணமாகும்.

முதல் இன்னிங்ஸில் டக்அவுட்டில் ஆட்டமிழந்த மார்க்ரம், 2வது இன்னிங்ஸில் தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் ஆகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

ஐசிசி இறுதிப்போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதம் அடித்த 3வது பேட்டர் என்ற பெருமையை மார்க்ரம் பெற்றார். இதற்கு முன் கிளைவ் லாய்டு (1985), அரவிந்த டி சில்வா (1996) ஆகியோர் மட்டுமே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஐசிசி பைனலில் சதம் அடித்திருந்தனர். அதன்பின் தற்போது மார்க்ரம் அடித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்களுக்கும், தென் ஆப்ரிக்க அணி 138 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. 74 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 207 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதையடுத்து, தென் ஆப்ரிக்க அணிக்கு வெற்றி இலக்காக 282 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

282 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய தென் ஆப்ரிக்க அணி தொடக்கத்தில் விக்கெட்டை இழந்தாலும், 3வது விக்கெட்டுக்கு மார்க்ரம், கேப்டன் பவுமா ஜோடி வலுவான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். மார்க்ரம் 156 பந்துகளில் சதத்தையும், பவுமா அரைசதத்தையும் நிறைவு செய்தார். இருவரின் பார்ட்னர்ஷிப்பையும் பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் திணறினர். 3வது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்ரிக்க அணி, 2 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் சேர்த்திருந்தது.

மார்க்ரம் 102 ரன்களுடனும், பவுமா 65 ரன்களுடன் களத்தில் இருந்து 4வது நாளான இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர். தென் ஆப்ரிக்க அணி வெற்றிக்கு 69 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 4வது நாள் ஆட்டம் தொடங்கியது.

ஆட்டம் தொடங்கி சிறிது நேரத்தில் கேப்டன் பவுமா கூடுதலாக ஒரு ரன் சேர்த்து 66 ரன்னில் ஸ்டார்க் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 147 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். அடுத்துவந்த டிரிஸ்டன் ஸ்டெப்ஸ், மார்க்ரமுக்கு ஒத்துழைத்து ஆடவே ஸ்கோர் மெதுவாக உயர்ந்தது.

பட மூலாதாரம், Getty Images

ஸ்டார்க் பந்துவீச்சில் ஸ்டெப்ஸ் 8 ரன்னில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்து பெடிங்ஹம் களமிறங்கி, மார்க்ரமுடன் சேர்ந்தார். இளம் வீரராக இருந்தாலும் பெடிங்ஹம் ஆஸ்திரேலிய பந்துவீச்சை நேர்த்தியாகச் சமாளித்து ரன்களைச் சேர்த்தார். இருவரும் சேர்ந்து அணியை மெல்ல வெற்றிக்கு அருகே கொண்டு சென்றனர்.

தென் ஆப்ரிக்க அணி வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டநிலையில் மார்க்ரம் விக்கெட்டை இழந்தார். ஹேசல்வுட் பந்துவீச்சில் மார்க்ரம் (136) மிட்விக்கெட் திசையில் டிராவிஸ் ஹெட்டிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்தார். மார்க்ரம் ஆட்டமிழந்து வெளியேறியபோது, லார்ட்ஸ் மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி அவரை பாராட்டினர்.

அடுத்து, வெர்னே களமிறங்கி, பெடிங்ஹமுடன் சேர்ந்தார். இருவரும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். பெடிஹாம் 21 ரன்களுடனும், வெர்னே 4 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

கண்ணீருடன் வெற்றிக் கொண்டாட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தென் ஆப்ரிக்க வீரர்கள் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.தென் ஆப்ரிக்க அணி 27 ஆண்டுகளுக்குப்பின் ஐசிசி பட்டத்தை வென்ற மகிழ்ச்சியில் பெவிலியனிலும், டக்அவுட்டிலும் இருந்த தென் ஆப்ரிக்க வீரர்கள் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். கேசவ் மகராஜ், கேப்டன் பவுமா உள்பட பல வீரர்கள் மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதனர்.

திருப்புமுனை பந்துவீச்சாளர்கள்

தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு கேப்டன் பவுமா, மார்க்ரமின் சதம் எந்த அளவிற்கு முக்கியக் காரணமாக அமைந்ததோ, அதே அளவுக்கு அந்த அணியின் வேகப்பந்து வீச்சும் முக்கியப் பங்காற்றியுள்ளது. ரபாடா இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 9 விக்கெட்டுகளையும், இங்கிடி 3 விக்கெட்டுகளையும், யான்சென் 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இதில் குறிப்பாக வலுவான பேட்டிங் வரிசை கொண்ட ஆஸ்திரேலிய அணியை முதல் இன்னிங்ஸில் கடைசி 5 விக்கெட்டுகளை 20 ரன்களுக்குள் தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்கள் சாய்த்தனர், அதேபோல 2வது இன்னிங்ஸிலும் 20 ரன்களுக்குள் ஆஸ்திரேலிய நடுவரிசை பேட்டர்களை ஆட்டமிழக்கச் செய்த தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு திருப்புமுனையாக அமைந்தது. ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததை ஒருபோதும் தென் ஆப்ரிக்க அணி தவறவிடவில்லை.

கேப்டனின் பொறுப்பான ஆட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தென் ஆப்ரிக்க கேப்டன் பவுமாவின் பொறுப்பான பேட்டிங் வெற்றிக்கான காரணங்களில் ஒன்றாக இருந்ததுதென் ஆப்ரிக்க கேப்டன் பவுமாவின் பொறுப்பான பேட்டிங் வெற்றிக்கான காரணங்களில் ஒன்றாக இருந்தது. தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்று இதுவரை ஒரு போட்டியில்கூட தோற்றதில்லை என்ற சாதனையை பவுமா தக்க வைத்துள்ளார்.

இந்த ஆட்டத்திலும் 2வது இன்னிங்ஸில் மார்க்ரமுடன் சேர்ந்து பார்ட்ன்ர்ஷிப் அமைத்து ஆடிய பவுமா வெற்றியை நோக்கி அணியை நகர்த்தினார். ஒரு கட்டத்தில் பவுமாவுக்கு தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு நடக்கவே சிரமப்பட்டார். இதனால் பவுமா ரிட்டயர்ஹர்ட் முறையில் பெவிலியன் வர வேண்டுமா என்ற விவாதம் வர்ணனையாளர்கள் மத்தியில் நிலவியது.

ஆனால், முக்கியத்துவம் மிகுந்த இந்த ஆட்டத்தில் முதலுதவி சிகிச்சை மட்டும் செய்து கொண்ட பவுமா, நேற்றைய ஆட்டம் முடியும் வரை தசைப்பிடிப்பு வலியுடன் மார்க்ரமுடன் இணைந்து பேட் செய்து அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல காரணமாக இருந்தார்.

கால் நூற்றாண்டு காத்திருப்பு

பட மூலாதாரம், Getty Images

நிறவெறித் தடையால் நீண்டகாலம் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க தென் ஆப்ரிக்காவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 1992ம் ஆண்டு உலகக் கோப்பையில்தான் அந்த அணிக்கு தடை நீக்கப்பட்டது.

அந்த உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்க மோதலில் மழைகுறுக்கிடவே வலுவான தென் ஆப்ரிக்கா டக்வொர்த் லிவிஸ் விதிப்படி தோல்வி அடைந்தது.

1998ம் ஆண்டு ஐசிசி சார்பில் முதல்முறையாக நடத்தப்பட்ட நாக்அவுட் கோப்பையை மறைந்த ஹன்சி குரோனியே தலைமையில் தென் ஆப்பிரிக்கா வென்றது. இதுதான் தென் ஆப்ரிக்கா வென்ற முதல் ஐசிசி கோப்பையாகும். அதன்பின் கடந்த 27 ஆண்டுகளாக பலமுறை போராடியும் அது தோல்வியில் முடிந்தது.

1999ம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தோல்வியை தென் ஆப்ரிக்கா மறக்காது. அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வெல்ல வேண்டிய நிலையில் போட்டி டையில் முடிந்தது. ஆஸ்திரேலிய அணி சிறப்பாக ஆடியிருந்த காரணத்தால் அந்த அணி பைனலுக்கு முன்னேறி, தென் ஆப்ரிக்கா வாய்ப்பை இழந்தது. கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆப்ரிக்காவை தோல்வி துரத்திய நிகழ்வும், பதற்றத்தில் வெற்றியை நழுவவிடும் சோக்கர்ஸ் என்ற பெயரும் வந்தது.

2015ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதியில் பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து பைனலுக்கு செல்லும் வாய்ப்பை தென் ஆப்ரிக்கா பறிகொடுத்தது.

2024ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தென் ஆப்ரிக்கா முன்னேறியது. பர்படாஸில் நடந்த பைனல் ஆட்டத்தில் இந்திய அணியிடம் 7 ரன்னில் தென் ஆப்ரிக்கா தோல்வி அடைந்தது. கடந்த 25 ஆண்டுகால வரலாற்றில் தென் ஆப்ரிக்க அணி ஐசிசி போட்டிகளில் பலமுறை அரையிறுதி, இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையை நழுவவிட்டிருந்தது. 27 ஆண்டுகால காத்திருப்புக்குப்பின் முதல்முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றுள்ளது.

கடின உழைப்பு, நம்பிக்கை

பட மூலாதாரம், Getty Images

சாம்பியன்ஷிப் பட்டம் வென்றபின் தென் ஆப்ரிக்க கேப்டன் டெம்பா பவுமா அளித்த பேட்டியில் ” எங்களுக்கு கடந்த இரு நாட்களும் சிறப்பானதாக இருந்தது, சில நேரங்களில் நாங்கள் தென் ஆப்ரிக்க என்று உணரவைத்தது. இந்த தொடருக்காக கடினமாக உழைத்தோம், தயாராகினோம், அதிகமான நம்பிக்கையுடனும், ஏராளமான சந்தேகங்களைச் சுமந்தும் வந்தோம். சிறப்பாக ஆடிய அனைவருக்கும் நன்றி. எங்களுக்கு இரு ஆகச்சிறந்த தருணம், அடுத்த இருநாட்களில் எங்களை மக்கள் மகிழ்ச்சியில் மூழ்கடிப்பார்கள்.

இந்த எழுச்சியைத்தான், உணர்ச்சியைத்தான் அணியினர் அனைவரும் எதிர்பார்த்தார்கள் விரும்பினார்கள். மார்க்ரமை அணிக்குள் கொண்டுவந்த போது அவரைச் சேர்த்தது குறித்து கேள்வி எழுந்தது. ஆனால் அனைத்தையும் அவரின் ஆட்டம் நொறுக்கிவிட்டது. ரபாடாவின் பந்துவீச்சு திருப்புமுனையாக இருந்தது. நாங்கள் பலவாறு சிதறி இருந்தாலும், தேசமாக ஒன்றாக இருந்து சாம்பியன்ஷிப்பை பெற்றுக் கொடுத்துள்ளோம், இதை ஒற்றுமையாகக் கொண்டாடுவோம்” எனத் தெரிவித்தார்.

சர்வதேச போட்டிகளில் ஆடாத பயிற்சியாளர்

தென் ஆப்ரிக்க அணியின் சாம்பியன்ஷிப் வெற்றிக்கு அந்த அணியின் பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் முக்கியக் காரணம். தென் ஆப்ரிக்க தேசிய அணியில் இடம் பெறாத, சர்வதேச போட்டியில் ஆடாத சுக்ரி கான்ராட் கடந்த 2023ம் ஆண்டு டெஸ்ட் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதுமுதல் தென் ஆப்ரிக்க அணியில் ஏற்பட்ட மாற்றங்கள், வெற்றிகள் சாம்பியன்ஷிப் வரை கொண்டு வந்துள்ளது. தென் ஆப்ரிக்க முன்னாள் வீரர் டிக்கி கான்ராடின் மகன் சுக்ரி கான்ராட் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்ரிக்காவின் மேற்கு மாகாண அணிக்காக இளமைக் காலத்தில் ஆடிய சுக்ரி கான்ராட் 13 முதல்தரப் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். கேப் கோப்ராஸ், கட்டெங், ஹைவீல்ட் லயன்ஸ் ஆகிய கவுன்டி அணிகளுக்குப் பயிற்சியாளராக சுக்ரி பணியாற்றியுள்ளார். உகாண்டா தேசிய அணிக்கு 2010-2011ல் பயிற்சியாளராகவும் சுக்ரி இருந்து அதன்பின் தென் ஆப்ரிக்க தேசிய கிரிக்கெட் அகாடெமிக்கு தலைமைப் பயிற்சியாளராக சுக்ரி நியமிக்கப்பட்டார்.

2023 ஜனவரியில் தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணிக்கு பயிற்சியாளராக சுக்ரி கான்ராட் நியமிக்கப்பட்டார். அதுமுதல் அணியை தயார் செய்த சுக்ரி, கேப்டனாக இருந்த மார்க்ரமை சமீபத்தில் மாற்றிவிட்டு, டெம்பா பவுமாவை நியமிக்க பரிந்துரை செய்தார். அதற்கான பலனும் கிடைக்கவே முதல்முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் தென் ஆப்ரிக்கா வென்றது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு