Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இரானில் ஆட்சியை கவிழ்ப்பது இஸ்ரேலின் குறிக்கோளா? – இது சாத்தியமா?
பட மூலாதாரம், Getty Images
எழுதியவர், அமீர் அசிமிபதவி, பிபிசி பாரசீக சேவை ஆசிரியர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இரானின் அணுசக்தி மூலம் இஸ்ரேலுக்கு கடுமையான ஆபத்து உள்ளது என்று இஸ்ரேல் கருதுகிறது. அதனை அழிப்பதே வெள்ளிக்கிழமை தான் நடத்திய தாக்குதல்களின் முக்கிய குறிக்கோள் என்று இஸ்ரேல் கூறுகிறது.
ஆனால் இஸ்ரேலின் பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகு ஒரு பெரிய இலக்கைக் கொண்டுள்ளார். இரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதே அந்த பெரிய இலக்கு.
இதற்கு முன்பு இல்லாத வகையில் தாக்குதல் நடத்துவதன் மூலம், ஒரு சங்கிலித் தொடர் போன்ற எதிர்வினையை ஏற்படுத்தலாம் என்றும் இதனால் ஏற்படும் அமைதியின்மை இறுதியில் இஸ்லாமியக் குடியரசை கவிழ்க்கும் நிலைக்குத் தள்ளலாம் என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்பலாம்.
“தீய மற்றும் அடக்குமுறை ஆட்சியிலிருந்து விடுதலைக்காக எழுந்து நிற்பதன் மூலம், இரானிய மக்கள் உங்கள் கொடி மற்றும் அதன் வரலாற்று மரபைச் சுற்றி ஒன்றுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று வெள்ளிக்கிழமை மாலை அவர் கூறினார்.
பல இரானியர்கள், அந்நாட்டின் பொருளாதாரச் சூழல், பேச்சு சுதந்திரம், பெண்கள் உரிமைகள் மற்றும் சிறுபான்மை உரிமைகள் பறிக்கப்படுவது குறித்து அதிருப்தி அடைந்துள்ளனர்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இஸ்ரேலின் தாக்குதல் இரானின் தலைமைக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.
இந்தத் தாக்குதல்களில் இரானிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி, ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி மற்றும் புரட்சிகர காவல்படையின் பல உயர்நிலை தலைவர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், இஸ்ரேலிய தாக்குதல் இன்னும் முடிவடையவில்லை.
வெள்ளிக்கிழமை பிற்பகலில், இரான் பதிலடி தாக்குதல் நடத்தியது.
“டஜன் கணக்கான இலக்குகள், ராணுவ மையங்கள் மற்றும் விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது” என்று புரட்சிகர காவல்படை தெரிவித்தது.
சூழல் இன்னும் மோசமடைந்தது, இரானின் பதிலடி ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, நெதன்யாகு, “இன்னும் அதிகம் (தாக்குதல்கள்) வந்து கொண்டிருக்கிறது” என்று கூறினார்.
மேலும் பல இரானிய தலைவர்கள் குறிவைக்கப்படலாம்.
இந்தத் தாக்குதல்களும், கொலைகளும் ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி, மக்கள் எழுச்சிக்கு வழி வகுக்கும் என்று இஸ்ரேல் கணக்கிடலாம்.
குறைந்தபட்சம் நெதன்யாகுவும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்.
ஆனால் இது ஒரு பெரிய சூதாட்டம் மட்டுமே.
முதலில், அவர்கள் எதிர்பார்ப்பது போன்ற ஒரு தொடர்ச்சியான எதிர்வினை உருவாகுமா என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. அது தொடங்கினாலும், அந்த செயல்முறை எங்கு சென்று முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இரானில் ஆயுதப் படைகளையும் பொருளாதாரத்தையும் கட்டுப்படுத்துபவர்களிடம் தான் அதிகளவிலான அதிகாரம் உள்ளது. அதில் பெரும்பாலானவை இரானிய புரட்சிகர காவல்படை (IRGC) மற்றும் வேறு சில மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அமைப்புகளில் உள்ள கடும்போக்காளர்களின் கைகளில் உள்ளது.
அவர்கள் ஏற்கனவே அதிகாரத்தில் இருப்பதால், ஆட்சியை கவிழ்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவர்கள் இரானை மேலும் மோதல் நிறைந்த பாதையில் அழைத்துச் செல்ல வாய்ப்பு உள்ளது.
பட மூலாதாரம், EPA-EFE/Shutterstock
படக்குறிப்பு, இரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை ஜெருசலேமில் இருந்து காணமுடிந்தது.மறுபுறம், ஆட்சி வீழ்வதற்கும், அதைத் தொடர்ந்து இரான் குழப்பத்தில் மூழ்குவதற்கும் வாய்ப்பு உள்ளது.
சுமார் 9 கோடி மக்கள்தொகை கொண்ட அந்நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள் மத்திய கிழக்கு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இரானில் எழுச்சி ஏற்பட்டு, இறுதியில் இஸ்ரேலின் நட்பு சக்திகள் இரானில் ஆட்சியைக் கைப்பற்றுவதை இஸ்ரேல் விரும்பலாம்.
ஆனால், அந்த மாற்று சக்தி யார் என்பதுதான் முக்கியக் கேள்வியாக உள்ளது.
சமீப ஆண்டுகளில், இரானின் எதிர்ப்பு சக்திகள் பிளவுபட்டுள்ளன. அதனால் தற்போது தெளிவான மாற்று தேர்வுகள் எதுவும் இல்லை.
2022-ஆம் ஆண்டு, இரானில் பெரும்பகுதியை புயல்போல் உலுக்கிய “பெண் வாழ்க்கை சுதந்திரம்” (“Woman Life Freedom” ) இயக்கத்துக்குப் பிறகு சில எதிர்க்கட்சிகள், இஸ்லாமியக் குடியரசுக்கு எதிரான பலவகை குழுக்கள் மற்றும் செயற்பாட்டாளர்களைக் கொண்டு ஒரு கூட்டணியை உருவாக்க முயன்றன.
ஆட்சியைக் கவிழ்த்த பிறகு யார் தலைமை ஏற்க வேண்டும், புதிய ஆட்சியின் வடிவம் என்னவாக இருக்க வேண்டும் என்ற விவாதங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்ததால் அந்த கூட்டணி நீண்ட காலம் நீடிக்கவில்லை.
இஸ்ரேலின் தலைவர்கள் இந்தக் குழுக்கள் அல்லது ஆளுமைகளில் சிலரை விருப்பமான மாற்றுத் தேர்வுகளாகக் காணலாம்.
உதாரணமாக, 1979 ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சியில் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஷாவின் மகனும், இரானின் முன்னாள் பட்டத்து இளவரசருமான ரேசா பஹ்லவி.
அவர் நாட்டிலிருந்து வெளியேறி வாழ்ந்து வருகிறார். தனது நோக்கங்களுக்காக வெளிநாடுகளின் ஆதரவைப் பெற தீவிரமாக முயற்சித்து வருகிறார்.
அவர் சமீபத்திய ஆண்டுகளில் இஸ்ரேலுக்குப் பயணம் செய்திருந்தார்.
சில இரானியர்களிடையே அவர் பிரபலமடைந்திருந்தாலும், இது விரைவில் ஆட்சி மாற்றத்திற்கான சக்தியாக மாறுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
வெளிநாட்டில் இருந்து செயல்படும் முஜாஹிதீன்-எ கல்க் (MEK) என்ற எதிர்க்கட்சிக் குழு ஒன்றும் உள்ளது. இஸ்லாமியக் குடியரசை அகற்ற வேண்டுமென்று அந்தக் குழு நினைக்கிறது. ஆனால் மன்னராட்சிக்கு திரும்புவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.
இடதுசாரி இஸ்லாமிய குழுவாக நிறுவப்பட்ட அக்குழு, ஷாவை முன்பு கடுமையாக எதிர்த்தது.
புரட்சிக்குப் பிறகு, முஜாஹிதீன்-எ கல்க் (MEK) இராக்குக்குச் சென்றது. 1980களின் முற்பகுதியில், சதாம் ஹுசைனின் இரானுக்கு எதிரான போரில் அவருடன் அக்குழு இணைந்தது. இதனால், பல இரானியர்களிடையே அவர்களது செல்வாக்கு குறைந்தது.
முஜாஹிதீன்-எ கல்க் இன்றும் தீவிரமாக செயல்படுகிறது. அமெரிக்காவில் அவர்களுக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அதில் சிலர் டொனால்ட் டிரம்ப் அணியுடன் நெருக்கமாக உள்ளனர்.
இருப்பினும், டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் இருந்ததைப் போல, வெள்ளை மாளிகையில் இந்த எதிர்க்கட்சிக் குழுவுக்கு அதிக செல்வாக்கு இல்லை என்று தெரிகிறது.
அப்போது, மைக் பாம்பியோ, ஜான் போல்டன் மற்றும் ரூடி கியுலியானி போன்ற மூத்த அமெரிக்க தலைவர்கள் முஜாஹிதீன்-எ கல்க் (MEK) கூட்டங்களில் கலந்துகொண்டு ஆதரவு உரைகள் வழங்கினர்.
மதச்சார்பற்ற ஜனநாயகத்தை உருவாக்க விரும்புபவர்கள் முதல், நாடாளுமன்ற அமைப்பில் முடியாட்சியை விரும்புபவர்கள் வரை, பிற அரசியல் சக்திகளும் உள்ளன.
வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதல்களின் முழு விளைவைக் கணிக்க இன்னும் அதிக நேரம் வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான சண்டையின் போது, இரானியர்கள் அந்த சூழ்நிலையை ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான வாய்ப்பாகக் கருதியதற்கான வலுவான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.
ஆனால், அப்போதைய நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதலின் அழிவைப் போன்றதாக இல்லை.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தெஹ்ரான் மற்றும் பிற இடங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளை இஸ்ரேலிய தாக்குதல்கள் சேதப்படுத்தின.இஸ்லாமியக் குடியரசின் இறுதி நோக்கம்
இப்போது இரானின் இறுதி நோக்கம் என்ன என்று நாம் கேட்க வேண்டும்.
இஸ்ரேலில் உள்ள பல இலக்குகளை குறிவைத்த போதிலும், இரானுக்கு பல நல்ல வழிகள் இருப்பதாகத் தெரியவில்லை.
அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதும், பதற்றத்தைத் தணிப்பதும்தான் இரானுக்கு உள்ள பாதுகாப்பான வழி என்று சிலர் கருதலாம்.
ஆனால், டிரம்ப் கோரியபடி, பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்புவது இரான் தலைவர்களுக்கு ஒரு கடினமான தேர்வாக இருக்கும். அவ்வாறு செய்தால், அது அவர்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டதாக அர்த்தமாகும்.
இஸ்ரேலுக்கு எதிரான பழிவாங்கும் தாக்குதல்களைத் தொடர்வதும் மற்றொரு வழியாக உள்ளது.
இது அவர்களுக்கு மிகவும் விருப்பமான வழியாகத் தெரிகிறது.
இதைத் தான் இரானியத் தலைவர்கள் தங்கள் ஆதரவாளர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால் தாக்குதல்கள் தொடர்ந்தால், அது இஸ்ரேலின் அடுத்தகட்ட தாக்குதல்களுக்கு வழிவகுக்கும்.
கடந்த காலங்களில் அமெரிக்க தளங்கள், தூதரகங்கள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள இடங்களை குறிவைப்பதாக இரான் அச்சுறுத்தியுள்ளது.
ஆனால் இது எளிதில் சாத்தியமல்ல. அமெரிக்காவைத் தாக்குவது அமெரிக்காவும் நேரடியாக இம்மோதலில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பை உருவாக்கும். அதை இரான் பெரிதாக விரும்புவதில்லை.
இந்த வழிகள் இரு தரப்பினருக்கும் எளிதானவை அல்ல. அவற்றின் விளைவுகளைக் கணிப்பதும் கடினம்.
இந்நிலையில் தற்போது வரை தெளிவற்ற சூழலே நிலவுகிறது. அது சரியாகும் வரை அங்கு ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்து அறிந்துகொள்ள நாம் காத்திருக்க வேண்டும்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு