இரான் அதிஉயர் தலைவருக்கு நெருக்கமான தளபதியை கொன்ற இஸ்ரேல் – அவரது பின்னணி என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேல், அமெரிக்கா உள்பட இரானின் எதிரிகளுக்கு எதிராகக் கடுமையான அணுகுமுறையை முன்னெடுத்ததற்காக, ஹொசைன் சலாமி அறியப்பட்டார்.எழுதியவர், கெல்லி என் ஜிபதவி, பிபிசி நியூஸ்53 நிமிடங்களுக்கு முன்னர்

இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி ஹொசைன் சலாமி, வெள்ளிக்கிழமை அதிகாலை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில், மிக உயர்ந்த பதவியில் இருந்த தலைவராக ஹொசைன் சலாமி கருதப்படுகிறார். 65 வயதான சலாமி, இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட இரானின் எதிரி நாடுகள் மீது கடுமையான நிலைப்பாட்டை முன்னெடுத்ததற்காக அறியப்பட்டவர்.

இந்த இரு நாடுகளில் எந்தவொரு நாடு தாக்குதல் நடத்தினாலும், “இரான் நரகத்தின் கதவுகளைத் திறக்கும்” என்று கடந்த மாதம் அவர் கடுமையாக எச்சரித்திருந்தார்.

அமெரிக்கா – இரான் இடையே அணு ஆயுதப் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், பேச்சுவார்த்தையை பாதிக்கக்கூடிய எந்த நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது எனத் தனது கூட்டாளியான இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்து இருந்தபோதிலும், இரானின் அணுசக்தி நிலையங்கள், பாலிஸ்டிக் ஏவுகணை தொழிற்சாலைகள் மற்றும் ராணுவத் தளபதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் பரந்த அளவிலான தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் ஈடுபடவில்லை என்று அமெரிக்கா கூறினாலும், இதற்கு இஸ்ரேலும் அமெரிக்காவும் “பெரிய விலையை” கொடுக்க நேரிடும் என்று இரான் எச்சரித்துள்ளது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இதனால் ஏற்கெனவே பதற்றமாக உள்ள மத்திய கிழக்குப் பகுதியில் முழுமையான போர் வெடிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இரான் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியான முகமது பாகேரி, துணைத் தளபதி கோலமாலி ரஷீத் மற்றும் பல அணு விஞ்ஞானிகளும் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.

தாக்குதல்களுக்கு ஒரு நாள் முன்பு, “எந்தவொரு சூழ்நிலைகளுக்கும், நிலைப்பாடுகளுக்கும், நிகழ்வுகளுக்கும் இரான் முழுமையாகt தயாராக உள்ளது” என்று சலாமி கூறியிருந்தார்.

“இஸ்ரேலின் முற்றுகையின் கீழ் இருக்கும் எதிர்த்து சண்டையிட ஆயுதமோ, உதவியோ இல்லாத பாலத்தீனர்களுடன் போராடுவது போல், இரானையும் எதிர்த்துப் போராட முடியும் என்று எதிரி நினைக்கிறார்,” என்று கூறிய அவர், “நாங்கள் போரால் சோதிக்கப்பட்டவர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள்”என்று குறிப்பிட்டார்.

கடந்த 1980ஆம் ஆண்டில், இரான் – இராக் போரின்போது, இரானிய ஆயுதப் படைகளின் சக்தி வாய்ந்த பிரிவான இஸ்லாமிய புரட்சிகர காவல் படையில் இணைந்தவர் சலாமி. 2009ஆம் ஆண்டில் துணைத் தளபதியான அவர், அதன் பிறகு பத்து ஆண்டுகள் கழித்து தளபதியாக உயர்ந்தார்.

இரானின் அணுசக்தி மற்றும் ராணுவத் திட்டங்களில் ஈடுபட்டதற்காக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அமெரிக்காவால் அவருக்கு 2000ஆம் ஆண்டில் இருந்து தடை விதிக்கப்பட்டது.

இரானின் ராணுவ திறன்களைப் பற்றி பெருமையாகப் பேசிய சலாமி, ஒரு கட்டத்தில், இரான் “உலகப் பேரரசாக மாறும் வேளை வந்துவிட்டது” என்று அறிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் தாக்குதலில் சேதமடைந்த கட்டடம்இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உடனான ராணுவ மோதல் நடப்பதற்கான வாய்ப்பை சலாமி வரவேற்றார்.

கடந்த 2019ஆம் ஆண்டில், சிரியாவில் இரானிய இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலாக, சலாமி அரசியல் வரைபடத்தில் இருந்து “யூத ஆட்சியை முற்றிலும் நீக்குவதாக” சபதம் எடுத்தார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிரியாவில் உள்ள இரானிய தூதரகத்தைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட மற்றொரு தாக்குதலில், இரண்டு ஜெனரல்கள் உள்பட ஏழு புரட்சிகர காவல் படை உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.

அதற்குப் பதில் அளிக்கும் விதமாக, “எங்கள் துணிச்சல் மிக்க வீரர்கள் யூத ஆட்சியைத் தண்டிப்பார்கள்” என்று சலாமி இதேபோல் மற்றொரு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

கடந்த 1979இல் இரானில் நடந்த புரட்சிக்கு முன்பு வரை, இரானும் இஸ்ரேலும் நட்பு நாடுகளாக இருந்தன. அந்த புரட்சிக்குப் பின்னர் அமைக்கப்பட்ட ஆட்சி, இஸ்ரேலை எதிர்ப்பதை அதன் கொள்கையின் முக்கிய அங்கமாக எடுத்துக் கொண்டது. இஸ்ரேல் எனும் நாட்டை தற்போதைய இரானிய ஆட்சி ஏற்கவில்லை.

இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா காமனெயி, இஸ்ரேலை “புற்றுநோய்க் கட்டி” என வர்ணித்து, அது “சந்தேகத்திற்கு இடமின்றி பிடுங்கி அழிக்கப்படும்” என்று கூறினார்.

இரான் வெளியிட்ட கருத்துகள் மற்றும் அச்சுறுத்தல்கள், இஸ்ரேலுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துவதாக இஸ்ரேல் கருதுகிறது.

சலாமியும் புரட்சிகர காவல் படையின் பிற மூத்த அதிகாரிகளும் இரானின் அதிஉயர் தலைவருக்கு ஆலோசனை வழங்குவது வழக்கம்.

இரானின் புரட்சிகர காவல் படை என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா காமனெயிஇரானின் மதத் தலைவர் 40 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமிய புரட்சிகர காவல் படையை (IRGC) நிறுவினார்.

நாட்டின் இஸ்லாமிய முறையைப் பாதுகாப்பதும், வழக்கமான ராணுவத்திற்கு எதிராக ஒரு சமநிலையைப் பேணுவதும் அதன் நோக்கமாக உள்ளன. ஏனெனில் அவர்கள் ராணுவப் படைகள் மீது நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. 190,000க்கும் அதிகமான வீரர்களுடன், அதன் சொந்த தரைப்படை, கடற்படை மற்றும் விமானப் படையை புரட்சிகர காவல் படை கொண்டுள்ளது.

இரானின் மிகவும் சக்திவாய்ந்த இந்தப் படை, மிகவும் வலிமையான, ராணுவ மற்றும் அரசியல் குழுக்களில் ஒன்றாக உள்ளது. இரானின் ராணுவம், அந்நாட்டைப் பாதுகாக்கும் அதே வேளையில், ஆட்சியைப் பாதுகாக்க புரட்சிகர காவல் படை அமைக்கப்பட்டது.

இப்படை நேரடியாக அதிஉயர் தலைவரிடம் தனது நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிப்பதால், அதன் அதிகாரம் மற்ற அமைப்புகளால் எளிதில் கட்டுப்படுத்தப்பட்டது. இரானின் முக்கிய ஆயுதங்களைக் கண்காணிக்கும் புரட்சிகர காவல் படை, துணை ராணுவமான பாசிஜ் எதிர்ப்புப் படையைக் கட்டுப்படுத்துகிறது. அந்தப் படை பெரும்பாலும் உள்நாட்டு எதிர்ப்பை அடக்கப் பயன்படுத்தப்படுகிறது.

மத்திய கிழக்கின் பிற பகுதிகளில், இந்தக் குழு தங்கள் கூட்டாளிகளாக உள்ள அரசுகளை ஆதரிக்க பணம், ஆயுதங்கள், தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கி, தங்களது செல்வாக்கை நிலைநாட்டுகிறது.

புரட்சிகர காவல் படையைச் சேர்ந்த சில முக்கிய உறுப்பினர்கள், அதன் ரகசிய வெளிநாட்டுப் பிரிவான ‘குட்ஸ் படையை’ இயக்குகிறார்கள்.

இந்தப் பிரிவு ஆப்கானிஸ்தான், இராக், லெபனான், பாலத்தீனிய பிரதேசங்கள் மற்றும் ஏமேன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆயுதக் குழுக்களுடன் தொடர்புடையதாக உள்ளது.

அரசாங்கம், நாடாளுமன்றம் மற்றும் முக்கிய அரசியல் அமைப்புகளில் அதிகாரம் வாய்ந்த பதவிகளில், முன்னாள் புரட்சிகர காவல் படையைச் சேர்ந்தவர்கள் இன்றும் பதவி வகிக்கின்றனர்.

இவர்களில் முன்னாள் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநெஜாத் மற்றும் முன்னாள் சபாநாயகர் அலி லரிஜானி ஆகியோர் உள்ளனர்.

கோ ஈவ்,ரஃபி பெர்க் ஆகியோர் கூடுதல் தகவல்கள் வழங்கியுள்ளனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு