நடுவானில் மோதிக் கொண்ட விமானங்கள் – இந்தியாவை உலுக்கிய மோசமான விமான விபத்துகள் பற்றி தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று கிளம்பிய சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது.எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்13 ஜூன் 2025, 01:06 GMT

புதுப்பிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர்

ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வியாழக்கிழமை (ஜூன் 12) விபத்திற்குள்ளாகியிருக்கிறது. இந்த விபத்தில், விமானத்திற்குள் இருந்த 242 பேரில் ஒரே ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்துவிட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதற்கு முன்பு நடந்த மிக மோசமான விமான விபத்துகள் என்னென்ன? அதைக் குறித்து இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

1. 2020 ஆகஸ்ட் 7, கோழிக்கோடு விமான விபத்து

பட மூலாதாரம், EPA / PRAKASH ELAMAKKARA

படக்குறிப்பு, இந்த விபத்தில் இரண்டு விமானிகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர்.2020ஆம் ஆண்டு கோவிட் பரவல் காலகட்டம். கோவிட் பரவல் காரணமாக வளைகுடா நாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்க வந்தே பாரத் என்ற பெயரில் விமான சேவைகள் அப்போது இயக்கப்பட்டுவந்தன.

இதன் ஒரு பகுதியாக துபை சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஆகஸ்ட் ஏழாம் தேதி ஒரு விமானம் புறப்பட்டது. இது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு சொந்தமான Boeing 737-8HG(SFP) வகை விமானம். இந்த விமானம் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தை இரவு 7.40 மணிக்கு வந்து சேர வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் விமானம் கோழிக்கோட்டை நெருங்கியது. அப்போது மழை பெய்துகொண்டிருந்தது.

இதனால், மிகக் குறைவான தூரமே பார்க்க முடிந்தது. முதலில் 28ஆம் ரன்வேயில் விமானம் இறங்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், அதில் தரையிறங்க முடியவில்லை. இதையடுத்து எதிர்த்திசையில் 10ஆம் இலக்கமிடப்பட்ட ரன்வேயில் தரையிறங்க அனுமதி கேட்டார் விமானி. அதற்கு அனுமதியளிக்கப்பட்டது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

விமானம் தரையிறங்கியபோது, ஓடுபாதைக்குப் பதிலாக நிறுத்துமிடங்களுக்குச் செல்வதற்கான C என்ற பாதையில் விமானம் தரையிறங்கியது. கோழிக்கோடு விமான நிலையம் ஒரு உயரமான குன்றின் மீது அமைந்துள்ள விமான நிலையம். விமானம் தரையிறங்கிய ஓடுபாதை மிகச் சிறியதாக இருந்ததால், குறிப்பிட்ட தூரத்தில் விமானியால் விமானத்தை நிறுத்த முடியவில்லை.

இதனால் ஓடுபாதையைத் தாண்டிச் சென்ற விமானம், குன்றின் முகட்டிலிருந்து கீழே விழுந்தது. அதன் முன்பகுதி உடைந்து நொறுங்கியது. அந்த விமானத்தில் பயணிகள் 184 பேர், விமானிகள் 2 பேர், விமான பணியாளர்கள் 4 பேர் என 190 பேர் இருந்தனர். இந்த விபத்தில் இரண்டு விமானிகள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். சுமார் 100 பேர் காயமடைந்தனர்.

2. 2010 மே, மங்களூர் விமான விபத்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த விபத்தில் 158 பேர் உயிரிழந்தனர். எட்டு பேர் மட்டுமே தப்பிப் பிழைத்தனர்.2010ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி ஏர் இந்தியா எக்ஸ்பிரசிற்குச் சொந்தமான Boeing 737-8HG(SFP) விமானம் 166 பேருடன் துபை சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. இந்த விமானம் காலை 6.05 மணிக்கு மங்களூர் சர்வதேச விமான நிலையத்தை நெருங்கியது. அந்த நேரத்தில் மழை ஏதும் பெய்யவில்லை. விமானி போதுமான தூரத்திற்கு பார்க்கும் வகையில்தான் காலநிலை இருந்தது.

மங்களூர் விமான நிலையத்தின் ஓடுபாதையும் ஒரு குன்றின் மீதுதான் அமைந்திருந்தது. விமானம் தரையைத் தொட்ட பிறகு, குறிப்பிட்ட தூரத்திற்குள் விமானம் நிற்கவில்லை. ஓடுபாதைக்கு அப்பால் விமானம் வந்தால் அதனை நிறுத்த மணல் கொட்டப்பட்டிருந்தது. ஆனால், விமானம் அந்த மணல் பரப்பையும் தாண்டிச் சென்றது.

அப்படிச் செல்லும்போது பக்கவாட்டில் இருந்த ஆண்டெனா கோபுரத்தின் மீது இறக்கை ஒன்று மோதியது. இதற்குப் பிறகு விமானம் குன்றிலிருந்து தலைகுப்புற கீழே விழுந்து நொறுங்கியது. விமானம் கீழே விழுந்ததும் தீப்பிடித்து எரிந்தது.

இந்த விமானத்தில் பயணம் செய்ய 169 பேர் டிக்கெட் எடுத்திருந்தனர். அவர்களில் 9 பேர் பயணம் செய்ய வரவில்லை. மீதம் 160 பேர் விமானத்தில் இருந்தனர். விமானிகளும் பணியாளர்களும் சேர்ந்து ஆறு பேர். இந்த 166 பேரில் 158 பேர் உயிரிழந்தனர். எட்டு பேர் மட்டுமே தப்பிப் பிழைத்தனர்.

3. 2000 ஜூலை, பாட்னா விமான விபத்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த விமானத்தில் மொத்தம் 58 பேர் பயணம் செய்தனர்.2000வது ஆண்டு ஜூலை 17ஆம் தேதி காலை சுமார் ஆறே முக்கால் மணியளவில் கொல்கத்தா சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து அலையன்ஸ் ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் மொத்தம் 58 பேர் பயணம் செய்தனர்.

இந்த விமானம் முதலில் பாட்னாவுக்கும் பிறகு லக்னெளவிற்கும் சென்றுவிட்டு, தில்லியைச் சென்றடைய வேண்டியது. இந்த விமானம் ஏழரை மணியளவில் பாட்னாவை நெருங்கியது. விமானம் தரையிறங்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், விமானம் ஓடுபாதையை தவறவிட்டது. பிறகு மீண்டும் தரையிறங்க அனுமதிக்கப்பட்டது.

விமானம் ஓடுபாதையை நெருங்கியபோது, உயரம் அதிகமாக இருந்ததால் சுற்றிவந்து மீண்டும் தரையிறங்க அனுமதி கோரப்பட்டது. இதற்கும் அனுமதி கிடைத்தவுடன் விமானம் இடதுபுறமாகத் திரும்பியது. ஆனால் அதற்குப் பிறகு விமானம் வேகமாக உயரத்தை இழக்கத் துவங்கியது. காந்தி பாக் பெண்கள் பள்ளிக்குப் பின்னால் இருந்த அரசுக் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் மூன்று வீடுகளும் சேதமடைந்தன.

விபத்து நடந்த பகுதியில் இருந்து 7 பேர் உயிரோடு மீட்கப்பட்டனர். அதில் நான்கு பேர் பிறகு உயிரிழந்தனர். ஆகவே மூன்று பேர் மட்டுமே இந்த விபத்தில் உயிர் தப்பினர். தரையில் இருந்தவர்கள் ஐந்து பேர் உள்பட மொத்தமாக இந்த விபத்தில் 60 பேர் உயிரிழந்தனர்.

4. 1996 நவம்பர் சாக்ரி – தாத்ரி விமான மோதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரு விமானங்களின் இடது புற இறக்கைகளும் ஒன்றோன்று உரசியதில் விபத்து ஏற்பட்டது.1996 நவம்பர் 12ஆம் தேதி நடந்த இந்த விபத்து, இந்திய விமான வரலாற்றிலேயே மிக மோசமான விபத்துகளில் ஒன்று. இந்த விபரீதமான விபத்தில் இரண்டு விமானங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. இதில் ஒரு விமானம் சௌதியா நிறுவனத்தின் போயிங் 747-168B ரக விமானம். மற்றொன்று, கஜகஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் Ilyushin Il-76TD ரக விமானம்.

இதில் சௌதியா நிறுவன விமானம் தில்லியில் இருந்து புறப்பட்டு முதலில் டெஹ்ரானுக்கும் பிறகு ஜெட்டாவுக்கும் செல்வதாக இருந்தது. மொத்தம் 312 பேர் விமானத்தில் பயணம் செய்தனர். கஜகஸ்தான் நிறுவன விமானமானது, கஜகஸ்தானில் உள்ள சிம்கென்ட் விமான நிலையத்திலிருந்து தில்லியை நோக்கி வந்துகொண்டிருந்து. இது ஒரு வாடகை விமானம். கிர்கிஸ்தானைச் சேர்ந்த ஒரு நிறுவனம் விமானத்தை வாடகைக்கு எடுத்திருந்தது. மொத்தம் 37 பேர் இதில் பயணம் செய்தனர். இவர்களில் பத்துப் பேர் விமானப் பணியாளர்கள் மற்றும் விமானிகள்.

சௌதியா விமான நிறுவனம் மாலை 6.32 மணியளவில் தில்லியில் இருந்து புறப்பட்டது. அதே நேரம் கஜகஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்க முயன்றுகொண்டிருந்து. இந்த இரு விமானங்களுக்கும் வெவ்வேறு உயரங்களில் பறக்கும்படி கூறப்பட்டிருந்தது. ஆனால், சிறிது நேரத்திலேயே இரு விமானங்களும் ஒன்றோடொன்று மோதின.

இரு விமானங்களின் இடது புற இறக்கைகளும் ஒன்றோன்று உரசியதில் விபத்து ஏற்பட்டது. சௌதியாவின் விமானம் அதிவேகத்தில் கீழே விழுந்து நொறுங்கியது. இதற்கு அருகிலேயே கஜகஸ்தானின் விமானமும் விழுந்து நொறுங்கியது. இரு விமானங்களில் இருந்த எல்லோருமே (349 பேர்) மரணமடைந்தனர்.

விமானங்களின் பாகங்கள் தில்லிக்கு மேற்கே 100 கி.மீ. தூரத்தில் ஹரியானா மாநிலத்தில் கிடந்தன. விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து வந்த கட்டளைகளை, கஜகஸ்தான் விமானத்தில் இருந்தவர்கள் சரியாக புரிந்துகொள்ளாததே இந்த விபத்திற்குக் காரணம் என பிறகு நடந்த விசாரணையில் தெரியவந்தது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.5. 1990 பிப்ரவரி – பெங்களூர் விமான விபத்து

1990ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி மும்பையிலிருந்து பெங்களூருக்கு வந்த இந்தியன் ஏர்லைன்சின் ஏர்பஸ் ஏ320 ரக விமானம் விபத்துக்குள்ளானது. மும்பை விமான நிலையத்திலிருந்து இந்த விமானம் காலை 11.58க்குப் புறப்பட்டது. விமானத்தில் 139 பயணிகளும், விமானிகள் உள்பட 7 பணியாளர்களும் என 146 பேர் இருந்தனர். பிற்பகல் 12.53க்கு விமானம் பெங்களூரை நெருங்கியது. 09ஆம் எண் ரன்வேயில் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால், விமானம் குறிப்பிட்ட உயரத்தைவிட கீழே பறந்துகொண்டிருந்ததால், விமானத்தின் சக்கரங்கள் கர்நாடகா கோல்ஃப் கிளப் மைதானத்திலேயே தரையைத் தொட்டன. இதனால் விமானம் மிக மோசமாகக் குலுங்கியது. இதில் விமானப் பயணிகள் பலர் தூக்கியெறியப்பட்டனர். பிறகு சாலையைக் கடந்து ஓரிடத்தில் தரையில் மோதி நொறுங்கியது. அதற்கு முன்பே விமானத்தின் என்ஜின்களும் சக்கரங்களும் விமானத்திலிருந்து பறந்துபோய் விழுந்திருந்தன. இந்த விபத்தில் 92 பேர் கொல்லப்பட்டனர். 54 பேர் உயிர் பிழைத்தனர். காயமடைந்தவர்கள் பலருக்கு தலையிலும் கால்களிலும்தான் காயங்கள் ஏற்பட்டிருந்தன.

விசாரணையில் விமானியின் தவறே விபத்திற்குக் காரணம் எனக் கண்டறியப்பட்டது. ஆனால், இந்திய வர்த்தக விமானிகள் சங்கம், விமான காக்பிட் டிசைனில் இருந்த தவறுகளே விபத்திற்குக் காரணம் எனக் கூறியது.

6. 1988 அக்டோபர் ஆமதாபாத் விமான விபத்து

1988ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி இந்தியன் ஏர்லைன்ஸின் போயிங் விமானம் ஒன்று ஆமதாபாத் விமான நிலையத்தை நெருங்கும்போது விபத்திற்கு உள்ளானது. அன்று காலை ஐந்தே முக்கால் மணிக்குப் புறப்பட வேண்டிய விமானம் சற்றுத் தாமதமாக 6.05க்குப் புறப்பட்டது. இந்த விமானம் 6.20 மணியளவில் ஆமதாபாத் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டது.

அந்தத் தருணத்தில் பனி மூட்டமாக இருந்ததால், போதுமான அளவுக்கு ஓடுபாதை தெரியாத நிலை இருந்தது. ஓடுபாதை தெரியாவிட்டால் 500 அடி உயரத்திற்குக் கீழே விமானம் இறங்கக்கூடாது. ஆனால், இரு விமானிகளுமே ஓடுபாதையைப் பார்க்கும் மும்முரத்தில் விமானம் தொடர்ந்து உயரம் இழப்பதைக் கவனிக்கவில்லை.

இதனால், ஓடுபாதைக்கு இரண்டரை கி.மீ. முன்பாகவே விமானம் மரங்களின் மீது மோதியது. விமானத்தில் இருந்த 135 பேரில் 133 பேர் உயிரிழந்தனர். விமானிகளின் தவறே விபத்திற்குக் காரணம் என பிறகு கண்டறியப்பட்டது.

7. 1978 ஜனவரி பம்பாய் விமான விபத்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்1978ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி பம்பாயிலிருந்து துபைக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் இருந்த 213 பேரும் கொல்லப்பட்டனர். எம்பரர் அசோகா எனப் பெயரிடப்பட்ட அந்த விமானம், போயிங் 747 வகையைச் சேர்ந்தது.

இந்த விமானம், பம்பாய் சாண்டா க்ரூஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அரபிக் கடலுக்கு மேலே பறக்க ஆரம்பித்தது. விமானி விமானத்தை வலது புறமாகத் திருப்பினார். பிறகு மீண்டும் விமானம் வழக்கத்தைப் போல பறக்க ஆரம்பித்தது. இதற்குப் பிறகு இடதுபுறமாகச் சாய ஆரம்பித்த விமானம் மீண்டும் வழக்கமான நிலைக்கு வரவேயில்லை.

ஓடுபாதையிலிருந்து புறப்பட்டு 101 விநாடிகளே ஆகியிருந்த நிலையில், விமானம் அரபிக் கடலுக்குள் விழுந்தது. ஒரு விமானி உயரம் குறித்து சரியாக அறியாமல் அளித்த கட்டளைகளே விமானம் விபத்திற்குள்ளாகக் காரணம் என விசாரணைகள் தெரிவித்தன. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 213 பேரும் கொல்லப்பட்டனர்.

8. 1971 மே தில்லி விமான விபத்து

1973ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி தில்லியின் பாலம் விமான நிலையத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் 48 பேர் கொல்லப்பட்டனர். இந்தியன் ஏர்லைன்சிற்குச் சொந்தமான போயிங் 737-2A8 ரக விமானம் சென்னையிலிருந்து 58 பயணிகளுடன் புறப்பட்டது. இந்த விமானத்திற்கு சாரங்கா எனப் பெயர் சூட்டப்பட்டிருந்தது. இந்த விமானம் தில்லி பாலம் விமான நிலையத்தை (இப்போது இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்) நெருங்கியபோது, புழுதிப் புயல் வீசத் துவங்கியது.

விமானம் உயரழுத்த மின்சாரக் கம்பியின் மீது மோதி விபத்திற்கு உள்ளானது. இந்த விமானத்தில் பல முக்கியப் பிரமுகர்கள் உட்பட 65 பேர் பயணம் செய்தனர். இந்த விபத்தில் பிரபல அரசியல்வாதிகளான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மோகன் குமாரமங்கலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பாலதண்டாயுதம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தேவகி கோபிதாஸ், தொழிலதிபர்களான மல்லிகார்ஜுன் ரெட்டி ககானி, ரகுநாத ரெட்டி ககானி உள்பட 48 பேர் கொல்லப்பட்டனர். நாடாளுமன்ற உறுப்பினரான பான் சிங் பவுரா, பிரபல மலையாள எழுத்தாளர் வி.கே. மாதவன் குட்டி உள்ளிட்ட 17 பேர் உயிர் பிழைத்தனர்.

9. 1962 ஜூலை, ஜுன்னர் விமான விபத்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்1962ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி மகாராஷ்டிராவின் ஜுன்னர் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்தில், அலிட்டாலியா என்ற இத்தாலிய விமான நிறுவனத்தின் விமானம் விபத்திற்குள்ளானது. சிட்னியில் இருந்து ரோமிற்கு இந்த விமானம் 45 பேருடன் புறப்பட்டது. பிறகு டார்வின், சிங்கப்பூர், பாங்காக் ஆகிய இடங்களில் மேலும் பயணிகள் ஏறினர்.

பாங்காக்கில் இருந்து விமானம் புறப்பட்டபோது மொத்தம் 94 பேர் விமானத்தில் இருந்தனர். இவர்களில் 85 பேர் பயணிகள். இந்த விமானம் மாலை 6.38 மணியளவில் பம்பாய் விமான நிலையத்தை நெருங்கியது. ஆனால், அந்தத் தருணத்தில் விமானம் பாதுகாப்பான உயரத்தைவிட மிகக் குறைந்த உயரத்தில் பறக்கத் துவங்கியது.

அடுத்த நிமிடம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. 6.39 மணிக்கு விமானம் அருகில் இருக்கும் தேவந்தயாச்சி மலையில் விழுந்து நொறுங்கிப் போயிருந்தது. விமானத்தில் இருந்த எல்லோருமே கொல்லப்பட்டனர். போதுமான உயரத்தில் பறக்காததே விபத்திற்குக் காரணம் என பிறகு கண்டறியப்பட்டது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு