அகமதாபாத் விமான நிலையம் அருகே 242 பயணிகளுடன் லண்டனுக்குச் சென்ற எயார் இந்தியா விமானம் இன்று வியாழக்கிழமை (12.06.25) புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.

முதற்கட்ட தகவல்களின்படி, மேகனிநகர் அருகே விமானம் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து நடந்த இடத்தில் அடர்த்தியான புகை வெளியேறியுள்ளதாகவும், இதனால் அந்தப் பகுதிகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்புப் படை உள்ளிட்ட அவசரகால மீட்புக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தன. சேதம் அல்லது உயிரிழப்புகளின் அளவை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் படுகாயம் அடைந்த 25 பேர்வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பயணிகளா அல்லது தரையில் இருந்தவர்களா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

எனினும், விபத்துக்குள்ளான ஏயார் இந்தியா விமானத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை

 விமானத்தில் மொத்தம் 230 பயணிகள் இருந்த நிலையில், அவர்கள் யார்.. எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானத்தில் மொத்தம் 217 பெரியவர்கள், 11 குழந்தைகள், 2 கைக்குழந்தைகள் என மொத்தம் 230 பயணிகள் பயணித்துள்ளனர். அதில் 169 இந்திய நாட்டை சேர்ந்தவர்களாகும். மேலும், விமானத்தில் இருந்தவர்களில் 53 பிரிட்டிஷ் நாட்டவர், 7 போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவர்கள், ஒருவர் கனடா நாட்டை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. அத்துடன் 12 விமான ஊழியர்களும் விமானத்தில் இருந்துள்ளனர்.