இலங்கையின் மத்திய மலைப்பகுதிகளில் வாழும் மலையகத் தமிழர்கள், தனித்துவமான வரலாற்றையும், ஆழ்ந்த பண்பாட்டு மரபுகளையும் கொண்டவர்கள். பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக தேயிலைத் தோட்டப் பயிர்ச்செய்கையுடன் பிணைந்துள்ள இவர்களின் வாழ்க்கை, அவர்களது கலை வடிவங்களில் ஆழமாகப் பதிந்துள்ளது. தென்னிந்தியத் தமிழ் கலாசாரத்தின் வேர்களைக் கொண்டிருந்தாலும், இலங்கையின் மண்ணில் அவர்களது உழைப்பும், போராட்டங்களும், வாழ்வியலும் தனித்துவமான கலை வெளிப்பாடுகளைச் செதுக்கியுள்ளன. இவை வெறும் பொழுதுபோக்கு அம்சங்களாக இல்லாமல், அவர்களின் சமூக, சமய, உளவியல் தேவைகளுக்கான கண்ணாடியாகவும். காலத்தின் சாட்சியாகவும் திகழ்கின்றன.

மலையக மக்களின் கலை வெளிப்பாடுகள், அவர்களின் சமய நம்பிக்கைகளுடன் பிரிக்க முடியாத வகையில் இணைந்துள்ளன. மாரியம்மன் போன்ற கிராமிய தெய்வ வழிபாடுகள், பல்வேறு சடங்குகள், கலை நிகழ்வுகள் சங்கமிக்கும் களங்களாக அமைகின்றன. இசை, நடனம், மற்றும் கதைகூறல் ஆகியவை இந்த வழிபாடுகளின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இந்த கலை வடிவங்கள், மலையக மக்களின் அடையாளத்தின் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கின்றன. இவை அவர்களின் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் இணைக்கும் பாலங்களாகவும், எதிர்கால சந்ததியினருக்கு அவர்களின் செழுமையான பாரம்பரியத்தை எடுத்துச் செல்லும் கருவிகளாகவும் விளங்குகின்றன.

மலையகத் தமிழ் மக்களின் கலை வெளிப்பாடுகளில், கூத்துக் கலைகள் தனித்துவமானதொரு இடத்தைப் பெறுகின்றன. மலையகக் கூத்துக்கள் பெரும்பாலும் நாட்டுப்புற மரபுகளுடன் பின்னிப்பிணைந்தவை. இவை எழுதப்பட்ட வடிவங்களை விட, வாய்மொழி மரபாகவும், குருகுல வழியிலும் பேணப்பட்டு வருகின்றன. தோட்டப்புறங்களில் வாழும் மக்கள் மத்தியில், குறிப்பாக இரவு நேரங்களில், கடின உழைப்புக்குப் பின்னர் நிகழ்த்தப்படும் இக் கூத்துக்கள், சோர்வைப் போக்கி, ஒருவித மன அமைதியை வழங்கும் சடங்குப்பூர்வமான நிகழ்வுகளாகும். இவை புராண இதிகாசக் கதைகள், மற்றும் சில சமயங்களில் சமூகப் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு நிகழ்த்தப்படுகின்றன. இசை, நடனம், ஒப்பனை, வசனம் மற்றும் பாடல்கள் என்பன இந்தக் கூத்துக்களின் ஒருங்கிணைந்த கூறுகளாகும்.

மலையகத்தில் நிகழ்த்தப்படும் கூத்துக்களில் காமன் கூத்து, அர்ச்சுனன் தபசு, பொன்னர் சங்கர் போன்ற கூத்துக்கள் முக்கியமானவை. அதில் காமன் கூத்தானது மாசி மாதத்தில் அமாவாசை கடந்து மூன்றாவது நாள் நடைபெறும். காமனைத் தெய்வமாக வழிபடும் மரபு தொன்மையானது. சிலப்பதிகாரம், கலித்தொகை ஆகிய நூல்களில் காமன் விழா பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

வட இந்தியாவில் இவ்விழா “ஹோலிப்பண்டிகை” என்று கொண்டாடப்படுகின்றது. மேல் நாட்டவரரும் காமன் வழிபாட்டினை மேற்கொண்டார்கள் என்பதற்காக சான்றாக கிரேக்கர்கள் காம தெய்வத்தினை “ஈரேஸ்”; என்றும் உரோமியர்கள் “கியூபிட்”; எனவும் வணங்கினார்கள்;.

இன்றைக்கு 200 வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தில் இருந்து இலங்கையின் மலைநாட்டுப் பகுதிகளுக்கு குடிபெயர்க்கப்பட்ட மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தங்களின் உழைப்போடு தமது நம்பிக்கைகள், மொழி, கலைகள், கூத்துக்கள், பழக்கவழக்கங்கள், வழிபாடுகள் என எல்லாவற்றையும் சுமந்து வந்துள்ளனர். அவ்வாறு அவர்கள் கடந்த வந்த 200 வருடங்களை முன்னிட்டு மலையக மக்களின் பண்பாட்டு கருவூலமாக திகழும் காமன் கூத்தினை சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவன நடன நாடகத்துறை மாணவர்கள் “கிழக்கில் காமண்டி” எனும் பெயரில் கடந்த வருடமும் (2024) இந்த வருடமும் (2025) சிறப்பாக முன்னெடுத்து வந்துள்ளனர். மோசஸ் சுரேஸ் அவர்கள் தனது விருப்பத்துக்கு ஏற்ப மூன்றாம், நான்காம் வருட மாணவர்களை மையமாக வைத்து காமன் கூத்து ஆற்றுகையை மேற்கொண்டார்.

பாடப் புத்தகங்களிலும், ஆசிரியர்கள் கதை சொல்லாடல் ஊடாகவும் கேட்டு தெரிந்த இக்காமன் கூத்தினை நேரில் ஆற்றுகையாக பார்வையிடுவதற்கான வாய்ப்பு இந்த வருடம் எனக்கு கிடைத்திருந்தது.

கிழக்கில் காமண்டி எனும் கூத்தில் வரும் ஆற்றுகையாளர்களாக சிவன், பார்வதி, மன்மதன், ரதி, இந்திரன், முருகன், ஆஞ்சநேயர், சரஸ்வதி, வீரபத்திரர், காளி, எமதர்மர், எமதூதன், நந்தி, குறவன், குறத்தி குதிரையும் நோனா, கோமாளி, போன்ற பாத்திரங்கள் இடம்பெற்றன.

காமன் கூத்தானது பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறுபட்ட கதை அமைப்புக்களைக் கொண்டாலும், அதற்குரிய ஆற்றுகை முறைகள் ஒன்றாகத்தான் காணப்படுகின்றன. இக் காமன் கூத்தின் கதையினை சுருக்கமாக நோக்கினால், சிவன், பார்வதி அவர்களின் மகள் ரதி. மாயவனின் மகன் மன்மதன். மன்மதனுக்கு பெண் பார்ப்பதற்கான ஆலோசனை நடக்கும் அச்சமயத்தில் நாரதரின் ஆலோசனைப்படி ரதியை பெண் கேட்டு செல்கின்றார்கள். அதன் பிறகு இருவருக்கும் திருமண சடங்கு நடைபெற்று, நீண்ட காலம் வாழ்வதற்கு முன் குறவன், குறத்தி மன்மதனுக்கு ஆபத்து நடக்க போகிறது என்று குறி சொல்லுகின்றனர். கதையின் இடை நிகழ்வாக குதிரை ஆட்டம் நடைபெறும். இக்குதிரை ஆட்டம் நடைபெற்ற பின்னர், கதையின் ஒரு கிளையாக தக்கன் வருகின்றான்.

காமன் கூத்தில் தக்கன் பாத்திரம் முக்கியமானது. தக்கன் சிவனிடம் வரத்தினை பெறுவதற்காக யாகம் செய்கின்றான். யாகத்துக்கு காரணம் என்னவெனில், பார்வதி என் மகளாகவும் சிவன் என் மருமனாகவும் வர வேண்டும். இவ் வரத்தினை தக்கன் வீட்டுக்குச் செல்ல முன்பே சிவன் நிறைவேற்றுவார். தக்கன் சிவனையும் பார்வதியையும் பார்ப்பதற்காக கைலாயமலைக்கு சென்ற போது சிவன் மௌனத்தில் இருப்பார். இதனால் சிவன் தன்னை மதிக்கவில்லை என்ற கோபத்தில் தக்கன் சிவனுக்கு எதிராக யாகம் செய்கின்றான். அந்த அக்கினியை யாராலும் தாங்க முடியாமல் சிவனிடம் போய் தேவர்கள் முறையிட்டனர். சிவன் தக்கனின் யாகத்தினை தடுப்பதற்காக முருகனை அனுப்பி வைக்கின்றார். முருகன் கன்னிப் பெண்களைப் பார்த்து ஏமாந்து விடுகின்றான்.

அதன் பிறகு கணபதியை அனுப்பி வைக்கின்றார். கணபதி பழங்களை உண்டு திரும்பி வருகின்றார். இதனால் ஆத்திரமடைந்த சிவன் தனது வியர்வையை சிந்திய பொழுது அதிலிருந்து வீரபத்திரர் உருவாகின்றார். அதனோடு சேர்த்து காளியையும் அனுப்புகின்றார். இவர்கள் ஒன்றாக சென்று தக்கனின் யாகத்தின் அழித்து விடுகின்றனர். அதன் பிறகு சிவன் தபசுக்கு செல்கின்றார். கோபம் அடைந்து தபசுக்கு சென்ற சிவனின் அனலை தாங்க முடியாத தேவர்கள் தூதனை கொண்டு காம தேவனுக்கு தூது ஓலை அனுப்புகின்றனர். இதனை அறிந்த ரதி குறவன் குறத்தி சொன்னது போலவே எல்லாம் நடக்கின்றதே என்று பயந்து, சிவனின் தபசை அழிக்க காமனை செல்ல விடக்கூடாது என்று எண்ணி எவ்வளவோ முயற்சிகளை எடுக்கின்றாள். இறுதியில் மன்மதன் மனைவியை மயக்கி விட்டு சிவன் தபசை அழிக்க செல்வார். மன்மதன் அம்பு எறிய, சிவன் நெற்றிக்கண்ணை திறக்க மன்மதன் எறிந்து விடுகின்றான். தன் கணவனின் நிலையை பார்த்து ரதியின் புலம்பலை உணர்ந்து சிவன் காமனை உயிர்ப்பிக்கின்றார். இந்த நிகழ்வு காமன் கூத்தின் மூன்றாம் நாள் காமனை உயிர்ப்பித்தல் சடங்காக ஆற்றுகை செய்யப்படும்.
காமன் கூத்து ஆற்றுகை செய்யப்படும் இடமானது காமன் பொட்டலம் என அழைக்கப்படும். இதன் நடுவில் காமன் கம்பம் நடப்பட்டு அதன் 4 மூலையிலும் மூங்கில் கொண்டு அதன் மேற்பகுதியினை வளைத்து ஒன்று சேர்த்து கட்டியிருந்தார்கள். காமன் கூத்தின் முக்கிய பொருளாக இருந்தது தப்பு இசைக்கருவி. காமன் கூத்தானது தொடங்கி முடியும் வரை தப்பு இசை பெரும் பங்கு வகித்தது. தப்பின் சத்தம் மாறாமல் இருக்கவும், தோல் இறுகி இருப்பதற்காகவும் பொட்டல் அருகில் விறகுகளை அடுக்கி தீ மூட்டி நெப்பினை அடிக்கடி காயவைத்து அதன் இசையினை கொடுத்தார்கள்.

நான் பார்த்த கூத்தில் இக்கூத்தே என்னால் இலகுவாக விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருந்தது. இதில் வரும் பாடல்கள் இலகுவான மொழி நடையில் அமைந்திருந்ததால் காமன் கூத்து பற்றி முன் அனுபவம் இல்லாதவர் கூட விளங்கிக் கொள்ளக்கூடிய வகையில் காணப்பட்டது. காமன் கூத்தில் எந்தவித சலிப்பும் இல்லாமல் முழுமையாக அறிந்து கொள்ளக்கூடியவாறு இருந்தமைக்கு இக் கூத்தின் விறுவிறுப்பான கதையும், ஆற்றுகை செய்த ஆற்றுகையாளர்களின் ஆற்றுகை விதமுமே காரணமாக அமைந்தது என்பதில் ஐயமில்லை.

ஆகவே இக் காமன் கூத்தின் ஆற்றுகையின் ஆற்றுகை முறையினை நோக்கினால், காமன் கூத்து ஆற்றுகையின் முதன் நிகழ்வாக தப்பின் ஓசை முழங்க அனைத்து பாத்திரங்களும் காமன் பொட்டலுக்கு அழைத்து வரப்பட்டன. அதன் பின்னர் மன்மதன், ரதி இருவருக்கும் சிவன் பார்வதி முன்னிலையில் திருமண நிகழ்வு நடைபெறும். அவர்களின் திருமணத்தின் பின் சிவன் யாகம் செய்வதற்காக யாகசாலைக்குச் செல்வர.; காமன் கூத்தில் இடை நிகழ்வாக பாத்திரங்கள் வருவது வழமை. காரணம் என்னவெனில் பார்வையாளர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும, மகிழ்ச்சிப்படுத்துவதற்காகவும் இடை நிகழ்வு பாத்திரங்கள் கூத்தில் கொண்டு வந்தார்கள். அந்த வகையில் இக்காமன் கூத்தில் குதிரையின் நோனாவும் என்ற பாத்திரங்கள் பொட்டலில் தோன்றி அரங்க வெளியை சிரிப்புக்குள்ளாக்கி அனைவரையும் உட்சாகப்படுத்தினார்கள்.

இக் காமன் கூத்தின் அடுத்த நிகழ்வாக திருமணமாகிய மகிழ்ச்சியில் இருந்த ரதிக்கு குறவன், குறத்தி குறி சொல்லல் இடம்பெறும்.
“நாங்கள் சொல்வதை கவனமுடன் கேளுமம்மா
கவலை கொள்ளாமல் மிகக் கவனமுடன் கேளுமம்மா
உன் கணவனை பிரிந்திருக்க கைரேகை இருக்குதம்மா
உன் மன்மதனை பிரிந்திருக்க சாஸ்திரங்கள் இருக்குதம்மா
கவனம் கவனம் – மிகக்
கவனம் கவனம் அம்மா”
இச்சம்பவத்தின் பின்னர் தக்கன் சிவனிடம் வரத்தைப் பெற்ற பின்னர், கைலாசமலைக்கு சிவனை பார்ப்பதற்காக செல்லும் வேளையில, சிவன் யாகத்தில் இருந்ததால் தக்கனை கவனிக்கவில்லை. இதனால் தக்கன் சிவன் தன்னை மதிக்கவில்லை என்று எண்ணி சிவனுக்கு எதிராக தக்கன் யாகம் செய்கின்றான.; தக்கனின் யாகத்தினை தடுப்பதற்காக சிவன் எவ்வளவோ முயற்சிகளை செய்தும் பயனடையவில்லை. இறுதியில் சிவன் கோபமடைந்து தன் வியர்வை துளிகளை சிந்திய போது அதில் இருந்து வீரபத்திரர் உருவாகி அவருடன் காளியையும் அனுப்பி தக்கனின் யாகத்தினை தடுத்தார்.

கோபமடைந்த சிவன் யாகசாலை சென்ற மறுபடியும் யாகத்தினை தொடங்குவார். சிவனின் கோபத்தின் அனலை தாங்க முடியாமல் தேவர்கள் இந்திரனிடம் முறையிட இந்திரன் மன்மதனுக்கு தூது ஓலை கொண்டு வருவார்.

இதன் பிறகு காமன் கூத்தின் முக்கிய கட்டமாக ரதி, மன்மதனுடைய தர்க்கம் நடக்கின்றது. மன்மதனை சிவன் தபசை அழிக்க விடாமல் செல்வதற்காக ரதி எவ்வளவோ முயற்சிகளை எடுக்கின்றாள். ஆனால் மன்மதன் ஒரு கட்டத்தில் ரதியை மயக்கிவிட்டு சிவனின் தபசை அழிக்க செல்கின்றான.; அதன் பிறகு பொட்டலில் நந்தி எனும் பாத்திரம் வருகை தந்து மன்மதன் சிவன் தபசை அழிக்க செல்ல வேண்டாம் என்பதைக் கூறிவிட்டு செல்லும். இதனையும் மன்மதன் மறுக்கின்றார். அதன் பிற்பாடு எமதர்மன் மற்றும் எமதூதர் பாசக்கயிறினை கொண்டு வரும் நிகழ்வு இடம்பெறும். இறுதியாக சிவன் தபசை அழிக்க அம்பினை எடுத்து வீசும் போது சிவன் நெற்றிக்கண்ணை திறந்து மன்மதனை எறிக்கின்றார். இந்நிகழ்வானது காமன் கம்பம் நடப்பட்டிருக்கும் இடத்திற்கும் சிவன் யாகசாலைக்கும் இடையில் நூலொன்றினை கட்டி சிவன் நெற்றிக்கண்ணை திறக்கும் போது அதில் இருந்து அந்த நூலிÇடாக வரும் நெருப்பில் காமன் பொட்டலில் மன்மதன் எரியும் வகையில் இக்காட்சி அமைக்கப்பட்டது.

காமன் கூத்தானது நம்பிக்கையுள்ளவர்களுக்கு சடங்காகவும், நம்பிக்கையற்றவர்களுக்கு வெறும் ஆற்றுகையாகவும் தென்படுக்கின்றது. அந்தவகையில் இச் சடங்கின் முக்கிய அம்சமாக எரியும் காமன் பொட்டலில் உப்பு போடுதல் என்ற நடைமுறை இருப்பது வழக்கம். இதன் காரணம் என்னவெனில் நேர்த்தியுள்ளவர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் முகமாக எரியும் பொட்டலில் உப்பு போடுவதனால் நேர்த்தி நிறைவேறும் என்று ஐதீகம். இச்சடங்கில் நம்பிக்கை உள்ளவர்கள் உப்பிட்டு வழிபாடு செய்தார்கள்.

ஒரு சமூகத்தை ஒரு இடத்தை தன்வயமாக்குவது சடங்கின் சிறப்பம்சம். மேடை ஒன்றில் ஒரு ஆற்றுகையினை பார்ப்பதற்கும,; பொது வெளியில் ஒரு ஆற்றுகையினை பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. மேடையில் நான்கு பக்க சுவர்களுள் அமர்ந்து பார்க்கும் போது அதிலிருந்து சற்றும் விலகாமல் நிகழ்வுக்குள்ளேயே மூழ்கி விடுகின்றனர். ஆனால் பொது அரங்க வெளியில் ஆற்றுகையினை பார்க்கும்போது தன்னிலை மறந்து விடாமல் அதனை ரசிக்கும் வாய்ப்பு அதிகமாகவே காணப்படுகின்றது. பார்வையாளரும் சரி கூத்தர்களும் சரி சுதந்திரமான சிந்தனை மரபுக்குள் சென்று தங்கள் ஆற்றுகையினை வெளிப்படுத்துவார்கள். இதனைத் தான் மேலைத்தேய அரங்கவியலாளரான பெட்ரோல் பிறெக்ட் “அந்நியமாதல்” எனக் குறிப்பிட்டார். இதனை நாடகத்துறை மாணவியாக என்னால் உணரமுடிந்தது.

காட்சியில், கலைஞர்கள் வெறும் நடிகர்களாக மட்டும் இல்லாமல், ஒரு புராண நிகழ்வை கண்முன் நிறுத்தும் மந்திரவாதிகளாகத் தோன்றினார்கள். அவர்களின் முகபாவணைகள், அசைவுகள், ஆடல், பாடல் என ஒவ்வொன்றும் காமன் எரிந்த கதையின் உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்தின.

காமன் கூத்து ஆற்றுகையில் பங்கு கொண்ட ஆற்றுகையாளர்கள் பார்த்து மெய்சிலிர்த்தேன். ஒவ்வொரு பாத்திரங்களும் தாளக்கட்டுக்கேற்ப ஆடல்களை தங்கள் உடலினை முழுமையாக பயன்படுத்தி பார்வையாளரை கவரும் வகையில் நடிப்பினை வெளிப்படுத்தினார்கள். அதில் குறவன் குறத்தி கதாபாத்திரங்கள் அகடவிகட தன்மையுடன் தங்களை பாவனை செய்து சுற்றியிருக்கும் பார்வையாளர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கினார்கள். அவர்கள் போன்றே கோமாளி மற்றும் குதிரையும் நோனாவும்.
கூத்தில் வீரபத்திரர் எனும் பாத்திரம் இன்றியமையாததாகும். தக்கனின் யாகத்தை அழிப்பதற்காக சிவனின் வேர்வை சிந்திய போது உருவாகிய வீரபத்திரர் தன் முதுகுக்குப் பின்னாலும், கையிலும் தீப்பந்தங்களுடன் அகோர வடிவத்தில் காட்சியளித்தார். இப்பாத்திரத்தினை ஆற்றுகை செய்வதற்காக களுத்துறை மாவட்டத்தில் இருந்து காமன் கூத்து ஆடுபவரை அழைத்து இப்பாத்திரம் ஆற்றுகை செய்யப்பட்டது. ஏனென்றால் இப் பாத்திரத்தினை முன் அனுபவம் இல்லாதவர் செய்வது கடினம். இயல்பு நிலையில் இருக்கும் மனிதனால் இதனை செய்ய முடியாது. தன் நிலை மறந்து நிற்கும் ஒருவரால் மட்டுமே இதனை ஆற்றுகை செய்ய முடியும். அப்பாத்திரத்தினை செய்தவர் தெய்வம் உருவெறி ஆற்றுகையினை செய்தார். இங்கு அநேகமான பாத்திரங்கள் தெய்வம் உருவேறியே ஆற்றுகையினை நிகழ்த்தினார்கள்.

சமகால கலை வடிவங்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில், காமன் கூத்து போன்ற பாரம்பரிய கலைகள் இன்றும் தங்கள் தனித்துவமான சிறப்பம்சங்களுடன் வாழ்வது ஒரு சமூகத்தின் கலாசார செழுமையின் அடையாளமாகும். காமன் கூத்து பார்த்த அனுபவம், வெறும் ஒரு பொழுதுபோக்காக அமையாமல், ஆழமான வரலாற்றுப் பின்னணியையும், சமூகப் பெறுமானங்களையும், கலை நுணுக்கங்களையும் உணர்த்திய ஒரு படிப்பினையாகும்.

காமன் கூத்து ஒரு அரிய கலைப் பொக்கி~ம். அதை வெறும் பழமையான கலை வடிவமாகப் பார்க்காமல், அதன் உயிர்ப்பையும், சமகால முக்கியத்துவத்தையும் நாம் உணர வேண்டும். இந்த கலை வடிவத்தை மேம்படுத்துவது நமது கடமை. அடுத்த தலைமுறையினரும் இந்த கலை அனுபவத்தைப் பெறும் வகையில், இத்தகைய பாரம்பரிய நிகழ்வுகளுக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும். காமன் கூத்து போன்ற கலைகள் வாழும் வரை, நமது கலா சார அடையாளமும் வாழும் என்பதில் சந்தேகமில்லை.

கோபிகா நடராசா,
கிழக்குப் பல்கலைக்கழகம்.