பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் குளிர்சாதனங்களுக்கு (ஏசி) கட்டுப்பாடு விதிக்க ஆலோசிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.எழுதியவர், மோகன்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்தியாவில் குளிர்சாதனங்களுக்கு (ஏசி) கட்டுப்பாடு விதிக்க ஆலோசிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இது ஏசிக்களின் பயன்பாடு பற்றிய விவாதங்களை எழுப்பியுள்ளது.

ஒரு காலத்தில் ஆடம்பர பொருளாக இருந்த குளிர்சாதனப் பெட்டிகள் இன்று அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டன. வீடுகள், அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், வணிக வளாகங்கள் என அனைத்து இடங்களும் ஏசி மயமாகி வருகின்றன.

காலநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் புவிவெப்பம் மற்றும் கோடை காலங்களில் நிலவும் வெப்ப அலைகளால் குளிர்சாதனங்களின் தேவையை அதிகரித்துவிட்டன. இந்தியா போன்ற வெப்பமண்டல பகுதிகளில் ஏசிக்கள் பயன்பாடு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அதிகரித்த வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து நிவாரணமாக மக்களுக்கு இருப்பதும் ஏசிதான்.

உலகம் முழுவதும் சுமார் 200 கோடி ஏசிக்கள் பயன்பாட்டில் இருப்பதாக சர்வதேச ஆற்றல் முகமை (International Energy Agency) தெரிவிக்கிறது. இதில் 70% வீடுகளில் பயன்படுத்தப்படுவதாகவும் அந்த அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 10 கோடி ஏசிக்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ள நிலையில் கடந்த ஆண்டு மட்டும் 1.4 கோடி ஏசிக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய அரசின் அறிவிப்பு என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார்மத்திய மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் செவ்வாய் அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஏசிக்கள் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் கொண்டு வர மத்திய அரசு ஆலோசிப்பதாக அறிவித்திருந்தார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

“ஏசிக்களின் வெப்பநிலை குறைந்தபட்சம் 20 டிகிரி செல்சியஸில் இருந்து அதிகபட்சம் 28 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே இருக்குமாறு புதிய விதிகள் அமைக்கப்படும். இதன் மூலம் 20 டிகிரிக்கு குறைவாக குளிர்விக்கவும், 28 டிகிரிக்கு அதிகமாக சூடேற்றவும் முடியாது. வெப்பநிலை சார்ந்த அமைப்புகளை ஒழுங்குபடுத்தும் முதல் பரிசோதனை இது” என்றார்.

ஏசி வெப்பநிலையில் 1 டிகிரி அதிகரித்தால் 6 சதவிகிதம் வரை மின் நுகர்வு குறையும் என்று மத்திய மின்சாரத் துறை செயலாளர் பங்கஜ் அகர்வால் ப்ளூம்பெர்க் செய்திக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

மின்சார பயன்பாடு ஏன் அதிகரிக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு 1.5 டன் ஏசியைப் பயன்படுத்துகையில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 2 யூனிட் வரை மின்சாரப் பயன்பாடு இருக்கும்ஏசி பயன்பாட்டால் மின் பயன்பாட்டில் ஏற்படும் வேறுபாடுகளை களைய இந்தக் கட்டுப்பாடுகள் உதவும் என்கிறார் ஓய்வுபெற்ற மின்வாரிய பொறியாளரான காந்தி.

“ஒரு 1.5 டன் ஏசியைப் பயன்படுத்துகையில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 2 யூனிட் வரை மின்சாரப் பயன்பாடு இருக்கும். நாம் ஏசியை 24 டிகிரி செல்சியஸில் வைத்து பயன்படுத்தினால் மின்சார பயன்பாடு சீராக இருக்கும். ஆனால் நாம் 20 டிகிரிக்கு குறைவாக அறையை குளிர்ச்சிப்படுத்த நினைத்தால் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். மின்நுகர்வும், மின் அழுத்தமும் அதற்கேற்றவாறு சீராக அதிகரிக்கும்.” என்றார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ஏசிக்களால் க்ளோரோஃபுளுரோகார்பன் என்கிற வாயுக்கள் அதிகமாக வெளியேறுவதாகக் கூறும் வேதியியல் பேராசிரியர் பார்த்திபன், அது சுற்றுச்சூழலுக்கு உகந்தது இல்லை என்கிறார்.

இதனை மேலும் விவரித்தவர், “ஏசிக்களில் க்ளோரோஃபுளுரோகார்பன் வாயுக்கள் நிரப்பப்பட்டு இருக்கும். ஏசி பயன்பாட்டினால் இவை சுற்றுச்சூழலில் வெளியேற்றப்படுகிறது. இந்த வாயுக்கள் உமிழப்படுவதால் ஓசோனுக்கு பாதிப்பு ஏற்படும். புறஊதா கதிர்களால் நேரடியாகப் பட்டால் தோலுக்கும் பாதிப்பு ஏற்படும் சராசரி வெப்பநிலையை விட குறைவாக வைத்து ஏசிக்களை பயன்படுத்தும்போது இந்த வாயுக்களின் உமிழ்வும் அதிகரிக்கும், வெப்பமும் அதிகரிக்கும். எனவே கட்டுப்பாட்டுடன் ஏசிக்களைப் பயன்படுத்துவது அவசியமே” என்றார்.

பட மூலாதாரம், Getty Images

இது தொடர்பான விவாதங்கள் கடந்த இரண்டு வருடங்களாக இருந்து வருவதாக தெரிவிக்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளரான ஜியோ டாமின்.

தற்போது மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டுப்பாடுகளை வரவேற்பதாகக் கூறும் அவர், 20 டிகிரி என்பது 24 டிகிரியாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், “காரபன் உமிழ்விற்கு 70% ஆற்றல் துறை தான் காரணமாக உள்ளது. அதில் குளிரூட்டும், வெப்பமூட்டும் அமைப்புகள்தான் பெரும் பங்கு வகிக்கின்றன. 2050-ம் ஆண்டில் இந்தியாவில் எந்த வீட்டிலும் ஏசிக்கள் இல்லாமல் இருக்க முடியாது என கணிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் கௌரவமான வாழ்விற்கு ஏசி அடிப்படையான ஒன்றாகிவிடும். அத்தகைய சூழலில் ஏசிக்கள் பயன்பாடு தொடர்பான தெளிவான ஒரு கொள்கை நம்மிடம் வேண்டும். என்னை பொருத்தவரை இந்தக் கட்டுப்பாடுகளே போதாது.” என்கிறார்

மாற்று யோசனை என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ‘கண்ணாடி முகப்புகளால் கொண்ட கட்டடங்கள் அடிப்படையிலே அதிக வெப்பத்தை ஈர்க்கும் தன்மையுடையது”’காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. ஏசியைப் பயன்படுத்துவதற்காக மின்சாரத்திற்கு அதிகம் செலவு செய்ய வேண்டும். எனவே எதிர்காலத்தில் செல்வவளம் படைத்தவர்கள் மட்டுமே ஏசிக்களைப் பயன்படுத்த முடியும் என்கிற நிலை வந்துவிடக்கூடாது.

வீடுகளில் மட்டுமல்ல, அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களிலும் ஏசிக்களின் பயன்பாடு முறையில்லாமல் உள்ளது. ஆற்றல் திறன் (Energy efficiency) பற்றி நாம் பேசுகிற அதே வேளையில் ஆற்றல் சமநிலை (Energy Equity) பற்றியும் விவாதிக்க வேண்டும்” என்றார்.

ஏசியின் பயன்பாட்டின் மீதான கட்டுப்பாடுகள் பற்றி நாம் விவாதிக்கும் அதே வேளையில் நாம் மாற்று ஏற்பாடுகள் பற்றியும் யோசிக்க வேண்டும் என்கிறார் ஜியோ டாமின்.

“வெப்பமாக உள்ளது என்பதற்கான நாம் ஏசியை பயன்படுத்துகிறோம். அதற்கு அதிக மின்சாரம் தேவைப்படுகிறது, அது அதிக கார்பன் உமிழ்விற்கு வித்திடுகிறது. ஏசி பயன்பாட்டில் அதிக வெப்பமும் வெளியாகிறது. இது வளிமண்டலத்தில் மேலும் வெப்பத்தை அதிகரிக்கிறது. இப்படி இது ஒரு முடிவில்லாத சுழற்சியாக சென்று கொண்டிருக்கிறது. 1.5 டிகிரிக்குள் புவிவெப்பமடைதலை வைத்திருக்க வேண்டும் என்கிற அளவை நாம் தாண்டிவிட்டோம்.

கண்ணாடி முகப்புகளால் கொண்ட கட்டடங்கள் அடிப்படையிலே அதிக வெப்பத்தை ஈர்க்கும் தன்மையுடையது. அங்கு ஏசி பயன்பாடு நிச்சயம் அதிகமாகவே இருக்கும். நம்முடைய கட்டுமானங்களிலும் முடிந்த வரை ஏசி தேவையைக் குறைக்கக்கூடிய அளவிற்கு முறையான காற்றோட்ட வசதி போன்றவற்றை முதன்மைப்படுத்த வேண்டும்” என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு