படக்குறிப்பு, நள்ளிரவில் வீட்டினுள் நுழைந்த மர்ம நபர்கள் சாமியாத்தாளை ஆயுதங்களால் தாக்கிவிட்டுத் தலைமறைவாகிவிட்டனர்எழுதியவர், பெ.சிவசுப்ரமணியம்பதவி, பிபிசி தமிழுக்காக3 மணி நேரங்களுக்கு முன்னர்

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ளது சித்தன்பூண்டி கிராமம். இங்குள்ள கொளத்துப்பாளையம் என்ற ஊரைச் சேர்ந்தவர் சாமியாத்தாள் (64). இவரது கணவர் ராசப்பன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.

இவருக்கு கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும், கிருஷ்ணவேணி (எ) சங்கீதா என்ற மகளும் உள்ளனர்.

இருவருக்கும் திருமணமாகி விட்டது. மகன் மனைவியுடன், கோயம்புத்தூரிலும், மகள் அருகிலுள்ள மணியனூர் என்ற ஊரிலும் வசித்து வருகின்றனர்.

நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர்கள்

நாமக்கல் மாவட்டம், சோழசிரமணி என்ற ஊரில் இருந்து மணியனூர் செல்லும் வழியில் கொளத்துப்பாளையம் என்ற ஊர் அமைந்துள்ளது. ஊரிலிருந்து, நூறு மீட்டர் தொலைவில், தென்னந்தோப்புக்குள் அமைந்துள்ள தனி வீட்டில் சாமியாத்தாள் வசித்து வந்தார்.

சோழசிராமணி – மணியனூர் பஞ்சாயத்து சாலையின் வலது பக்கம், சாலையை ஒட்டியே சாமியாத்தாள் வசிக்கும் வீடு உள்ளது. இந்த இடத்தில் சாமியத்தாளுக்கு 2.75 ஏக்கர் நிலத்தில், சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. காவேரி ஆற்றிலிருந்து கிழக்கே மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்த ஊரைச் சுற்றிலும், தென்னை, பாக்கு மற்றும் வாழை பயிரிட்டுள்ளனர்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

கடந்த மே 31ஆம் தேதி இரவு சாமியாத்தாள் உறவினர் இல்லத் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு இரவு ஒன்பது மணிக்குத்தான் வீடு திரும்பியுள்ளார். சிறிய கான்கிரிட் வீட்டின் முன்பக்கம் பத்தடி அகலம், 20 அடி நீளம் கொண்ட முற்றமும், அதன் ஓரத்தில் குளியலறையும் அமைந்துள்ளது.

வீட்டினுள் போதிய காற்றோட்டம் இல்லாத நிலையில், வீட்டின் முன்பாக உள்ள முற்றத்தில் தான் சாமியாத்தாள் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்துள்ளார். நள்ளிரவில் வீட்டினுள் நுழைந்த மர்ம நபர்கள் சாமியாத்தாளை கத்தியால் குத்திவிட்டு, தப்பித் தலைமறைவாகினர்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.கத்திக் குத்தும் அரிவாள் வெட்டும்

கழுத்தில் கத்திக் குத்தும், கன்னத்தில் அரிவாள் வெட்டும் பட்ட சாமியாத்தாள், உயிருக்கு ஆபத்தான நிலையில் கூச்சல் எழுப்பியதுடன், தனது செல்போன் மூலம் அருகே உள்ள உறவினர்களைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சாமியாத்தாளின் மருமகன் முத்துக்குமார் பிபிசி தமிழிடம் பேசும்போது, அதிகாலை சரியாக 1.19 மணிக்கு தனது அத்தை சாமியாத்தாள் தன்னைத் தொடர்புகொண்டு பேசியதாகவும், “யாரோ என்னைக் கத்தியால் குத்திவிட்டனர். கழுத்து, கன்னம் எல்லாம் காயமாகியுள்ளது. சங்கீதாவை கூட்டிகிட்டு சீக்கிரம் வாங்க…” என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

“அடுத்த 15 நிமிடங்களில் நானும், என் மனைவியும் அங்கு சென்றோம். அக்கம், பக்கம் உள்ள உறவினர்கள் சிலரும் வந்து விட்டனர். அத்தையின் முகத்தில் பலமாக வெட்டுப்பட்டிருந்தது. சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.

முதலுதவிக்குப் பிறகு, கோயமுத்தூர் அழைத்துச் செல்லுமாறு கூறினார்கள். அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் கோவை சென்றுவிட்டோம். காலை 9.20 மணி வரை சிகிச்சையில் இருந்தார். ஆனால், அதிகமான ரத்தம் வெளியேறிவிட்டதால், அத்தையைக் காப்பாற்ற முடியவில்லை” என்றார்.

மோப்ப நாய் ‘டயானா’

தகவல் அறிந்த நாமக்கல் மாவட்டம், நல்லூர் காவல் நிலைய அதிகாரிகள், சம்பவம் நடந்த இடத்திற்கு ஒரு மணிநேரத்துக்குள் வந்து விசாரணையைத் துவக்கியுள்ளனர். இரவு 9 மணிக்கு சேலம் சரக டி.ஐ.ஜி. உமா உள்ளிட்ட உயரதிகாரிகள் வந்த பின்னர் மோப்ப நாய் ‘டயானா’ வரவழைக்கப்பட்டுள்ளது. சாமியாத்தாள் தாக்கப்பட்ட இடத்தில் இருந்து கிழக்கே ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குச் சென்ற ‘டயானா’ திரும்பவும் அந்த வீட்டுக்கே வந்துவிட்டது.

கோவையில் இருந்து நாமக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட சாமியாத்தாளின் உடல், கடந்த 1ஆம் தேதியன்று மாலை ஐந்து மணிக்கு உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

இதனிடையே குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சாமியாத்தாள் உடலை அவரது உறவினர்கள் வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களைக் காவல்துறையினர் சமரசம் செய்ததுடன், விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தனர். இதையடுத்து சாமியாத்தாளின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.

குழப்பம் விளைவித்தால் நடவடிக்கை – காவல்துறை எச்சரிக்கை

இதையடுத்து கடந்த 8ஆம் தேதியன்று மாலை நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் வெளியிட்ட அறிக்கையில், “பாதிக்கப்பட்ட சாமியாத்தாள், தன் உறவினர்களுக்கு செல்போன் மூலம், தன்னை யாரோ இருவர் வெட்டிவிட்டதாகக் கூறியுள்ளார். அடையாளம் தெரியாத அந்த நபர்கள் நகை, பணம் வேண்டும் என்று கேட்டதாகவும் கூறவில்லை.

சாமியாத்தாள் வீட்டிலிருந்த நகைகள், பணம் அனைத்தும் அப்படியே உள்ளன. சாமியாத்தாளின் காதிலிருந்த கம்மல் அப்படியே இருந்தது,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு சில ஊடகங்களில், அவர் ஆதாயத்திற்காக வெட்டப்பட்டதாக உண்மைக்கு மாறாகவும், புலன் விசாரணையைப் பாதிக்கும் வகையிலும், மக்களுக்குக் குழப்பம் விளைவிக்கும் வகையிலும் சில தகவல்கள் வந்து கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கூடுதலாக, இந்த வழக்கை விசாரிப்பதற்காக பரமத்தி வேலூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்ற தகவலையும் பகிர்ந்தார்.

விசாரணை முடியும் முன்பாகவே இதுபோன்ற தவறான தகவல்களையும், புலன் விசாரணைக்குக் குழப்பம் விளைவிக்கும் வகையிலும், சமூக ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் வாயிலாகத் தவறான தகவல்களை யாரும் பதிவிட வேண்டாம் என கேட்டுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன், அவ்வாறு செய்பவர்கள்மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்தார்.

விசாரணை அதிகாரி கூறியது என்ன?

இந்த வழக்கு தொடர்பான புலன் விசாரணையில் உள்ள ஒரு காவல்துறை அதிகாரி பெயர் குறிப்பிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் பிபிசி தமிழிடம் பேசினார்.

அவர் பேசும்போது, “தன்னைத் தாக்கியவர்கள் யார் என்பது பற்றி சாமியாத்தாளும் அவரது உறவினர்களிடம் எதுவும் சொல்லவில்லை. பக்கத்தில் இருந்த உறவினர்களும் ‘வந்தவர்கள் யார்? என்ன கேட்டனர்?’ என்று கேட்கவும் இல்லை. தனது பயன்பாட்டுக்காகப் புதிதாக வாங்கியுள்ள ஒரு டிவிஎஸ் மொபெட் இருசக்கர வாகனத்தை வீட்டுக்குத் தென்பகுதியில் உள்ள ஒரு கொட்டகையில் நிறுத்தியுள்ளார்.

அந்த வண்டி இருக்கிறதா எனச் சைகை மூலம் கேட்டுள்ளார். பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிப்போய் பார்த்துவிட்டு வந்து, வண்டி நிற்கிறது என்று கூறியுள்ளனர். கன்னத்தில் விழுந்த வெட்டு பலமாக இறங்கியதால், அவரது இரண்டு பற்கள் அந்த இடத்திலேயே விழுந்து கிடந்தன. கழுத்தில் குத்திய காயத்தில் இருந்து அதிக ரத்தம் வெளியேறியதால், அவரால் இயல்பாகப் பேச முடியவில்லை” என்று விவரித்தார்.

மேற்கொண்டு பேசிய அவர், “சாமியாத்தாள் படுத்திருந்த படுகையில் இருந்து எழுந்த பின்னரே தாக்குதல் நடந்துள்ளது. அதனால், கட்டிலில் இருந்த போர்வைமீது ரத்தம் படவில்லை. கீழே தரையெங்கும் ரத்தம் சிதறிக் கொட்டியிருந்தது.

தாக்குதல் நடந்த பின்னர், அந்த அம்மாவே மின் விளக்கைப் போட்டுவிட்டு, தலையணைக்கு அடியில் பர்ஸில் வைத்திருந்த செல்போனை எடுத்துப் பேசியிருக்கிறார். ஆகவே, கொலையாளிகள், சாமியாத்தளுக்குத் தெரிந்தவர்களாக இருக்க வாய்ப்புள்ளது” என்ற தகவலையும் பகிர்ந்தார்.

வீட்டுக்குள்ளிருந்த நகை, பணத்தைக் கொள்ளையடிக்க வந்தவர்கள் போலத் தெரியவில்லை என்று குறிப்பிட்ட விசாரணை அதிகாரி, “நிகழ்விடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலேயே அவர்கள் வந்த இரு சக்கர வண்டியை விட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

மெட்டாலிக் புளூ மோட்டார் சைக்கிள்

சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர், நாமக்கல்லில் நடந்த ஒரு திருமணத்திற்குச் சென்றுவிட்டு, இரவு ஒரு மணிக்கு வீட்டுக்கு வந்திருக்கிறார்.

அப்போது கொளத்துபாளையம் பகுதியில் இருந்து வேகமாக வந்த ஒரு மெட்டாலிக் ப்ளூ கலர் மோட்டார் சைக்கிள், மணியனூர் செல்லும் வழியில் வேகமாகச் சென்றுள்ளது. அந்த பைக்கில் 30 வயது மதிக்கத்தக்க இரு நபர்கள் பயணித்துள்ளனர்.

இந்தச் செய்தியை மையமாக வைத்து போலீசார், மணியனூர், இரும்புப் பாலம், நல்லூர் பகுதிகளில் இருந்து சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். ஒரு கேமராவில் அந்த மோட்டார் சைக்கிள் திருச்செங்கோடு நோக்கிப் பயணிப்பது தெரிந்துள்ளது.

இந்த மோட்டார் சைக்கிள் யாருடையது என்பது குறித்து போலீசார் விசாரித்தபோது, சாமியாத்தாளின் மருமகன் முத்துக்குமாரின் எண்ணெய் ஆலையில் வேலை செய்த ஆனந்தராஜ் என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது.

குடிப்பழக்கம்

இதுகுறித்து முத்துகுமாரை போலீசார் விசாரித்தபோது “ஆனந்தராஜின் பெற்றோர் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள். பல ஆண்டுகளுக்கு முன்பாகவே ஈரோடு மாவட்டம், தாளவாடி பகுதிக்குச் சென்று குடியேறிவிட்டனர். ஆனந்தராஜ் குடிப்பழக்கம் உள்ளவர், கையில் பணம் இருக்கும் போதெல்லாம் குடித்துக் கொண்டே இருந்துள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக, திருச்செங்கோடு பகுதியில் போர்வெல் லாரியில் வேலை செய்ய வந்துள்ளார். குடிக்கு அடிமையாக இருந்ததால், அந்த வேலையை ஒழுங்காகச் செய்யவில்லை. பிறகு எனது எண்ணெய் ஆலைக்கு வேலைக்கு வந்தார். அந்த வேலையையும் ஒழுங்காகச் செய்யவில்லை. பிறகு இந்தப் பகுதி தோப்புகளில் விவசாய நிலங்களிலும், வெல்லம் தயாரிக்கும் ஆலைகளிலும் வேலை செய்து வந்தார். எனது மாமியார் சாமியாத்தாள் தோட்டத்திலும் விவசாய வேலைகளைச் செய்து வந்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

செல்போன் கண்காணிப்பு

ஆனந்தராஜ் மீது சந்தேகப்பட்ட போலீசார், அவரது செல்போன் எண்ணை ஆய்வு செய்து பார்த்தபோது, ஈரோடு மாவட்டம், அந்தியூர் பகுதியில் இருப்பது தெரிய வருகிறது. உடனடியாக அந்தியூர் விரைந்த நாமக்கல் மாவட்ட போலீசார், அக்கா ஒருவரின் வீட்டிலிருந்த ஆனந்தராஜை கைது செய்துள்ளனர்.

ஆனந்தராஜிடம் விசாரித்ததில், அவர் முன்பு குடியிருந்த ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் உள்ள அவரது நண்பர் அஜித்குமார் தன்னோடு வந்து, சாமியாத்தாளை தாக்கியது தெரிய வருகிறது. அந்த நேரம் அந்தியூரில் இருந்து சத்தியமங்கலம் வழியாகத் தாளவாடி போவதற்காகப் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த அஜித்குமாரை, சத்தியமங்கலத்தில் தடுத்து நிறுத்திய போலீசார், அவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், “மது குடிக்கும் வழக்கம் கொண்ட அஜித்குமாரும், நானும் ஆறு மாதமாக ஒன்றாகவே இருந்து வருகிறோம். ஏழாம் தேதி இரவு இருவரும், அந்தியூரில் உள்ள ஒரு மதுபானக் கடையில் மது அருந்தினோம். மேற்கொண்டு செலவுக்குப் பணம் இல்லை என்ன செய்யலாம் என்று திட்டமிட்டோம்.

கொளத்துப்பாளையம் பண்ணை வீட்டில் தனியாக வசிக்கும் சாமியாத்தாளை தாக்கிவிட்டு, அவர் வீட்டில் வைத்திருக்கும் நகை, பணத்தைக் கொள்ளை அடிக்கலாம் என முடிவெடுத்தோம். அதன்படி, இரவு 10 மணிக்கு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் கிளம்பி, 12.30 மணிக்கு, நாமக்கல் மாவட்டம் கொளத்துப்பாளையத்திற்கு வந்து சேர்ந்தோம்.

சாமியாத்தாள் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, அங்கிருந்து நடந்தே சாமியாத்தாள் வீட்டுக்குச் சென்றோம். வீட்டின் முன் வாசலில் போடப்பட்டிருக்கும் இரும்புக் கதவைத் திறந்தால் சத்தம் கேட்டு அவர் எழுந்து விடுவார் என்பதால், வீட்டின் இடது பக்கம் இருக்கும் கதவில்லாத வாசல் வழியாக உள்ளே சென்றோம். நடந்து வரும் சத்தம் கேட்டு எழுந்த சாமியாத்தாள் எங்களைப் பார்த்துவிட்டார். இந்த நேரத்தில் நானும், அஜித்குமாரும் கையில் வைத்திருந்த கத்தியால் சாமியாத்தாளை வெட்டினோம்” என வாக்குமூலம் கொடுத்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

‘வாகன சோதனை தோல்வி’

ஆனந்தராஜ், அஜித்குமார் இருவரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்ட ஒரு காவல்துறை அதிகாரி பேசும்போது, “செலவுக்குப் பணம் தேவை. தனியாக பண்ணை வீட்டில் இருக்கும், சாமியாத்தாளை அடித்து, பணத்தை எடுக்கலாம் என்ற எண்ணத்தில் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அந்தியூரிலிருந்து கிளம்பும்போதே ஒரு மது குடித்துள்ளனர்.

மேலும் ஒரு பாட்டில் மதுவும், கரும்பு வெட்டப் பயன்படும் கத்தி ஒன்றையும் எடுத்து வந்துள்ளனர். சாமியாத்தாள் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் வண்டியை நிறுத்திவிட்டு, மது குடித்துள்ளனர். போதை அதிகமான நிலையில், என்ன செய்வது என்று தெரியாமலே அந்த அம்மாவை வெட்டிவிட்டுத் தப்பியிருக்கின்றனர்” என்று கூறினார்.

மேலும், “அந்தியூரில் இருந்து வரும் வழியில் பவானி, சித்தோடு, ஈரோடு, கருங்கல் பாளையம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, நல்லூர் என 8 காவல் நிலைய எல்லைகளைக் கடந்து வந்துள்ளனர். குடிபோதையில், பைக் டேங்க் கவரில் அரிவாளோடு வந்த இவர்களை ஏதாவது ஒரு காவல் நிலைய எல்லையில் போலீசார் வாகன சோதனை செய்து, கைது செய்திருந்தாலே இந்தக் கொலை நடந்திருக்காது” என்கிறார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு