Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பட மூலாதாரம், Getty Images
எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்41 நிமிடங்களுக்கு முன்னர்
இந்திய ரிசர்வ் வங்கி ஜூன் 6-ம் தேதியன்று வங்கிகளுக்கான ரெபோ வட்டி விகிதங்களை 6 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாகக் குறைத்திருக்கிறது. அதேபோல கேஷ் ரிசர்வ் ரேஷியோவையும் 4 சதவீதத்தில் இருந்து மூன்று சதவீதமாக குறைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், வீட்டுக் கடன் பெற்றிருப்போருக்கான வட்டி எப்படி குறையும், கடன் வாங்கியவர்கள் எப்படி அதனை அடைக்க வேண்டும், வைப்பு நிதி வைத்திருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாஸன் அளிக்கும் விளக்கத்தைக் கேள்வி – பதில் வடிவில் பார்க்கலாம்.
‘ரெபோ’ விகிதம் என்றால் என்ன?
கே. ரிசர்வ் வங்கி ‘ரெபோ’ வட்டி விகிதத்தைக் குறைத்திருக்கிறது. ‘ரெபோ’ விகிதம் என்றால் என்ன?
ப. ரிசர்வ் வங்கி, பிற வங்கிகளுக்கு என்ன வட்டி விகிதத்தில் கடன் கொடுக்குமோ, அதுதான் ‘ரெபோ’ வட்டி விகிதம். இப்படி வட்டி விகிதத்தை மாற்றி அமைக்கும்போது, அது தற்போதைய சந்தையில் இருக்கக்கூடிய வட்டி விகிதத்தை மாற்றி அமைக்கும். இந்த ‘ரெபோ’ வட்டி விகிதம் தற்போது அரை சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
கே. ரிசர்வ் வங்கி போன்ற மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை எந்த அடிப்படையில் மாற்றி அமைக்கின்றன?
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
ப. விலைவாசி அதிகரித்தால், அதற்கு பணவீக்கம் காரணம் எனக் கருதி ‘ரெபோ’ வட்டி விகிதத்தை அதிகரிப்பார்கள். விலைவாசி குறைந்தால், வட்டி விகிதத்தைக் குறைப்பார்கள். இந்திய அரசைப் பொறுத்தவரை, கடந்த ஓராண்டாக பணவீக்கம் அதிகரிக்கவில்லை என்கிறது. அதனால், வட்டி விகிதத்தை குறைத்திருக்கிறார்கள். ஏற்கனவே கால் சதவீதம் அளவுக்கு இரண்டு முறை வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. இப்போது அரை சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, வட்டி விகிதம் ஆறே முக்கால் சதவீதத்தில் இருந்து ஐந்தே முக்கால் சதவீதமாகக் குறைந்துவிட்டது.
பட மூலாதாரம், Getty Images
பொருளாதார விளைவுகள் என்ன?
கே. வட்டி விகிதம் குறைக்கப்படும் போது பொருளாதாரத்தில் என்ன நடக்கும்?
ப. இதுபோல வட்டி விகிதங்களைக் குறைக்கும்போது வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்ற நீண்ட காலக் கடன்களுக்கான வட்டி குறையும். வீட்டுக் கடன்களைப் பொறுத்தவரை ஏற்கனவே வாங்கிய கடனுக்கும் வட்டி குறையும். அதேபோல, வங்கிகளில் போட்டுவைக்கும் வைப்பு நிதிக்கான வட்டியும் குறையும். வீட்டுக் கடன்களைப் பொறுத்தவரை, புதிதாக வாங்குவோருக்கு தற்போதைய குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். ஏற்கனவே வாங்கியவர்களுக்கு வட்டி குறைய, ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை ஆகலாம். இப்படிக் கடன்களைக் குறைப்பதால், பணச் சுழற்சி அதிகரிக்கும். சுழற்சி அதிகரிப்பதால் பணப் புழக்கம் அதிகரிக்கும், பொருளாதாரம் வளரும், மக்களுக்கு பலன் கிடைக்கும் என்பதுதான் பொதுவான பொருளாதார எதிர்ப்பார்ப்பு.
கே. அப்படியான சூழல் இப்போது இந்தியப் பொருளாதாரத்தில் இருக்கிறதா?
ப. வட்டி விகிதத்தைக் குறைக்கும்போது மேலே சொன்னதைப்போல பொதுவாக நடக்கும். ஆனால், இந்தியாவில் தற்போது அந்தச் சூழல் இல்லை. காரணம் இந்தியாவின் பிரச்னை வட்டி விகிதமில்லை. அதன் பிரச்னைகள் வேறு. வட்டி விகிதத்தைக் குறைப்பதால் அந்தப் பிரச்னைகள் எல்லாம் போய்விடாது.
பட மூலாதாரம், Getty Images
வீட்டுக் கடன் பெற்றிருப்பவர்களுக்கு என்ன லாபம்?
கே. வட்டி விகிதம் குறைக்கப்படுவதால், வங்கிகளில் வீட்டுக் கடன் பெற்றிருப்பவர்களுக்கு என்ன லாபம்?
ப. வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு கால் சதவீதமோ, அரை சதவீதமோ குறைப்பார்கள். கடன் வாங்கியவர்கள் அதற்கேற்றபடி மாதாமாதம் கட்டும் தொகையைக் குறைக்கலாம் அல்லது கட்டும் தவணைகளைக் குறைக்கலாம். ஆனால், இந்த வட்டிக் குறைப்பைச் செய்ய வங்கிகள் ஒரு வருடமாவது எடுத்துக்கொள்வார்கள்.
கே. ஏன் இதற்கு இவ்வளவு நாட்கள் ஆகின்றன?
ப. ஏனென்றால், வங்கிகள் வேறு இடங்களில் குறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிட்ட வட்டி விகிதத்தை அளிப்பதாகக் கூறி கடன் வாங்கியிருப்பார்கள். அதையெல்லாம் சரிசெய்யத்தான் இந்த தாமதம் ஆகிறது. புதிதாக கடன் வாங்கினால், தற்போது அறிவிக்கப்பட்ட குறைந்த வட்டியில் வாங்கலாம். பழைய கடன்களுக்கு மெதுவாகத்தான் குறையும்.
கே. ரிசர்வ் வங்கி ‘ரெபோ’ வட்டி விகிதத்தை அதிகரிக்கும் போது இதேபோல மெதுவாகத்தான் அதிகரிப்பார்களா?
ப. அப்படித்தான் செய்ய வேண்டும். ஆனால், லாபம் வேண்டும் என்பதற்காக உடனே செய்துவிடுவார்கள். ஏனெனில் வங்கி என்பது தொழில். தனக்கு லாபமளிக்கும் செயல்முறையை வேகமாகச் செய்வார்கள்.
கே. வீட்டுக் கடன் வாங்கியவர்கள் இந்த விஷயத்தை எப்படி அணுக வேண்டும்? கடனைத் திருப்பிக் கட்டும் காலத்தை குறைக்க வேண்டுமா அல்லது செலுத்தும் தொகையைக் குறைக்க வேண்டுமா?
ப. என்னைக் கேட்டால் திருப்பிச் செலுத்தும் காலத்தைத்தான் குறைக்க வேண்டும். அது எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும், திருப்பிச் செலுத்தும் காலத்தைக் குறைத்துக் கொள்வதுதான் சரியானதாக இருக்கும்.
பட மூலாதாரம், Getty Images
வைப்பு நிதி தொடர்பான பாதிப்புகள்
கே. வங்கிகளில் வைப்பு நிதி வைத்திருப்பவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?
ப. வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறையும். ஏற்கனவே முதலீடு செய்த வைப்பு நிதிகளுக்கு, ஏற்கனவே உறுதியளிக்கப்பட்ட காலத்திற்கு வட்டி குறையாது. அதாவது, ஒரு வருட வைப்பு நிதி, இரண்டு வருட வைப்பு நிதி என்றால் அந்த குறிப்பிட்ட காலம் வரை வட்டி குறையாது. உதாரணமாக, கடந்த ஜூன் 15ஆம் தேதியன்று குறிப்பிட்ட தொகையை ஒரு வருட காலத்திற்கு வைப்பு நிதியில் போட்டுவைத்திருந்தால், இந்த ஜூன் 15ஆம் தேதிவரை உறுதியளிக்கப்பட்ட வட்டி கிடைக்கும். ஆனால், அதற்குப் பிறகு புதுப்பிக்கும்போது குறைவான வட்டி விகிதத்தில்தான் புதுப்பிப்பார்கள். இனிமேல் புதிதாக வைப்பு நிதியில் பணத்தை போட்டுவைத்தாலும் குறைவான வட்டியே தருவார்கள்.
கே. ஏற்கனவே வங்கிகளுக்கு போதுமான வைப்பு நிதி கிடைக்கவில்லையென்ற பிரச்னை இருந்தது. இப்போது வட்டி விகிதம் குறைந்திருப்பது அந்தப் பிரச்னையை மேலும் தீவிரமாக்குமா?
ப. அந்த காலகட்டம் ஓராண்டிற்கு முன்பே முடிந்துவிட்டது. இப்போது வங்கிகளில் பணம் நிறைய இருக்கிறது. கடன் வாங்கத்தான் ஆளில்லை. அதனால் வங்கிகள் தங்களிடமுள்ள பணத்தை பரஸ்பர நிதியில் முதலீடு செய்து வைத்திருக்கிறார்கள்.
கே. ஓய்வுபெற்ற பிறகு கிடைத்த பணத்தை வங்கியில் வைப்பு நிதியாக போட்டுவைத்து, அதில் வரும் வட்டியில் பலனடைபவர்களைப் பொறுத்தவரை, இந்த வட்டிக் குறைப்பு பாதிக்குமல்லவா, அவர்கள் என்ன செய்ய வேண்டும்?
ப. வைப்பு நிதிக்குப் பதிலாக கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். அதில் வைப்பு நிதியைவிட கூடுதல் வட்டி கிடைக்கும். மாதாமாதம்கூட வட்டியைப் பெற முடியும்.
பட மூலாதாரம், Getty Images
இந்தியப் பொருளாதாரத்திற்கு உதவுமா?
கே. இந்த வட்டிக் குறைப்பு இந்தியப் பொருளாதாரத்திற்கு உதவுமா?
ப. என்னைக் கேட்டால் உதவாது என்றுதான் சொல்வேன். அமெரிக்கா வட்டி விகிதத்தைக் குறைக்காததால், நமக்கும் அவர்களுக்கும் இடையிலான வட்டி விகித வித்தியாசம் என்பது மிகவும் குறைந்துவிட்டது. இதனால் வெளிநாட்டு நிறுவனம் சார்ந்த முதலீட்டாளர்கள் (FIIs) கடன் பத்திரங்களில் இருந்து பணத்தை வெளியில் எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதேபோல, நேரடி அந்நிய முதலீடு வெகுவாகக் குறைந்துவிட்டது. இங்குள்ள முதலீட்டாளர்களே, வெளிநாடுகளில் முதலீடு செய்ய இங்கிருந்து பணத்தை எடுத்துச் செல்கிறார்கள். வேலைவாய்ப்புகள் குறைந்துவிட்டன. இந்தப் பிரச்னைகளை, இந்த வட்டிவிகிதக் குறைப்பு சரிசெய்யாது.
கே. இப்போது வட்டி விகிதம் குறைந்திருப்பதால் புதிதாக வீட்டுக் கடன் வாங்குவது லாபகரமாக இருக்குமா?
ப. அப்படியல்ல. மாதாமாதம் தவணை கட்டியாக வேண்டுமே. வீட்டின் விலைகள் வெகுவாக அதிகரித்திருக்கின்றன. இந்த சிறிய வட்டிக் குறைப்பால் வீட்டின் விற்பனை அதிகரிக்காது. முதல் வீடு வாங்குவதாக இருந்தால், நீங்கள் தற்போது செலுத்திவரும் வாடகையைவிட பல மடங்கு அதிகமாக மாதத் தவணை கட்ட வேண்டியிருக்கும். இரண்டாவது வீடு என்றால், அது சரியான முதலீடாக இருக்காது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.கே. இதுபோல வட்டி விகிதங்கள் குறையும்போது, நாம் வாங்கிய கடனை எப்படி மாற்றியமைப்பது?
ப. கடன் வாங்கிய வங்கிகளை அணுக வேண்டும். ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்திருப்பதால், நீங்கள் வாங்கியக் கடனுக்கான வட்டியையும் குறைக்க வேண்டும் என கடிதம் அளிக்கலாம். பேச்சுவார்த்தை நடத்தி, ஓரளவுக்குக் குறைப்பார்கள். இதற்குப் பிறகு, கட்ட வேண்டிய தவணையைக் குறைப்பதா, மாதாமாதம் கட்டிவரும் தவணைத் தொகைக் குறைப்பதா என்பதை முடிவுசெய்துகொள்ளலாம்.
கே. இதுபோல நீண்ட காலக் கடன்களைப் பெற்றிருக்கும்போது, திடீரென ஒரு பெரிய அளவிலான ரொக்கம் கிடைத்தால் கடனின் ஒரு பகுதியைத் திருப்பிச் செலுத்துவது நல்லதா அல்லது அந்தத் தொகையை வேறு எதிலாவது முதலீடுசெய்வது நல்லதா?
ப. கடனைத் திருப்பிச் செலுத்துவதுதான் நல்லது. நீங்கள் வாங்கிய கடனுக்கு குறிப்பிட்ட அளவில் வட்டி கட்டுவீர்கள். அந்த அளவுக்கு உங்கள் முதலீட்டிற்கு லாபம் கிடைப்பது அரிது. ஆகவே கடனைத் திருப்பிச் செலுத்துவதுதான் நல்லது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு