Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
சிறிய வீடு, ரேஷன் அரிசி: ஐஐடியில் சேரும் பழங்குடி மாணவி தமிழ் வழிக் கல்வி மூலம் சாதித்தது எப்படி?
பட மூலாதாரம், Mayakrishnan Kannan/BBC Tamil
எழுதியவர், நித்யா பாண்டியன் & மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழ்10 ஜூன் 2025, 07:11 GMT
புதுப்பிக்கப்பட்டது 55 நிமிடங்களுக்கு முன்னர்
சேலம் மாவட்டம் கருமந்துறையில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்ற, பழங்குடியினத்தைச் சேர்ந்த, ராஜேஷ்வரி என்ற மாணவி ஜே.இ.இ. (அட்வான்ஸ்ட்) தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பழங்குடியினருக்கான உண்டு உறைவிடப்பள்ளியில், தமிழ் வழியே படித்து இந்த தேர்வில் வெற்றி பெற்ற முதல் மாணவி என்ற சாதனையை படைத்துள்ளார் ராஜேஷ்வரி. JEE அட்வான்ஸ்ட் 2025 நுழைவுத்தேர்வில் பட்டியல் பழங்குடியினர் பிரிவில் 417- வது இடத்தைப் பிடித்துள்ளார் ராஜேஷ்வரி.
அனைத்திந்திய அளவில் நுழைவுத் தேர்வுகளை எழுதி தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கான கல்விச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று கடந்த ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ராஜேஷ்வரி தேர்வில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இவரின் கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும் என்று தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ் வழிக்கல்வி, ஆசிரியர்களின் ஒத்துழைப்பு மற்றும் வழிகாட்டுதல் மூலம் இத்தகைய தேர்வில் வெற்றி பெற்றதாக தெரிவிக்கிறார் ராஜேஷ்வரி. இது அவர் கடந்து வந்த பாதை பற்றிய கதை.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
விண்வெளி பொறியியல் படிக்க ஆசை
கருமந்துறையில் உள்ள பள்ளி ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் பேரில் ஜே.இ.இ. மெயின்ஸ் தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்ததாக கூறுகிறார் பிபிசி தமிழிடம் பேசிய ராஜேஷ்வரி.
“மெயின்ஸ் தேர்வில் வெற்றி பெற்றால் என்.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனங்களில் படிக்க வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் அட்வான்ஸ்ட் தேர்வில் வெற்றி பெற்றால் தான் ஐ.ஐ.டி. போன்ற மிகப்பெரிய கல்வி நிறுவனத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எங்களின் ஆசிரியர்கள் கூறினார்கள். அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிர முயற்சிகளை நான் மேற்கொண்டேன்,” என்று பிபிசியிடம் தெரிவித்தார் ராஜேஷ்வரி.
தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குமிளியில் செயல்பட்டு வரும் ஏகலைவா பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் தற்போது திறன் மேம்பாட்டு பயிற்சிகளைப் பெற்று வருகிறார் அவர்.
பட மூலாதாரம், Mayakrishnan Kannan/BBC Tamil
படக்குறிப்பு, அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி, கருமந்துறை, சேலம் 12-ஆம் வகுப்புக்கான தேர்வுகள் இருக்கும் போது ஜே.இ.இ. போன்ற தேர்வுகளுக்குப் படித்தது கடினமாக இல்லையா என்ற கேள்வியை எழுப்பிய போது, “மாநில கல்வித் திட்டத்தில் உள்ள புத்தகங்களை படித்தாலே போதுமானது. தமிழ் வழிக் கல்வியில் பாடங்களை புரிந்து கொண்டு படித்தோம். எனவே எங்களுக்கு தேர்வை அணுகுவதில் பிரச்னை ஏதும் இல்லை,” என்று தெரிவித்தார்.
கடந்த இரண்டு வருடங்களில் அரசின் உண்டு உறைவிடப் பள்ளியில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. சென்னையில் இருந்து ஆசிரியர்கள் மற்றும் பாட நிபுணர்களை கொண்டு ஆன்லைனில் மாணவர்களுக்குத் தேவையான வகுப்புகள் எடுக்கப்பட்டன.
“இருப்பினும், ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் போன்ற தேர்வுகளை எழுத ஆங்கிலம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என தோன்றியது. ஆரம்பக் கட்டப் பயிற்சிகளில் நான் தடுமாறினேன்,” என்று கூறுகிறார் அவர்.
பன்னிரண்டாம் வகுப்பு அரசு தேர்வுக்குப் பிறகு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையில் பழங்குடியின மாணவ மாணவியர்களுக்கான சிறப்புப் பயிற்சித் திட்டத்தின் மூலம் ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்விற்காக பயிற்சி பெற்றார் ராஜேஷ்வரி.
“ஐஐடி மெட்ராஸ் அல்லது ஐஐடி பம்பாயில் சேருவேன் என்று நம்புகிறேன். நான் விண்வெளி பொறியியல் பாடத்தை படிக்க விரும்புகிறேன்,” என்றும் பிபிசியிடம் தன்னுடைய கனவுகளை விவரித்தார் ராஜேஷ்வரி.
பட மூலாதாரம், Mayakrishnan Kannan/BBC Tamil
படக்குறிப்பு, மாணவி ராஜேஷ்வரியின் இல்லம் கூலி வேலைக்குச் செல்லும் அம்மா
கல்வராயன் மலையில் உள்ள கருமந்துறையில் ஒரு சாதாரண வீட்டில் வாழ்ந்து வருபவர் கவிதா. அவருடைய கணவர் ஆண்டி. கவிதா விவசாய கூலியாக இருக்கிறார். ஆண்டி தையல் கலைஞராக இருந்து வந்தார். முன்பு புற்றுநோய் பாதிப்புக்கு ஆளான ஆண்டி 2024-ஆம் ஆண்டு உயிரிழந்தார். ஆண்டி – கவிதா தம்பதியினருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
“கல்வி ஒன்றே அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதால் அனைவரையும் படிக்க வைத்திருப்பதாக,” பிபிசி தமிழிடம் பேசிய கவிதா தெரிவித்தார். காட்டு வேலைக்குச் செல்லும் அவர், தினக்கூலியாக ரூ. 200 முதல் ரூ.350 வரை சம்பாதிக்கிறார்.
ஆண்டி இறந்தவுடன், வீட்டில் இருந்து அம்மா மற்றும் சகோதரிகளை கவனித்துக் கொண்டு அப்பாவின் தையல் தொழிலை தொடர்ந்து வருகிறார் ராஜேஷ்வரியின் சகோதரர் கிரி கணேஷ்.
ராஜேஷ்வரியின் தேர்வு வெற்றி அந்த குடும்பத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரின் கடின உழைப்பின் மூலம் இத்தகைய வெற்றி சாத்தியமானது என்று தன்னுடைய மகள் பற்றி பெருமையாக பேசும் கவிதா, அவர் அன்றாட வாழ்வு எப்படியாக இருந்தது என்பதையும் பகிர்கிறார்.
“காலையில் எழுந்து ரேஷன் அரிசியை சமைத்து வைத்துவிட்டு வேலைக்குச் செல்வேன். எங்கள் அனைவருக்கும் அதுதான் உணவு. மூன்று வேளையும் நாங்கள் அந்த சாப்பாட்டை தான் பகிர்ந்து சாப்பிடுவோம்,” என்றார்.
“நாங்கள் படிக்கவில்லை. ஆனால் எனது மகள் ராஜேஷ்வரி நன்கு படித்து மேல்படிப்பில் நல்ல கல்லூரியில் சேரப் போவது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது,” என்று பிபிசியிடம் தெரிவித்தார் அவர்.
பட மூலாதாரம், Mayakrishnan Kannan/BBC Tamil
படக்குறிப்பு, விவசாய கூலியாக வேலை பார்ப்பதாக தெரிவிக்கிறார் ராஜேஷ்வரியின் தாயார் கவிதா சாதித்துக் காட்டிய பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி
ராஜேஷ்வரி மட்டுமின்றி கருமந்துறைப் பள்ளியில் நான்கு மாணவர்கள் ஜே.இ.இ. மெயின் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் என்.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி படிக்க உள்ளனர்.
இது தொடர்பாக கருமந்துறை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியின் தலைமையாசிரியர் விஜயன் பிபிசி தமிழிடம் பேசுகையில்:
“ராஜேஷ்வரி நல்ல மதிப்பெண்கள் எடுத்து சாதித்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அரசின் திட்டங்கள் இதற்கு மிக உறுதுணையாக இருந்தன. எங்கள் பள்ளியில் மட்டும் ஜேஇஇ மெயின் தேர்வில் ஐந்து பேர் தேர்வு பெற்றனர்.
அட்வான்ஸ்ட் தேர்வில் ராஜேஷ்வரி தேர்ச்சி பெற்றது மிக பெரிய மகிழ்ச்சியாக இருந்தது என்றார்.
“ராஜேஷ்வரியின் சாதனை பல மாணவர்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உள்ளது. இப்போது மலைவாழ் பழங்குடியின மாணவ மாணவியர்களும் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படித்து சாதிக்க முடியும் என்று நம்புகிறார்கள்,” என்று தெரிவிக்கிறார் விஜயன்.
படக்குறிப்பு, கருமந்துறை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியின் தலைமையாசிரியர் விஜயன்பழங்குடி மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன?
பிபிசி தமிழிடம் பேசிய செங்கல்பட்டு ஏகலைவா பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேஸ்வரன், “மேற்கல்வி பயிலும் போது தெரிந்து கொள்ள வேண்டிய கூடுதல் தகவல்கள், மேம்படுத்திக் கொள்ள வேண்டிய செயல்பாடுகள் மற்றும் மென் திறன்கள் , அணுகுமுறை குறித்த பயிற்சி ராஜேஷ்வரிக்கு வழங்கப்பட்டதாக,” தெரிவித்தார்.
கல்விச் செலவை அரசே ஏற்கும் – தமிழ்நாடு அரசு
ராஜேஷ்வரி தேர்வில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வாழ்த்துகளை பதிவு செய்த தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில்,
“தந்தையை இழந்தாலும், அவர் கனவைத் தன் நெஞ்சில் சுமந்து நனவாக்கியிருக்கும் அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் சல்யூட். அவரது உயர் கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். ராஜேஷ்வரி போன்ற நமது மகள்கள் மேலும் பலர் சேருவதுதான் ஐஐடி-க்கு உண்மையான பெருமையாக அமையும்,” என்று கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் தங்களின் வாழ்த்துகளை பதிவு செய்துள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
ஐ.ஐ.டி. மெட்ராஸின் முன்னெடுப்புகள்
தேர்வில் வெற்றி பெற்ற ராஜேஷ்வரி ஐ.ஐ.டி. மெட்ராஸ் அல்லது ஐ.ஐ.டி. பம்பாயில் படிக்க இருப்பதாக தெரிவித்தார். ஏற்கனவே தமிழ்நாடு அரசு அவரின் கல்வி கட்டணத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் என்று தெரிவித்திருந்தாலும் ஐ.ஐ.டி. மெட்ராஸ் சில சிறப்பு சலுகைகளை பழங்குடியின மாணவர்கள், வறிய குடும்பத்தில் இருந்து படிக்க வரும் மாணவர்கள் மற்றும் சிறுபான்மை பிரிவில் இருந்து வரும் மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.
பிபிசி தமிழ் இது தொடர்பாக ஐ.ஐ.டி. மெட்ராஸின் செய்தித் தொடர்பு அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது, “பட்டியல் பழங்குடியினர், பட்டியல் சாதியினருக்கு தேவையான உதவிகளை வழங்க பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றோம். கல்விக் கட்டணம், உணவுக் கட்டணம், இருக்கைக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் ஆண்டு வருமானம் கொண்ட குடும்பங்களில் இருந்து படிக்க வரும் மாணவர்களுக்கான அனைத்து கட்டணத்தையும் ஐ.ஐ.டி. மெட்ராஸின் முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் சி.எஸ்.ஆர். கூட்டாளிகள், 2022 – 23 மற்றும் 2023-24 கல்வி ஆண்டில் ஏற்றுக் கொண்டனர்,” என்பதையும் தன்னுடைய பதிலில் குறிப்பிட்டிருந்தது.
“அதே நேரத்தில், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பட்டியல் சாதிப் பிரிவை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்களின் ஆண்டு வருமானமானது எவ்வளவாக இருந்தாலும், பி.டெக். பாடப்பிரிவில் சேரும் மாணவர்களுக்கான பயிற்சிக் கட்டணம் (Tuition fees) செலுத்துவதில் இருந்து முழுமையான விலக்கு அளிக்கப்படும்,” என்றும் தன்னுடைய பதிலில் குறிப்பிட்டது ஐ.ஐ.டி. மெட்ராஸின் செய்தித் தொடர்பு அலுவலகம்.
தங்களின் பொருளாதாரம் மற்றும் கல்விக் கடன் போன்றவற்றை நினைத்து வருத்தமடையாமல் தங்களின் எதிர்கால கல்விக் கனவை திட்டமிடுவதற்காகவே இத்தகைய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அரசின் பங்கு என்ன?
பழங்குடியினர் நல இயக்குநர் அண்ணாதுரை பிபிசி தமிழிடம் பேசிய போது, “ஐ.ஐ.டி. மெட்ராஸில் தான் ராஜேஷ்வரி படிப்பாரா என்று தெரியாது. அவர் ஐ.ஐ.டி. பம்பாயை தேர்வு செய்தாலும் கூட, அவர் கல்விக்கான கட்டணம் எதையும் செலுத்த வேண்டியதில்லை.
இதில் தமிழ்நாடு அரசின் பங்கானது, ராஜேஷ்வரி படிப்பை முடித்துவிட்டு கல்வி நிறுவனத்தில் இருந்து வெளியேறும் வரை அவருக்குத் தேவையான பரீட்சைக் கட்டணம், போக்குவரத்து செலவு, அனுமதிக் கட்டணம் என அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசே செய்யும்.
மாணவர்கள் ஏற்கனவே இதுபோன்ற கல்வி நிறுவனங்களில் தங்களின் இருப்பை தயக்கமின்றி உறுதி செய்ய பயிற்சிகளை நாங்கள் செங்கல்பட்டு பள்ளியில் வழங்கி வருகின்றோம். தற்போது 125 மாணவர்கள் வரை அங்கே இப்பயிற்சியை பெற்று வருகின்றனர். இதுமட்டுமின்றி, அவர்கள் கல்வி நிறுவனத்தில் சேர்ந்த பிறகும் அவர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு, இடை நிற்றல் இல்லாமல் கல்வி கற்பதை உறுதி செய்வதும் தமிழ்நாடு அரசின் பொறுப்பாக உள்ளது,” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு