Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
விண்வெளியில் வேளாண் புரட்சிக்கு திட்டம் – இந்திய வீரர் என்ன செய்யப் போகிறார்?
பட மூலாதாரம், Axiom Space
எழுதியவர், த வி வெங்கடேசுவரன்பதவி, பேராசிரியர், IISER மொஹாலி10 ஜூன் 2025, 03:17 GMT
புதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர்
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான ஆக்ஸியம்-4 பயணத் திட்டம் மீண்டும் ஒருமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களுடன் டிராகன் விண்கலம் நாளை (ஜூன் 11) சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்திய குடிமகன் விண்வெளிக்குச் செல்கிறார். அவரது இந்தப் பயணம் இஸ்ரோவின் விண்வெளி உயிரியல் மற்றும் விண்வெளி விவசாய ஆராய்ச்சிக்கு ஒரு திருப்புமுனையாக அமையும்.
விண்வெளி விவசாயத்தின் தொடக்கம்
8,000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதிப்பகுதி போன்ற உலகின் பற்பல நதி பகுதிகளில் விவசாயம் தொடங்கியது மனித குலத்தின் முதல் பெரிய புரட்சியாக இருந்தது.
வேட்டையாடுவதை விட பயிரிடும் முறையைக் கண்டுபிடித்ததால், கிராமங்கள் உருவாகின, உணவு உற்பத்தி அதிகரித்தது, நாகரிகங்கள் தோன்றின.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இன்று நாம் மற்றொரு புரட்சியின் தொடக்கத்தில் நிற்கிறோம். நம் கண்முன்னே விண்வெளி விவசாயம் உருவாகி வளர்ந்து வருகிறது. சுபான்ஷு சுக்லா உட்பட ஆக்ஸியம்-4 குழுவினர் விண்வெளியில் விதைகள் முளைப்பது குறித்தும் தாவரங்கள் எப்படி வளருகின்றன என்பதைப் குறித்தும் பல்வேறு ஆய்வுகளை செய்யப் போகிறார்கள்.
விண்வெளியில் ஈர்ப்பு விசையின் தாக்கம் கிட்டத்தட்ட இல்லாத நிலையில் (நுண்ணீர்ப்பு) விதை எப்படி முளைக்கும், விண்வெளியில் வளரும் தாவரங்களின் தன்மை என்னவாக இருக்கும் என்பது போன்ற பல்வேறு கேள்விகளை முன்வைத்து அவர்கள் ஆராய்ச்சி செய்ய இருக்கிறார்கள்.
பட மூலாதாரம், Axiom Space
படக்குறிப்பு, சுபான்ஷு சுக்லா உட்பட AX-4 பயணக்குழுவினர் விண்வெளியில் விதைகள் முளைப்பது குறித்தும் தாவரங்கள் எப்படி வளருகின்றன என்பதைப் குறித்தும் பல்வேறு ஆய்வுகளை நடத்தப் போகிறார்கள்.விண்வெளியில் பயிர் செய்வது ஏன்?
சந்திரன், செவ்வாய் போன்றவற்றுக்கான நீண்ட பயணங்களின் போது காய் கனிகள் போன்ற உணவுப் பொருள்கள் அவசியம்.
விண்வெளி நிலையத்தில் சிறிய தோட்டங்கள் அமைப்பது உணவு உற்பத்திக்கு மட்டுமல்ல, மன நிம்மதிக்கும் உதவுகின்றன. பூமியில் இருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் போது ஒரு பச்சைத் தாவரத்தை காண்பது மனதிற்கு ஆறுதலளிக்கும்.
விண்வெளி விவசாயம் விண்வெளி வாழ்வாதாரத்திற்காகவும் அவசியம். நீண்ட பயணங்களில் குப்பிகளிலும் பொட்டலங்கலாகவும் பதம் செய்யப்பட்டுள்ள உணவை மட்டும் சார்ந்திருக்க முடியாது.
வரலாறு நமக்கு ஒரு பாடம் கற்பித்துள்ளது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நீண்ட கடல் பயணம் செய்த மாலுமிகள், காய் கனிகள் இல்லாததால் வைட்டமின் சி குறைபாடு காரணமாக நோய்களால் பாதிக்கப்பட்டனர்.
இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க விண்வெளியில் புதிய, ஊட்டச்சத்து நிறைந்த உணவை உறுதி செய்ய தாவர வளர்ப்பு எனும் உத்தியை விஞ்ஞானிகள் முயற்சி செய்கிறார்கள்.
சில தாவரங்கள் விண்வெளியில் மருந்தகங்களாகவும் பயன்படலாம். நீண்டநாள் விண்வெளி பயணத்தில் பயணிகளின் எலும்பு செறிவு குறைந்து போகும். எலும்பு தேய்மானத்தை தடுத்து நிறுத்தும் புரதம் லெட்யூஸ் தாவரத்தில் செறிவாக உள்ளது. இந்த தாவரத்தை ஏற்கனவே விண்வெளியில் வளர்த்து சோதனை செய்துள்ளார்கள்.
எதிர்காலத்தில் விண்வெளி வீரர்கள் ஊட்டம் தரும் மருந்துகளை எடுத்துச் செல்வதற்குப் பதிலாக தங்களுக்குத் தேவையான நுண் ஊட்டங்களை அங்கேயே வளர்த்துக்கொள்ள முடியும்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, விண்வெளியில் புதிய, ஊட்டச்சத்து நிறைந்த உணவை உறுதி செய்ய தாவர வளர்ப்பு எனும் யுக்தியை விஞ்ஞானிகள் முயற்சி செய்கிறார்கள். தாவரவியலின் பெரும் புதிர்
ஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் தாவரங்கள் எப்படி வளரும்?
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக விவசாயிகள் ஒரு எளிய விதியைப் பட்டறிவில் பெற்றனர்; உருண்டு புரண்டு எப்படி நிலத்தில் விழுந்தாலும் விதை முளைக்கும் போது தவறாமல் வேர்கள் கீழ்நோக்கி வளரும், தண்டுகள் மேல்நோக்கி வளரும். எப்படி இது சாத்தியமாகிறது? ஒரு தாவரம் எப்படி “மேல்” எது என்று அறிகிறது?
1880-இல் சார்லஸ் டார்வின் ஒரு விசித்திரமான விஷயத்தைக் கவனித்தார். ஒரு சரிவில் தாவரங்கள் வளரும் போது, அவற்றின் வேர்கள் நேராக கீழ்நோக்கி மட்டும் செல்லாமல் சற்று வளைந்து செல்கின்றன. இதற்கு ஈர்ப்பு விசையும், மேற்பரப்புத் தொடர்பும் காரணம் என்று அவர் கருதினார்.
இதை ‘ரூட் ஸ்கீயிங்’ (வேர் வளைதல்) என்று அழைத்தார். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக விஞ்ஞானிகள் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டனர். மாற்றி யோசிக்க வாய்ப்பு ஏதும் இருக்கவில்லை. ஆனால் 2010-ல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நடத்தப்பட்ட ஒரு சோதனை எல்லாவற்றையும் தலைகீழாக புரட்டிப்போட்டு விட்டது. .
சர்வதேச விண்வெளி நிலையத்தில் வட்டில் விதை முளைக்க தேவையான ஊட்டச்சத்து அளித்து சோதனை செய்து பார்த்தார்கள். மேல் – கீழ் என பிரித்து அறிய முடியாத விண்வெளி சூழலில், வேர்கள் தண்டுகள் எந்த திசையில் வளர்கிறது என உற்றுநோக்கி ஆய்வு செய்தனர்.
வியப்பாக ஈர்ப்பு விசை கிட்டத்தட்ட இல்லாத விண்வெளியில் கூட, வேர்கள் அதே வளைந்த வடிவத்தில் வளர்ந்தன. இதன் பொருள் ஈர்ப்பு மட்டுமே தாவர வளர்ச்சியை, குறிப்பாக வேர்கள் செல்லும் திசை, தண்டுகள் வளரும் திசையை வழிநடத்துவதில்லை என்பதாகும். அப்படியென்றால் வேறு என்ன?
தாவர வளர்ச்சியின் ரகசியங்கள்
பூமியில் உயிரினங்கள் ஈர்ப்பு விசையின் பிடியில் தோன்றி பரிணாமம் அடைந்தன. வேர்கள் தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துகளைத் தேடி கீழ்நோக்கி வளர்ந்தன. தண்டுகள் சூரிய ஒளிக்காக மேல்நோக்கி வளர்ந்தன. ஆனால் விண்வெளியில், ஈர்ப்பு விசை இல்லாத நிலையில், தாவரங்கள் வித்தியாசமாக நடந்துகொள்கின்றன.
தாவரங்கள் நுண்ணீர்ப்பு சூழலுக்கு ஏற்ப தங்கள் மரபணு செயல்பாடுகளை மாற்றுகின்றன என நுட்பமான ஆய்வுகள் சுட்டுகின்றன.
உதாரணமாக, விண்வெளியில் வேர்கள் இலைகளைப் போல பாசாங்கு செய்து நடந்துகொள்கின்றன. பொதுவாக நிலத்தடியில் பயனில்லாத ஒளி உணரும் மரபணுக்களை வேர்களில் உள்ள செல்கள் பூமியில் செயல்படுத்துவது இல்லை.
இவை இலைகளில் துடிப்பாக இயங்கும். ஆனால் விண்வெளி சூழலில் வேர்களிலும் கூட ஒளிஉணரும் செல்கள் தூண்டப்படுகின்றன. அதே நேரத்தில், விண்வெளியில் பூச்சிகள் இல்லாதபோதும் இலைகள் அதிக பூச்சி எதிர்ப்பு ரசாயனங்களை உற்பத்தி செய்கின்றன.
விண்வெளியில் வளரும் தாவரங்கள் அந்த சூழலுக்கு தேவையான தனித்துவமான பண்புகளை வளர்த்துக்கொள்ளலாம் என்பதை இந்த மாற்றங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த மாற்றங்களின் காரணமாக சில தாவரங்களை உறுதியாகவோ அல்லது அதிக ஊட்டச்சத்து கொண்டதாகவோ மாறிவிடலாம்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, விண்வெளியில் வளரும் தாவரங்கள் அந்த சூழலுக்கு தேவையான தனித்துவமான பண்புகளை வளர்த்துக்கொள்ளலாம்இந்தியாவின் விண்வெளி விவசாய சோதனைகள்
ஆக்ஸியம்-4 பயணத்தில் இந்தியாவின் இரண்டு சுவையான தாவரவியல் ஆய்வுகளை மேற்கொள்ளப் போகின்றனர்.
தார்வாடு இந்திய தொழில்நுட்ப கழகம் மற்றும் தார்வாடு விவசாய பல்கலைக்கழகம் இணைந்து “விண்வெளியில் பயிறு, வெந்தய கீரை போன்ற விதைகள் முளைத்தல்” குறித்த ஆய்வை மேற்கொள்ள உள்ளனர். விண்வெளியில் வளர்க்கப்படும் வெந்தயம் மற்றும் பயிறு முளைகளை பூமியில் வளர்க்கப்படும் முளைகளுடன் ஒப்பிட்டு, விண்வெளி முளைகள் உண்ண பாதுகாப்பானதா மற்றும் நச்சுகள் அல்லது தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் இல்லாததா என்பதை சோதனை செய்வார்கள்.
இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (IIST) மற்றும் கேரள விவசாய பல்கலைக்கழகம் இணைந்து “உணவுப் பயிர் விதைகளின் மீதான நுண்ணீர்ப்பு விசையின் தாக்கம்” எனும் ஆய்வை மேற்கொள்கிறார்கள். ஆறு வகைப் பயிர்களின் விதைகள் விண்வெளி சூழலுக்கு உட்படுத்தப்பட்டு பூமிக்கு கொண்டுவரப்படும்.
இந்த விதைகளிலிருந்து வரும் முதல் தலைமுறை பயிரை கொண்டு அடுத்த தலைமுறை விதைகளை உருவாக்குவார்கள். இதுபோல பற்பல தலைமுறைகளில் உருவாகும் விதைகளை சேகரித்து ஆய்வு செய்வார்கள். விண்வெளியால் ஏற்படும் மாற்றங்கள் விளைச்சலில் அல்லது பயிர்களின் தாவரவியல் தன்மையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றனவா என்பதை இந்த ஆய்வு கண்டறியும்.
பட மூலாதாரம், Axiom Space
படக்குறிப்பு, ஆக்ஸியம் திட்டத்தின் கீழ் விண்வெளி செல்லும் விண்வெளி வீரர்கள் மற்றும் கமெண்டர் பெக்கி விட்சன் எதிர்காலம்: செவ்வாய்க் கிரகத்தில் விவசாயம்
பூமியில் தாவரங்களைப் படிக்கும் போது, அவற்றின் உடலியலில் இயக்கம் “எப்படி உள்ளது” என்பதை மட்டுமே நாம் பார்க்கிறோம், “எப்படியெல்லாம் இருக்க முடியும்” என்பதை அல்ல.
விண்வெளியில் நுண்ணீர்ப்பு நிலையில் வளர்ச்சியையும் பூமியில் இயல்பு ஈர்ப்பு விசையில் வளர்ச்சியையும் ஒப்பிடுவதன் மூலம் அடிப்படை உயிரியல் உண்மைகளை நாம் கண்டறியலாம்.
தாவரங்கள், செல்கள் மற்றும் நுண்ணுயிரிகளில் நடத்தப்படும் இதுபோன்ற ஆய்வுகள் அவற்றின் மெய்யான உடலியல் இயக்க தத்துவத்தை நமக்கு வெளிச்சமிடுகிறது.
இத்தகைய ஆராய்ச்சி தாவர உயிரியலின் ஆழமான செயல்பாடுகள் பற்றிய முன்னெப்போதும் இல்லாத புரிதலை வழங்குகிறது. பூமியை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகள் மட்டுமே இதுபோன்ற ஆழ புரிதலை அடைய முடியாதது.
சந்திரன், செவ்வாய் போன்ற கிரகங்களில் எதிர்கால குடியிருப்புக்களை ஏற்படுத்த விண்வெளியில் தாவரங்கள் எப்படி வளரும் என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது. பூமிக்கு அப்பால் திறம்பட விவசாயம் செய்ய முடிந்தால், விண்வெளி வீரர்களுக்கு தொடர்ச்சியான, அங்கே விளைந்த உணவை அளித்து, சத்தான ஊட்டம் அளிக்கமுடியும்.
சிந்து சமவெளி விவசாயிகள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்தில் புரட்சி செய்ததைப் போல, இன்றைய விஞ்ஞானிகள் அடுத்த பெரிய விவசாயப் புரட்சிக்கு வழிவகுக்கிறார்கள் – இது கோள்களுக்கு இடையே மனிதகுல பயணத்தை மேற்கொள்ள அத்தியாவசியம்.
இன்றும் புதிதாக விவசாயத்தின் கதை இன்னும் எழுதப்படுகிறது. இதன் அடுத்த அத்தியாயம் பூமியில் அல்ல விண்வெளியில் கூட எழுதப்படலாம்.
கட்டுரையின் ஆசிரியர் த வி வெங்கடேசுவரன் இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு