‘டக்ளஸை தேவானந்தாவை தேடி சீ.வீ.கே.சிவஞானம் சென்றது நல்ல விடயம்.அதை நாம் வரவேற்கிறோம்.. இனி நாம் அனைவரும் சேர்ந்து செயற்படுவோமென கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.தனது கட்சி ஆதரவாளர்களில் உள்ளுராட்சி சபைகளிற்கு தெரிவு செய்யப்பட்டவர்களிற்கான பதவி பிரமாணத்தின் போதே கருணா தனது வரவேற்பை தெரிவித்துள்ளார்.

இதனிடையே கட்சிக்குள் இருப்பவர்களால் தொடர்ந்தும் தாக்கப்படுவதாகவும், நீதிமன்றம் சென்றாலும்  அதனை வெல்லும் வழி தனக்கு தெரியும் எனவும் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.

தமிழரசுக்கட்சியின் பெரும்பாலான செயற்பாட்டளர்கள் சீ.வீ.கே சிவஞானம் டக்ளஸை தேடிச்சென்று சந்தித்தமை தொடர்பிலேயே தமது சீற்றத்தை முன்வைத்துவருகின்றனர்.

இதனிடையே ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்குமிடையில் கொள்கை ரீதியில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்று தமிழரசுக் கட்சியும் கூட்டில் இணைய வேண்டும் என்ற அழைப்பை மீண்டும் விடுப்பதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டணியின் தலைவர்களுள் ஒருவரான செல்வம் அடைக்கலநாதன் தனது பங்காளியான குருசுவாமி சுரேந்திரன் உள்ளிட்டவர்கள் தனித்து சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை சந்தித்துள்ளனர். 

வவுனியா மாநகரசபை மற்றும் மன்னாரிலுள்ள உள்ளுராட்சி சபைகளில் தமது ஆதரவாளர்களை ஆட்சியேலேற தமிழரசு கட்சியின் ஆதரவை கோரியதாக தெரியவருகின்றது.