Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
“எங்கள் தெருவில் தினமும் சிங்கம் வரும்” – பல நூறு சிங்கங்கள் உலவும் பகுதியில் இவர்கள் எப்படி வாழ்கிறார்கள்?
பட மூலாதாரம், BIPIN TANKARIA
படக்குறிப்பு, பாரத்பாய் மற்றும் அவரது குழந்தைகள் இரும்பால் செய்யப்பட்ட கட்டிலில் உறங்குகிறார்கள்.எழுதியவர், கோபால் கட்டேஷியாபதவி, பிபிசி செய்தியாளர் 55 நிமிடங்களுக்கு முன்னர்
குஜராத் அரசு சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் உள்ள சிங்கங்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்தது. 2025 மே 10 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெற்ற கணக்கெடுப்பின் விவரங்களை அந்த மாநில அரசு சமீபத்தில் வெளியிட்டது.
அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, குஜராத்தில் சிங்கங்களின் (ஆசிய சிங்கங்கள்) எண்ணிக்கை 891 ஆக அதிகரித்துள்ளது.
2020 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 674 ஆக இருந்தது.
குஜராத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சிங்கங்களின் எண்ணிக்கை 227 (32.2 சதவீதம்) அதிகரித்துள்ளதாக மாநில அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
ஆனால் ஆச்சரியமளிக்கும் வகையில், அங்குள்ள சிங்கங்களில் பாதி, தேசிய பூங்காக்கள் மற்றும் வன சரணாலயங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் இல்லாமல், மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் தான் வாழ்கின்றன.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2020 ஆம் ஆண்டு வாக்கில், சவுராஷ்டிரா பகுதியில் 30,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சிங்கங்கள் இருந்தன, மேலும் 2025 ஆம் ஆண்டு வாக்கில் அந்தப் பரப்பளவு 35,000 சதுர கிலோமீட்டராக அதிகரித்தது.
“வீதிகளில் சுற்றித் திரியும் சிங்கங்கள்”
இந்நிலையில், அங்குள்ள கிராமங்களுக்குள் சிங்கங்கள் வருவதாக உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள்.
ஒவ்வொரு இரவும் தங்களது தெருக்களில் சிங்கங்கள் சுற்றித் திரிவதாக, அந்தப் பகுதியில் உள்ள சில கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கூறுகின்றனர்.
சிங்கங்களும் சிறுத்தைகளும் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் நுழைவதால், சவுராஷ்டிராவில் உள்ள மக்கள் தங்கள் வாழ்க்கை முறைகளையும் வாழ்விடங்களையும் மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு அருகில் சிங்கங்களும் சிறுத்தைகளும் சுற்றித் திரிவதால், மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சிங்கங்கள் பொதுவாக மனிதர்களைத் தாக்குவதில்லை என்று கூறுகின்றனர் வனத்துறை அதிகாரிகள் .
சவுராஷ்டிரா மக்கள் விலங்குகள் மீது கருணையும், சகிப்புத்தன்மையும் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
இதன் காரணமாக, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான மோதல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. இருப்பினும், சிறுத்தைகள் மக்களுக்கு தொந்தரவு தருவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
பட மூலாதாரம், BIPIN TANKARIA
படக்குறிப்பு, விவசாயி அப்பா பாய் தகடா’வெளியே கட்டி வைக்கப்பட்டுள்ள கால்நடைகளுக்கு ஆபத்து’
அம்ரேலியின் ராஜுலா தாலுகாவில் உள்ள ததர்வாடி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஜபோதர் கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளாக சிங்கங்கள் சுற்றித் திரிகின்றன என்று அக்கிராமத்தைச் சேர்ந்த 75 வயது விவசாயி அபா பாய் தகடா கூறுகிறார்.
“நான் இளைஞனாக இருந்தபோது, அம்ரேலியின் தாரி தாலுகாவின் கிர் எல்லையில் உள்ள காதியா கிராமத்தில் அமைந்துள்ள எங்கள் உறவினர்களின் வீட்டுக்குச் செல்வோம். அந்த காலகட்டத்தில், அங்குள்ள மக்கள் எங்களுக்கு சிங்கங்களைக் காண்பிப்பார்கள். அப்போது எங்கள் கிராமத்தில் நாங்கள் சிங்கத்தை ஒருபோதும் பார்த்ததில்லை. இரவும் பகலும் வயல்களில் வேலை செய்த நாங்கள், இரவில் வயல்களிலேயே தூங்கினோம்,” என்று அவர் பிபிசியிடம் நினைவுகூர்ந்தார்.
“ஆனால், சிங்கங்களும் சிறுத்தைகளும் எங்கள் கிராமத்திற்கு 15 வருடங்களாக வருகின்றன. இப்போது நாங்கள் வயல்வெளிகளில் வெட்டவெளியில் தூங்க முடியாது. சிறுத்தை எப்போது வந்து தாக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. நாங்கள் கால்நடைகளை வெளியே கட்டி வைப்பதில்லை. இப்போது அவற்றுக்கென பிரத்யேகமாக ஒரு கொட்டகையைக் கட்டியுள்ளோம்,” என்கிறார் தகடா.
பட மூலாதாரம், ANI/Getty Images/Bipin Tankariya
படக்குறிப்பு, “இப்போது நாங்கள் வயல்வெளிகளில் வெளியே தூங்க முடியாது. சிறுத்தை எப்போது வந்து தாக்கும் என்று எங்களுக்குத் தெரியாது.”‘குழந்தைகள் கூண்டுகளில் தூங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது’
ஆறு மாதங்களுக்கு முன்பு ஜாஃப்ராபாத்தின் பகோடர் கிராமத்தில் மகன் பிரகாஷைப் பெற்றெடுக்கும் போது பாரத்பாயின் மனைவி இறந்து விட்டார்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு பாரத்பாயின் தந்தை கீமாபாயும் இறந்து விட்டார்.
புதிதாகப் பிறந்த மகன், ஐந்து மகள்கள் மற்றும் தாயாரைப் பராமரிக்கும் பொறுப்பு பாரத்பாயிடம் சென்றது.
“என் மூத்த மகளுக்கு பத்து வயது. என் அம்மாவுக்கு 70 வயது. இரவில் கூட வயலில் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. நான் வேலை செய்யும் வயலுக்கு அருகில் வீடுகள் இல்லை. நாங்கள் வசிக்கும் வீடு ஒரு குடிசை போன்றது. அதன் இருபுறமும் காலியாக உள்ளது,” என்று பாரத்பாய் பிபிசியிடம் தெரிவித்தார்.
“என் மனைவி இறந்த பிறகு ஒரு நாள், எங்கள் வீட்டின் அருகே ஒரு சிறுத்தையைப் பார்த்தேன். அப்போதிருந்து, என் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து நான் மிகவும் கவலைபடத்தொடங்கினேன். 10,000 ரூபாய் செலவில் வீட்டிற்குள் ஒரு பெரிய இரும்புக் கூண்டைக் கட்டினேன். இரவில் கூட வேலைக்குச் செல்ல வேண்டியிருப்பதால், குழந்தைகளை அதற்குள் தூங்க வைத்தேன்,” என்கிறார் பாரத்பாய்.
பட மூலாதாரம், BIPIN TANKARIA
படக்குறிப்பு, சேதன் பராத்சிங்கங்களும் சிறுத்தைகளும் பயிர்களை சேதப்படுத்தலாம் என்ற அச்சம்
கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள கோடினார் தாலுகாவின் அலிதார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சேதன் பராத், வனத்துறை வழங்கிய 15,000 ரூபாய் மானியத்துடன் தனது வயலில் இரும்பு வேலி அமைத்தார்.
பத்து அடி உயரமுள்ள கூண்டு போன்ற அமைப்பு நான்கு இரும்பு குழாய்களால் கட்டப்பட்டது. அதற்கு எல்லா பக்கங்களிலும் இரும்பு கிரில்களும் கூரையும் இருந்தன.
“எங்கள் பகுதியில் காட்டுப்பன்றிகளும் மான்களும் பயிர்களைத் தின்றுவிடுமோ என்ற அச்சம் உள்ளது. விலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க இரவு முழுவதும் வயல்களில் காவல் காத்து வருகிறோம். மறுபுறம், எங்கள் வயல்களில் சிங்கங்கள் மற்றும் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சிறுத்தைகள் குறித்த பயம் அதிகரித்துள்ளது. ஏனெனில் கரும்புத் தோட்டங்கள் சிறுத்தைகள் ஒளிந்து கொள்ள வசதியாக இருக்கும். இந்தத் தோட்டங்களில் அவற்றுக்குத் தேவையான தண்ணீர் மற்றும் குளிர்ந்த காற்று கிடைக்கிறது,” என்று விளக்குகிறார் சேதன்.
“பொதுவாக சிங்கங்கள் மனிதர்களைத் தாக்குவதில்லை. ஆனால் சிறுத்தை எப்போது தாக்கும் என்று உங்களுக்குத் தெரியாது. அரசாங்கம் மேய்ச்சல் நிலங்களை அமைக்க உதவிய பிறகு நாங்கள் கொஞ்சம் பாதுகாப்பாக உணர்கிறோம்,” என்றும் சேதன் கூறினார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.தொடர்ந்து பேசிய சேதன், “சில நேரங்களில் சிங்கங்கள் எங்கள் பண்ணையைக் கடந்து செல்லும்போது, உள்ளே கட்டப்பட்டிருக்கும் பசுக்களுடன் சேர்ந்து, எங்கள் இதயங்களும் வேகமாகத் துடிக்கின்றன. ஆனால் எங்கள் பண்ணையில் சிங்கங்கள் இருப்பது ஒருவிதத்தில் நன்மை பயக்கின்றன. அவை சுற்றித் திரிந்தால், காட்டுப்பன்றிகள் பண்ணைக்குள் வராது,” என்றார்.
‘எங்கள் கிராமத்தில் தினமும் ஒரு சிங்கத்தைப் பார்க்கிறோம்’
பட மூலாதாரம், BIPIN TANKARIA
மே 21 அன்று ரஜூலா தாலுகாவில் உள்ள பிபாவாவ் துறைமுகத்திற்கு அருகில் உள்ள ராம்பாரா-2 கிராமத்திற்கு பிபிசி சென்றது.
அந்த கிராமத்தில் உள்ள பாகாபாய் வாக் என்ற விவசாயிக்கு சொந்தமான பசுவை சிங்கங்கள் தாக்கின. தாக்குதலில் அந்த பசு பலத்த காயமடைந்தது.
“நாங்கள் பசுவை கால்நடை கொட்டகையில் வைத்திருந்தோம். அது தண்ணீர் குடிக்கச் சென்றபோது, ஐந்து முதல் ஆறு சிங்கங்கள் அதைத் தாக்கின. அங்கிருந்தவர்கள் சத்தமாகக் கத்தியதும், அவை ஓடிவிட்டன. பின்னர் நாங்கள் பசுவை மீட்டோம். அதன் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அதனால் நிற்க முடியவில்லை,” என்று பாகாபாய் கூறினார்.
ராம்பாரா கிராமத்தைச் சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் நிலங்களில் மரங்களும் புதர்களும் உள்ளன.
சாலையில் நடந்து செல்லும் மக்களும் மான்களை பார்க்கலாம். அவற்றை சிங்கங்கள் வேட்டையாடுகின்றன.
“எங்கள் கிராமத்தில் உள்ள தெருக்களுக்கு தினமும் சிங்கங்கள் வருகின்றன. நள்ளிரவில் அவற்றின் கர்ஜனை கேட்கிறது. எங்கள் வயல்களில் வேலை செய்ய எந்தத் தொழிலாளிகளும் வருவதில்லை.
பெண்கள் தனியாக வயல்களுக்குச் செல்வதில்லை. வயல்களுக்குச் செல்லும்போது சிங்கங்கள் தங்களைத் தாக்கும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள்,” என்கிறார் 55 வயதான விவசாயி லக்ஷ்மன்பாய் வாக்.
மனித-விலங்கு மோதல் பற்றி நிபுணர்கள் கூறுவது என்ன ?
பட மூலாதாரம், BIPIN TANKARIA
படக்குறிப்பு, பூஷன் பாண்டியாபுகழ்பெற்ற வனவிலங்கு புகைப்படக் கலைஞரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான பூஷன் பாண்ட்யா கூறுகையில், சிங்கங்கள் ஒரு புதிய பகுதிக்கு வரும்போது, அவை மனிதர்களையும் ஏற்கனவே அங்கு உள்ள சிங்கங்களையும் கண்டு பயப்படுகின்றன என்றார்.
“சிங்கங்களின் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்குச் சென்றபோது எல்லோரும் ஆரம்பத்தில் பயந்தார்கள். சிங்கங்கள் குழந்தைகளைத் தாக்கும் என்று நினைத்தார்கள். ஆனால் சிங்கங்களும் பயப்படும் என்பது அவர்களுக்குத் தெரியாது. சிங்கங்கள் மிகப்பெரிய மாமிச உண்ணிகள் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். அவை தனக்கென ஒரு பிரதேசத்தை வகுத்து வாழும் விலங்குகள். அவை தங்கள் பிரதேசத்தில் மற்றொரு சிங்கத்தை ஏற்றுக்கொள்வதில்லை,” என்று விளக்குகிறார் பூஷன் பாண்ட்யா .
“சிங்கங்களின் நடத்தையை மக்கள் கொஞ்சம் புரிந்து கொண்டால், அமைதியாக வாழ்வது சாத்தியம். இது பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. சிங்கங்கள் மனிதர்கள் வாழும் பகுதிக்குள் வந்தால், அவை தங்கள் நடத்தையை மாற்றிக்கொள்கின்றன. மனிதர்களும் அவ்வாறே நடந்து கொள்கிறார்கள்,” என்று அவர் தெரிவித்தார்.
“கிர் சிங்கங்களின் முக்கிய உணவு நீல்காய்(மான்), சிட்டல் (புள்ளி மான்) மற்றும் காட்டுப்பன்றி. இந்த விலங்குகள் அனைத்தும் விவசாயிகளின் பயிர்களை அழிக்கின்றன. சிங்கங்கள் இல்லையென்றால், இந்த விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து விவசாயிகளுக்கு ஒரு பெரிய பிரச்னையாக மாறும்,” என்றுன் பூஷன் குறிப்பிட்டார்.
அரசாங்கம் என்ன சொல்கிறது?
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, குஜராத் அரசாங்கத்தின் தலைமை வனப் பாதுகாவலர் ஜெய்பால் சிங்”சிங்கங்களின் எண்ணிக்கை அதிகமானாலும், அதனால் மனிதர்கள் மற்றும் வனவிலங்குகளுக்கு இடையிலான மோதல்கள் அதிகரிக்கும் என நான் நினைக்கவில்லை” என்று குஜராத் அரசின் தலைமை வனப் பாதுகாவலர் ஜெய்பால் சிங் கூறினார்.
மக்கள் சிங்கங்களை அழைப்பது போல் தெரிகிறது என்கிறார் ஜெய்பால் சிங்.
“ஒரு பகுதியில் வாழத் தொடங்கிய சிங்கங்கள், ஏதேனும் காரணத்தால் மற்றொரு பகுதிக்குச் சென்றால், அவை எப்போது திரும்பி வரும் என்று உள்ளூர் விவசாயிகள் எங்கள் ஊழியர்களிடம் கேட்பது வழக்கமாக உள்ளது. ஏனென்றால், அவர்களுடைய பயிர்களை அழிக்கும் விலங்குகளிடமிருந்து சிங்கங்கள் அவர்களுக்குப் பாதுகாப்பை வழங்குகின்றன,” என்று அவர் விளக்கினார்.
சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மனிதர்கள் மற்றும் வனவிலங்குகளுக்கு இடையிலான மோதல்களை அதிகரிக்கும் என்று குறித்து அவர்கள் கவலைப்படவில்லை என்கிறார் ஜெய்பால் சிங்.
ஆனால், இந்த பகுதிகளில் சிறுத்தைகள் ஒரு பிரச்னையாக உள்ளன என்று அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டில் மனிதர்கள் மீதான 20 வனவிலங்கு தாக்குதல்களில் 19 சிறுத்தைகளால் ஏற்பட்டவை என்று குறிப்பிட்ட அவர்,
கிரேட்டர் கிர் பகுதியில் இந்த மோதல்களைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு