Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
காதலிக்கும் போது வயிற்றில் பட்டாம்புச்சி பறப்பது ஏன்? – மூளைக்கும் வயிற்றுக்கும் உள்ள தொடர்பு
பட மூலாதாரம், Getty Images
எழுதியவர், ஆண்ட்ரே பியெர்நாத் பதவி, பிபிசி உலக சேவை 56 நிமிடங்களுக்கு முன்னர்
கிட்டத்தட்ட 10 கோடி நரம்பு செல்களுக்கும், நமது நலனுக்கு முக்கியமான 95% செரொடோனின் உற்பத்திக்கும் வீடாக இருக்கிறது நமது குடல். உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்துக்கு குடலில் குடியிருக்கும் கோடிக்கணக்கான பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை மற்றும் இன்னும் பல நுண்ணுயிர்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கோடிட்டுக் காட்டுகிறது.
இது நமது குடலும், மூளையும் எப்படி ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை எனக் காட்டுகிறது. சில சமயங்களில் நமது வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது, ஒரு முக்கியமான சந்திப்புக்கு முன்னால் தலைசுற்றல், வாந்தி, மயக்கம் வருவது போல இருப்பது, மலச்சிக்கல் இருக்கும்போது எரிச்சலோடு இருப்பது எல்லாம் இதற்கான உதாரணங்கள்.
ஆனால் இந்த தொடர்பு எப்படி உருவாகிறது? இன்னும் கொஞ்சம் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இந்தத் தொடர்பை நம்மால் மேம்படுத்த முடியுமா?
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.குடல் – மூளை தொடர்பு
இந்த இரண்டு உறுப்புகளும் மூன்று வெவ்வேறு வழிகளில் இணைக்கப்பட்டுள்ளன என்று இரைப்பை குடல் நிபுணரும் Bowel Research UK இன் தூதருமான டாக்டர் சாலிஹா மஹ்மூத் அகமது விளக்குகிறார்.
முதலாவது வேகஸ் நரம்பு – மூளையை இதயம், குடல் போன்ற பல முக்கிய உறுப்புகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள வைக்கும் ஒரு முக்கியமான நரம்பியல் அமைப்பு.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இரண்டாவது மூளையும், குடலும் ஹார்மோன்கள் மூலமாகத் தொடர்பு கொள்ளும். க்ரெலின், ஜிஎல்பி-1 போன்ற ஹார்மோன்கள் சுரப்பிகளால் சுரக்கப்பட்டு உடல் முழுவதும் சமிக்ஞைகளை அனுப்பும்.
மூன்றாவது நமது நோய் எதிர்ப்பு சக்தி.
“இந்த நோய் எதிர்ப்பு செல்கள் நமது ரத்தத்திலோ அல்லது நிணநீர் கணுக்களிலோ மட்டுமே இருப்பதாக நிறைய பேர் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இவற்றில் பெரும்பகுதி குடலில் உள்ளன. உடலுக்கும் மூளைக்கும் இடையே மத்தியஸ்தராகவும் செயல்படுகின்றன,” என்று மருத்துவர் சாலிஹா மஹ்மூத் அகமது கூறுகிறார்.
அமெரிக்காவின் மாயோ மருத்துவமனையில் இரைப்பை குடல் நிபுணராக இருக்கும் மருத்துவர் பங்கஜ் ஜே பஸ்ரிசா, இந்த சிறப்பு தொடர்புக்குக் காரணம் மூளை செயல்பட அதிக ஆற்றல் தேவை என்பதும், குடல் ஒரு ஆற்றல் கிடங்காக இருப்பதும் ஒரு காரணம் என்கிறார்.
நம் உடலின் எடையில் மூளை வெறும் 2 % தான். ஆனால் அதற்கு 20% உடலின் ஆற்றல் தேவைப்படுகிறது. குடலின் வேலையோ உணவை சின்னச் சின்ன மூலக்கூறுகளாக்கி உறிஞ்சி ஒட்டுமொத்த உடலுக்கும் தேவையான எரிபொருளை வழங்குவது.
ஆனால் இது இருபக்க உறவுதான். அதாவது மூளை மட்டும் குடலின் மீது ஆதிக்கம் செலுத்துவதில்லை. குடலும் மூளையின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது.
நமது தினசரி வாழ்வில் இருந்தே இதற்கு உதாரணங்களை எடுக்கலாம்.
ஒரு பயங்கரமான அல்லது பயமுறுத்தும் சூழலில் இருந்தாலோ, அல்லது வேலையில் ஒரு மீட்டிங் போன்ற முக்கியமான நிகழ்வுகள் இருந்தாலோ முதல் உடலியல் எதிர்வினைகள் வயிற்றில்தான் நிகழும்.
நமக்கு வாந்தி வரலாம். வயிறு வலிக்கலாம். அல்லது வயிற்றுப்போக்கும் ஏற்படலாம். அதோடு காதலின் போது பட்டாம்பூச்சிகள் வயிற்றில் பறப்பது, அல்லது நமக்கு மிகவும் பிடித்தவர்கள் அருகே இருக்கும்போது அதிக உற்சாகமாக இருப்பது போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
அதே நேரம் நமக்கு மலச்சிக்கல் இருந்தாலோ, நாள்கணக்கில் கழிவறைக்குச் செல்லாமல் இருந்தாலோ அது எரிச்சல் அல்லது மன அழுத்தத்தால் ஏற்படலாம்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்தியாவில் உள்ள பல்பொருள் அங்காடியில் வைக்கப்பட்டுள்ள ப்ரோபயோட்டிக் பானங்கள் வயிற்றுக்குள் ஒரு முழு உலகம்
நமது குடலில் பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சை, புரோட்டோசோவா மற்றும் பிற நுண்ணியிர்கள் உள்ளிட்டவற்றில் இருந்து 10 முதல் 100 டிரில்லியன் வரையிலான நுண்ணுயிர் செல்கள் உள்ளன.
ஒரு மனிதனின் உடலில் இருக்கும் மனித செல்களை விட இது பல மடங்கு அதிகம்.
இந்த செழிப்பான சமூகம் நம்முடன் இணைந்தே வாழ்ந்து வருவதாக நிபுணர்கள் விளக்குகிறார்கள். அவை நாம் உண்னும் உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களைப் பெறுகின்றன.
அதே நேரம் நமக்கு உணவு செரிக்கவும், நம் உடலால் உடைக்க முடியாத சில உணவுகளை உடைக்கவும் உதவி செய்கின்றன. கடந்த இருபது ஆண்டுகளாக இந்த நுண்ணுயிர்கள் பற்றியும், நமது ஆரோக்கியத்தில் அவற்றின் பங்கு பற்றியுமான அறிவு வளர்ந்திருக்கிறது,
நமது குடலில் இருக்கும் நுண்ணுயிர்களை அளக்கவும், சில நோய்களை உருவாக்குவதில் அவற்றின் பங்கு பற்றியும் புரிந்து கொள்ள பல புதிய பரிசோதனைகளும், கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்கிறார் அகமது.
“நுண்ணுயிர்களின் சமநிலையில் மாற்றம் ஏற்படுவதை நாங்கள் டிஸ்பயோசிஸ் என்கிறோம். அது கிட்டத்தட்ட, மனிதர்களுக்கு வரும் எல்லா வகை நோய்களுடனும் தொடர்புள்ளது,” என்கிறார் டாக்டர் பஸ்ரிசா.
2011 ஆம் ஆண்டில், டாக்டர் பாஸ்ரிச்சா எலிகள் மீது ஒரு முன்னோடி ஆய்வை நடத்தினார். அவற்றின் வாழ்நாளின் ஆரம்பத்தில் வயிற்றில் எரிச்சல் ஏற்பட்டால் அது அந்த எலிகளிடம், ‘வாழ்நாள் முழுவதும் மன அழுத்தம், பதற்றம் மிகுந்த குணநலன்களை’ ஏற்படுத்தும் என்கிறது அந்த ஆய்வு.
உடல் பருமன், இதய நோய்கள், ஏன் புற்றுநோய் கூட இப்படி குடல் நுண்ணுயிர்களின் சமநிலையின்மையால் – டிஸ்பயாசிஸ்ஸால் ஏற்படுகின்றன என்று பிற ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளன.
ஆனால் இவை இரண்டுக்கும் காரணம் – அதற்கான எதிர்வினை என்றோ, பல நோய்களுக்கு இந்த நுண்ணுயிர்களில் ஏற்பட்ட பிரச்னைதான் காரணம் என்றோ குறிப்பிடுவதற்கான ஆதாரங்களோ இல்லை என்று குறிப்பிடுகிறார் டாக்டர் பஸ்ரிசா.
“விலங்குகள் மீதான ஆய்வுகள் மற்றும் மனிதர்களுடன் நடத்தப்பட்ட சில ஆராய்ச்சிகள் இரண்டிலும், குடலில் தொடங்கும் பிரச்னைகள், பின்னர் பதற்றம் அல்லது மனச்சோர்வை ஏற்படுத்தக்கூடும் என்பதற்கு சில சான்றுகள் உள்ளன. ஆனால் இந்த நோய்கள் குடலால் ஏற்படுகின்றனவா? இது பற்றி இன்னும் எங்களுக்கு தெரியவில்லை,” என்று அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, குறிப்பிட்ட சில பாக்டீரியாக்களை கொண்டுள்ள உணவுகள் நம்முடைய செரிமான மண்டலத்துக்கு நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர்நல்ல நுண்ணுயிர்களை வளர்ப்பதற்கான செய்முறை
நுண்ணுயிர்க் குடும்பம், குடல்-மூளைத் தொடர்பு போன்றவற்றைப் பற்றிய சமீபத்திய கண்டுபிடிப்புகளை வைத்துப் பார்க்கும்போது, நமது உடலுக்குள் இருக்கும் இந்த நுண்ணுயிர்களுக்கு இடையே சரியான சமநிலையை உருவாக்க முடியுமா?
ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறு விதமான பாக்டீரியா, வைரஸ் மற்றும் மற்ற நுண்ணுயிர்களின் கலவை இருப்பதால் அது சிரமம் என்று விளக்குகிறார் டாக்டர் அகமது.
“ஒவ்வொருவரின் நுண்ணுயிர்க் குடும்பமும் வித்யாசமானது. ஒருவர், வேறு எந்த மனிதருடனும் ஒரே தொடக்கப் புள்ளியில் இருப்பது போல் இல்லை,” என்று அவர் கூறுகிறார்.
ஆனால் நமது குடலின் ஆரோக்கியத்துக்கு சில விஷயங்கள் முக்கியம் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். பல விஷயங்களை உள்ளடக்கிய சமச்சீர் உணவை எடுத்துக் கொள்வது ஒரு நல்ல தொடக்கமாகும்.
தயிர், கேஃபிர், கொம்புச்சா போன்ற நமது குடலுக்கும், செரிமான உறுப்புகளுக்கும் நலன் விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொண்ட ப்ரோபயோடிக்குகளையோ, இந்த நுண்ணுயிர்களுக்கு உணவும், ஊட்டச்சத்தும் தரும் நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள் போன்ற ப்ரீபயாடிக்குகளையோ உண்ணலாம்.
“உணவில் பன்முகத்தன்மை அவசியம். அதுவும் தாவர உணவுகளைச் சாப்பிடும்போது,” என்கிறார் டாக்டர் அகமது.
ஒவ்வொரு வேளை உணவிலும் எவ்வளவு பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள், கொட்டைகள், விதைகள், மற்றும் மசாலாப் பொருட்களின் அளவு பற்றி அனைவரும் சிந்திக்க வேண்டும் என்று இரைப்பை குடல் நிபுணர் பரிந்துரைக்கிறார்.
“நான் சைவ உணவு மட்டுமே உண்பவரல்ல. ஆனால் நம் உணவில் தாவர வகைகள் அதிகம் இருக்க வேண்டும் என்று நம்புகிறேன்,” என்கிறார் அவர்.
ஒரு வாரத்தில் 30க்கும் மேற்பட்ட வெவ்வேறு தாவரங்களை உண்பவர்களது வயிற்றில் நல்ல ஆரோக்கியமான நுண்ணுயிர்கள் இருப்பதை இவர் குறிப்பிடுகிறார்.
ஆனால் உணவால் நமது உணர்வுகளில் மாற்றங்கள் ஏற்படுத்தவோ, மன அழுத்தம் போன்ற நோய்களை சரிசெய்யவோ முடியுமா?
யுகேவின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் இந்தக் கேள்விக்கு விடை காண ஒரு பரிசோதனையைச் செய்தது. அதன் நிபுணர்கள் மன அழுத்த நோயுடன் வாழ்ந்து வரும் 71 தன்னார்வலர்களை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து இந்த ஆய்வில் ஈடுபடுத்தினர். முதல் குழுவுக்கு 4 வாரங்களுக்கு ப்ரோபயோடிக்குகள் கொடுக்கப்பட்டன. அடுத்த குழுவுக்கு ப்ளாசிபோக்கள் (அதைப் போன்ற போலி உணவு) கொடுக்கப்பட்டன.
அந்தப் பரிசோதனை எந்த ஒழுங்கு வகைமையிலும் ஆட்களை வகைப்படுத்தாமல், ‘டபுள் பிளைண்ட்’ முறையில் செய்யப்பட்டது. அதாவது கலந்து கொண்டவர்களுக்கோ அல்லது விஞ்ஞானிகளுக்கோ யார் உண்மையான உணவை எடுத்தார், யார் போலியை எடுத்தார் என்பது தெரியாது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற பலவித உணவுகள் நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர்இந்தப் பரிசோதனையின் போது நிபுணர்கள், மனநிலை, பதற்றம், தூக்கம், எச்சிலில் உள்ள கார்ட்டிசாலின் அளவு (கார்ட்டிசால் – மன அழுத்தத்தைக் குறிக்கும் ஒரு பொருள்) ஆகிய பல விஷயங்களை அளவிட்டனர்.
இந்த ஆய்வின் தலைவரும், மருத்துவ உளவியலாளருமான பேராசிரியர் ரீட்டா பாயோ, சராசரி மக்களை விட மன அழுத்தம் உடையவர்கள் எதிர்மறை உணர்ச்சிகளின் மீதோ, முகத்தில் காட்டப்படும் உணர்ச்சிகளின் மீதோ அதிக கவனம் செலுத்துவார்கள் என்று கூறுகிறார்.
“மூளை உணர்வு சார்ந்த தகவல்களை செயல்முறைப்படுத்துவதை ப்ரோபயோடிக்குகள் பயன்படுத்துவது குறுக்கிடுகிறதா என்பதைப் புரிந்து கொள்ள விரும்பினோம்,” என்கிறார் தற்போது போர்ச்சுகலில் லிஸ்பன் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் பள்ளியில் துணைப் பேராசிரியராக இருக்கும் பாயோ.
“முக உணர்ச்சிகள் மற்றும் மற்ற உணர்வுகள் தொடர்பான விஷயங்களில் எதிர்மறை தூண்டுதலைத் தேடுவது, ப்ரோபயாடிக்குகள் கொடுக்கப்பட்ட குழுவிடம் குறைந்ததைக் கண்டுபிடித்தோம்”.
மன அழுத்தம் தொடர்பான பல அறிகுறிகளை குறைப்பதில் ப்ரோபயோடிக்குகள் உதவி புரிகின்றன என்று சொல்லும் பேராசிரியர் பாயோ அதற்கு இன்னும் அதிக ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்றும் சொல்கிறார்.
“இன்னும் அதிக தரவுகள் தேவைப்படுகின்றன. ஆனால் ப்ரோபயோடிக்குகள் நல்ல சகிப்புத்தன்மையுடன் கூடிய நேர்மறை விளைவுகளையும், குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்துவதற்கான அறிகுறியைக் கொண்டுள்ளன,” என்று முடிக்கிறார் அவர்.
ஆனால் நுண்ணுயிர்களின் கலவையை மாற்றுவதன் மூலம் ஏதேனும் விளைவுகளோ, மாற்றங்களோ ஏற்பட பல தசாப்தங்கள் பிடிக்கும் என்கிறார் டாக்டர் பஸ்ரிசா.
“ஆனால் சில பழக்கங்களைத் தொடர்வது பலருக்கு முடியாத காரியம் என்று நமக்குத் தெரியும். இல்லையென்றால் நம்மிடையே உடல்பருமன் பல கோடி பேரை பாதிக்கும் விஷயமாக இருக்காது,” என்கிறார் அவர்.
“ஆனால் இந்தப் புதிரைத் தீர்க்க அத்தியாவசியமான பகுதிகளை நாங்கள் சேகரித்து வருகிறோம்,” என்கிறார் டாக்டர் பாஸ்ரிச்சா.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.