Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
2017ல் அன்றைய முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆளுனர் கூரேயிடம் கையளித்த அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், அது அவ்விடத்தில் வைத்து திடுதிப்பென சுமந்திரனின் ஆதரவு உறுப்பினர்களால் தமது கைக்குள் திணிக்கப்பட்டதாக கூறியிருந்தார். இப்போது, ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை கதிரைப் பிச்சை கேட்டு தன்னந்தனியாகச் சென்று சந்திப்பதற்கு உருவான நிலைமையும் முன்னரைப் போன்று திடுதிப்பென திணிக்கப்பட்டதா?
செம்மணி புதைகுழிகளைத் தோண்டத் தோண்ட வெளிவரும் மனித எலும்புக்கூடுகளும், உள்ளூராட்சிச் சபைகளின் கதிரைகளைக் கைப்பற்ற தன்னிலை மறந்து தன்நாமம் கெட்டு மாற்றான் வீட்டுப் படியேறும் பெரும் ஆட்கள் பற்றிய காட்சிகளும் கடந்த சில நாட்களாக பரபரப்பையும், அதனிலும் மேலாக சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளன.
ஊடகங்களிலும் இணையத் தளங்களிலும் பார்ப்பவைகளையும் கேட்பவைகளையும் பற்றிய சமாசாரங்களைவிட, காணாமற் போனவர்கள் பற்றிய செம்மணி விவகாரமே முதலில் நோக்கப்பட வேண்டியது.
செம்மணி என்றதும் முதலில் நினைவுக்கு வருவது அங்குள்ள பெருமயானம். அகண்ட வயல்வெளியின் நடுவே, பல மைல் தூரத்திலிருந்தும் பார்க்கக்கூடியதாக இது அமைந்துள்ளது. நான் யாழ்ப்பாணவாசியாகவிருந்த காலத்தில் அநேகமாக வாரத்தில் பல தடவை இந்த மயானத்தில் சுவாலை விட்டெரியும் அக்கினியைப் பார்த்திருக்கிறேன். எனது உறவினர்கள், தெரிந்தவர்கள் என்று பல நூற்றுக்கணக்கானோரின் இறுதிக் கிரியைகளை அடுத்து அவர்களின் உடல்கள் எரியூட்டப்பட்ட பொதுமயானம் இது.
ஆனால் இன்று, எரியூட்டப்படாது புதைக்கப்பட்ட எமது மக்களின் உடல்கள் தினம் தினம் இங்கிருந்து மீட்கப்படுகின்றன. அரச பயங்கரவாதத்தின் கொடுங்கரங்களாக இயங்கிய ராணுவ முகாமொன்று நீண்டகாலமாக சோதனைச் சாவடி என்ற பெயரில் இங்கிருந்தது. தர்மிஷ்டர் என்ற பெயரைக் கொண்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் இது நிறுவப்பட்டது.
1996ம் ஆண்டு செப்டம்பர் 7ம் திகதி இவ்வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் மாணவி கிரிஷாந்தி குமாரசாமி கைதடி ராணுவ முகாமுக்குள் கொண்டு செல்லப்பட்டு, அவர்களின் பசிக்கு இரையாக்கப்பட்டு கொல்லப்பட்ட வரலாறு சர்வதேச மன்னிப்புச் சபையின் பதிவில் உள்ளது. இக்கொலை இடம்பெற்ற வேளையில் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாகவிருந்தார். இந்தப் படுகொலையை விசாரிக்க மறுத்ததால் இவரை ”செம்மணி புகழ் அம்மணி” என ஊடகங்களும் பொதுமக்களும் அழைத்தனர்.
இதே செம்மணி இப்போது மீண்டும் கிளறப்படுகிறது. இதனை எழுதும்வரை இங்கிருந்து பதினெட்டு உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றுள் மூன்று கைக்குழந்தைகளுடையவை என்று சந்தேகிக்கப்படுகிறது. இவைகள் எலும்புக்கூடுகளாக ஆடைகளோ, அணிகலன்களோ இன்றி காணப்படுகின்றன. பல எலும்புக்கூடுகள் இணைந்த நிலையில் காணப்படுவதால் ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் இவை புதைக்கப்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது.
இந்த விவகார வழக்கின் சட்ட வைத்திய அதிகாரியும், தடயவியல் பேராசிரியரும் சமர்ப்பித்த விண்ணப்பத்தின் பேரில் இவ்விடத்தை மனிதப் புதைகுழியாக பிரகடனம் செய்துள்ள யாழ்ப்பாண நீதிமன்றம், நாற்பத்தைந்து நாட்களுக்கு அகழ்வைத் தொடர கட்டளை வழங்கியுள்ளது.
சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரம், குறிப்பிட்ட இடத்தில் 1.6 மீற்றர் அளவிலான குழிகளில் மனித என்பு, எச்சங்கள் காணப்படுகிறது. குழப்பமான சூழலில் முறையற்ற விதத்தில் இவை புதைக்கப்பட்டுள்ளன. இது ஒரு ரகசிய புதைகுழியாக இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.
ஏறத்தாள அடுத்த மாதம் மூன்றாம் வாரம்வரை அகழ்வு இடம்பெறலாம். இன்னும் எத்தனை புதைகுழிகள் காணப்படுமோ தெரியாது. படையினரால் கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் இந்தப் புதைகுழிக்குள் இடப்பட்டார்கள் என்பதும் தெரியாது. வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இவ்விடத்தில் குழுமி சோகத்துடன் நடப்பவற்றை அவதானித்து வருகின்றனர்.
ஆனால், தமிழ் அரசியல்வாதிகளையோ, உள்ளூராட்சிச் சபைகளுக்குத் தெரிவானவர்களையோ இங்கு காணவில்லை. அவர்களுக்கு இப்போது நேரமில்லை. எலும்புக்கூடுகளுக்கும் வாக்குரிமை இருந்தால் தவறாமல் தலைகாட்டியிருப்பார்கள்.
1971, 1987-1989 காலப்பகுதிகளில் தங்கள் தோழர்களான பல்லாயிரம் ஜே.வி.பி.யினரை சிறீமாவோ, ஜே.ஆர்.ஜெயவர்த்தன, பிரேமதாச ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் பறிகொடுத்து, அவர்களின் உடலங்களை வீதிகளிலும், வாவிகளிலும் அடையாளம் காணாது கண்டெடுத்த இன்றைய அநுர குமரவின் தேசிய மக்கள் சக்தியினர், செம்மணியில் மீட்கப்படும் எலும்புக்கூடுகளின் சரித்திரத்தை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்வார்களென நம்பலாம்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்காது விட்டது மட்டும் போதாது. படையினரின் கைகளிலுள்ள துப்பாக்கிகள் ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது என்று சொல்வதுடன் மட்டும் நின்றுவிடக்கூடாது. தமிழர் தாயகத்தில் அரச பயங்கரவாதத்தின் விளைச்சல் என்னவென்பதை அனுபவ ரீதியாக உணர்ந்து அதற்குரிய நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தாமதமாகும் நீதி, மறுக்கப்படும் நீதி என்பதை ஆட்சிக் கதிiயில் இருப்பவர்கள் நினைவிற் கொள்ள வேண்டும்.
செம்மணி விவகாரம் ஒருபுறத்தே நீட்சி பெற்றுக் கொண்டிருக்க, உள்;ராட்சிச் சபைகளின் கதிரைகளை கைப்பற்றும் போட்டியும் நம்ப முடியாதளவுக்கு நீண்டு கொண்டிருக்கிறது. தினம் தினம் வெவ்வேறு காட்சிகள் காணப்படுகின்றன. தமிழ்த் தேசியவாத கட்சிகள் என்று தம்மை அழைப்பதில் பெருமைப்படும் தமிழரசு, தமிழ்த் தேசிய பேரவை (தமிழ் காங்கிரஸ்), ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்பவை ஒன்றுக்கொன்று ஒளித்து விளையாடுவதுபோல பேரப் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளன. இதுபற்றி எதுவுமே புரியாத அப்பாவி மக்கள் விழிபிதுங்க நடப்பவைகளைப் பார்த்து அதிர்ந்துள்ளனர்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவு தங்களுக்கே கிடைக்குமென நம்பியிருந்த தமிழரசுக் கட்சியின் பதில் தலைமை, இயற்கையின் நியதியில் நம்பிக்கை இழந்து புதிய உறவுகளைத் தேடுகிறது. இதற்காக அர்த்தராத்திரியில் சேரமுடியாத இடத்துக்கு குறுஞ்செய்தி அனுப்பி சந்திப்புக்கு நேரம் கேட்கிறது. எல்லா விடயங்களிலும் தம்மையே முதலிடத்தில் நிறுத்தி செயற்படும் பதில் செயலாளர் சுமந்திரன் இந்த விடயத்தில் மட்டும் தமக்கு எதுவுமே தெரியாததுபோல் நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, கஜேந்திரகுமாரின் பேரவையுடன் கூட்டு ஒப்பந்தம் செய்துவிட்டது. இரண்டும் இணைந்து சில சபைகளை கைவசப்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கூட்டணிப் பிரமுகர்களில் ஒருவரான சித்தார்த்தன், ஈ.பி.டி.யின் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சு நடத்துவதற்கு மேற்கொண்ட முயற்சி தமிழரசுக்கு மேலும் கலக்கத்தைக் கொடுத்தது.
சித்தார்த்தன் – டக்ளஸ் சந்திப்புக்கு முன்னர் தாம் சந்தித்து இணைப்பை ஏற்படுத்த விரும்பிய தமிழரசுக் கட்சி அதில் முந்திக் கொண்டது. டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்துக்கு தமிழரின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் நேரடியாகச் சென்று சுமார் முப்பது நிமிடங்கள் ஆதரவுக் கோரிக்கையை முன்வைத்தார்.
அதன்பின்னர், இருவரும் ஊடகவியலாளர்களைச் சந்தித்தனர். இதன்போது ஈ.பி.டி.பி.யின் ஆதரவு தங்களுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக சிவஞானம் அவர்கள் தெரிவித்தார். அருகே நின்ற டக்ளஸ் தமது கொடுப்புக்குள் ஒரு நமட்டுச் சிரிப்புடன் அப்போது நின்றார். இதனை சிவஞானம் அவர்கள் கவனித்திருக்க சாத்தியமில்லை. பின்னர் ஊடகத்தின் கேள்விக்கு பதிலளித்த டக்ளஸ் எதிலும் பிடிகொடுக்காது, தமது தரப்பினருடன் உரையாடி மக்கள் நலன் சார்ந்த முடிவெடுக்கப்படும் என்று மட்டும் கூறினார்.
இதன் பின்னர், இன்னொரு ஊடகத்துக்கு இவர் கருத்துத் தெரிவிக்கையில், இப்பொழுது எவருக்கும் மக்கள் நலனில் அக்கறையில்லை, தங்கள் இருப்பிலும்; கதிரைகளிலும்தான் ஆசை அதிகம். எமது கொள்கைகளை முன்னர் எதிர்த்தவர்கள் இப்போது அதனை ஏற்று வருகிறார்கள் என்று நேரடியாகக் கூறியுள்ளார். ‘நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ? இன்று முதல் நீ வேறோ நான் வேறோ?” என்ற பாடல்தான் இப்போது நினைவுக்கு வருகிறது.
சி.வி.கே.சிவஞானம் அவர்களின் நிலைமை பதில் தலைவராகியபின் பரிதாபத்துக்குரியதாகி வருகிறது. பல சந்தர்ப்பங்களில் இவர் யாருக்காகவோ பேசுவது போலவும், இடைச்செருகலாக அகப்படுவது போலவும் தெரிகிறது. 2017ம் ஆண்டிலும் இவ்வாறான ஒரு சூழ்நிலையில் அவர் அகப்பட்டிருந்தார். அன்று முதலமைச்சராகவிருந்த சி.வி.விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வடமாகாண ஆளுனரிடம் இவரே கையளித்தார். இதுபற்றிப் பின்னர் கூறும்போது, அவ்விடத்தில் வைத்து சுமந்திரன் சார்பு உறுப்பினர்கள் தீர்மானத்தை தமது கைக்குள் திணித்துவிட்டதால் தாம் கையளிக்க நேர்ந்ததாக கூறி வருத்தப்பட்டார்.
இப்போதும் உள்;ராட்சிச் சபைகளை கைப்பற்றுவதற்காக அன்று நடந்ததுபோல் இவரை சுமந்திரன் தரப்பு பயன்படுத்துகிறதா என்ற சந்தேகம் கட்சிக்குள்ளேயே ஏற்பட்டுள்ளது. கட்சியின் மத்திய குழுவின் முடிவின்றி தம்மி~;டப்படி செயற்படும் இவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குரல்கள் கிளம்பியுள்ளன. மட்டக்களப்பு முன்னாள் மேயர் சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் ஆகியோர் இவரை பதவி நீக்கக் கோரியுள்ளனர்.
யாழ்ப்பாண மாநகர சபையில் கஜேந்திரகுமாரின் பேரவையும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியும் இணைந்து பதினாறு எண்ணிக்கையைக் கொண்டுள்ளன. தமிழரசிடம் பதின்மூன்று உறுப்பினர்கள் உண்டு. டக்ளசின் ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் நால்வர் உள்ளனர். இவர்களை எவ்வாறாவது சேர்த்துவிட்டால் பதினேழு எண்ணிக்கையாகும். அப்படியானால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் யாழ்ப்பாண மேயர், உதவிமேயர் பதவிகளை கைப்பற்றலாமென்பது தமிழரசு போட்டிருக்கும் கணக்கு. இதற்காகவே இரவிரவாக பேரங்களும் பேச்சுகளும் இடம்பெறுகின்றன. எதுவுமே மக்கள் நலனுக்காக அல்ல.
இந்த மாதம் பதினாறாம் திகதிவரை இந்த நாடகம், தமிழக தொலைக்காட்சிகளில் வரும் சீரியல்கள்போல் கலகலப்பாக தொடரும். முடிவில் யார் யாரால் ஏமாற்றப்படுவாரோ? இடையில் வேறொருவர் எங்கிருந்தோ முன்வருவாரோ? யாரறிவார் அவைபற்றி?