ஒரு அம்பேத்கர் சிலை கூட இல்லாத ‘கோவை’ – பொது இடத்தில் நிறுவ தடையாக இருப்பது எது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோவை மாநகரில் இதுவரை அம்பேத்கர் சிலை நிறுவப்படவில்லை எனத் தொடர்ச்சியாக விமர்சிக்கப்படுகிறது (கோப்புப் படம்)எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கோவை நகரில் நீதிமன்ற வளாகம் முன்பாக அம்பேத்கர் சிலை அமைப்பதற்கு, கடந்த 2007ஆம் ஆண்டில் மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், இதுவரை அங்கு அமைக்கப்படவில்லை.

சாதிய மனநிலையிலுள்ள கோவை அதிகாரிகள்தான் இதற்கு முட்டுக்கட்டை போடுவதாகவும், இது நவீன தீண்டாமை என்றும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தக் கோரிக்கை முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் என்று இதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்தார் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ்குமார்.

கோவை மாநகராட்சி 254 சதுர கி.மீ. பரப்பளவு, 100 வார்டுகள், 21 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை ஆகியவற்றுடன் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக வளர்ந்துள்ளது. மாநகராட்சி எல்லையை மேலும் விரிவுபடுத்துவதற்கான முன்மொழிவும் தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளது.

இந்த நகரின் முக்கிய சாலைகளிலும், பொது இடங்களிலும் பல்வேறு தலைவர்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரான கோவை மாநகரில் பொது இடத்தில் ஒரு அம்பேத்கர் சிலை கூட இதுவரை நிறுவப்படவில்லை என்ற விமர்சனம் தொடர்ச்சியாக வைக்கப்பட்டு வருகிறது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

2007இல் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

பட மூலாதாரம், Getty Images

கோவையைப் பொருத்தவரை, வட கோவையில் இருக்கும் மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புக் கழக குடோனில், அங்குள்ள எஸ்.சி.–எஸ்.டி. சங்கத்தினரால் சிறிய அளவிலான அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டுள்ளது. வெளியாட்கள் யாரும் அங்கே அனுமதிக்கப்படுவதில்லை.

கோவையில் பொது இடத்தில் அம்பேத்கருக்கு முழு உருவச் சிலை அமைக்க வேண்டும் என்பது, இங்குள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகளின் நீண்ட கால கோரிக்கையாகவுள்ளது. இதற்காக ஏராளமான போராட்டங்களும் நடந்துள்ளன.

அதன் பலனாக, கடந்த 2007ஆம் ஆண்டில் திமுக ஆட்சியின் போது, கோவை மாநகராட்சியில் ஒரு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அதில், கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன்பாக அம்பேத்கருக்கு முழு உருவச்சிலை அமைக்கலாம் என்று அனுமதியளிக்கப்பட்டது. அதன் பிறகு அதற்கான நடவடிக்கை எதுவுமே தொடங்கவில்லை.

அப்போது திமுக கூட்டணியில் மேயராக (காங்கிரஸ்) இருந்த வெங்கடாச்சலம், ”அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றி நாங்கள் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பினோம். ஆனால் அது திரும்ப வரவே இல்லை. ஆகையால், எங்களுடைய கவுன்சில் காலத்தில் அதை அமைக்க முடியவில்லை” என்றார்.

“அப்போதிருந்த கோவை மாநகர காவல் ஆணையர், அந்த இடத்தில் அம்பேத்கர் சிலை அமைத்தால் சட்டம்–ஒழுங்கு பிரச்னை ஏற்படும். நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படும் என்று கூறியதால்தான் அந்த இடத்தில் அமைப்பது முதன் முதலாகத் தடைபட்டது” என்கிறார் திராவிடத் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி.

”தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், அதையொட்டிய நடைபாதைகளில்தான் தலைவர்கள் சிலை அமைக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் அதற்குப் பிறகு பல்வேறு மாநில நெடுஞ்சாலைகளிலும், மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகளிலும், சாலைத்தீவுகளிலும் ஏராளமான தலைவர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன” என்று வெண்மணி கூறினார்.

படக்குறிப்பு, அம்பேத்கர் சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டிருந்த இடம்கோவை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட 2007ஆம் ஆண்டு தீர்மானத்தின் அடிப்படையில் கோவையில் அம்பேத்கருக்கு சிலை அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்று கோரி, கடந்த 2019ஆம் ஆண்டில் வழக்கறிஞர் கார்க்கி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதிலும் இந்தக் கோரிக்கை குறித்து ஒரு திட்டவட்டமான தீர்வு கிடைக்கவில்லை.

பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞர் கார்க்கி, ”எனது வழக்கில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு 2023 ஜூனில்தான் தீர்ப்பு வழங்கப்பட்டது. தனியார் பட்டா நிலத்தில் சிலை அமைக்க ஆட்சேபமில்லை. மற்ற இடங்களில் வைப்பது குறித்த மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலிக்கலாம் என்று தமிழக அரசுக்கு உத்தரவு வழங்கியது. ஆனால் அரசு எந்த முடிவும் எடுப்பதாகத் தெரியவில்லை” என்றார்.

கடந்த 2020 டிசம்பரில் கோவையில் பல்வேறு பட்டியல் பிரிவு அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து, இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தின.

அதில் அப்போதைய கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), ”மாநகராட்சி தீர்மானத்தின்படி கோவை நகரின் முக்கியப் பகுதியில் அம்பேத்கர் சிலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகர காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இதற்குப் பரிந்துரைக்க வேண்டும்” என்று பேசினார். அவர் தலைமையில் அப்போதிருந்த மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டு, அரசுக்கும் அனுப்பப்பட்டது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.சிலை அமைப்பதற்கான வருவாய்த் துறையின் வழிகாட்டுதல்

அதிமுக ஆட்சிக் காலத்திலும், திமுக ஆட்சி வந்த பிறகு இப்போது வரையிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதற்கு அதிமுக ஆட்சியின்போது, 2019 மார்ச் 26 அன்று அப்போதிருந்த வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் அனுப்பிய ஒரு சுற்றறிக்கையும் காரணமென்று வருவாய்த்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சிலை அமைப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறையாக அதில் கூறப்பட்டிருந்தவை:

சிலை அமைக்க முன்மொழியப்பட்ட இடம் தனியார் பட்டா நிலம் மட்டுமே. அரசு புறம்போக்கு, சாலை, நெடுஞ்சாலை, நீர் ஆதாரம், பாரம்பரிய இடம், நினைவுச் சின்ன இடம் இல்லை. அதன் மீது நீதிமன்ற வழக்குகளும் இல்லை என்பதற்கு தாசில்தார் சான்றளிக்க வேண்டும்.சிலையை நிறுவ ஒப்புதல் அளிக்கும் நில உரிமையாளர், அதற்குரிய வரைபடம், ஆவண நகல்கள், பட்டா, சிட்டா மற்றும் வில்லங்கச் சான்றுகளை வழங்க வேண்டும்.அரசின் எந்தவொரு திட்டத்திற்கும் கையகப்படுத்தப்பட்ட நிலம் இல்லை, நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் வரவில்லை என்பன போன்றவற்றை வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.சிலை நிறுவும் இடம், சட்டம்–ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்தாது என்பதற்கான அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இருந்து பெற வேண்டும்.உள்ளாட்சி அமைப்புகளின் தீர்மான நகல், ஆணை ஆவணங்களுடன் உரிய உள்ளாட்சிகளின் ஆணையர், செயல் அலுவலர், கிராம ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் இருந்து அறிக்கை பெற வேண்டும்.சிலை நிறுவுவதற்காக ஒதுக்கப்பட்ட நிலம் தேசிய/மாநில நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்தைப் பாதிக்காது, பாதசாரிகளின் இயக்கத்தைப் பாதிக்காது என்று துறையின் மேற்பார்வை பொறியாளர் அந்தஸ்திலுள்ள அதிகாரியிடம் இருந்து அறிக்கை பெறப்பட வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்உச்ச நீதிமன்ற வழக்கில் பிறப்பித்த உத்தரவுகளின்படி, அரசு நிலங்கள், பொது சாலைகள், பிற பொது பயன்பாட்டு இடங்களில் எந்தவொரு சிலையையும் அமைக்க அனுமதி வழங்குவதற்கான அரசு உத்தரவைக் கோரி மாவட்ட ஆட்சியர்கள் எந்த முன்மொழிவையும் அனுப்பக்கூடாது.சிலை வெண்கலத்தால் மட்டுமே ஆனது என்பதை சிலை அமைப்பவர்களிடம் இருந்து மாவட்ட ஆட்சியர்கள் உறுதிமொழி பெற வேண்டும்.ஏற்கெனவே நிறுவப்பட்ட சிலையை மாற்றவும், மீண்டும் நிறுவவும் வேண்டியிருந்தால் சம்பந்தப்பட்ட நபர் அல்லது அமைப்பிடம் இருந்து பிரமாணப் பத்திரத்தை மாவட்ட ஆட்சியர் பெற வேண்டும்.இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளில் 2006ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்ற உத்தரவு சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

கோவையில் திடீரென முளைத்த எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள்

ஒருபுறம் அம்பேத்கர் சிலை அமைக்க 10 ஆண்டாக போராட்டம் நீடித்த நிலையில், கோவையின் பிரதான சாலையான அவினாசி சாலையில் 2017ஆம் ஆண்டு டிசம்பரில் அண்ணா சிலைக்கு அருகிலேயே எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு திடீரென முழு உருவ வெண்கலச் சிலைகள் திறக்கப்பட்டன.

எந்தவொரு முன்னறிவிப்புமின்றி திறக்கப்பட்ட இந்தச் சிலைகள் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருப்பதாக அப்போது சர்ச்சை எழுந்தது.

இதற்கு முறையான அனுமதியும், அரசாணையும் வழங்கப்படவில்லை என்று மாநில நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் வாங்கிய வழக்கறிஞர் லோகநாதன், சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள அந்தச் சிலைகளை அகற்றக் கோரி மனு அளித்தார்.

கடந்த 2021ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் அவரது கோரிக்கைக்குப் பலன் இல்லாததால், அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலை உள்பட தமிழகம் முழுவதும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றக் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவும் விசாரணைக்கு ஏற்கப்பட்டு (W.P.No.: 22640/2021) சில உத்தரவுகள் வழங்கப்பட்டன.

அதுகுறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய வழக்கறிஞர் லோகநாதன், ”உச்ச நீதிமன்றம் கடந்த 2013ஆம் ஆண்டில் வழங்கிய உத்தரவை மீறியும், அரசு விதிகளை மீறியும் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட அந்தச் சிலைகள் உள்பட தமிழகம் முழுவதும் அனுமதியின்றி நிறுவப்பட்ட சிலைகளை அகற்ற வேண்டுமென்பதே என் கோரிக்கை. கோவையில் மட்டுமின்றி, மதுரை, தஞ்சாவூர், மன்னார்குடி ஆகிய ஊர்களிலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகள் நிறுவப்பட்டிருப்பது பற்றியும் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தோம்” என்றார்.

‘அம்பேத்கர் சிலைக்கு மட்டுமே ஆயிரம் விதிமுறைகள்’

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்அம்பேத்கர் சிலை அமைக்க முட்டுக்கட்டை போடுவதற்கு கோவையிலுள்ள அதிகாரிகளின் சாதிய மனநிலைதான் காரணமென்று குற்றம் சாட்டுகிறார் சமூக நீதிக் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் பன்னீர் செல்வம்.

”தென் மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பலர் இங்கு முக்கியப் பொறுப்புக்கு வருகின்றனர். அந்த மாவட்டங்களில் தலைவர்களின் சிலைகளால் ஏற்பட்ட சட்டம் – ஒழுங்கு பிரச்னை போன்று இங்கும் வந்து விடுமென்ற காரணத்தைக் கூறி, இங்கு அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதியளிக்க மறுக்கின்றனர். அரசு நினைத்தால் இந்தத் தடைகளை நீக்கி ஏதாவது ஓரிடத்தில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதியளிக்க முடியும்” என்கிறார் அவர்.

கோவையில் அம்பேத்கர் சிலை அமைப்பதற்குத் தொடர் முயற்சி எடுப்பவர்களில் ஒருவரான இவர், ”இதுதொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்தக் கோரிக்கையை அரசு பரிசீலிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அரசுதான் தட்டிக் கழிக்கிறது. இந்த விவகாரத்தை தேசிய எஸ்.சி.–எஸ்.டி. கமிஷனுக்கு நாங்கள் கொண்டு சென்றுள்ளோம். அதுவும் விசாரிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகமும் இதற்காகத் தொடர்ந்து போராடி வருகிறது. பிபிசி தமிழிடம் பேசிய த.பெ.க. நிறுவனர் தலைவரான கு.ராமகிருட்டிணன், ”நாங்களும் இதற்காக முதல்வர் உள்பட எல்லோரிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். சமீபத்திலும்கூட மாவட்டப் பொறுப்பாளராக இருந்த செந்தில் பாலாஜியிடம் இதுபற்றிப் பேசினோம். கண்டிப்பாக ஓரிடத்தை ஏற்பாடு செய்து தருவதாகத் தெரிவித்தார். இந்த அரசு கண்டிப்பாக இந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தருமென்று நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்றார்.

இதே நம்பிக்கையை பிபிசி தமிழிடம் வெளிப்படுத்திய திராவிடத் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி, ”கடந்த மாதத்தில் எனது மகனின் திருமணம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. அப்போது இந்தக் கோரிக்கை பற்றி முதல்வரிடம் கூறி, மனுவும் கொடுத்தேன். அதற்கு அவர், ‘உச்ச நீதிமன்ற உத்தரவால் சிலை வைப்பது போன்ற விஷயங்களில் தடை உள்ளது. ஆனாலும் உரிய துறைக்கு இதை அனுப்பி பார்க்கச் சொல்கிறேன்’ என்று உறுதியளித்திருக்கிறார்” என்றார்.

படக்குறிப்பு, கோவையின் அவினாசி சாலையில் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பரில் அண்ணா சிலைக்கு அருகிலேயே எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு முழு உருவ வெண்கலச் சிலைகள் நிறுவப்பட்டன.இதே கோரிக்கையை வலியுறுத்தி ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி அனுப்பியதை நினைவு கூரும் வெண்மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளராக அப்போதிருந்த பாலகிருஷ்ணன் முதல் கையெழுத்திட்ட அந்த மனுவில் தி.க.தலைவர் வீரமணி, திருமாவளவன், நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட பலரும் கையெழுத்திட்ட தகவலையும் பகிர்ந்தார்.

தற்போது தமிழக அரசின் எஸ்.சி.–எஸ்.டி. கமிஷன் உறுப்பினராகவுள்ள செல்வகுமாரும், இதே கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து மனு அளித்து வந்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியின்போது, மாநில ஆதி திராவிடர் நலக்குழு உறுப்பினராக இருந்தபோதும், இதற்காக மத்திய, மாநில அமைச்சர்கள் பலரிடமும் மனுக்கள் கொடுத்ததாகச் சொல்கிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய செல்வகுமார், ”அதிமுக ஆட்சியில் அப்போதிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் 3 முறை மனுக்கள் கொடுத்தேன். பரிசீலிப்பதாக ஒவ்வொரு முறையும் தெரிவித்தார். ஆனால் நடவடிக்கை இல்லை. இப்போதும் தமிழக அரசிடம் இந்தக் கோரிக்கையை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்” என்றார்.

இவர்கள் உள்பட பல்வேறு அமைப்பினரிடமும் பிபிசி தமிழ் பேசியபோது, அவர்கள் அனைவரும் இதற்காகப் பல ஆண்டுகளாக மனுப் போர், போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தியும், சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டும் இந்த கோரிக்கை பல்வேறு காரணங்களைக் கூறி நிறைவேற்றப்படாமல் இருப்பது தெரிய வந்தது.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, கோவையில் பல்வேறு அமைப்புகளையும் திரட்டி மாநாடு நடத்தியபோது, ‘சிலைக்காக ஒரு மாநாடா’ என்று பலரும் ஆச்சரியப்பட்டதாகச் சொல்லும் வெண்மணி, உண்மையில் கோவையில் அந்த நிலைதான் இருப்பதாக வேதனை தெரிவிக்கிறார்.

இதையே நவீன தீண்டாமை என்று குற்றம் சாட்டும் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாநில நிர்வாகி பாலமுருகன், இதன் பின்னணியில் இங்குள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள் அனைவருக்கும் பங்கு உள்ளதாகக் கூறுகிறார்.

இறுதியாக இந்த அமைப்பினர் எல்லோரும் சேர்ந்து தமிழக அரசிடம் ஒரு மாற்று யோசனையை முன் வைத்துள்ளனர். காந்திபுரம் பாலம் கட்டுவதற்காக அங்கிருந்த பெரியார் சிலை அகற்றப்பட்டு, தற்காலிகமாக அதே பகுதியிலுள்ள பெரியார் படிப்பகம் முன் அமைக்கப்பட்டுள்ளது. அதை வேறிடத்திற்கு மாற்றும் போது அதனுடன் அம்பேத்கர் சிலையையும் அமைக்க அனுமதிக்கக் கோரி வருகின்றனர்.

கோவை எம்.பி. விளக்கம்

திமுகவை சேர்ந்த கோவை நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ்குமார், ”இந்த கோரிக்கை குறித்து முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்வோம். நிச்சயமாக அவர் நல்ல முடிவெடுப்பார்” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

கடந்த 2007ஆம் ஆண்டு இதற்காகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தும்கூட, இத்தனை ஆண்டுகளாக அம்பேத்கர் சிலை வைக்கப்படாமல் இருக்கக் காரணம் என்னவென்று அவரிடம் கேட்டபோது, “மாநகராட்சி நிர்வாகமும் சரி அமைப்புகளும் சரி, இந்தக் கோரிக்கையைத் தொடர்ச்சியாகப் பின்தொடர்ந்து, முறையாகச் செயல்படுத்த முனையாததே அதற்குக் காரணம்.

தற்போது அம்பேத்கர் சிலை வைக்கப்படுவதற்கான இடம் உள்பட அனைத்தையும் தேர்வு செய்தாகிவிட்டது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்” என்று பதிலளித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் இதுகுறித்து விளக்கம் கேட்க முயன்ற போது, அவர்கள் பதிலளிக்கவில்லை. அவர்களிடம் இருந்து பதில் கிடைக்கும் பட்சத்தில், அது உடனடியாக இந்த கட்டுரையில் சேர்க்கப்படும்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு