பட மூலாதாரம், Axiom Space

எழுதியவர், சாரதா விபதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஆக்ஸியம் ஸ்பேஸ்’ எனும் தனியார் நிறுவனத்தின் ‘ஆக்ஸியம் 4’ திட்டத்தின் கீழ் அமெரிக்கா, இந்தியா, போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள், ஜூன் 10ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் பூமியிலிருந்து புறப்படவுள்ளார்கள்.

ஆக்ஸியம் ஸ்பேஸ், ஸ்பேஸ் எக்ஸ், நாசா ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் இஸ்ரோ உள்ளிட்ட சர்வதேச கூட்டாளிகளின் ஒத்துழைப்புடன் ஆக்ஸியம் 4 விண்ணில் செலுத்தப்படவுள்ளது. ஆக்ஸியம் 4 மேற்கொள்ளப்போவது சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஒரு பயணம் மட்டுமல்ல, தனியார் விண்வெளி பயணம், அரசு விண்வெளி நிறுவனங்களுக்கு ஈடானதா என்ற சோதனையும் கூட.

இதில் அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீராங்கனையும், இந்த ‘ஆக்ஸியம் 4’ திட்டத்தின் கமாண்டருமான பெக்கி விட்சன், திட்டத்தின் விமானியாக உள்ள இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா, போலந்து நாட்டைச் சேர்ந்த ‘ஆக்ஸியம் 4’ திட்ட நிபுணர் ஸ்லாவோஷ் உஸ்னான்ஸ்கி-விச்நியெவ்ஸ்கி, மற்றொரு திட்ட நிபுணரான ஹங்கேரியைச் சேர்ந்த டிபோர் கபு ஆகியோர் இதில் பயணம் செய்கின்றனர்.

1984-ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த ராகேஷ் ஷர்மா சோயுஸ் டி-11 எனும் சோவியத் விண்கலம் மூலம் விண்வெளிக்குச் சென்றார். விண்வெளியில் அப்போது இயங்கிக் கொண்டிருந்த சல்யூட் 7 (Salyut 7) எனும் சோவியத் விண்வெளி நிலையத்தில் 7 நாட்கள், 21 மணிநேரம் தங்கியிருந்து அவர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். அதன் பிறகு விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் , உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா ஆவார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.சவாலான முதல் சில நிமிடங்கள்

எந்தவொரு ராக்கெட்டையும் ஏவுதல் என்பது ஆபத்துகள் அதிகம் நிறைந்த பணியாகும். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் மயிரிழை மட்டுமே இருக்கும். ஏதாவது ஒரு சிறு தவறு நடந்துவிட்டால் கூட, பல மாத கால உழைப்பும், பல கோடி ரூபாய் பணமும் ஒரே நொடியில் வீணாகிவிடும்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

புவியீர்ப்பு விசையைத் தாண்டி உந்தி செல்வது ஒரு ராக்கெட்டின் முதன்மை சவாலாகும். பூமியின் கீழ்வட்டப் பாதையை (பூமியிலிருந்து 160-2000 கிமீ வரையிலான உயரம்) சென்றடைய ஸ்பேஸ் எக்ஸ்-ன் ட்ராகன் விண்கலம் நொடிக்கு 8 கி.மீ என்ற வேகத்தில் செல்ல வேண்டும். இதற்கு ராக்கெட் ஏந்தி செல்லும் செயற்கைக்கோளின் எடையை விட பல மடங்கு அதிக எடையிலான எரிபொருள் தேவை, திறன்மிகு என்ஜின்களும் தேவைப்படும். அப்போது தான் பூமியில் நின்றுக் கொண்டிருக்கும் ராக்கெட்டை சட்டென வேகமாக உந்தி விண்ணில் செலுத்த முடியும்.

மண்ணில்லிருந்து ஏவப்பட்டு சில நிமிடங்களில் ட்ராகன் விண்கலம் Max Q என்ற அதிகபட்ச ஏரோடைனமிக் அழுத்தம் கொண்ட புள்ளியை எட்டிடும். இந்தக் கட்டம் வரலாற்று ரீதியாக விண்கலன்களுக்கு ஒரு சோதனைக் கட்டமாகவே இருந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் 60 அறிவியல் சோதனைகளை ஆக்ஸியம் குழுவினர் நடத்தவுள்ளனர். சிறு தவறும் தோல்விக்கு இட்டுச் செல்லும்

கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள 39 ஏ ஏவுதளத்தில் ஜூன் 10ம் தேதியன்று – எரிபொருள் பயன்பாடு தொடக்கம், என்ஜின் எரியத் தொடங்குதல், ராக்கெட்டின் நிலைகள் உரிய நேரத்தில் பிரிந்து செல்லுதல், பின் ட்ராகன் பூமியின் கீழ் வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்படுவது என அடுத்தடுத்து என்ன நடக்க வேண்டும் என்று துல்லியமாக திட்டமிடப்பட்டுள்ளது. எந்தவொரு சிறு தவறும் இந்த திட்டத்தை முழுமையாக குலைக்கக் கூடியதாக இருக்கும்.

1986-ல் குளிர்ந்த தட்பவெப்ப நிலை காரணமாக நாசாவின் சேலஞ்சர் விண்கலம் வெடித்து ஏழு பேர் பலியாகினர். குளிர்ந்த தட்ட வெப்பம் காரணமாக ஒரு ரப்பர் வளையம் இறுகிப் போய், ஒரு இணைப்பை சரியாக மூடவில்லை. இதனால் வாயு வெளியேறி, எரிபொருள் தாங்கி வெடித்தது. விண்ணில் ஏவப்பட்டு 73 நொடிகளில் இந்த சம்பவம் நடைபெற்றது.

ஏற்கெனவே இந்த ஆண்டு மே மாதம் விண்ணில் ஏவப்பட்டிருக்க வேண்டியது ஜூன் 8ம் தேதி விண்ணில் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது, இப்போது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு, ஜூன் 10ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, 1986-ம் ஆண்டு சேலஞ்சர் விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட சில நொடிகளில் வெடித்து சிதறியது. ராக்கெட் ஏவப்படும் போது கவனிக்கப்படும் முக்கியமான காரணிகள் என்ன?

பல நிலைகள் கொண்ட ராக்கெட் ஏவப்படும் போது, அது ஒரு ரிலே ஓட்டப்பந்தயத்தைப் போல இருக்கும். முதல் நிலை பூமியிலிருந்து ஏவப்படும் போது, அது எரிந்து ராக்கெட்டை உந்தி விண்ணுக்கு அனுப்பும். குறிப்பிட்ட உயரம் சென்ற பிறகு, முதல் நிலை கீழே விழுந்துவிடும். பிறகு இரண்டாம் நிலை எரியூட்டப்பட்டு ராக்கெட்டை மேலும் உந்தி செல்லும்.

ஒவ்வொரு நிலையும் 100% சரியாக வேலை பார்த்தால் தான் ராக்கெட் முழுவதுமாக தனது இலக்கை நோக்கி செல்ல முடியும். இரண்டு நிலைகள் சரியாக இயங்கி, மூன்றாவது உரிய நேரத்தில் எரியத் தொடங்கவில்லை என்றால், இலக்கை அடைவது சாத்தியமாகாது. ஏனென்றால் எரியாமல் இருக்கும் ஒவ்வொரு நொடியும், ராக்கெட் அடைய வேண்டிய உயரம் சற்று குறைகிறது என்று அர்த்தம்.

ராக்கெட் ஏவப்படும் போது இரண்டு விசயங்கள் முக்கியமானவை என்கிறார் அறிவியல் எழுத்தாளர் த வி வெங்கடேஸ்வரன். “முதலில் கவனிக்கப்படுவது வானிலை. அதிக மழை பெய்தாலோ, மேக மூட்டமாக இருந்தாலோ ராக்கெட்டை விண்ணில் ஏவ சிக்கல் இல்லை. ஆனால் வலுவான காற்று வீசினால், அது ராக்கெட் செல்லும் திசையை மாற்றக் கூடும். ராக்கெட் திசை மாறும் போது அதை சரியான திசையில் வைத்துக் கொள்ள கூடுதல் எரிபொருள் தேவைப்படும்.

ராக்கெட் அந்த தேதியில் விண்ணில் சென்றே ஆக வேண்டும் என்ற கட்டாய சூழல் இருந்தால் தவிர, வேறு நேரங்களில் ராக்கெட் ஏவுதல் ஒத்திவைக்கப்படும். வானிலை மாற்றங்கள் ராக்கெட்டின் பாதையை பாதிப்பது முதல் சில நிமிடங்களில் தான். பூமியின் வளிமண்டலத்தை விட்டு வெளியே சென்று விட்டால் இது எதுவும் ராக்கெட்டை பாதிக்காது” என்றார்.

பட மூலாதாரம், TV Venkateswaran (@TVVen) / X

படக்குறிப்பு, அறிவியல் எழுத்தாளர் த வி வெங்கடேஸ்வரன் மற்றொரு விசயம் ‘சிஸ்டம் செக்’ அதாவது எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்வது. “நாம் காரில் ஒரு பயணம் மேற்கொள்வதற்கு முன் டயரில் காற்று இருக்கிறதா, போதிய எரிபொருள் இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்வதைப் போல. ராக்கெட்டில் எரிபொருள், மின், எந்திர சரிபார்ப்புகள் நடைபெறும். இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் ராக்கெட் ஏவுதல் ஒத்திவைக்கப்படும்” என்றார் த வி வெங்கடேஸ்வரன்.

ராக்கெட் ஏவப்படுவதற்கு முன்பு, என்ஜின்கள் குளிர்ந்த நிலையில் இருப்பது அவசியம். ராக்கெட் விண்ணில் பாயும் போது அதீத வெப்பம் காரணமாக ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக, என்ஜின் உரியமுறையில் குளிர்ந்திருப்பது முக்கியமாகும்.

2025-ல் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் நோக்கில் செயல்படும் ஆர்டெமிஸ் திட்டம் 2022-ல் விண்ணில் ஏவப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஏவப்படுவதற்கு முன்பாக என்ஜின்கள் போதிய அளவு வெப்பம் குறையாததால், அதை விண்ணில் ஏவும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இத்தகைய கோளாறு launch scrub எனப்படும். ராக்கெட்டில் இருக்கும் எரிபொருள் ஆபத்தானவை என்பதால் அவற்றை மிக கவனமாக கையாள்வதும் அவசியமாகிறது.

பட மூலாதாரம், Getty Images

ட்ராகன் விண்கலம் கீழ்வட்டப் பாதையில் நுழைந்து, கிட்டத்தட்ட 24 மணி நேரங்கள் செலவிடும். பூமியின் கீழ்வட்டப் பாதையை சென்றடைந்தாலும், சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைவதற்கு ஏற்ற திசையில், வேகத்தில் ட்ராகன் விண்கலம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

ட்ராகன் விண்கலம் கீழ் வட்டப் பாதையில் செலவிடும் 24 மணி நேரங்களில், என்ஜின்களை எரியவிட்டு, அதன் மூலம் தனது வேகத்தையும், தனது பாதையையும் சரி செய்து கொண்டு, சர்வதேச விண்வெளி நிலையத்துடன் உரிய நேரத்தில் இணைய தயாராக ட்ராகன் விண்கலம் இருக்கும்.

கீழ் வட்டப் பாதையை சென்றடைந்த பின் அங்குள்ள மற்றொரு சவால் வட்டப் பாதையில் உள்ள கழிவுகள். குறிப்பாக, கீழ் வட்டப் பாதையில் இவை அதிகம் இருக்கலாம் என்ற கவலை உள்ளது. எனவே தொடர் கண்காணிப்பு தேவைப்படும். பெரிய பொருட்கள் ஏதேனும் விண்கலனின் பாதையில் இருந்தால் அவற்றை எளிதில் கண்டறிந்து விடலாம், அதற்கு ஏற்றவாறு விண்கலனின் பாதையை மாற்றி அமைத்துக் கொள்வதும் சாத்தியமாகலாம். ஆனால் சிறிய பொருட்கள் ட்ராகன் விண்கலத்தின் வெளிப்புறத்துக்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்கக் கூடும்.

மேலே செல்ல செல்ல கதிரியக்க ஆபத்துகளும் அதிகரிக்கும். விண்கலத்தின் புற பாதுகாப்பு அமைப்புகளும், திட்டமிடப்பட்டிருக்கும் பயண நேரமும் ஆபத்துகளிலிருந்து பாதுகாத்தாலும், மீண்டும் மீண்டும் கதிரியக்கத்துக்கு ஆளாவதன் நீண்ட கால விளைவுகள் இன்னும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு