Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பட மூலாதாரம், Universal Images Group via Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ஏப்ரல் 2025 இல், ஒரு தனியார் அமெரிக்க நிறுவனமான கொலோசல் பயோசயின்சஸ், சின்னஞ்சிறு ஓநாய் குட்டிகளைக் காட்டும் 17 வினாடி வீடியோவை வெளியிட்டது.
கொலோசல் பயோசயின்சஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த ஓநாய் குட்டிகளுக்கு ரோமுலஸ் மற்றும் ரெமுஸ் என்று பெயரிடப்பட்டன.
ரோமானிய புராணங்களின்படி, ரோமுலஸ் மற்றும் ரெமுஸ் இரட்டை சகோதரர்கள், ரோம் நகரத்தை நிறுவினார்கள், இவர்கள் ஒரு பெண் ஓநாயால் காப்பாற்றப்பட்டனர் என சில கதைகள் சொல்கின்றன. இந்த இரட்டைச் சகோதரர்களின் பெயர், புதியதொரு விஞ்ஞான முயற்சியில் உருவான ஓநாய் குட்டிகளுக்கு வைக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன ஓநாய் இனமான டயர் ஓநாய் இனத்தின் டிஎன்ஏவைப் பயன்படுத்தி, மரபணு பொறியியல் நிறுவனமான கொலோசல் பயோசயின்சஸ் இந்த ஓநாய் குட்டிகளை உருவாக்கியுள்ளது.
குளோனிங் மற்றும் மரபணு மாற்றம் தொழில்நுட்பம் மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றியடைந்த பிறகு, இது குறித்த விவாதம் தொடங்கியுள்ளது. இது அவசியமா என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
கொலோசல் பயோசயின்சஸின் தலைமை அறிவியல் அதிகாரி டாக்டர் பெத் ஷாபிரோ, 2015 இல் தான் எழுதிய ஒரு புத்தகத்தில் குளோனிங் பற்றி விவாதித்ததைக் குறிப்பிடுகிறார். அழிந்துபோன எந்த உயிரினத்தையும் குளோனிங் செய்ய முடியாது என அவர் அன்று தெரிவித்திருந்தார். ஆனால் இந்த புதிய சாதனை அவரது கருத்தை மாற்றியுள்ளதாக அவர் கூறுகிறார்.
‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ என்ற தொலைக்காட்சி தொடரில் டயர் ஓநாய்கள் முக்கியக் கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டிருந்தன. டாக்டர் பெத் ஷாபிரோவின் கருத்துப்படி, டயர் ஓநாய் என்பது நரிகள் மற்றும் நாய்களுடன் தொடர்புடைய ஒரு இனமாகும்.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, டயர் ஓநாய் இனத்தின் ஆரம்பகால புதைபடிவம் சுமார் 2.5 லட்சம் ஆண்டுகள் பழமையானது. இந்த விலங்குகள் வட அமெரிக்காவில் காணப்பட்டன. கடந்த பனி யுகத்தில், அதாவது சுமார் பன்னிரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு டயர் ஓநாய் அழிந்துவிட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது நிறுவனத்தின் கூட்டத்தில், எந்த உயிரினத்தை மீண்டும் உருவாக்கலாம் என்பது பற்றிய விவாதம் நடந்ததை டாக்டர் பெத் ஷாபிரோ நினைவு கூர்கிறார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.உயிரினத்தை மீண்டும் உருவாக்குவதில், தொழில்நுட்பம், சூழலியல் மற்றும் நெறிமுறைகள் தொடர்பான சவால்களும் விவாதிக்கப்பட்டன. ரோமியோலஸ் மற்றும் ரெமுஸ் ஆகிய இரு டயர் ஓநாய் குட்டிகள், மரபணு மாற்ற செயல்முறை தொடங்கிய 18 மாதங்களுக்குள் பிறந்துவிட்டன.
ஒரு உயிரினத்தின் அனைத்து டிஎன்ஏக்களின் முழுமையான தொகுப்பே மரபணுத் தொகுப்பு ஆகும். இதற்காக, கொலோசஸ் பயோசயின்சஸுக்கு டயர் ஓநாயின் டிஎன்ஏ தேவைப்பட்டது.
“72,000 ஆண்டுகள் பழமையான டயர் ஓநாயின் மண்டை ஓடு மற்றும் 13,000 ஆண்டுகள் பழமையான பல் ஒன்றும் கிடைத்தது. அதிலிருந்து டிஎன்ஏ கிடைத்தது. அதைப் பயன்படுத்தி இந்த இரு டயர் ஓநாய்களின் முழுமையான மரபணு வரிசையை உருவாக்கினோம்” என்று டாக்டர் பெத் ஷாபிரோ கூறினார்.
இந்த மரபணு வரிசை, டயர் ஓநாய் இனத்தின் நெருங்கிய இனமான சாம்பல் ஓநாய் இனத்துடன் ஒப்பிடப்பட்டது. பண்டைய டயர் ஓநாய் இனத்துடன் ஒத்த ஒரு இனத்தை உருவாக்க இந்த மரபணுவில் சில மாற்றங்களைச் செய்ததாக டாக்டர் பெத் ஷாபிரோ கூறினார்.
இந்தப் பரிசோதனையின் இறுதிக் கட்டத்தில், டயர் ஓநாயின் டிஎன்ஏவில் சாம்பல் ஓநாயின் ஜீன்கள் இணைக்கப்பட்டு கரு உருவாக்கப்பட்டது.
கருவை வளர்க்க, வளர்ப்பு நாய்கள் வாடகைத் தாய்களாக பயன்படுத்தப்பட்டன. நாய்களின் கருப்பையில் கரு செலுத்தப்பட்டது.
கருவுற்ற நாய்கள் அறுவை சிகிச்சை மூலம் ஓநாய்களை பிரசவித்தன. ஆனால், ஏன் சாம்பல் ஓநாய்களை வாடகைத் தாயாக பயன்படுத்தவில்லை என்ற கேள்வி எழுகிறதா?
நாய்களை, வாடகைத் தாய்களாகப் பயன்படுத்துவதில் தங்களுக்கு அதிக அனுபவமும் அறிவும் இருப்பதால் இது செய்யப்பட்டது என்று கூறும் டாக்டர் பெத் ஷாபிரோ, நாய்கள் உண்மையில் சாம்பல் ஓநாய்களின் மற்றொரு வடிவம் என்று சொல்கிறார்.
கடந்த காலத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள்
பட மூலாதாரம், Colossal Biosciences
இப்போது, இந்த ‘டயர் ஓநாய் குட்டிகள்’ உண்மையில் என்ன என்றும் என்னவாக இல்லை என்றும் பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
“அவை டயர் ஓநாய்கள் இல்லை என்பது உண்மைதான். நாங்கள் அவற்றை டயர் ஓநாய்கள் என்று அழைக்கிறோம், ஆனால் நீங்கள் அவற்றை Proxy Direwolf அல்லது Colossal Direwolf என்றும் அழைக்கலாம். நாங்கள் அவற்றுடன் சாம்பல் ஓநாயின் பண்புகளையும் சேர்த்துள்ளோம்” என்று டாக்டர் பெத் ஷாபிரோ கூறுகிறார்.
குளோனிங் தொழில்நுட்பத்தில் இரண்டு ஓநாய் குட்டிகள் அக்டோபர் 2024 இல் பிறந்தன, மூன்றாவது இந்த ஆண்டு ஜனவரியில் பிறந்தது. நிறுவனம் அவற்றை காட்டுக்குள் விட விரும்பவில்லை என்றும், இந்த குட்டிகள் பாதுகாக்கப்பட்ட இடத்தில் வைத்து பராமரிக்கப்படும் என்று டாக்டர் பெத் ஷாபிரோ கூறினார்.
இனப்பெருக்கம் செய்வதற்கு இவற்றைப் பயன்படுத்த தனது நிறுவனம் விரும்பவில்லை என்று அவர் கூறுகிறார். இந்த விலங்குகள் பாதுகாக்கப்பட்ட சூழலில் எவ்வாறு வளர்கின்றன என்பதைப் புரிந்துகொண்டு அவற்றை ஆரோக்கியமாக வைத்திருப்பதே நிறுவனத்தின் குறிக்கோள் என்றும் அவர் கூறுக்றார்.
இந்த செயல்முறையைப் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தவே நிறுவனம் விரும்புகிறது. பல அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்கவும் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது.
பட மூலாதாரம், Getty Images
உயிரினங்கள் எவ்வாறு அழிந்து போகின்றன?
இங்கிலாந்தின் பெல்ஃபாஸ்டில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் பரிணாம உயிரியல் பேராசிரியர் டாக்டர் டேனியல் பின்சேரா டோனோசோ கூறுகையில், வாழ்க்கையின் வரலாற்றைப் பார்த்தால், 3.7 பில்லியன் ஆண்டுகளில் பூமியில் இருந்த உயிரினங்களில் 99 சதவீதத்திற்கும் அதிகமானவை அழிந்துவிட்டன.
“மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், பூமியில் இருக்கும் 48 சதவீத விலங்கு இனங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன் பொருள், இன்று பாதுகாப்பாக இருக்கும் அந்த உயிரினங்கள் அருகிக் கொண்டே வந்தால் சில தசாப்தங்களில் அழிந்துவிடும்.”
அழிவு என்பது பகுதியளவு நிகழ்வாகவும் இருக்கலாம், அதாவது ஒரு இனம் உலகின் ஒரு பகுதியில் அழிந்துவிடும், ஆனால் மற்றொரு இடத்தில் உயிர்வாழலாம். இருப்பினும் அந்த இனம் எல்லா இடங்களிலும் அழிந்து போகும்போது, அந்த உயிரினம் அழிந்துவிடும்.
உயிரினங்கள் அழிவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்று டாக்டர் டேனியல் பின்சேரா டோனோசோ சொல்கிறார். உதாரணமாக, வேட்டையாடுதல், அல்லது அவற்றை அழிக்கும் உயிரினங்களை அவற்றின் பிரதேசத்தில் குடியேற்றுதல் மற்றும் அந்த இனங்களின் மெதுவான இனப்பெருக்க விகிதம் என ஒரு உயிரினம் அழிவதற்கான காரணங்கள் பலவாக இருக்கலாம்.
பூமியில் உயிரினங்கள் அழிவதற்கு வழிவகுத்த பெரிய அளவிலான ஐந்து சம்பவங்களை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். அதாவது, வெகுஜன அழிவுக்கு (பெரும்பாலான உயிரினங்களின் அழிவுக்கு) காரணமான சம்பவங்கள் இவை.
“இதற்கு முன்னர் நடந்த ஐந்து பேரழிவு நிகழ்வுகள், எரிமலை வெடிப்புகள், பூமியைத் தாக்கும் விண்கற்கள் அல்லது பிற இயற்கை காரணங்களால் ஏற்பட்டவை என்பதை நாம் அறிவோம். உதாரணமாக, மெக்சிகோவை விண்கல் தாக்கியதால் டைனோசர்கள் அழிந்தன” என்று டாக்டர் டேனியல் பின்செரா டோனோசோ கூறினார்.
அந்த சம்பவம் சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இதேபோன்ற நிகழ்வுகள் 205 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் 90 சதவீத உயிரினங்களை அழித்தன.
இந்த ஐந்து பேரழிவு சம்பவங்களுக்கான காரணங்கள் அறியப்படவில்லை. ஆனால் தற்போது ஆறாவது பேரழிவு நம்மை நெருங்கிவிட்டது. டாக்டர் டேனியல் பின்சேரா டோனோசோவின் கூற்றுப்படி, பூமியில் உள்ள உயிரினங்களில் குறைந்தது 70 சதவீதமாவது அழிக்கப்படும்போதுதான் வெகுஜன அழிவு ஏற்படுகிறது.
அழிந்த விலங்குகளை மீட்டல்
பட மூலாதாரம், Getty Images
நாம் இன்னும் அந்த நிலையை எட்டவில்லை என்றும், ஆனால் பல்லுயிர் பெருக்கம் வேகமாகக் குறைந்து வருவதாகவும், இப்போது நாம் பெருமளவில் அழிந்து வரும் காலகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் அவர் கூறுகிறார். வெகுஜன அழிவுக்குப் பிறகு, பூமியில் வாழ்க்கை மாறும் என்றும் அவர் கூறுகிறார்.
ஆனால் எந்த இனங்கள் அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளன?
பல பெரிய பாலூட்டிகள் அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளன என்று டாக்டர் டேனியல் பின்சேரா டோனோசோ கருதுகிறார். அவற்றில் திமிங்கலங்களில் சில வகை மற்றும் பெரிய ஆப்பிரிக்க பாலூட்டிகள் அடங்கும். ஆனால் தவளை இனங்களுக்குத்தான் மிகப்பெரிய அச்சுறுத்தல் இருப்பதாக அவர் கூறுகிறார். காலநிலை மாற்றம், நில இழப்பு மற்றும் நோய்கள் காரணமாக, தவளைகள் போன்ற நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்கள் பிற உயிரினங்களை விட மிக வேகமாக அழிந்து வருவதாக அவர் கூறுகிறார்.
அவற்றின் பல இனங்கள் அழிந்துவிட்டன, மேலும் பல அழிவின் விளிம்பில் உள்ளன. ஒரு இனத்தின் அழிவு என்பது சங்கிலித் தொடர் எதிர்வினையைத் தொடங்குகிறது. அத்துடன், அவற்றுடன் தொடர்புடைய உயிரினங்கள் பலவும் அழிந்து போகத் தொடங்குகின்றன. இதைப் பல பாகங்களைக் கொண்ட ஒரு காரின் எஞ்சினுடன் ஒப்பிடலாம். எஞ்சினில் இருந்து ஒரு சிறிய திருகு கழன்று விழுந்தால், முழு எஞ்சினுமே வேலை செய்வதை நிறுத்திவிடும். இதைப் போலவே, ஒரு உயிரினம் அருகும்போதும், அழியும்போதும் அதன் சங்கிலித் தொடர் விளைவாக பல உயிரினங்களின் இருப்பும் பாதிக்கப்படும்.
அழிந்துபோன உயிரினங்களின் மீட்சி
மரபணு எடிட்டிங் குறித்த புத்தகங்களை எழுதிய அறிவியல் பத்திரிகையாளரான டோரில் கோர்ன்ஃபெல்ட், மரபணு திருத்தம் மூலம் அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் உருவாக்கும் குறைந்தது பத்து திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன மாமூத் யானை போன்ற விலங்குகளை மீண்டும் உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். சில ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன அல்லது இன்று அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகளை உருவாக்கும் சில திட்டங்களும் தற்போது செயலில் உள்ளன.
“மீண்டும் விலங்குகள் உருவாக்கப்படும் முயற்சிகளால் மக்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர். உதாரணமாக, மாமூத், டயர் ஓநாய், டோடோ பறவை மற்றும் தற்போது அழிவின் விளிம்பில் இருக்கும் வட வெள்ளை காண்டாமிருகம் ஆகியவற்றைச் சொல்லலாம். ஆனால் அறிவியலின் உதவியுடன், ஒரு லட்சம் வெள்ளை காண்டாமிருகங்கள் உருவாக்கப்பட்டு அவை காட்டில் விடப்பட்டால், வேட்டைக்காரர்கள் ஒரே வாரத்தில் அவற்றைக் கொன்றுவிடுவார்கள். உண்மையில், இதுபோன்ற விலங்குகளின் அழிவுக்கு காரணம் வேட்டை தான். இந்தப் பிரச்னை இன்னும் தீர்க்கப்படவில்லை.”
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள புரட்சிகரமான மாற்றங்கள் மூலம் அசாத்தியங்களும் சாத்தியமாகின்றன என்றாலும், வேலை எளிதானது அல்ல.
பனியில் உறைந்து இருக்கும் மாமூத் ஒன்று கண்டறியப்பட்டதாகவும், ஆனால் அதன் டிஎன்ஏ கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் டோரில் கோர்ன்ஃபெல்ட் கூறுகிறார்.
“கடுமையாக சேதமடைந்துள்ள டிஎன்ஏவை மறுகட்டமைப்பது என்பது ஆயிரக்கணக்கான கிழிந்த பக்கங்களை ஒன்றாக இணைத்து ஒரு நாவலைப் படிக்க முயற்சிப்பது போன்றதாகும்” என்று அவர் விளக்குகிறார்.
1980களில், டிஎன்ஏவை மறுகட்டமைத்து ஆய்வு செய்யக்கூடிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. 1990களில், குளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட டோலி என்ற செம்மறி ஆடு பிறந்தது மிகப் பெரிய சாதனையாக நிரூபிக்கப்பட்டது. அதாவது ஒரு உயிரினத்தின் சரியான நகல் உருவாக்கப்பட்டது. இதைச் செய்வதற்கு உயிருள்ள செல்கள் தேவை.
2012 ஆம் ஆண்டில், மரபணு திருத்தத்திற்கான ஒரு புதிய கருவி ‘CRISPER Cas9’ கண்டுபிடிக்கப்பட்டது. அதன் உதவியுடன், கொலோசல் பயோசயின்சஸ் டயர் ஓநாய் குட்டிகளை உருவாக்கியுள்ளது.
என்னென்ன சந்தேகங்கள் உள்ளன?
பட மூலாதாரம், Getty Images
இந்தக் கருவியின் காரணமாக, மரபணு திருத்தம் மிகவும் துல்லியமானது, புரட்சிகரமான மாற்றங்கள் சாத்தியமானது என்று கூறும் டோரில் கோர்ன்ஃபெல்ட், ‘CRISPR Cas 9’ விவசாய அறிவியலிலும் பயன்படுத்தப்படுகிறது என்கிறார்.
இதுபோன்ற தொழில்நுட்பங்கள் மற்றும் முயற்சிகளால் அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் கனவு நனவாகும். ஆனால் அழிந்துபோன விலங்குகளை மீண்டும் உருவாக்க முயற்சிப்பது ஏன்?
“இதற்கு முக்கிய காரணம் அறிவியல் ஆர்வம் என்று நினைக்கிறேன். விஷயங்களைப் பரிசோதித்து உலகை நன்கு புரிந்துகொள்ளும் ஆர்வத்தின் காரணமாக, உலகில் பல நல்ல விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவை நமக்கு பயனளித்துள்ளதும் கண்கூடான விஷயம் தான். ஆனால் பல நெறிமுறை கேள்விகளும் இந்த சோதனைகளுடன் தொடர்புடையவை” என்று டோரில் கோர்ன்ஃபெல்ட் கருதுகிறார்.
அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் உருவாக்குவதால் என்னென்ன சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்?
அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள லூயிஸ் & கிளார்க் கல்லூரியின் தத்துவப் பேராசிரியர் டாக்டர் ஜே. ஓடென்போ, மரபணு திருத்தம் நிச்சயமாக ஒரு முக்கியமான தொழில்நுட்பம் என்று கூறுகிறார், ஆனால் அழிவு நீக்கம் செய்வதன் மூலம், அதாவது அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் உருவாக்குவதன் மூலம், நாம் கடவுளாக மாற முயற்சிக்கவில்லையா? என்ற கேள்வியை அவர் முன்வைக்கிறார்.
“தத்துவார்த்த ரீதியில், அதன் நன்மைகள், தீமைகளை விட அதிகமாக உள்ளதா என்பதை நாம் ஆராய வேண்டும். மேலும், அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் வைக்கப்படும் வாதங்களை நாம் மதிப்பீடு செய்ய வேண்டும். அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் உருவாக்குவதில் நெறிமுறை சிக்கல்களும் உள்ளன. இதில் பக்க விளைவுகளும் உள்ளன” என்று அவர் கூறுகிறார்.
இந்த விஷயத்தில் வெளிப்படுத்தப்படும் முக்கியமான கவலை என்னவென்றால், அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளுக்கு பொதுமக்களின் ஆதரவு குறையக்கூடும்.
“ஒரு இனம் அழிந்துவிட்டாலும், அதை மீண்டும் உருவாக்க முடியும் என்று மக்கள் நம்பத் தொடங்குவார்கள், இதுவொரு கவலை. அழிவு என்பது நிரந்தரமானது என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அந்தக் கருத்து மாறக்கூடும். எனவே அழிவு நிலையில் இருக்கும் உயிரினங்களை பாதுகாக்கும் முயற்சிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்று மக்கள் உணரத் தொடங்குவார்கள்” என்று டாக்டர் ஜே. ஓடன்போ கூறுகிறார்.
எந்த இனத்தை மீண்டும் உலகில் அறிமுகப்படுத்துவது என்பதை தீர்மானிப்பதும் முக்கியமான கேள்வி.
மாமூத் போன்ற உயிரினங்களை மீண்டும் உருவாக்கலாம் என்றால் அதற்கான காரணம், அவை பனி உருகுவதைக் குறைத்து சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் என்பதாக இருக்கும் என டாக்டர் ஜே. ஓடன்போ கூறுகிறார்.
ஆனால் அழிவு தொடர்பான அடுத்த கேள்வி என்னவென்றால், மீண்டும் உருவாக்கப்படும் விலங்குகளின் இனங்கள் அசலானதாக இருக்காது, மாறாக அவற்றை ஒத்தது போலவே இருக்கும்.
இந்த நிலையில் உயிரினங்களை மீட்டெடுப்பதன் அடிப்படை நோக்கம் நிறைவடையாது என்று டாக்டர் ஜே. ஓடென்போ நம்புகிறார். மேலும், அத்தகைய உயிரினங்களின் வாழ்க்கையும் தனிமைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம்.
மரபணு திருத்தம் மூலம் உருவாக்கப்பட்ட இந்த உயிரினங்கள் அசல் உயிரினங்களைப் போன்றவையா இல்லையா என்பதை அறிய மக்கள் ஆர்வமாக இருப்பார்கள் என்று டாக்டர் ஜே. ஓடன்போ கூறினார். அவை பாதுகாக்கப்பட்ட கூண்டுகளில் வைக்கப்படும். இனப்பெருக்கம் செய்ய முடியாவிட்டால், அவை மீண்டும் அழிந்துவிடும்.
“இந்தத் திட்டம் பாதுகாப்பிற்காக அல்ல, ஆர்வத்திற்காக மட்டுமே நடத்தப்படுகிறது என்பதையே இது குறிக்கிறது. இந்தப் பணியை மேற்கொள்வது தனியார் நிறுவனங்கள் என்பதால், பிற விஞ்ஞானிகளால் இதைப் பார்க்க முடியவில்லை.”
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், கொலோசல் பயோசயின்சஸ், டயர் ஓநாய் மீளுருவாக்கம் பரிசோதனை குறித்த தனது ஆராய்ச்சியை மதிப்பாய்வுக்காக ஒரு கல்வி இதழில் சமர்ப்பித்ததாகக் கூறியது. ஆனால் அது வெளியாக பல மாதங்கள் ஆகும்.
சரி, உயிரினங்களை மீட்டெடுப்பது சுலபமானதா? அவை அழிந்து போன உயிரினங்களாவே இருக்குமா? இந்தக் கேள்விக்கான பதில் இல்லை என்பதாகவே இருக்கும்.
தற்போது, Colossal Biosciences உருவாக்கி வளர்த்துவரும் ஓநாய்கள் முழுமையான டயர் ஓநாய்கள் அல்ல. இருப்பினும், இது அழியாத்தன்மையை வளர்ப்பதற்கான முயற்சிகளில் நிச்சயமாக முக்கியமானது என்று சொல்லலாம்.
ஒருவேளை, இதுவும் பாதுகாப்பிற்கான ஒரு புதிய ஊடகமாக மாறக்கூடும். ஆனால் அழிந்துபோன உயிரினம் ஒன்றை மீண்டும் உருவாக்குவதற்கு கடின உழைப்பும் தொழில்நுட்பமும் மட்டுமல்ல அதிக பணமும் தேவை.
அதுமட்டுமல்ல, சரியா தவறா என பல தார்மீகப் பிரச்னைகளும் இத்துடன் இணைத்து பார்க்கப்படும். அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது என்றும், ஆனால் இந்த அறிவியலைப் பாதுகாப்போடு பயன்படுத்துவது உலகில் பல்லுயிர் பெருக்கத்தைப் பராமரிக்க உதவும் என்றும் டாக்டர் பெத் ஷாபிரோ கூறுகிறார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு