பட மூலாதாரம், NARINDER NANU/AFP via Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்எழுதியவர், ஹர்மந்தீப் சிங் பதவி, பிபிசி செய்தியாளர்7 ஜூன் 2025, 03:44 GMT

புதுப்பிக்கப்பட்டது 38 நிமிடங்களுக்கு முன்னர்

இந்த கட்டுரையில் வரும் சில தகவல்கள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

“தர்பார் சாஹிப் அல்ல, தர்பார் சாஹிப் இருக்கும் இடத்துக்கு அருகில் கூட, அந்த நாட்களுக்கு பிறகு நான் செல்லவில்லை. அந்த கொடூரமான காட்சிகள், அழுகிப்போன மனித உடல்களின் வாடை இன்னும் என்னை துரத்துகின்றன்”

அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் சீக்கியர்களின் ஆன்மீக தலைமையகம். இது பொற்கோவில் அல்லது தர்பார் சாஹிப் என்றும் அழைக்கப்படுகிறது.

அமிர்தசரஸில் வசிக்கும் ஒருவர், தர்பார் சாஹிப் வளாகத்துக்கு கடந்த 41 ஆண்டுகளாக செல்லவில்லை என்றால், ஆபரேஷன் புளு ஸ்டார் நடைபெற்ற போது நிலவிய சூழல் அவர் மீது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்று கணிக்க முடியும்.

நான் அமிர்தசரஸ் நகராட்சியில் துப்புரவு ஊழியராக பணியாற்றிய 73 வயது கேவல் குமாரைப் பற்றி குறிப்பிடுகிறேன்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கைக்குப் பிறகு தர்பார் சாஹிப் வளாகத்தின் உள்ளும் வெளியும் இருந்த பிணங்களை அகற்றியவர் கேவல் குமார்.

1984-ம் ஆண்டு தர்பார் சாஹிப் வளாகத்தில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு “ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்” என்று பெயரிடப்பட்டது.

ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலே மற்றும் அவரது ஆயுதமேந்திய கூட்டாளிகளை தர்பார் சாஹிப் வளாகத்திலிருந்து வெளியேற்ற இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய அரசு கூறியது.

படக்குறிப்பு, ஆபரேஷன் புளு ஸ்டார் போது அமிர்தசரஸ் நகராட்சியில் துப்புரவு ஊழியராக பணியாற்றிய கேவல் குமார். சீக்கிய மதத்தை பரப்பும் அமைப்பான தாம்தாமி தக்சாலின் அப்போதைய தலைவராக பிந்த்ரன்வாலே இருந்தார்.

பிந்த்ரன்வாலே தர்பார் சாஹிப் வளாகத்தை தனது கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாகவும், காலிஸ்தான் என்ற தனி நாட்டை அறிவிக்கத் தயாராக இருந்ததாகவும் இந்திய அரசு கூறியது. ஆனால் பல சீக்கிய அரசியல் நிபுணர்கள், இந்த தாக்குதல் இந்திரா காந்தி அரசின் பிரிவினைவாத அரசியலின் விளைவே என்று கருதுகின்றனர்.

அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், பொது மக்கள் 493 பேர், வீரர்கள் 83 பேர் இந்த நடவடிக்கையின் போது கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மத்திய சீக்கிய அருங்காட்சியகத்தில் நடந்த தாக்குதலில் 743 பேர் உயிரிழந்திருந்தனர்.

2004-ம் ஆண்டு பிபிசியிடம் பேசியிருந்த அப்போதைய பஞ்சாப் போலீஸ் அதிகாரி அபர் சிங் பஜ்வா, 800 உடல்களை அவரே எண்ணியதாக தெரிவித்திருந்தார்.

மனித உரிமை செயற்பாட்டாளர் இந்தர்ஜித் சிங் ஜே ஜே மற்றும் பல பிரபல பத்திரிகையாளர்களும், ஆய்வாளர்களும் சுமார் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.

ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் போது நிலவிய சூழல்

ப்ளு ஸ்டார் நடவடிக்கையின் போது கேவல் குமாருக்கு வயது 32. அமிர்தசரஸ் நகராட்சியில் அலுவலகத்தில் அவரை சந்தித்தோம். அவர் ஓய்வு பெறும் போது உதவி ஆய்வாளராக இருந்துள்ளார்.

40 ஆண்டுகள் கழித்தும் அந்த நிகழ்வுகளை விவரிக்கும் போது அவரது முகத்தில் துயரம் இருந்தது.

“ஒரு இடத்தில் நான்கு பிணங்கள், மறுபுறம் 6, மற்றொருபுறம் 8 உடல்கள் இருந்தன. வெயில் அதிகமாக இருந்த நேரம் அது, உடல்கள் அழுக தொடங்கியிருந்தன. சில ஊதியும் இருந்தன” என்று கேவல் குமார் தெரிவித்தார்.

“உடல்களை தூக்கும் போது, எனது கைகளில் உடலில் இருக்கும், தோல் மட்டும் ஒட்டிக் கொள்ளும். அவ்வளவும் மோசமான நிலை இருந்தது. ஒரு துர்நாற்றம் சுற்றிலும் வீசும்” என்று அவர் மேலும் விவரித்தார்.

துப்புரவு பணியாளர்கள் எப்போது வரவழைக்கப்பட்டனர்?

அழுகிய உடல்களை அப்புறப்படுத்தும் பணியை போலீஸார் நிறுத்திவிட்டனர். அத்தகைய நெருக்கடியான சூழலில் ராணுவமும், உள்ளூர் நிர்வாகமும் துப்புரவு ஊழியர்களை இந்த பணியை செய்ய சொன்னார்கள்.

ஜூன் 6-ஆம் தேதி 1984-ம் ஆண்டு காலை, ராணுவமும் நகராட்சி நிர்வாகத்தினரும் தன்னை வேலைக்கு அழைத்துச் செல்ல வீட்டுக்கு வந்ததை நினைவு கூர்கிறார் கேவல் குமார்.

“காலை 5.30 மணி இருக்கும். எனது வீட்டு வாசலில் நான் தூங்கிக் கொண்டிருந்தேன். ராணுவ உடையில் வந்தவர்கள் என்னை எழுப்பினர். உடன் டாக்டர் ராஜ்பால் பாட்டியா என்பவர் இருந்தார். ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் நான் வெளியில் செல்வதற்கு எனக்கு பாஸ் வழங்கப்பட்டது. உடல்களை எடுத்துச் செல்ல மூன்று நான்கு தள்ளு வண்டிகள் வழங்கப்பட்டன” என்கிறார் அவர்.

“அன்று மதியமே உடல்களை அப்புறப்படுத்த ஆரம்பித்துவிட்டோம்” என்றார்.

படக்குறிப்பு, 1984-ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி காலை ராணுவத்தினர் வந்து கேவல் குமாரை அவரது வீட்டிலிருந்து அழைத்துச் சென்றனர். அமிர்தசரஸின் அப்போதைய துணை ஆணையர் ரமேஷ் இந்தர் சிங், அப்போது டாக்டர் ராஜ்பால் பாட்டியா நகராட்சி சுகாதார அலுவலராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பதை உறுதிசெய்கிறார். அவருடைய மேற்பார்வையில் தான் துப்புரவு ஊழியர்கள் உடல்களை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் குறித்து ரமேஷ் இந்தர் சிங், “Tumult in Punjab Before and After Blue Star – An Insider’s Story” என்ற நூலை எழுதியிருந்தார். அதில் கேவல் குமார் கூறுவது போன்ற பல தகவல்கள் உள்ளன.

ஜூன் 3-ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட பிறகு ஶ்ரீ ஹர்மந்திர் சாஹிப் வளாகத்தில் உயிரிழப்புகள் ஏற்பட தொடங்கின என்று ரமேஷ் இந்தர் சிங் பிபிசியிடம் பேசிய போது தெரிவித்தார்.

“ஜூன் 6-ம் தேதி ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் முடியும் போது உடல்கள் அழுக தொடங்கியிருந்தன. உடல்களை அகற்றும் பணியை பஞ்சாப் அரசு, நகராட்சி நிர்வாகத்திடம் கொடுத்திருந்தது. நகராட்சி ஆணையர் குல்வந்த் சிங் தலைமையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன” என்றார்.

படக்குறிப்பு, அமிர்தசரஸின் அப்போதைய துணை ஆணையர் ரமேஷ் இந்தர் சிங்உடல்களை அகற்றிய ஊழியர்களின் மனநிலை

வளாகத்தின் உள்ளே இருந்த காட்சியை பார்த்த பிறகு, தூக்கத்தை இழந்துவிட்டதாக உடல்களை அகற்றச் சென்ற ஊழியர்கள் கூறுகின்றனர்.

இறந்தவர்களின் உடல்களுக்கு அருகில் இருப்பது போன்று அவர் அடிக்கடி கற்பனை செய்து கொள்வார், சில நேரங்களில் அவருக்கு யாரோ பேசுவது போன்று குரல்கள் கேட்கும், சாப்பிடவோ குடிக்கவோ தோன்றாது.

“என்னால் இரவில் தூங்க முடியவில்லை, நான்கு ஐந்து நாட்களுக்கு இறந்தவர்கள் யாரோ எனது அருகில் வந்து நிற்பது போல தோன்றும். வந்து நின்று, எனது முடி எங்கே என்று என்னிடம் கேட்பது போல் தோன்றும்” என்கிறார் கேவல் குமார்.

துப்புரவு ஊழியர்கள் இந்த பணியை செய்ய மறுத்த போது, அவர்களுக்கு காவல் நிலையத்திலிருந்து மதுபானம் வழங்கப்பட்டது, மது அருந்திய பிறகு அவர்கள் இந்த பணியை செய்துள்ளனர்.

“யாராலும் இந்த பணியை செய்ய இயலாது. நாங்கள் துப்புரவு ஊழியர்கள். எங்களுக்கு வழங்கப்பட்ட உத்தரவுகளை எங்களால் மீற முடியாது” என்கிறார் கேவல் குமார்.

பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு ஊழியர், தன்னை இந்த வேலையை செய்ய ராணுவம் நிர்பந்தம் செய்ததாக கூறுகிறார். அவர் அப்போது வேலை இல்லாமல் இருந்துள்ளார். பொற்கோவிலுக்கு அருகில் குஸ்தி பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். உடல்களை அகற்ற முன்வந்தால் அவருக்கு நகராட்சியில் நிரந்தர பணி வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அது வேண்டாம் என்று நினைத்த அவர், வாய்ப்பு கிடைத்த போது அங்கிருந்து தப்பித்துவிட்டார்.

மேலும் பல துப்புரவு ஊழியர்களை சந்தித்தோம். ஆனால் அவர்கள் கேமரா முன் எதையும் பேச முன்வரவில்லை.

குடித்துவிட்டு தர்பார் சாஹிப்-ல் நுழைந்து உடல்களை திருடியதாகவும், அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதனால் தான் இப்போதும் அது குறித்து பேச அவர்கள் தயங்குகின்றனர்.

உடல்கள் எங்கே இருந்தன?

ஹர்மந்திர் சாஹிப் வளாத்திலும் அதற்கு வெளியே இருந்த சந்தைப் பகுதியிலும் உடல்கள் காணப்பட்டன என்று கேவல் குமார் கூறுகிறார்.

“தர்பார் சாஹிபின் லங்கார் அறையில் உடல்கள் இருந்தன, பரிக்ரமாவுக்குள்ளும் இருந்தன. கோதுமை மூட்டைகள் ரத்தத்தில் தோய்ந்து இருந்தன. சரோவரிலும்(குளம்) உடல்கள் இருந்தன. ஆனால் எங்கள் யாருக்கும் நீச்சல் தெரியாது என்பதால் அங்கிருந்த உடல்களை ராணுவத்தினர் எடுத்துக் கொடுத்தனர்” என்று கேவல் குமார் கூறுகிறார்.

மாய் சேவா பஜார், கதியான் அலே பஜார், ஆட்டா மண்டி, கண்டா கர் சவுக் உள்ளிட்ட இடங்களிலும் உடல்கள் கண்டறியப்பட்டன என்று அவர் கூறுகிறார். “பலர் சாதாரண பக்தர்கள் போல் இருந்தனர்” என்றார் .

உடல்களை அப்படியே குப்பை வண்டிகளில் போடுவதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை என்று கூறும் கேவல் குமார், உடல்கள் மீது போர்த்த அவர்களுக்கு துணி எதுவும் வழங்கப்படவில்லை என்கிறார்.

“ஒவ்வொரு நாளும் எங்களுக்கு இரண்டு மீட்டர் துணி வழங்கப்பட்டது, அது துர்நாற்றத்தில் வேலை செய்யும் போது எங்கள் வாய்களை மூடிக்கொள்வதற்காக மட்டுமே” என்கிறார்.

படக்குறிப்பு, ஒரு வண்டியில் பத்து உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக கேவல் குமார் கூறினார். (சித்தரிப்புப் படம்) உடல்கள் எப்படி கொண்டுசெல்லப்பட்டன?

ராணுவத்தினரின் முழு மேற்பார்வையில் உடல்கள் அகற்றப்பட்டுள்ளன. “எந்நேரமும் இரண்டு அல்லது மூன்று ராணுவ வீரர்கள் எங்களுடன் இருந்தனர்” என்று கேவல் குமார் கூறுகிறார்.

நகரம் முழுவதும் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலமும் சில ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அந்தந்த மண்டலத்தில் உள்ள உடல்களை அகற்ற குறிப்பிட்ட இடத்துக்கு ராணுவத்தினர் துப்புரவு ஊழியர்களை அழைத்து செல்வார்கள். அவர்கள் மேற்பார்வையில் உடல்கள் வண்டிகளில் ஏற்றப்படும்.

உடல்களை அகற்ற மூன்று நான்கு நாட்கள் ஆனதாக கேவல் குமார் கூறுகிறார். ஒரு நேரத்தில் ஒரு வண்டியில் பத்து உடல்களை ஏற்ற முடியும். இந்த உடல்கள் அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைக்கப்படும்.

“உடல்களை அகற்றி, தரையை சுத்தம் செய்த பிறகும் உடலின் வாடை அங்கிருந்து செல்லவில்லை. எங்கள் உடல்களிலும் அந்த வாடை ஒட்டிக் கொண்டது” என்கிறார் கேவல் குமார்.

குழந்தைகள், பெண்கள், முதியவர்களின் உடல்களும் இருந்தன என்று கேவல்குமார் தெரிவிக்கிறார். ஆனால் அவர்கள் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்று குறிப்பாக கூற இயவில்லை என்கிறார் ரமேஷ் இந்தர் சிங். “ஏனென்றால் துப்புரவு ஊழியர்கள் நிறைய உடல்களை நேரடியாக சுடுகாடிற்கு எடுத்துச் சென்றுவிட்டனர்” என்கிறார்.

ஜூன் 7 முதல் 18-ஆம் தேதி வரை 536 உடல்கள் மட்டுமே கூராய்வு செய்யப்பட்டன, அதில் 495 ஆண்கள், 33 பெண்கள், 8 குழந்தைகள் என்று ரமேஷ் சிங் தனது நூலில் எழுதியுள்ளார்.

உடல்களுக்கு நடுவே உயிருடன் இருந்தவர்கள்

உடல்களை அகற்ற தொடங்குவதற்கு முன்பாக காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். ஆனால் உடல்களுக்கு மத்தியில் சிலர் மிகுந்த காயங்களுடன் உயிரோடு இருந்துள்ளனர்.

தாரா சாஹிப் அருகே உடல்களை அப்புறப்படுத்திக் கொண்டிருக்கும் போது காயமடைந்த ஒன்றிரண்டு பேர் இருந்ததாக கேவல் குமார் கூறுகிறார். “முதலில் பார்க்க இறந்தது போல தோன்றியது. மாய் சேவா என்ற இடத்திலிருந்து தாத் சாஹிப் என்ற இடத்துக்கு செல்லும் வழியில் ஐந்து ஆறு உடல்கள் இருந்தன. ஆனால் அதில் ஒன்றிரண்டு பேர் உயிருடன் இருந்தனர். ராணுவத்தினர் அவர்களை எடுத்துச் சென்றுவிட்டனர்” என்றார்.

இறந்தவர்களுக்கு மத்தியில் உயிருடன் இருந்தவர்கள் இருந்ததை ரமேஷ் இந்தர் சிங் உறுதி செய்கிறார். ஒருவர் அமிர்தசரஸ் மருத்துவக் கல்லூரி பிணவறைக்கு உடல்களுடன் எடுத்துச் செல்லப்பட்டதாகவும், மருத்துவர்கள் அவருக்கு உடற்கூராய்வு செய்ய தொடங்கிய போது வலியில் அவர் கதறியதாகவும் கூறுகிறார். பிறகு அவர் சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

கைகள் கட்டப்பட்ட நிலையில் உடல்கள் பிணவறைக்கு கொண்டுவரப்பட்டதாக ரமேஷ் சிங் கூறுகிறார். “நான் அமிர்தசரஸ் மருத்துவ அலுவலருக்கு கடிதம் எழுதினேன். அவர் அனுப்பிய பதிலில் 8 உடல்கள் கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்த நிலையில் கொண்டுவரப்பட்டன என்று கூறினார்” என்கிறார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் போது எத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டன?

இந்த துயரம் நடந்து 41 ஆண்டுகள் கழித்தும் இதில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதில் ஒத்தக் கருத்து இல்லை. பல்வேறு தரப்பினரும் வெவ்வேறு எண்ணிக்கைகளை கூறுகின்றனர்.

இந்திய அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் பொதுமக்கள் உட்பட 493 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போதைய பஞ்சாப் ஆளுநராக இருந்த பி டி பாண்டே “In the Service of Free India” என்ற தனது நூலில் 1200 பேர் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ரமேஷ் இந்தர் சிங் தனது நூலில் 26 அப்பாவி மக்கள் உட்பட 783 பேர் உயிரிழந்ததாக கூறுகிறார். அதில் 717 உயிரிழப்புகள் பொற்கோவில் வளாகத்துக்குள் ஏற்பட்டதாக அவர் குறிப்பிடுகிறார். காயமடைந்த 178 பேரில் 102 பேர் பக்தர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கியுள்ளது. அவர்கள் 741 பயனாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

துப்புரவு ஊழியர்கள் சுமார் 1000 உடல்களை அப்புறப்படுத்தியிருப்பதாக கேவல் குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.

“சுமார் ஆயிரம் உடல்கள் இருந்திருக்கும். உடல்கள் அங்கும் இங்கும் சிதறிக் கிடந்த போது 2 ஆயிரம் இருக்கலாம் என்று தோன்றியது, ஆனால் எண்ணி பார்த்த போது கிட்டத்தட்ட 1000 இருந்தன” என்றார்.

படக்குறிப்பு, ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியின் செயலாளர் பிரதாப் சிங்உடல்கள் கையாளப்பட்ட விதம் குறித்து விமர்சனம்

உடல்கள் கையாளப்பட்ட விதம் விமர்சனத்துக்குள்ளானதாக ரமேஷ் இந்தர் சிங் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

துப்புரவு ஊழியர்களை கொண்டு, நகராட்சி வண்டிகளில் உடல்கள் ஏற்றிச் செல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது என்று அவர் எழுதுகிறார்.

இறந்தவர்கள் எப்படி குப்பை வண்டிகளில் ஏற்றிச் செல்லப்பட்டு, மொத்தமாக எரிக்கப்பட்டனர் என்பது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் சிலர் எழுதியுள்ளனர்.

அகல் தக்த் சாஹிப் கட்டிடத்தில் கழிவுகள் இருந்ததாக கூறுகின்றனர், மற்ற கட்டிடங்களும் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டன. கழிவுகள் இருந்தன. உடல்கள் இருந்தன. ராணுவத்தினரின் உடல்கள் இருந்தன. பொதுமக்களின் உடல்கள் இருந்தன.

ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியின் செயலாளர் பிரதாப் சிங் ஆபரேஷ் ப்ளூ ஸ்டார் நடவடிக்கைக்கு பின் உடல்கள் அவமதிக்கப்பட்டன என்று குற்றம் சாட்டுகிறார்.

“ஆபரேஷன் ப்ளூ ஸ்டாரின் போது உயிரிழந்தவர்களின் உடல்கள் அவமதிக்கப்பட்டன. அவர்களுக்கு குடும்பங்கள் இருந்தன. அவர்களின் உடல்கள் அவர்கள் குடும்பத்தினர் முன்னிலையில் எரிக்கப்பட்டிருக்க வேண்டும்” என்கிறார் அவர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு