சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களில் இருந்த பொருட்களில்   விடுதலை புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்குச் சொந்தமான ஆயுதங்களும் அடங்கும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில்  கூறியது ஆதாரமற்றது என்று, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏயார் மார்ஷல் சம்பத் துய்யகொண்டா தெரிவித்துள்ளார்.

பொதுமக்களை தவறாக வழிநடத்துவது ஒரு குற்றம் என்றும் துறைமுகத்திற்கு வரும் அனைத்து கொள்கலன்களும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

வைத்தியர் அர்ச்சுனாவுக்குப் பைத்தியம்!

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களில் இருந்த பொருட்களில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்குச் சொந்தமான ஆயுதங்களும் அடங்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (06.06.25) தெரிவித்தார்.

“பொருட்களை ஏற்றிச் செல்லும் கொள்கலன்கள் பிரபாகரனுடையது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனக்கு பாதுகாப்பு வழங்கப்படாததால் இதைச் சொன்னதற்காக நான் சுடப்படலாம்,” என அவர் கூறினார்.

“பிரபாகரன் 2009 க்கு முன்பு தாய்லாந்திலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய முயன்றார்,” என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கு பதிலளித்த அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர, வைத்தியர் அர்ச்சுனாவுக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாகக் கூறினார்.

“அவர் ஒரு மருத்துவராக இருக்கலாம், ஆனால் அவர் பைத்தியம் பிடித்துவிட்டது போல் தெரிகிறது,” என்று எம்.பி. மேலும் கூறினார்.