முல்லைத்தீவு – குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட   விவசாயிகள் இருவரையும் வழக்கில் இருந்து விடுவித்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இன்று கட்டளையாக்கியுள்ளது.

நீதிபதி ரீ. பிரதீபன் அவர்கள் தனது கட்டளையில், சந்தேகநபர்கள் மீது வழக்கை தொடர்ந்து நடாத்தக்கூடிய அடிப்படை முகாந்திரங்கள் இல்லை எனவும், அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசம் இன்னமும் தொல்பொருள் திணைக்களத்துக்குரிய பிரதேசம் என வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை என்பதை வழக்குத்தொடுனர்களான இலங்கை காவல்துறையினர்  ஏற்றுக்கொண்டதையும் விசேடமாகக் குறிப்பிட்டிருந்தார்.

வழக்கில் இன்றையதினம் முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தின் பத்திற்கும் அதிகமான சட்டத்தரணிகள் சந்தேகநபர்கள் சார்பாக தோன்றி வாதிட்டார்கள்.

குருந்தூர்மலையில் நிலைகொண்டுள்ள பௌத்த பிக்குவின் தூண்டுதலில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த தமிழ் விவசாயிகள் இருவர் தொல்லியல் சின்னங்களை சேதப்படுத்தியதாக குற்றஞ்சாட்டி சிறையிலடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.