Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
மும்பையில் சாத்தியமானது பெங்களூருவில் ஏன் நடக்கவில்லை? – வெற்றிக் கொண்டாட்டத்தை கையாளுவதில் தோற்றது ஏன்?
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, ஆர்சிபி அணியை வரவேற்க புதன்கிழமை பெருமளவிலான ரசிகர்கள் திரண்டனர் எழுதியவர், ஜான்வி மூலே பதவி, பிபிசி மராத்தி செய்தியாளர் 27 நிமிடங்களுக்கு முன்னர்
நேற்று (ஜூன் 4) பெங்களூருவில் நிகழ்ந்த வெற்றி கொண்டாட்டம், துயரமான நாளாக மாறியது. சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், இத்தகைய கொண்டாட்டங்கள், கூட்ட நெரிசல் சம்பவங்கள் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகமான மக்கள் கூடியதால் இச்சம்பவம் நடைபெற்றதாக அதிகாரிகளும், அரசும் கூறுகின்றனர்.
பிபிசி இந்திக்கு தகவல் தெரிவித்த காவல்துறை அதிகாரி ஒருவர், ஒரு லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2-3 லட்சம் பேர் கூடியதாக தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராஜிவ் சுக்லா ஆகியோரும், திடீரென மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்தார்.
“இந்த சம்பவம் எந்த மாநிலத்திலும் நடக்கலாம், இதை அரசியலாக்க வேண்டாம். அதிகளவில் மக்கள் கூடினார்கள், இதுகுறித்து ஆர்சிபி நிர்வாகத்திடமும் பேசினேன். இவ்வளவு அதிகமாக மக்கள் கூடுவார்கள் என்பதை அவர்களும் எதிர்பார்க்கவில்லை,” என சுக்லா தெரிவித்தார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.18 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் கிங்ஸை தோற்கடித்ததன் மூலம் ஆர்சிபி ஐபிஎல் சாம்பியனான பிறகு பெங்களூருவில் மட்டுமல்லாமல் மும்பை, புனே மற்றும் டெல்லியிலும் வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. ஏனெனில், ஆர்சிபி அணிக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது.
அப்படியான சூழலில், பெங்களூருவில் அந்த அணியை வரவேற்க ரசிகர்கள் திரள்வது இயல்புதான்.
விதான் சௌதா முதல் சின்னசாமி அரங்கம் வரை திறந்த பேருந்துகளில் அணிவகுப்பு செல்வதற்கு பாதுகாப்பை காரணம் காட்டி, போக்குவரத்து போலீசார் மறுத்தனர்.
சின்னசாமி அரங்கம் பெங்களூருவின் மையப்பகுதியில் அமைந்திருப்பதால், வாகன நிறுத்துமிட வசதி, எதிர்பார்க்கப்படும் ரசிகர்களின் எண்ணிக்கை, போக்குவரத்து நெரிசல், விபத்துக்கான ஆபத்து ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், துரதிருஷ்டவசமாக இந்த முன்னெச்சரிக்கைகள் உண்மை என நிரூபிக்கப்பட்டது.
ஒரு அணி, வெற்றி அணிவகுப்பை நடத்துவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பு நிகழ்ந்த சம்பவங்கள் நமக்கு கூறுவது என்ன?
வெற்றியும் துயரமும்
உலகம் முழுவதிலும் போருக்குப் பிறகு படையினரும் தேர்தலுக்குப் பிறகு அதில் வெற்றி பெற்றவர்களும் போட்டியில் வென்ற பிறகு விளையாட்டு வீரர்களும் வெற்றி அணிவகுப்பை நிகழ்த்துவார்கள்.
ரசிகர்களும் விளையாட்டு வீரர்களும் ஒன்றிணைந்து வெற்றியை கொண்டாடுவதே இதன் நோக்கம்.
அடிக்கடி மக்கள் வீதிகளில் இறங்கி கொண்டாடுவார்கள், ஆனால் சில சமயங்களில் இந்த கொண்டாட்டங்கள் துன்பத்தில் முடிந்துவிடுகின்றன.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஜூன் 4 அன்று நடைபெற்ற வெற்றி கொண்டாட்டம், துன்பகரமான சம்பவமாக மாறியது கால்பந்து விளையாட்டுகளில் இத்தகைய கூட்ட நெரிசல் சம்பவங்கள் பலமுறை நிகழ்ந்துள்ளன. சில தினங்களுக்கு முன்பு பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலும் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்தது.
புகழ்பெற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் கால்பந்து அணி வென்றபின் அதன் ரசிகர்கள் வீதிகளில் இறங்கினர்.
ஆனால், சிலர் இடையூறு செய்தனர், உணர்ச்சிப் பெருக்கால் பட்டாசுகளை வெடித்தனர், பேருந்துகளை சேதப்படுத்தினர், கார்களுக்கு தீ வைத்தனர். மேலும் சிலர் கூட்ட நெரிசலை பயன்படுத்திக்கொண்டு கடைகளுக்குள் நுழைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, 300க்கும் மேற்பட்டோரை போலீஸார் தடுப்புக் காவலில் வைத்தனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் கால்பந்து அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம், இந்தோனீசியாவில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் போனதால் கண்ணீர்புகை பயன்படுத்தப்பட்டது, இதில் 125 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 2001ம் ஆண்டு, கானா தலைநகர் அக்ராவில் (Accra) உள்ள மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 126 பேர் உயிரிழந்தனர். 1989ம் ஆண்டு பிரிட்டனின் ஷெஃபீல்டில் உள்ள ஹில்ஸ்போரோவ் மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் லிவர்பூல் கால்பந்து அணி ரசிகர்கள் 97 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவில் கிரிக்கெட் வெற்றி கொண்டாட்டங்கள்
இந்திய கிரிக்கெட் அணி 1971ம் ஆண்டில் பெரும் வெற்றியை பதிவு செய்தது. அந்தாண்டில் டெஸ்ட் தொடரில் முதன்முறையாக வலுவான வெஸ்ட் இன்டீஸ் அணியை தோற்கடித்து அஜித் வடேகர் தலைமையிலான இந்திய அணி வென்றது.
அதன்பின், அணியினர் சோர்வாக இருப்பார்கள் என்பதற்காக அவர்களுக்கு மும்பையில் சிறிய வரவேற்புக்கு மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால், உண்மையில் சான்டாக்ரூஸ் விமான நிலையத்தில் சுமார் 15,000 பேர் ஒன்றுகூடினர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் அங்கு ஒன்றுகூடியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தெரிவிக்கிறது.
பின்னர், மும்பையின் தெருக்களில் திறந்த காரில் அந்த அணியின் வெற்றி ஊர்வலம் நடத்தப்பட்டது. சிவாஜி பூங்கா மற்றும் கிர்கோவன் பகுதிகளில் மக்கள் அணியினர் மீது மலர் தூவியதாகவும் சாலைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதாகவும் வடேகர் ஒருமுறை நினைவுகூர்ந்தார்.
12 ஆண்டுகள் கழித்து 1983ம் ஆண்டில் இந்திய அணி கபில் தேவ் தலைமையில் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றபோதும் மும்பையில் அணியின் வெற்றி கொண்டாடப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, விதான் சௌதா முதல் சின்னசாமி அரங்கம் வரை திறந்த பேருந்துகளில் அணிவகுப்பு செல்வதற்கு பாதுகாப்பை காரணம் காட்டி, போக்குவரத்து போலீசார் மறுத்தனர்2007ம் ஆண்டில் மகேந்திர சிங் தோனியின் தலைமையில் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றபோது, விமான நிலையத்திலிருந்து பிசிசிஐயின் தலைமையகமான வான்கடே மைதானத்தை வெற்றி ஊர்வலம் அடைவதற்கு ஆறு மணிநேரமானது.
2011ம் ஆண்டில் இந்திய அணி தோனியின் தலைமையில் உலகக் கோப்பையை வென்றபோது, வான்கடே மைதானத்திலிருந்து ஹோட்டல் வரை வெற்றி ஊர்வலம் நடத்தப்பட்டது. இரவு முழுவதும் அந்த வெற்றி கொண்டாடப்பட்டது.
2024ம் ஆண்டில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய பின்னர், மும்பையில் மீண்டும் வெற்றி ஊர்வலம் நடத்தப்பட்டது. அப்போது மெரைன் டிரைவ் பகுதியில் சாதாரண நாட்களில் எட்டு முதல் 10 நிமிடங்களில் கடக்கப்படும் தொலைவை, இந்திய அணியினரின் பேருந்து அன்றைய தினம் கடக்க நான்கு மணிநேரமானது.
2024ம் ஆண்டில் நடைபெற்ற வெற்றி ஊர்வலத்தில் சுமார் 3 முதல் 4 லட்சம் பேர் திரண்டதாக கூறப்பட்டது. ஆனால், எந்தவொரு பெரிய விபத்தும் நடைபெறவில்லை. 14 பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன, மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஆனால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அந்த சமயத்தில், கூட்ட நெரிசலான தெருவில் ஆம்புலன்ஸ் ஒன்றுக்கு வழிவிடும் வீடியோ வைரலாக பரவியது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 2007ம் ஆண்டில் மகேந்திர சிங் தோனியின் தலைமையில் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றபோது, விமான நிலையத்திலிருந்து பிசிசிஐயின் தலைமையகமான வாங்ஹடே மைதானத்தை வெற்றி ஊர்வலம் அடைவதற்கு ஆறு மணிநேரமானதுஇங்கு, மும்பையால் பல ஆண்டுகள் செய்ய முடிந்ததை பெங்களூருவால் ஏன் செய்ய முடியவில்லை என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
2024ம் ஆண்டில் நடைபெற்ற வெற்றி ஊர்வலத்தில் தோராயமாக 300 காவல்துறை அதிகாரிகள் உட்பட 5,000 பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டனர்.
அந்த சமயத்தில் காவல்துறை அதிகாரிகளால் பகிரப்பட்ட தகவலின்படி, வான்கடே மைதானத்தில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து மும்பை கிரிக்கெட் சங்கம் மற்றும் பிசிசிஐயுடன் முன்னரே காவல்துறை ஆலோசித்ததாக தெரிவித்தனர்.
அன்றைய தினம், மதிய வேளையிலிருந்தே வெற்றி ஊர்வலம் நடைபெறும் பாதை மூடப்பட்டது. கூட்ட நெரிசல் அதிகமாகவே, மேலும் பல சாலைகள் மூடப்பட்டன.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதில் மும்பை காவல்துறை அனுபவம் வாய்ந்தவர்களாக உள்ளனர், அதற்கு எப்போதும் தயாரானவர்களாக உள்ளனர். ஆனால், பெங்களூருவில் நடைபெற்ற சம்பவத்திலிருந்து கற்றுக்கொள்வதற்கு நிறைய படிப்பினைகள் உள்ளன.
இந்தியாவில் சமீபத்தில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவங்கள்
மே 3, 2025: கோவாவில் நடைபெற்ற ஸ்ரீ லைரை தேவி யாத்ராவில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் ஆறு பேர் உயிரிழந்தனர், சுமார் 100 பேர் காயமடைந்தனர்.பிப்ரவரி 15, 2025: புது டில்லியில் 14 மற்றும் 15 ஆகிய நடைமேடைகளில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்தனர், 15 பேர் காயமடைந்தனர். இவர்களுள் பலரும் கும்பமேளாவில் கலந்துகொள்வதற்காக பிரயாக்ராஜ் செல்லவிருந்த பயணிகள் ஆவர்.ஜனவரி 29, 2025: கும்பமேளாவின் போது பிரயாக்ராஜின் சங்கம் பகுதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர், இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 30 பேர் உயிரிழந்தனர், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துதல்
இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால், பொது நிகழ்ச்சிகளில் அதிகளவில் மக்கள் கலந்துகொள்கின்றனர். குறிப்பாக, கிரிக்கெட் நிகச்சிகளில் கலந்துகொள்ளும் ரசிகர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக உள்ளது.
விளையாட்டு மீதான உணர்வு இந்தியாவில் அதிகமாக உள்ளது. மேலும், தங்களுக்கு பிடித்தமான வீரர்களை ஒருமுறையாவது காண வேண்டும் என விரும்புகின்றனர், அவர்களின் வெற்றியை நேரில் காண வேண்டும் என விரும்புகின்றனர். அதனால் தான் வெற்றி ஊர்வலங்களில் மக்கள் அதிகளவில் திரள்கின்றனர்.
அதனால் தான் முன்னேற்பாடுகளை திட்டமிடுவது முக்கியம் என்கிறார், மகாராஷ்டிர உளவுத்துறையின் முன்னாள் கூடுதல் காவல் ஆணையர் ஷிரிஷ் இனாம்தார்.
“இந்த திட்டமிடுதல், குறிப்பிட்ட அணி இறுதிச் சுற்றுக்கு சென்ற உடனேயோ அல்லது இறுதிச்சுற்றுக்கு சென்று விடும் என நினைக்கும் சமயத்திலோ மேற்கொள்ளப்பட வேண்டும்.”
“இதற்கு காவல்துறை, மற்ற அதிகாரிகள், கிரிக்கெட் வாரியம் மற்றும் அணியின் நிர்வாகக் குழுவினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். முதலில் என்ன நாள் மற்றும் நேரத்தில் வெற்றி ஊர்வலம் நடத்தப்படும் என்பதையும், எந்த இடத்தில் தொடங்கி எந்த பாதை வழியாக செல்லும் என்பதை தீர்மானிக்க வேண்டும்.”
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 2024ம் ஆண்டில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய பின்னர், மும்பையில் மீண்டும் வெற்றி ஊர்வலம் நடத்தப்பட்டதுநாள் மற்றும் நேரத்தை தீர்மானிக்கும்போது, அந்த நாளில் குறிப்பிட்ட பகுதியில் போக்குவரத்து நிலைமை எப்படி இருக்கும் என்பதையும் சிந்திக்க வேண்டும் என்கிறார் இனாம்தார்.
“அந்த சமயத்தில் மக்கள் வேலை முடித்து வீடுகளுக்குத் திரும்பலாம், சாலைகளில் அனைவரும் பயணம் செய்யலாம், அவர்கள் அறியாமலேயே கூட்டத்தின் ஒரு பகுதியாக மாறிவிடுவார்கள். அதன் விளைவாக குழப்பம் ஏற்படும்.”
“எனவே, வெற்றி ஊர்வலத்தை நடத்தும்போது அப்பாதையில் போக்குவரத்தை திருப்பிவிட வேண்டும், அதுகுறித்து முதலில் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.”
இவை அனைத்தையும் கருத்தில்கொண்டு, வெற்றி ஊர்வலம் நிகழ்த்தப்பட வேண்டுமா அல்லது ஓர் குறிப்பிட்ட இடத்தில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தலாமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
மும்பை போக்குவரத்து காவல்துறையில் பணிபுரியும் அதிகாரி ஒருவரும் இதே கருத்தை வலியுறுத்துகிறார்.
அதிகமாக மக்கள் கூடுவதற்கான சாத்தியக்கூறு இருந்தால், அருகிலுள்ள பகுதியில் உள்ள அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான சாத்தியம் உள்ளதா என்பதையும் சிந்திக்க வேண்டும் என்றார்.
ஊர்வலத்தில் யாரெல்லாம் அனுமதிக்கப்படுவார்கள் என்பதை முன்கூட்டியே முடிவு செய்வதும் முக்கியம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
பெங்களூரு மைதானத்திற்கு ஆன்லைனில் குறைந்த எண்ணிக்கையிலான இலவச பாஸ்கள் விநியோகிக்கப்பட்டன என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால், மைதானத்துக்குள் நுழைவதே இலவசம் எனக்கருதி, ஏராளமான மக்கள் திரண்டு வந்து மைதானத்துக்குள் நுழைய முயன்றனர்.
வருங்காலத்தில் என்ன?
ஆர்சிபி அணி வெற்ற பெற்ற மறுநாளே கொண்டாட்டத்துக்கு திட்டமிடப்பட்டதால், அதனை திட்டமிடுவதற்கான நேரம் இல்லை என்றும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியாவும் இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். “இச்சம்பவம் நம் கண்ணை திறந்துள்ளது. இப்படியான சூழலில் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும்.” என்றார்.
“அணியின் தனியார் நிகழ்ச்சிகளை இப்படியான சூழலில் பிசிசிஐ கட்டுப்படுத்த முடியாது,” என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளிடம் அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஆர்சிபி அணி வெற்ற பெற்ற மறுநாளே கொண்டாட்டத்துக்கு திட்டமிடப்பட்டதால், அதனை திட்டமிடுவதற்கான நேரம் இல்லை என்றும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்வருங்காலத்தில் இத்தகைய வெற்றி ஊர்வலங்களை நடத்துவது குறித்து பிசிசிஐ யோசித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
ஷிரிஷ் இனாம்தார் கூறுகையில், “ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு அணி வெற்றி பெறுகிறது, அந்த நகரத்தின் மக்கள் அதைக் கொண்டாட வேண்டும் என நினைக்கின்றனர். எனவே, அதுகுறித்து நாம் முன்கூட்டியே திட்டமிட வேண்டும்,” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு