உடன்கட்டை மரணத்திற்கு தயாரான ராணி அகில்யா பாய் – முடிவை மாற்றி போர்க்களங்களை வென்றது எப்படி?

பட மூலாதாரம், PRABHAT PRAKASHAN

படக்குறிப்பு, அகில்யாபாய் ஹோல்கர் ஔரங்கபாத்தில் பிறந்தார் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி இந்தி 14 நிமிடங்களுக்கு முன்னர்

மால்வாவின் ராணி அகில்யாபாய், அரசியாக மட்டுமல்ல, தனது பொதுநலப் பணிகளுக்காகவும், நிர்வாகத் திறனுக்காகவும் இன்றும் மிகுந்த மரியாதையுடன் நினைவுகூரப்படுகிறார்.

வாரணாசி காசி விஸ்வநாதர் கோவில், குஜராத்தில் உள்ள சோமநாதர் கோவில் என ஆலயங்களை புதுப்பித்தது அவரின் புகழை இந்தியாவில் பரப்பியது. ஆனால், இவற்றைத் தவிர, அவரது சிறப்பான பொதுநல சேவை மற்றும் நிர்வாகத்தில் அவரது பங்களிப்புகளின் பட்டியல் மிகவும் நீளமானது.

19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் பயணி பிஷப் ஹெபர், ‘இந்தியாவின் கருணையுள்ள சிறந்த ஆட்சியாளர் அகில்யாபாய்’ என்று வர்ணித்தார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட அன்னி பெசன்ட், “அகில்யாபாயின் ஆட்சி மால்வாவின் பொற்காலமாக நினைவுகூரப்படும். சமூக நீதி மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய சேவை மனப்பான்மை அவரை தெய்வீக நிலைக்கு உயர்த்திவிட்டது ” என்று கூறினார்.

பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் ஜான் கீயே அவரை ‘தத்துவஞானி ராணி’ என்று அழைத்தார். அகில்யாபாய் அச்சமற்ற அரசி மட்டுமல்ல, ஒரு புத்திசாலித்தனமான தலைசிறந்த ஆட்சியாளர் என்று அவர் கூறுகிறார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

1725 மே 31 அன்று மகாராஷ்டிராவின் ஔரங்காபாத் அருகே உள்ள சௌடி என்ற ஊரில் அகில்யாபாய் பிறந்தார்.

பெண் கல்வி அரிதாக இருந்த அந்த காலத்திலேயே, அகில்யாபாயின் பெற்றோர், தங்கள் மகளுக்கு கல்வி கற்பித்தது மட்டுமல்லாமல், குதிரையேற்றம், வில் வித்தை மற்றும் வாள்வீச்சு ஆகிய பல்வேறு கலைகளிலும் தேர்ச்சி பெறச் செய்தனர்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.காண்டேராவ் உடனான திருமண வாழ்க்கை

ஒருமுறை ஆலயத்துக்கு சென்றிருந்த அகில்யாபாயை, அங்கு வந்திருந்த மால்வாவின் ஆளுநர் மல்ஹார் ராவ் பார்த்தார். தன் மகன் காண்டேராவுக்கு அகில்யாபாய் பொருத்தமாகவும், சிறந்த மனைவியாகவும் இருப்பார் என்று அவருக்குத் தோன்றியது.

காண்டேராவுக்கு கல்வியில் ஆர்வம் இல்லை, படிக்காதவர் என்பதுடன், அரசு விவகாரங்களில் ஆர்வமும் இல்லாதவர்.

மல்ஹார் ராவ் விருப்பப்படி, காண்டேராவ் மற்றும் எட்டு வயது சிறுமி அகில்யாபாய் இருவருக்கும் 1733ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. காண்டேராவின் இயல்பை மாற்ற அகில்யாபாய் பல்வேறு வகையில் முயன்றாள்.

மனைவியின் தீவிர முயற்சிகள் கணவன் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. அரசு விவகாரங்களில் ஆர்வம் காட்டத் தொடங்கிய காண்டேராவ், தந்தையுடன் சேர்ந்து போர்க்களத்துக்குச் செல்லவும் தொடங்கினார்.

1745 ஆம் ஆண்டு, அகில்யாபாய்க்கு பிறந்த ஆண் குழந்தைக்கு மாலேராவ் என்று பெயர் சூட்டப்பட்டது. அதற்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அகில்யாபாய் – காண்டேராவ் தம்பதிகளுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு முக்தாபாய் என்று பெயரிட்டனர்.

1754 ஆம் ஆண்டு, கண்டேராவ் மற்றும் அவரது தந்தை மல்ஹார் ராவ் இருவரும் ராஜ்பூதானாவுக்குச் சென்றனர்.

அகில்யாபாயின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய அரவிந்த் ஜாவ்லேகர், காண்டேராவின் மரணத்தைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார்:

“ராஜ்பூதானாவின் பல அரச குடும்பங்களிடமிருந்து சௌத் எனப்படும் வரியை வசூலிக்கும் பணியில் காண்டேராவ் ஈடுபட்டிருந்தார். அவர் வரி வசூல் செய்ய பரத்பூர் சென்றார், ஆனால் மன்னர் சூரஜ்மல் வரி கொடுக்க மறுத்துவிட்டார். வரி வசூலிக்க மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தபோது, பரத்பூரைத் தாக்கினார் காண்டேராவ். பரத்பூரின் ராணுவத்தினருடனான மோதலில், அவர்கள் சுட்ட குண்டு ஒன்று காண்டேராவின் மார்பில் பாய்ந்தது, அவர் அங்கேயே இறந்தார்”.

பட மூலாதாரம், PRABHAT PRAKASHAN

படக்குறிப்பு, கணவரின் இறப்புக்குப் பிறகு அகில்யாபாய் ஹோல்கர் மக்களுக்கு சேவையாற்ற தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார் ‘சதி’ சடங்கை மேற்கொள்வதை தடுத்த மாமனார்

விஜ்யா ஜாகீர்தார் எழுதிய ‘கர்மயோகினி, லைஃப் ஆஃப் அகில்யாபாய் ஹோல்கர்’ என்ற புத்தகத்தில், தனது கணவரின் மரணத்துக்குப் பிறகு சதி சடங்கை (கணவருடன் உடன்கட்டை ஏறுதல்) மேற்கொள்ள அகில்யாபாய் முடிவு செய்ததாகவும், ஆனால் அவரது மாமனார் அகில்யாபாயை தடுத்ததாகவும் எழுதியுள்ளார்.

“தனது மருமகள் அகில்யாபாயிடம் பேசிய மல்ஹார் ராவ், நான் இதுவரை உனக்குக் கற்றுக் கொடுத்த அனைத்துக்கும் ஈடாக, உன்னிடம் ஒன்றைக் கேட்கிறேன். உன் வாழ்க்கையைக் கொடு. இந்த வயதானவன் மீது கருணை காட்டு, என்று சொல்லிவிட்டு, மல்ஹர் ராவ் தரையில் விழுந்தார்.”

தனது மாமனாரின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்த அகில்யாபாய், தனது வாழ்நாள் முழுவதையும் மக்களுக்கான சேவையில் செலவிட முடிவு செய்தார்.

பட மூலாதாரம், OCEAN BOOKS

படக்குறிப்பு, மல்ஹார் ராவ் இறப்புக்குப் பிறகு மாலேராவ் மால்வாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார், ஆனால் நிர்வாகம் அகில்யாபாயின் கைகளில் இருந்ததுமல்ஹார் ராவ் மரணம்

அகில்யாபாய் மால்வாவில் வசிக்கும் போது, பிராந்தியத்தை மிகச் சிறப்பாக நிர்வகித்ததோடு மட்டுமல்லாமல், போர்க்களத்தில் போராடிக்கொண்டிருந்த தனது மாமனாருக்கு ஆயுதங்களையும் உணவையும் அனுப்பி வைத்தார். சிறிய அளவிலான சிற்சில போர்களில் கலந்துகொண்டு, போர்க்களத்தில் சண்டையையும் அகில்யாபாய் வழிநடத்தினார்.

வயது மூப்பின் காரணமாக, மாமனாரின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது, அவரது காதுகளில் தாங்க முடியாத வலியும் ஏற்பட்டது. இறுதியில், 1766 மே 30ஆம் நாளன்று, மல்ஹார் ராவ் தனது 73வது வயதில் காலமானார்.

அதன் பிறகு, மல்ஹார் ராவின் பேரனும் அகில்யாபாயின் மகனுமான மாலேராவ், மால்வாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார், ஆனால் நிர்வாகம் அகில்யாபாயின் கைகளில் இருந்தது.

பட மூலாதாரம், MP Tourism

படக்குறிப்பு, அகில்யாபாயின் மாமனார் மல்ஹார் ராவ் மகன் மாலேராவின் இறப்பு

செல்வந்தர்களின் குடும்பங்களில் பிறந்த குழந்தைகளுக்கு இருக்கும் அனைத்து தீங்கான குணங்களும் மாலேராவிடம் இருந்தன.

அரவிந்த் ஜாவ்லேகர் இவ்வாறு எழுதுகிறார், “ஆறுகளில் குளிப்பதும் யானைகள் குளிப்பதைப் பார்ப்பதும் மாலேராவுக்கு மிகவும் பிடித்தமானது. கற்பிக்க வரும் ஆசிரியர்களின் காலணிகளில் தேள்களை மறைத்து வைப்பார், தேள்கள் அவர்களைக் கொட்டும்போது, அவர்கள் வலியால் துடிப்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைவார். ஆட்சிக்கு வந்த பிறகு, மக்களை அவர் நடத்திய விதம் மேலும் மோசமானது. அவருக்கு ஏற்பட்ட கடும் நோயை குணப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன.”

ஒன்பது மாதங்களே ஆட்சி செய்த மாலேராவ் 23 வயதில் இறந்தார்.

பட மூலாதாரம், MP Tourism

படக்குறிப்பு, அகில்யாபாயின் மகன் மாலேரோவ்திவான் கங்காதர் பதவி நீக்கம்

மாலேராவ் இறந்த பிறகு, மால்வாவின் அதிகாரம் அகில்யாபாயின் கைகளுக்கு வந்தது. ஒரு மைனர் குழந்தையைத் தத்தெடுத்து சுபேதாராக ஆக்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது, ஆனால் அவர் இந்த ஆலோசனையை ஏற்கவில்லை.

ராணி அகில்யாபாயின் இந்த முடிவால், சமஸ்தானத்தின் திவான் கங்காதர் சந்திரசூட் அதிருப்தி அடைந்தார். ஒரு ஆண் மட்டுமே அரியணையில் அமர வேண்டும் என்று அவர் விரும்பினார்.

குழந்தை இல்லாத மாலேராவ் இறந்த பிறகு, சமஸ்தானத்துக்கு முறையான வாரிசு இல்லை, எனவே பெரிய படையுடன் வந்து ராஜ்ஜியத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று ரகுநாத் பேஷ்வாவுக்கு கங்காதர் சந்திரசூட் கடிதம் எழுதினார்.

திவான் கங்காதரின் நடவடிக்கைகளை உளவாளிகள் மூலம் தெரிந்துகொண்ட ராணி அகில்யாபாய், கங்காதர் மற்றும் ரகுநாத்தின் திட்டங்களை உடனடியாக முறியடிக்க முடிவு செய்தார்.

திவான் கங்காதர் சந்திரசூட்டை பதவி நீக்கம் செய்த அவர், சமஸ்தானத்தின் நிர்வாகத்தைத் தனது கைகளில் எடுத்துக் கொண்டார்.

புதிய தலைநகராக மாறிய மகேஷ்வர்

நர்மதா நதிக்கரையில் மகேஷ்வரில் தனது புதிய தலைநகரைக் கட்டிய அகில்யாபாய், அதன்பிறகு தனது வாழ்க்கையை அங்கேயே வாழ்ந்து முடித்தார்.

அரவிந்த் ஜாவ்லேகர் இவ்வாறு எழுதுகிறார், “மகேஷ்வரில் தனக்காக அகில்யாபாய் கட்டிய வீடு, ராணியின் அரண்மனையைப் போல அல்லாமல், ஒரு ஆசிரமம் போல தோற்றமளித்தது. அது நடுத்தர வர்க்கத்தினருடையதைப் போன்ற சிறிய, சாதாரண இரண்டு மாடி வீடு. அந்த சிறிய வீட்டிலேயே, மன்னர்கள், அமைச்சர்கள், தளபதிகள் மற்றும் பொதுமக்களை அகில்யாபாய் சந்திப்பார். அந்த வீட்டில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளும் எடுக்கப்பட்டன. வீட்டில் இருந்த சிறிய பூஜையறையில் அவர் தினமும் காலையில் வழிபடுவார்.”

பட மூலாதாரம், MP Tourism

படக்குறிப்பு, மகேஷ்வரில் உள்ள அகில்யாபாயின் வீடு நிர்வாக சீர்திருத்தங்களுக்கு முக்கியத்துவம்

மால்வாவின் தலைநகரை மகேஷ்வருக்கு மாற்றிய பிறகு, நிர்வாக சீர்திருத்தங்களுக்கு அகில்யாபாய் முன்னுரிமை அளித்தார். திருடர்களிடமிருந்தும் கொள்ளையர்களிடமிருந்தும் குடிமக்களைப் பாதுகாக்கும் வகையில் சில கடினமான முடிவுகளையும் எடுக்க அவர் முடிவு செய்தார்.

தனது ஆலோசகர்களின் கூட்டத்தைக் கூட்டிய ராணி அகில்யாபாய், தனது குடிமக்களை திருடர்களிடமிருந்தும் கொள்ளையர்களிடமிருந்தும் விடுவிப்பவருக்கு தனது மகளை திருமணம் செய்து வைப்பதாக அறிவித்தார்.

வித்தியாசமான ஆனால் துணிச்சலான இந்த அறிவிப்பைக் கேட்டதும், யஷ்வந்த்ராவ் பான்ஸே என்ற இளைஞன் தன் இருக்கையிலிருந்து எழுந்தான். அனைத்து விதத்திலும் அரசு முழு ஆதரவு கொடுத்தால், ‘இந்த சவாலை ஏற்றுக்கொள்கிறேன்’ என்று அவர் கூறினார்.

திருடர்களையும் கொள்ளையர்களையும் ஒழிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டு, குறுகிய காலத்துக்குள் சமஸ்தானம் பாதுகாப்பானதாக மாறியது. தனது வாக்குறுதியை நிறைவேற்றிய அகில்யாபாய், தனது மகள் முக்தாபாயை யஷ்வந்த் ராவுக்கு திருமணம் செய்து வைத்தார்.

பட மூலாதாரம், OCEAN BOOKS

படக்குறிப்பு, ராஜ்புத் அரசர்களுக்கு எதிரான இயக்கத்தை அகில்யாபாய் தொடங்கினார் நசுக்கப்பட்ட கிளர்ச்சி

அந்த சமயத்தில், ராஜபுத் அரசர்களுக்கிடையே ராணி அகில்யாபாய்க்கு எதிராக கிளர்ச்சி உருவாகிக் கொண்டிருந்தது. அகில்யாபாயின் ஆதரவாளரான மகாத்ஜி சிந்தியா லால்செதோ போரில் தோற்கடிக்கப்பட்டார், அவரது வீரர்கள் ராஜஸ்தானிலிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதன் எதிரொலியாக ராஜஸ்தானில் மராத்தாக்களின் செல்வாக்கு குறையத் தொடங்கியது. இதைப் பயன்படுத்திக் கொண்ட ராஜ்புத் படைகள், மராத்தாக்களுக்கு எதிராக அணிதிரளத் தொடங்கின.

கிளர்ச்சி தொடர்பான செய்திகள் கிடைத்தவுடன், ராணி தனது படையுடன் சென்று ராஜ்புத் படைகளைத் தாக்கினார்.

அரவிந்த் ஜாவ்லேகர் எழுதுகிறார், “கிளர்ச்சித் தலைவர் சௌபாக் சிங் சந்திராவத் தப்பி ஓடி, ஒரு கோட்டையில் தஞ்சம் புகுந்தார். அகில்யாபாயின் ராணுவம் கோட்டையை எல்லா பக்கங்களிலிருந்தும் சுற்றி வளைத்தது. அவர்களிடம் இருந்த ‘ஜ்வாலா’ என்ற மிகவும் சக்திவாய்ந்த பீரங்கியில் இருந்து வெளியேறிய குண்டுகள் கோட்டையை அழித்தன. இறுதியாக, கிளர்ச்சித் தலைவர் சௌபாக் சிங் சந்திராவத் பிடிக்கப்பட்டு ராணியின் முன் கொண்டுவரப்பட்டார். ராணி அவரை பீரங்கியின் வாயில் கட்டி, சுட்டுக் கொல்ல உத்தரவிட்டார்.”

சந்திராவத்தின் மரணத்துக்குப் பிறகு கிளர்ச்சியாளர்கள் அனைவரும் சரணடைந்தனர். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த மற்றொரு கலகத்தில், அகில்யாபாய் நேரடியாக களத்துக்கு சென்று கிளர்ச்சியை நசுக்கினார்.

பட மூலாதாரம், PRABHAT PRAKASHAN

படக்குறிப்பு, தன் ஆதரவாளரான மகாத்ஜி சிந்தியா மீது அகில்யாபாய்க்கு மிகுந்த மரியாதை இருந்தது அகில்யாபாயின் ஆளுமை

அகில்யாபாய் கருப்பாக இருப்பார். நடுத்தர உயரமுள்ள பெண், அவருடைய கூந்தல் மிகவும் அடர்த்தியாக இருந்தது. அந்தக் காலத்தில் பர்தா அணியும் வழக்கம் இருந்தபோதிலும், முற்போக்கு சிந்தனை கொண்டிருந்த அகில்யாபாய் அதை ஒருபோதும் அணிந்ததில்லை.

ராணி உணவு உண்ணும்போதே அவருடைய உதவியாளர்களும் அவருடன் உணவு உண்பது வழக்கம். குவாலியரின் மகாராஜா மகாத்ஜி சிந்தியா மீது அவருக்கு மிகுந்த மரியாதை இருந்தது. மகாராஜா மகாத்ஜி சிந்தியாவும், அகில்யாபாயை ‘மாதோஸ்ரீ’ என்றே அழைப்பார்.

“நாள்தோறும் சூரிய உதயத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே துயிலெழும் வழக்கம் கொண்ட அகில்யாபாய், நர்மதா நதிக்கரைக்குச் சென்று குளிப்பார். அதன் பிறகு அவர் ராமாயணம், மகாபாரதம் மற்றும் வேதங்களின் பாராயணத்தைக் கேட்பார். அதன் பிறகு, பிச்சைக்காரர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தானியங்கள், உடைகள் மற்றும் பணத்தை தானம் செய்வார். அகில்யாபாயின் குடும்பத்தில் அசைவ உணவு உண்ணும் பாரம்பரியம் இருந்தபோதிலும், அவர் சைவ உணவையே சாப்பிட்டார். ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே சாப்பிடும் வழக்கம் வைத்திருந்த ராணி அகில்யாபாய் இரவு ஒரு மணி வரை விழித்திருந்து அரசு வேலைகளை செய்து முடிப்பார்” என்று அரவிந்த் ஜாவ்லேகர் எழுதுகிறார்.

பட மூலாதாரம், OCEAN BOOKS

படக்குறிப்பு, கோவில்கள் தவிர்த்து, அகில்யாபாய் பல படித்துறைகளையும் கட்டினார் பத்ரிநாத்தில் கட்டப்பட்ட தர்மசாலைகள்

ஹோல்கர் குடும்பத்தினர், தங்கள் தனிப்பட்ட மற்றும் குடும்பச் செலவுகளுக்காக அரசாங்க நிதியிலிருந்து பணம் எடுக்கவில்லை என்பது அந்த குடும்பத்தின் சிறப்பு. தங்களது தனிப்பட்ட செலவுகளுக்காக தனது சொந்த நிதியை பயன்படுத்தும் வழக்கத்தை அகில்யாபாய் வைத்திருந்தார்.

ஆலயங்கள் பலவற்றை புதுப்பித்த அகில்யாபாய், பல ஆறுகளில் படித்துறைகளைக் கட்டினார். மருத்துவமனைகள் பலவற்றைக் கட்டிய அவர், மக்களின் பயன்பாட்டுக்காக கிணறுகளையும் தோண்டினார்.

அகில்யாபாயின் ஆட்சிக் காலத்தில் சிற்பிகளுக்கும் கைவினைஞர்களுக்கும் எப்போதும் வேலை இருந்துகொண்டேயிருந்தது.

சர் ஜான் மால்கம் தனது ‘மெமரிஸ் ஆஃப் சென்ட்ரல் இந்தியா’ என்ற புத்தகத்தில் அகில்யாபாய் பற்றி இவ்வாறு எழுதியுள்ளார்: “எனது தோழர் கேப்டன் டிடி ஸ்டூவர்ட் 1818 ஆம் ஆண்டு பல சிரமங்களைச் சந்தித்து பத்ரிநாத்துக்கு சென்றார். ஆனால் பத்ரிநாத் போன்ற தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் அணுக முடியாத பகுதியில் கூட, அகில்யாபாய் யாத்ரீகர்களுக்கு தர்மசாலைகள் மற்றும் தண்ணீருக்கான ஏற்பாடுகளைச் செய்திருப்பதைக் கண்டு அவர் ஆச்சரியத்தில் திகைத்துப் போனார். ராணியின் நிதியுதவியில் தேவ்பிரயாகையில் ஒரு பொது சமையலறை நடத்தப்படுவதையும், அங்கு யாத்ரீகர்களுக்கு உணவு பரிமாறப்படுவதையும் அவர் பார்த்தார்.”

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்துக்களிடையே புனிதத்தலமாக பிரபலமான பத்ரிநாத் உள்ளது எழுபது வயதில் காலமானார் அகில்யாபாய் ஹோல்கர்

அகில்யாபாயின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் சோகமானது; தனது வாழ்க்கையின் இறுதிக்காலத்தில் முற்றிலும் தனிமையாகிவிட்டார். நோய் பாதிப்பினால் சிரமப்பட்டாலும், அவர் மருந்துகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளவில்லை. 1795 ஆகஸ்ட் 13 காலையிலிருந்து, கங்கை நீரை மட்டுமே குடித்துக்கொண்டிருந்தார் அகில்யாபாய்.

பிராமணர்களை அழைத்து அவர்களுக்கு பசுவை தானம் கொடுத்தார். தானம் கொடுத்த சிறிது நேரத்திலேயே அவர் காலமானார். அகில்யாபாயின் மரணச் செய்தி பரவியதும், மகேஷ்வரில் அவரின் இறுதித் தரிசனத்துக்காக பெரும்திரளாக மக்கள் கூடினார்கள்.

பட மூலாதாரம், OCEAN BOOKS

படக்குறிப்பு, எளிய வாழ்க்கை வாழ்ந்த அகில்யாபாய், சிறந்த அரசியல்வாதியாக கருதப்படுகிறார் அகில்யாபாயின் இறுதிச் சடங்குகள் மகேஷ்வரில் உள்ள நர்மதா நதிக் கரையில் செய்யப்பட்டன.

இந்தியாவின் மிகச்சிறந்த பெண் ஆட்சியாளர் அகில்யாபாய் என்று ஜதுநாத் சர்க்கார் கருதுகிறார்.

“ஒரு ஆட்சியாளராகவும், செல்வவளம் மிக்கவராக இருந்தபோதிலும், எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர். ஆன்மீக வாழ்க்கையை வாழ்ந்தாலும், தலைசிறந்த அரசியல்வாதியாக திகழ்ந்தவர் அகில்யாபாய்” என்று ஜதுநாத் சர்க்கார் எழுதுகிறார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு