பட மூலாதாரம், Getty Images

எழுதியவர், க. போத்திராஜ்பதவி, பிபிசி தமிழ்2 மணி நேரங்களுக்கு முன்னர்

“ஈசாலா கப் நம்தே”

இந்த கோஷம், 2025 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி ரசிகர்களுக்கு இறுதியாக நனவாகிவிட்டது. ஒருமுறை அல்ல, 3 முறை இறுதிப்போட்டி, 18 ஆண்டுகள் போராட்டம், வலி, காயம், வேதனை அனைத்தும் இந்த சீசனில் ஆர்சிபிக்கு ஆற்றப்பட்டுவிட்டது. இறுதியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக வென்றுள்ளது.

ஐபிஎல் கோப்பையில் 8வது அணியாக இனிமேல் தன்னுடைய பெயரையும் ஆர்சிபி அணி பொறித்து வரலாற்றில் இடம் பிடித்தது. ராகுல் திராவிட், அணில் கும்ப்ளே, விராட் கோலி, டூப்ளெஸ்ஸி என ஜாம்பவான்களால் நிகழ்த்த முடியாத சாதனையை அன்கேப்டு, சர்வதேச அனுபவமே இல்லாத வீரர் ரஜத் பட்டிதார் ஆர்சிபிக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.

கடந்த 18 ஆண்டுகளாக ஒரே அணிக்காக ஆடி 10 ஆண்டுகள் கேப்டன் பொறுப்பேற்று பலமுறை இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையைத் தவறவிட்ட விராட் கோலிக்கு இந்த வெற்றியின் ஆழம், மதிப்பு என்னவென்று தெரியும். அதனால்தான் கடைசிப் பந்து வீசப்பட்டவுடன் மைதானத்தின் தரையில் தலை கவிழ்ந்து கோலி தன் உணர்ச்சிகளை அடக்க முடியாமல் கண்ணீர் சிந்தி அழுதார்.

இதுபோல் விராட் கோலியை அதீத உணர்ச்சியுடன் ரசிகர்கள் பார்த்தது இல்லை. 18 ஆண்டுகள் கனவு நனவாகும்போது ஏற்படும் மகிழ்ச்சி, உழைப்பின் மதிப்பு, அர்ப்பணிப்பின் பலன் அனைத்தும் கண்ணீராக கோலியின் முகத்தில் வெளிப்பட்டது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

கோலி மகிழ்ச்சியில் “என் இளமைக் காலம், உச்சபட்ச காலம், அனுபவம் அனைத்தையும் ஆர்சிபி அணிக்காக அர்ப்பணித்துள்ளேன்” என்று தெரிவிக்கும் போது இந்த வெற்றியின் மகத்துவம் புரிந்திருக்கும்.

பஞ்சாப் பேட்டர்களுக்கு கடிவாளமிட்ட ஆர்சிபி

காணொளிக் குறிப்பு, ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் உள்ள 6வது ஆடுகளத்தில் சர்வசாதாரணமாக முதலில் பேட் செய்யும் அணி 200 ரன்களை கடந்துவிடும். அந்த வகையில் ஆர்சிபி அணியை 190 ரன்களுக்குள் கட்டுப்படுத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு சிறப்பானது. அந்த 190 ரன்களையும் டிபெண்ட் செய்து பஞ்சாப் அணியை 184 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி, 6 ரன்கள் வித்தியாசத்தில் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியின் உழைப்பு அதைவிட பாராட்டுதலுக்குரியது.

குறிப்பாக ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் குர்னல் பாண்டியா, யஷ் தயால், புவனேஷ்வர் குமார் ஆகியோரின் பந்துவீச்சு இறுதிப்போட்டியில் ஆகச் சிறந்ததாக இருந்தது. இந்த 3 வீரர்களும் ஏற்கெனவே சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் இடம் பெற்று இருந்ததால், அதில் கிடைத்த அனுபவங்களை ஆர்சிபிக்காக அள்ளிக் கொடுத்தனர்.

பட மூலாதாரம், Getty Images

இதில் குர்னல் பாண்டியா ஐபிஎல் இறுதிப்போட்டியில் 2வது முறையாக ஆட்டநாயகன் விருதை வென்றார். மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தபோது, பைனலில் சிறப்பாகப் பந்து வீசியதற்காக குர்னல் பாண்டியா முதன்முதலில் ஆட்டநாயகன் விருது வென்ற நிலையில் இந்த விருது அவருக்கு இரண்டாவதாகும்.

கடைசி ஓவரில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. பஞ்சாப் அணியும் வெற்றியை விடாது துரத்தி வந்தது. ஆனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க நேர்ந்தது, அதன் ஓட்டத்திற்குக் கடிவாளமிட்டது. ஹேசல்வுட் வீசிய முதல் இரு பந்துகள் டாட் பந்துகளாக மாறிய உடனே ஆர்சிபியின் வெற்றி கணிதரீதியாக உறுதியானது.

கடைசி ஓவரில் ஸ்டிரைக்கை தக்கவைத்த சஷாங் சிங் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து அணியை கடைசிக் கட்டம் வரை அழைத்து வந்தும் பயனில்லாமல் பஞ்சாப் 6 ரன்களில் தோற்றது. சஷாங் சிங் 30 பந்துகளில் 61 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

விராட் கோலியும் 18ஆம் எண்ணும்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆர்சிபி கோப்பை வென்ற மகிழ்ச்சியில் விராட் கோலிமைதானத்தில் அனைவரின் பார்வையும் 18ஆம் எண் அச்சடிக்கப்பட்ட ஜெர்ஸியை அணிந்திருந்த நபர் மீதுதான் குவிந்திருந்தது. 18வது சீசனில்தான் ஆர்சிபி அணிக்கு கோப்பை கிடைத்திருக்கிறது, கோலியின் ஜெர்ஸியிலும் 18. ஆகவே 18வது சீசன்தான் ஆர்சிபிக்கு அதிர்ஷ்டமாக மாறியிருக்கிறது.

இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்ற பைனலில் கோலி சேர்த்த 77 ரன்கள் எந்த அளவுக்கு முக்கியமானதாக இருந்ததோ அதே அளவுக்கு இந்தப் போட்டியில் அவர் சேர்த்த 43 ரன்களும் முக்கியமானது.

விராட் கோலியின் ரன்வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற திட்டத்தோடு பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் ஸ்லோவர் பந்துகளை அதிகமாக வீசினர். ஷார்ட் பிட்ச் பந்துகளையும், ஷார்ட் பவுன்ஸர்களையும் அதிகமாக வீசி கோலியின் ரன்சேர்ப்புக்கு கடினமான தடைகளை அமைத்தனர்.

ஆனால், அவர் அதையும் மீறி அவ்வப்போது ஃபுல்ஷாட்களை அடித்து ரன்களை சேர்த்தார். பில் சால்ட், அகர்வால், பட்டிதாருடன் சேர்ந்து 131 ரன்கள் வரை கோலி சேர்த்த பார்ட்னர்ஷிப் ஆட்டத்தின் போக்கைத் தீர்மானத்தது. ரன் சேர்க்க வேண்டும் என்ற கோலியின் தீர்க்கமான எண்ணம்தான் ஆர்சிபி ரன்ரேட்டை குறையவிடாமல் வைத்திருந்தது. கோலி ஆட்டமிழந்த பிறகுதான் பஞ்சாப் அணி விக்கெட் வீழ்த்தும் வேகத்தை அதிகப்படுத்தியது.

இந்த சீசனில் மட்டும் கோலி, 15 போட்டிகளில் ஆடி 657 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 8 அரைசதங்களும் அடங்கும்.

குர்னல் பாண்டியாவின் அனுபவம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மும்பை இந்தியன்ஸ் அணி 3 சாம்பியன் பட்டங்களை வென்ற போட்டிகளில் கிடைத்த அனுபவத்தை குர்னல் பாண்டியாவுக்கு இந்த இறுதி ஆட்டத்தில் காண்பித்தார்மும்பை இந்தியன்ஸ் அணி 3 முறை சாம்பியன் பட்டம் வென்றபோது, அந்த அணியில் குர்னல் பாண்டியா இடம் பெற்றிருந்தார். அதில் கிடைத்த அனுபவம், பந்துவீச்சு ஆகியவற்றைத்தான் இந்த இறுதி ஆட்டத்தில் காண்பித்துள்ளார்.

குர்னல் பாண்டியா சுழற்பந்துவீச்சாளர் என்றபோதிலும், களத்தில் இவர் வீசும் பந்து பெரிதாக டர்ன் ஆகாது. ஏனென்றால், குர்னல் பாண்டியா சராசரியாக 90 முதல் 100 கி.மீ வேகத்தில் பந்துவீசுவதால், பந்தில் டர்ன் இருக்காது.

ஆனால், வழக்கத்துக்கு மாறாக, இறுதிப் போட்டியில் குர்னல் பாண்டியா தனது பந்துவீச்சில் வேகத்தைக் குறைத்து 80 முதல் 85 கி.மீ வேகத்தில் பந்து வீசியதால், அவரால் ரன்கள் கொடுப்பதும் கட்டுப்படுத்தப்பட்து.

பேட்டர்கள் பெரிய ஷாட்களை குர்னல் பந்தவீச்சில் அடிப்பதும் கடினமாக இருந்தது. அவ்வாறு ஷாட் சரியாக கிடைக்கவில்லையெனில், அது கேட்சாகவும் மாறிவிடும் நிலை இருந்தது. 4 ஓவர்களை வீசிய குர்னல் பாண்டியா, 17 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்ஒரு கட்டத்தில் ஆர்சிபி அணி ஒரு விக்கெட்டுக்கு 55 ரன்கள் இருந்தற்கு இணையாக பஞ்சாப் அணியும் ஒரு விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் என நெருக்கடியாக இருந்தது.

ஆனால் குர்னல் பாண்டியாவுக்கு பந்துவீச வாய்ப்பு கொடுப்பட்டதும், வழக்கமான பந்துவீச்சை வீசாமல் பந்துவீச்சில் பல்வேறு வேரியேஷன்களையும், வேகத்தை மாற்றி அமைத்தும் பந்துவீசி குர்னல் பாண்டியா, பஞ்சாப் பேட்டர்களை திணறவிட்டார்.

குர்னல் பாண்டியாவின் பந்துவீச்சை சரியாகக் கணிக்க முடியததால்தான், பிரப்சிம்ரன் தேவையற்ற ஷாட்டை ஆடி விக்கெட்டை இழந்தார். ஜோஷ் இங்லிஸ் செட்டில் ஆகி அடிக்கத் தொடங்கும் நிலையில் அவரது விக்கெட்டையும் குர்னல் பாண்டியா வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

குர்னல் பாண்டியா எடுத்த 2 விக்கெட்டுகளும் வீசிய 4 ஓவர்களும் ஆட்டத்தில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது. அது மட்டுமின்றி 12 டாட் பந்துகளையும் குர்னல் பாண்டியா வீசித் தனது பந்துவீச்சைத் துல்லியமாக்கினார்.

ஆட்டத்தைப் புரட்டிப்போட்ட புவியின் அனுபவம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புவனேஷ்வர் குமார் வீழ்த்திய இரண்டு பெரிய விக்கெட்டுகள் ஆர்சிபி வெற்றி பெறப் பெரிதும் உதவியதுஆர்சிபி அணிக்கு எளிதான வெற்றி கிடைப்பதற்கு புவனேஷ்வர் குமாரின் கடைசிக் கட்ட பந்துவீச்சு முக்கியமானதாக அமைந்தது. புவனேஷ்வர் வீசிய 17வது ஓவரில் வைடு பந்தை அடித்து, வதேரா 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஸ்டோய்னிஷ் புவியின் ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தவுடன், அடுத்த பந்தில் தேர்டுமேன் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

புவி ஒரே ஓவரில் முக்கியமான இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தினார்.

ஜிதேஷின் கேமியோ

ஜிதேஷ் ஷர்மா 10 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரி என 24 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஜித்தேஷின் இந்த கேமியோ, ஆர்சிபி ரன்ரேட்டை சட்டென உயர்த்தியது.

ஜிதேஷ் ஷர்மா வரும்வரை பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் ஜேமிஸன், ஓமர்சாய், வைசாக் ஆகியோர் ஆர்சிபி பேட்டர்களுக்கு ஸ்லோவர் பந்துகளையும், ஆஃப் கட்டர்களையும், ஸ்லோ பவுன்சரையும் வீசித் திணற வைத்தனர். ஆனால், ஜிதேஷ் வந்தவுடன் கார்டு லென்த்தில் பந்து வீசியவர்களின் பந்துவீச்சை “ரூம் கொடுத்தும்”, ஸ்கூப் ஷாட்டில் சிக்ஸர் எனத் தேர்ந்தெடுத்தும் அடித்ததால் ரன்ரேட் உயர்ந்தது.

ஜிதேஷ் அடித்த 24 ரன்கள், ஆர்சிபி அணி 190 ரன்களை எட்டுவதற்கு முக்கிய உதவியாக இருந்தது. ஆர்சிபி அணியில் ஒரு பேட்டர்கூட அரைசதம் அடிக்காவிட்டாலும்கூட ஜிதேஷ் கடைசி நேரத்தில் கேமியோ ஆடியதுதான் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

ஹேசல்வுட் வருகை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பில் சால்ட் பிடித்த இந்த கேட்ச்தான் ஆர்சிபி பந்துவீச்சாளர்ளுக்கு நம்பிக்கையளித்ததுஆர்சிபி அணிக்குள் ப்ளே ஆஃப் சுற்றில் ஹேசல்வுட் விளையாடுகிறார் என்ற செய்தியே ஆர்சிபி அணிக்குப் பெரிய உற்சாகத்தையும், கூடுதல் பலத்தையும் உண்டாக்கியது.

இதனால்தான் முதல் தகுசிச் சுற்றில் ஸ்ரேயாஸ் பேட் செய்ய வந்தவுடன் ஹேசல்வுட்டுக்கு பந்துவீச வாய்ப்பளித்து விரைவாக வீழ்த்த முடிந்தது.

இந்த ஆட்டத்தில் ஹேசல்வுட் ஒரு விக்கெட் வீழ்த்தி 54 ரன்களை வாரி வழங்கினாலும் ஹேசல்வுட் அணிக்குள் இருந்ததே சக பந்துவீச்சாளர்களுக்கு ஊக்கமாக அமைந்தது.

பில்சால்ட் பிடித்த கேட்ச்

பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிரியன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் இருவருமே அதிரடியான தொடக்கத்தை அளித்து வெற்றியை நோக்கி அணியை விரைவுபடுத்தினர். இதனால் இருவரையும் பிரிக்க முடியாமல் ஆர்சிபி அணி திணறியது.

ஹேசல்வுட் ஓவரில் பிரயன்ஸ் ஆர்யா தூக்கி அடித்த பந்து டீப் ஸ்குயர் லெக்திசையில் சிக்ஸருக்குப் பறக்கவே அங்கிருந்த சால்ட் அருமையாக கேட்ச் பிடித்தார்.

அந்த கேட்சை பிடித்த பிறகு நிலைதடுமாறி பவுண்டரி எல்லைக்குள் அவர் செல்லவே பந்தை மேலே தூக்கி வீசி பின்னர் மைதானத்துக்குள் வந்து சால்ட் அற்புதமாக கேட்ச் பிடித்து ஆர்சிபிக்கு நம்பிக்கையளித்தார். சால்ட் பிடித்த இந்த கேட்ச்தான் ஆர்சிபி பந்துவீச்சாளர்ளுக்கு நம்பிக்கையளித்தது, மற்ற வீரர்களுக்கும் அது கடத்தப்பட்டது.

இறுதியாக 18 ஆண்டுகள் காத்திருப்பும் ஏக்கமும் முடிவுக்கு வந்து ஆர்சிபி ரசிகர்களின் கனவு நனவானது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு