உணவில் பயன்படுத்தும் சூரியகாந்தி, கடுகு எண்ணெய்கள் ஆபத்தானவையா? உண்மை என்ன?

பட மூலாதாரம், Getty Images

எழுதியவர், ஜெசிகா பிராட்லி பதவி, பிபிசி நியூஸ்7 நிமிடங்களுக்கு முன்னர்

சூரியகாந்தி மற்றும் கடுகு எண்ணெய் போன்று, விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய்கள் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்ற சர்ச்சைக்குரிய கூற்றுகள் சமீபத்தில் வெளிவந்துள்ளன. அது எந்த அளவுக்கு உண்மையானது?

உங்கள் சமையலறை அலமாரியில் எங்காவது சூரியகாந்தி எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் கொண்ட ஒரு பாட்டில் நிச்சயமாக இருக்கக்கூடும்.

அவற்றை நீங்கள் சமைக்கப் பயன்படுத்தலாம், அல்லது சாலட்களில் தெளிக்கலாம்.

விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் இன்று உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்ஆனால், தற்போது இந்த எண்ணெய்கள் குறித்துப் பலரும் இணையதளத்தில் தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பல ஆண்டுகளாக, விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் குறித்து சமூக ஊடகங்களில் எண்ணற்ற பதிவுகள் வெளிவந்துள்ளன.

இந்த எண்ணெய்கள் ‘தீங்கு விளைவிக்கும்’, ‘நச்சுத்தன்மை கொண்டவை’ மற்றும் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவை என்பதுதான் இந்தப் பதிவுகளின் சாராம்சம்.

குறிப்பாக, விதையில் இருந்து தயாரிக்கப்படும் எட்டு வகையான எண்ணெய்களை “த ஹேட்ஃபுல் எயிட்-The Hateful Eight” என விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவற்றில் கடுகு, சோளம், பருத்தி விதை, திராட்சை விதை, சோயா, அரிசி தவிடு, சூரியகாந்தி, குங்குமப்பூ போன்ற பிரபலமான எண்ணெய்களும் அடங்கும்.

இந்த எண்ணெய்கள் அனைத்தும் இதய நோய்கள் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய்க்குக் காரணமாகின்றன என்று குற்றம் சாட்டப்படுகிறது.

விதைகளில் இருந்து எடுக்கப்படும் இந்த எண்ணெய்கள் உண்மையில் நமது எதிரிகளா? அல்லது நியாயமே இல்லாமல் அவை குறை கூறப்படுகின்றனவா?

இதய ஆரோக்கியம் – சமையல் எண்ணெய் தொடர்பு என்ன?

பட மூலாதாரம், Getty Images

விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய்களில் அதிக அளவில் காணப்படும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களைப் பற்றியே பெரும்பாலான விமர்சனங்கள் எழுகின்றன.

இந்த வகை கொழுப்பு அமிலங்கள் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை. நம் உடலால் சுயமாக அவற்றை உற்பத்தி செய்ய இயலாது.

ஒமேகா-6 அமிலங்கள் நாள்பட்ட வீக்கத்தை ஏற்படுத்துவதாகவும், அது இதய நோய், புற்றுநோய் போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிப்பதாகவும் சமீபத்தில் சில விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

ஆனால், ஒமேகா-6 அமிலங்கள் வீக்கத்தை அதிகரிக்காது என்று அறிவியல் ஆய்வுகள் காட்டுவதாக மாசசூசெட்ஸில் உள்ள டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ நிறுவனத்தின் பேராசிரியரும் இயக்குநருமான டாரிஷ் மொசாஃபாரியன் கூறுகிறார்.

“ஒமேகா-6 அமிலங்கள் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட லிபோக்சின்கள் போன்ற தனித்துவமான இயற்கை மூலக்கூறுகளை உருவாக்குகின்றன என்பதை, புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது” என்று அவர் விளக்கினார்.

அமெரிக்காவில் 200,000க்கும் அதிகமான மக்களின் உணவுமுறை மற்றும் ஆரோக்கியம் குறித்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் உள்பட, தாவர அடிப்படையிலான எண்ணெய்களை உணவில் பயன்படுத்துபவர்கள் இதய நோய் அல்லது புற்றுநோயால் இறப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

மறுபுறம், அதிகளவில் வெண்ணெய் உட்கொள்பவர்களுக்கு இந்த ஆபத்து அதிகரித்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

நமது ஆரோக்கியத்தில் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் ஏற்படுத்தும் விளைவுகளை, குறிப்பாக விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்களில் உள்ள ஒமேகா-6 கொழுப்பு அமிலமான ‘லினோலிக்’ அமிலத்தை மையமாகக் கொண்டு, பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த லினோலிக் அமிலம் நமது ரத்தத்தில் உள்ள (குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் (low-density lipoprotein: LDL) ‘கெட்ட கொழுப்பை’ குறைக்கும் தன்மை கொண்டது என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் பொது சுகாதாரப் பள்ளியின் மனித ஊட்டச்சத்து பேராசிரியரான மேட்டி மார்க்லண்ட் 2019ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில், ரத்தத்தில் அதிக அளவு லினோலிக் அமிலம் உள்ளவர்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்களில் இருந்து ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களை அதிகமாக உட்கொள்வது, நோய் அல்லது இறப்பு ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்க வாய்ப்பில்லை என்று உலக சுகாதார அமைப்பு (WHO) மேற்கொண்டுள்ள ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்தபோதும், இதுகுறித்த உயர்தர ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் எவ்வாறு சுத்திகரிக்கப்படுகிறது?

பட மூலாதாரம், Getty Images

விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் ஹெக்ஸேன் என்ற வேதிப்பொருளைப் பயன்படுத்தி பிரித்தெடுக்கப்படுகின்றன என்று சில கவலைகள் உள்ளன.

கச்சா எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படுவதுதான் ஹெக்ஸேன். ஆனால், இந்தச் செயல்முறை ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.

“உணவுப் பதப்படுத்துதலில் ஹெக்ஸேன் சாற்றின் பயன்பாடு மிகவும் பொதுவானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இருப்பினும், வாசனையை நீக்குதல் மற்றும் ப்ளீச்சிங் போன்ற செயல்முறைகள் தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை நீக்குகின்றன,” என்று அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் நோய்த் தடுப்பு ஆராய்ச்சி மையத்தின் ஊட்டச்சத்து ஆய்வுகளின் இயக்குநர் கிறிஸ்டோபர் கார்டனர் கூறுகிறார்.

அழுத்தும் (crushing) முறையில் எடுக்கப்படும் விதை எண்ணெய்களில் இந்தச் (ஹெக்ஸேன் மூலம் பிரித்தெடுக்கும்) செயல்முறை இல்லை. இருப்பினும், இந்த வழியில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெயின் விலை அதிகம்.

இந்த எண்ணெய்களால் புற்றுநோய் ஏற்படுகிறதா?

பட மூலாதாரம், Getty Images

ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயப்பதாகப் பல ஆய்வுகள் கூறினாலும், சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் இந்த அமிலங்கள் ஒரு குறிப்பிட்ட வகை மார்பகப் புற்றுநோயின் வளர்ச்சியைத் தூண்டக்கூடும் என்று கண்டறிந்துள்ளனர்.

புற்றுநோய் செல்கள் உடலில் வளர்வதற்கான எரிபொருளாக, நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களைப் பயன்படுத்துகின்றன.

ஆனால், இதில் ஒமேகா-6 அமிலங்கள் வகிக்கும் பங்கை வெளிப்படுத்தும் ஆராய்ச்சிகள் குறைவாகவே மேற்கொள்ளப்படுகின்றன.

“ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் சில வழிகளில் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம் என்பதை நினைவில் கொள்வது அவசியம். நீங்கள் அவற்றை முற்றிலுமாக நீக்கிவிட்டால், பக்க விளைவுகள் ஏற்படக்கூடும்” என்று நியூயார்க்கில் உள்ள வெயில் கார்னெல் மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் முதுகலை ஆய்வாளரான நிக்கோலஸ் கொண்டோராஸ் எச்சரிக்கிறார்.

ஆரோக்கியத்திற்கு உகந்தது எது?

பட மூலாதாரம், Getty Images

கடுகு எண்ணெய் மற்றும் சோயாபீன் எண்ணெய் குறித்து வேறு எந்த விதை எண்ணெயையும்விட அதிகமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே அவை குறித்துப் போதுமான சான்றுகள் உள்ளன.

“இவை இரண்டிலும் ஆரோக்கியமான கொழுப்புகள் சமநிலையில் உள்ளன. அதில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், ஒமேகா-6 பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் ஒமேகா-3 பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் அடங்கும்,” என்று மொசாஃபாரியன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கடுகு எண்ணெய் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது என்றும், ஆலிவ் எண்ணெயைவிட ரத்தக் கொழுப்பின் அளவை சிறப்பாக மேம்படுத்துகிறது என்றும் கூறினார்.

அதோடு 27 சோதனைகளின் பகுப்பாய்வின்படி, கடுகு எண்ணெய் சூரியகாந்தி எண்ணெயைவிட மோசமான கெட்ட கொழுப்பின் (LDL) அளவை கணிசமாகக் குறைக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்றும், எடை குறைக்கும் முயற்சிகளுக்கும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சாச்சுரேட்டட் கொழுப்புகளுடன் ஒப்பிடும்போது, சோயாபீன் எண்ணெய், கொழுப்பின் அளவை மேம்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

சோயாபீன் எண்ணெயை அதிகமாக உட்கொள்பவர்களுக்குப் பிற காரணங்களால் இறப்பு ஏற்படும் அபாயம் குறைவாக இருக்கும் என்று ஓர் ஆய்வு கண்டறிந்துள்ளது.

அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டுமா?

“இயற்கை அளித்துள்ள சத்தான பரிசுகளில் விதைகளும் ஒன்று. அவை ஆரோக்கியமான கொழுப்புகளின் தொகுப்பு” என்கிறார் மொசாஃப்ரியன்.

விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்களை உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து இன்னும் கடுமையாக சோதிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

மறுபுறம், இந்த எண்ணெய்கள் ரத்தக் கொழுப்பு, குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவுகளில் ஏற்படுத்தும் நன்மைகளை ஏற்கெனவே பல ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன என்று பேராசிரியர் மார்க்லண்டும் பிறரும் கூறுகின்றனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு