ஆர்சிபி-யின் வெற்றி குறித்து விஜய் மல்லையா, சச்சின், யுவராஜ் சிங் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images

2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆர்சிபி அணியின் வெற்றிக்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

“இன்று குழந்தையைப் போல உறங்குவேன்” என வெற்றிக்குப் பிறகு உணர்ச்சி பொங்கப் பேசினார் விராட் கோலி.

இறுதிப் போட்டியைக் காண வந்திருந்த ஆர்சிபியின் ஸ்டார் பேட்டரான ஏபி டிவில்லியர்ஸ் ‘ஈ சாலா கப் நம்து’ என வெற்றியைப் பற்றி பதிவிட்டுள்ளார்.

குழந்தையைப் போல உறங்குவேன்: விராட் கோலி

ஆர்சிபி அணியின் வெற்றிக்குப் பிறகு பேசிய விராட் கோலி “ஒரு குழந்தையைப் போல உறங்குவேன்” என உணர்ச்சிப் பொங்கத் தெரிவித்தார்.

“இந்த நாள் வரவே வராது என நினைத்தேன். என் இளமை, விளையாட்டின் உச்சம் என ஆர்சிபி அணிக்காக அனைத்தையும் வழங்கினேன். அணிக்கு விசுவாசமாக இருந்தேன். இன்றைய இரவு என் வாழ்வின் சிறந்த இரவுகளில் ஒன்று. இன்றிரவு நான் ஒரு குழந்தையைப் போல உறங்குவேன்” என்றார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இறுதிப் போட்டியைக் காண வந்திருந்த ஏபி டி வில்லியர்ஸுக்கும் கோலி புகழாரம் சூட்டினார்.

“ஆர்சிபி அணிக்காக ஏபி டி வில்லியர்ஸ் செய்தது மிகவும் அதிகம். இந்த வெற்றி எந்தளவுக்கு எங்களுடையதோ அதே அளவுக்கு அவருடையதும்கூட. இந்த வெற்றியை அவரோடு சேர்ந்து கொண்டாட விரும்புகிறேன். இன்னும் அவரிடம்தான் அதிக ஆட்டநாயகன் விருதுகள் உள்ளன” என்றார்.

‘ஈ சாலா கப் நம்து’ – ரஜத் பட்டிதார்

“இது எனக்கும், விராட் கோலிக்கும், இத்தனை ஆண்டுகளாக எங்களை ஆதரித்து வந்த எங்களுடைய ரசிகர்களுக்கும் மிகவும் சிறப்பான தருணம். இது அவர்களுக்கு உரித்தானது.

பந்துவீச்சாளர்கள் தங்கள் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினார்கள். கோலிக்கு கீழ் கேப்டன்சி செய்வது எனக்கு மிகப் பெரிய வாய்ப்பு, எனக்கு இது மிகப்பெரிய கற்றலாகவும் உள்ளது. ரசிகர்களுக்காக ஒரு வரி சொல்லிக் கொள்கிறேன் – ஈ சாலா கப் நம்து” என்றார்.

‘பாதி வேலைதான் முடிந்திருக்கிறது’ – ஷ்ரேயாஸ் அய்யர்

அடுத்த ஆண்டு கோப்பையை வெல்வோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர்.

போட்டிக்குப் பிறகு பேசிய அவர், “ஆர்சிபி சிறப்பாகப் பந்து வீசினர். முக்கியமாக, குருனாலின் பந்துவீச்சு ஆட்டத்தையே மாற்றிவிட்டது. எங்கள் அணியின் இளம் வீரர்களுக்கு நன்றி.

அவர்களது பயமற்ற குணம் அணிக்கு உதவியது. எங்களுக்கு பாதி வேலைதான் முடிந்திருக்கிறது. அடுத்த ஆண்டு நிச்சயம் கோப்பையை வெல்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

‘சிஎஸ்கே வலுவான கம்பேக் தர வேண்டும்’

பட மூலாதாரம், Getty Images

ஆர்சிபி அணிக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கம்பேக் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் பதிவில், “சிறப்பாக விளையாடினீர்கள் ஆர்சிபி, ஆச்சரியங்கள் நிறைந்த தொடருக்கு ஒரு சுவாரஸ்யமான முடிவு. விராட் கோலி, நீங்கள் இந்தக் கனவைப் பல வருடங்களாகச் சுமந்தீர்கள்.

இன்று கிங் கோலி என்கிற மகுடம் உங்களுக்கு நன்றாகப் பொருந்தியுள்ளது. அடுத்த சீசனில் சென்னை அணியிடம் வலுவான கம்பேக்கை எதிர்பார்க்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 1

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 1

18ஆம் ஆண்டில் 18ஆம் எண் ஜெர்சி கோப்பை வெல்வது பொருத்தமானது: சச்சின்

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பெங்களூரு, பஞ்சாப் இரு அணிகளுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில், “முதல் கோப்பையை வென்றுள்ள பெங்களூரு அணிக்கு வாழ்த்துகள். 18ஆம் எண் கொண்ட ஜெர்சி, 18ஆம் வருடத்தில் கோப்பையை வெல்வது மிகவும் பொருத்தமாக உள்ளது. சிறப்பான தொடராக அமைந்த பஞ்சாப் அணிக்கும் வாழ்த்துகள்” என்றார்.

X பதிவை கடந்து செல்ல, 2

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 2

ஒவ்வொரு கன்னடரின் கனவையும் நனவாக்கிவிட்டீர்கள் – டிகே சிவக்குமார்

இந்த வெற்றி ஆர்சிபி படைக்கு மிகவும் உணர்வுப்பூர்வமானது என்று தெரிவித்துள்ளார் கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார்.

“இந்த வருடம் கோப்பை நம்முடையது. ஐபிஎல் இறுதிப் போட்டியில் மறக்க முடியாத வரலாற்று வெற்றியைப் பெற்ற ஆர்சிபி அணிக்கு வாழ்த்துகள். 18 வருட பேரார்வம், விசுவாசம் மற்றும் விட்டுக் கொடுக்காத நம்பிக்கை என இன்று அனைத்தும் ஒன்றாக வந்துள்ளது.

நீங்கள் ஒவ்வொரு கன்னடர்களின் கனவையும் நனவாக்கிவிட்டீர்கள். இதுவொரு வெற்றி என்பதை விடவும் மேலானது. ஒட்டுமொத்த ஆர்சிபி படைக்கும் இதுவோர் உணர்வுப்பூர்வமான தருணம்” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 3

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 3

கோலியை ஆர்சிபிக்கு தேர்ந்தெடுக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது – விஜய் மல்லையா

ஆர்சிபி ரசிகர்கள் மிகச் சிறந்தவர்கள் எனத் தெரிவித்துள்ளார் அந்த அணியின் முன்னாள் உரிமையாளரான விஜய் மல்லையா.

“நான் ஆர்சிபி அணியை நிறுவியபோது ஐபிஎல் கோப்பை பெங்களூருக்கு வர வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. புகழ்பெற்ற கிங் கோலியை அணியில் தேர்ந்தெடுக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

மேலும் அவர் 18 ஆண்டுகளாக ஆர்சிபியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. எனது கனவை நனவாக்கிய அனைவருக்கும் வாழ்த்துகள், நன்றி. ஆர்சிபி ரசிகர்கள் மிகச் சிறந்தவர்கள். ஈ சாலா கப் பெங்களூரு பருதே!”

கர்நாடகாவின் பெருமையை உயர்த்திய வெற்றி – சித்தராமையா

ஆர்சிபியின் வெற்றி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை உற்சாகமூட்டியுள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா பதிவிட்டுள்ளார்.

தனது எக்ஸ் பதிவில் “வரலாற்று ஐபிஎல் வெற்றி பெற்ற ராயஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு வாழ்த்துகள். ஈ சாலா கப் நம்தே என்கிற கனவு இறுதியாக நனவாகியுள்ளது.

அசர வைக்கும் ஃபெர்மன்ஸ் தொடங்கி அசைக்க முடியாத நம்பிக்கை வரை, இந்த வெற்றி கர்நாடகாவின் பெருமையை உயர்த்தி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை உற்சாகமூட்டியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 4

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 4

நீண்ட காத்திருப்புக்கு உரித்தான வெற்றி – யுவராஜ் சிங்

ஆர்சிபி அணியின் வெற்றி மனதுக்கு நிறைவாக இருப்பதாக அந்த அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். யுவராஜ், பஞ்சாப் மற்றும் பெங்களூரு என இரு அணிகளுக்கும் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“இது மிக நீண்ட காத்திருப்பு, ஆனால் சிறந்த கதைகள் அதற்கு உரித்தானவை. 18 ஆண்டுகள் கழித்து ஜெயிப்பதற்கு திறமை மட்டும் போதாது. அதற்கு நம்பிக்கை, உறுதி மற்றும் வெறி வேண்டும். இந்த அனைத்து சீசன்களிலும் ஒரு அணி மற்றும் அந்த ஒரு கனவின் மீதிருந்த நம்பிக்கையே அதற்குக் காரணம்.

இந்தப் பாரம்பரியத்தைச் செதுக்க உதவிய டி வில்லியர்ஸ் மற்றும் கெயில் மைதானத்தில் அணிக்காக உற்சாகப்படுத்தியது சிறப்பான தருணம். பஞ்சாப் அணி அச்சமில்லாத கிரிக்கெட் விளையாடியது. இது கடினமானதுதான். சிறப்பான குறிக்கோளுடன் விளையாடி மிக நெருக்கமாக வந்துள்ளார்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 5

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 5

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு