Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
“கர்நாடகாவில் தக் லைஃப் தற்போது வெளியாகாது” – கன்னட மொழி குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மறுத்த கமல் ஹாசன்
பட மூலாதாரம், @RKFI
படக்குறிப்பு, நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார்19 நிமிடங்களுக்கு முன்னர்
கன்னட மொழி குறித்த தனது கருத்துக்கு நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்ததை அடுத்து, கர்நாடகாவில் “தக் லைஃப்” திரைப்படத்தின் வெளியீடு ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
“தமிழில் இருந்து பிறந்தது கன்னடம்” என ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேசியதற்கு கர்நாடகாவில் பெரும் எதிர்ப்பு எழுந்தது.
வரும் ஜூன் 5ஆம் தேதி, தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பாக இதுகுறித்து பேசிய கர்நாடகாவின் கன்னடம் மற்றும் கலாச்சார அமைச்சர், “கமல்ஹாசனின் கருத்தால் கன்னட மக்களின் மனம் புண்பட்டுள்ளது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரின் படத்தைக் கர்நாடகாவில் தடை செய்வோம்” எனத் தெரிவித்தார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா, பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (மே 30) அன்று, கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்காவிட்டால், ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ள கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தினை புறக்கணிப்போம் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவித்தது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
அதற்கு பதிலளித்த நடிகர் கமல்ஹாசன், “இதற்கு முன்பும் மிரட்டப்பட்டிருக்கிறேன். நான் தவறு செய்திருந்தால், மன்னிப்பு கேட்பேன். இல்லையென்றால், நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். இது என்னுடைய வாழ்க்கை முறை, தயவுசெய்து இதில் தலையிடாதீர்கள்.” என்று கூறியிருந்தார்.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு
பட மூலாதாரம், @RKFI
படக்குறிப்பு, வரும் ஜூன் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் தக் லைஃப் திரைப்படம், கர்நாடக மாநிலத்தில் மட்டும் வெளியாகாதுஇதையடுத்து ‘தக் லைஃப்’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதற்கு போலீஸ் பாதுகாப்பு கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நேற்று (ஜூன் 2) மனு தாக்கல் செய்தது.
“கர்நாடகாவில் தக் லைஃப் படத்தைத் திரையிட தடை விதித்திருப்பது சட்டத்துக்கு எதிரானது. எனவே, தடையை நீக்கி, திரையிட அனுமதிக்க வேண்டும். திரையரங்கங்களுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு கர்நாடக அரசுக்கும், போலீஸுக்கும் உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
லைவ் லா (Live Law) இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்களின் படி, இந்த மனுவை இன்று காலை கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி எம். நாகபிரசன்னா விசாரித்தார். கமல்ஹாசன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் தியான் சின்னப்பா ஆஜரானார்.
அப்போது பேசிய நீதிபதி எம். நாகபிரசன்னா, “இந்த நாடு மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கிறது. பொது வெளியில் இருக்கும் ஒரு நபர் இவ்வாறு பேசக் கூடாது.” எனக் கூறினார்.
மேலும், “கர்நாடகா மக்கள் மன்னிப்பை மட்டுமே கேட்கிறார்கள். தற்போது நீங்கள் பாதுகாப்புத் தேடி இங்கே வந்திருக்கிறீர்கள். தற்போதைய சூழ்நிலை கமல்ஹாசனால் உருவாக்கப்பட்டது. மேலும், அவர் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியுள்ளார்.
நீங்கள் கர்நாடக மக்களின் உணர்வுகளை குறைத்து மதிப்பிட்டுள்ளீர்கள். எந்த அடிப்படையில் இதைச் செய்தீர்கள்? நீங்கள் வரலாற்றாய்வாளரா அல்லது மொழியியல் அறிஞரா?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதி எம். நாகபிரசன்னா, ‘கர்நாடக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதால், தன்னுடைய கருத்துக்களுக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவேண்டுமென’ அறிவுறுத்தினார்.
மீண்டும் மதிய வேளையில் நீதிமன்றம் கூடியபோது, நடிகர் கமல்ஹாசனின் வழக்கறிஞர் தியான் சின்னப்பா, கர்நாடகா திரைப்பட வர்த்தக சபைக்கு கமல்ஹாசன் அனுப்பிய கடிதத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
கடிதத்தில் கமல்ஹாசன் கூறியது என்ன?
படக்குறிப்பு, கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் நரசிம்மலுவுக்கு நடிகர் கமல்ஹாசன் எழுதியுள்ள கடிதம்கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் நரசிம்மலுவுக்கு நடிகர் கமல்ஹாசன் இன்று (ஜூன் 3) எழுதியுள்ள கடிதத்தில், கன்னடம் குறித்த தனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், “புகழ்பெற்ற டாக்டர் ராஜ்குமாரின் குடும்பத்தினர், குறிப்பாக சிவ ராஜ்குமார் மீது உண்மையான பாசத்துடன் ‘தக் லைஃப்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது எனக்கு வேதனை அளிக்கிறது. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும், கன்னடத்தை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடுவது என் நோக்கம் அல்ல என்பதையும் தெரிவிப்பதுதான் நான் சொன்ன வார்த்தைகள்.
கன்னட மொழியின் வளமான பாரம்பரியத்தில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. தமிழைப் போலவே, கன்னடமும் நான் நீண்ட காலமாகப் போற்றும் பெருமைமிக்க இலக்கியம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “தமிழ், கன்னடம், தெலுகு, மலையாளம் மற்றும் இந்த நாட்டின் அனைத்து மொழிகளுடனும் எனக்குள்ள பிணைப்பு நிலையானது மற்றும் இதயப்பூர்வமானது.” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், “சினிமா என்பது மக்களுக்கு இடையே ஒரு பாலமாக இருக்க வேண்டும். ஒருபோதும் அவர்களைப் பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது. இதுவே எனது இந்த அறிக்கையின் நோக்கம்.” என்று தெரிவித்துள்ளார்.
“எனது வார்த்தைகள், அவற்றுக்கான உண்மையான நோக்கத்துடன் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், கர்நாடகா, அதன் மக்கள் மற்றும் அவர்களின் மொழி மீதான எனது உண்மையான பாசம் அங்கீகரிக்கப்படும் என்றும் நான் மனதார நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
ஜூன் 10ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு
பட மூலாதாரம், @RKFI
கர்நாடகா திரைப்பட வர்த்தக சபைக்கு கமல்ஹாசன் அனுப்பிய கடிதத்தை மேற்கோள் காட்டி பேசிய கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி எம். நாகபிரசன்னா, “இந்த கடிதத்தில் ‘மன்னிப்பு’ என்ற வார்த்தை காணப்படவில்லை” என்று கூறினார்.
அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் தியான் சின்னப்பா, “கட்டாயப்படுத்துவது என்பது இருக்கக்கூடாது” என்றார்.
“இது கட்டாயப்படுத்துவது அல்ல, அவருக்கு இருக்கவேண்டிய பண்பு. அவர் ஏன் சுற்றிவளைத்துப் பேசுகிறார்?” என்று கேள்வியெழுப்பினார் நீதிபதி.
அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் “கன்னட மொழியின் மீது அவருக்கு மிகுந்த மரியாதை உண்டு என்பது தான் அவரது நிலைப்பாடு.” என்று கூறினார்,
“அதைத் தெளிவுபடுத்த பல வழிகள் உள்ளன. மன்னிப்பு கேட்க ஒரே ஒரு வழிதான் உள்ளது. இங்குதான் நீங்கள் ஈகோவை பற்றிக்கொண்டிருக்கிறீர்கள். மாநில மக்களின் உணர்வுகள் தான் குறைமதிப்பிற்கு உள்படுத்தப்பட்டுள்ளன. பிரச்னையின் அளவை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது வேறு எதற்கோ வழிவகுக்கும். மன்னிப்புக் கேட்டு இந்த விஷயத்தை முடித்து வைத்தால் என்ன?” என்று கூறினார் நீதிபதி.
“கமல் ஹாசன் சொல்ல வேண்டிய அனைத்தையும் தெரிவித்துவிட்டார். நிலைமை இப்படியே தொடர்ந்தால், அவர் கர்நாடகாவில் தனது படத்தை வெளியிட விரும்பவில்லை” என்று வழக்கறிஞர் தியான் வாதத்தை முடித்துக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, மனுதாரர் தனது படத்தை தற்போது கர்நாடகாவில் வெளியிட விரும்பவில்லை என்பதை பதிவு செய்து கொண்ட கர்நாடக உயர்நீதிமன்றம், அனைத்து தரப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் வரை வழக்கை ஒத்திவைக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
வரும் ஜூன் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் தக் லைஃப் திரைப்படம், கர்நாடகா மாநிலத்தில் மட்டும் வெளியாகாது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு