காசாவில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக உதவிக்காகக் காத்திருந்த பாலஸ்தீன பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சாட்சிகளும் நிவாரணப் பணியாளர்களும் தெரிவித்தனர். குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தெற்கு காசா நகரமான ரஃபாவில் உள்ள அல்-ஆலம் ரவுண்டானா அருகே அச்சுறுத்தலை ஏற்படுத்திய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஐ.டி.எஃப் தெரிவித்துள்ளது. இந்த இடம் சர்ச்சைக்குரிய அமெரிக்க ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) உதவி மையத்தால் நடத்தப்படும் உதவி மையத்திற்கு அருகில் உள்ளது.

ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்களால் சுடப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தார். காசாவில் மிகக் குறைந்த அளவிலான உணவு உதவியைப் பெற முயற்சிக்கும் கலக்கமடைந்த பொதுமக்கள் மீதான கொடிய தாக்குதல்கள் மனசாட்சிக்கு விரோதமானவை. பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறலாகவும், போர்க்குற்றமாகவும் அமைகின்றன என்று கூறினார்.

காசாவில் உள்ள உதவி விநியோக தளத்திற்கு அருகில் டஜன் கணக்கான பாலஸ்தீனியர்கள் இறந்தது குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் திங்களன்று அழைப்பு விடுத்தார். 

காசாவில் உதவி தேடும் போது பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு காயமடைந்ததாக வெளியான செய்திகளால் தான் திகைத்துப் போனதாக குட்டெரெஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

உணவுக்காக பாலஸ்தீனியர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஐ.நா. தலைவரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுகள் குறித்து உடனடி மற்றும் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகள் பொறுப்புக்கூறப்பட வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்று குட்டெரெஸ் கூறினார்.

ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்ஸின் அறிக்கைக்கு இஸ்ரேலிடமிருந்து கடுமையான பதிலை வழங்கியது.

 குட்டெரெஸின் அறிக்கையை அவமானம் என்று இஸ்ரேலின்  வெளியுறவு அமைச்சகம் கண்டித்தது. மேலும் பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸின் பங்கைப் புறக்கணித்ததற்காக அவரை விமர்சித்தது.

 ஹமாஸ் தான் பொதுமக்களைச் சுட்டுக் கொன்றது. அவர்கள் உதவிப் பொதிகளை சேகரிப்பதைத் தடுக்க முயற்சித்தது என்ற உண்மையைக் குறிப்பிடவில்லை என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஓரன் மார்மோர்ஸ்டீன் எக்ஸ் தளத்தில் எழுதினார்.

இவரது கூற்றை காசாக் களத்திலிருந்து எந்தவகையிலும் உறுதி செய்யமுடியவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.