Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பட மூலாதாரம், Getty Images
21 நிமிடங்களுக்கு முன்னர்
இன்றைய (03/06/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 4,000-ஐ நெருங்கியுள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில் “, இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவி வருகிறது. நேற்று காலை நிலவரப்படி இதுவரை நாடு முழுவதும் 3,961 பேருக்கு தொற்று பாதித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று காலை 8:00 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் புதிதாக 203 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
டெல்லி தமிழ்நாடு மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் தலா ஒருவர் என நான்கு பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஜனவரி 1 முதல் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32-ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் இணை நோய் உள்ளவர்கள் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது,” எனக் கூறப்பட்டுள்ளது.
அதோடு, கொரோனா பரவலில் கேரளா, 1,435 பேருடன் முதலிடத்தில் உள்ளதாகவும், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 506, டெல்லியில் 483, குஜராத்தில் 338, மேற்கு வங்கத்தில் 331, கர்நாடகாவில் 253, தமிழ்நாட்டில் 189 பேருக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்து தமிழ் செய்தி கூறுகிறது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.கொரோனாவின் என்.பி.1.8.1, எல்எப்.7 ஆகிய ஒமிக்ரான் வகை வைரஸ்களே இப்போதைய பரவலுக்கு முக்கியக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் கொரோனா பரவல் குறித்த அச்சம் தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
இதுகுறித்துப் பேசிய டெல்லி எய்ம்ஸ் சமுதாய மருத்துவ மையத்தின் கூடுதல் பேராசிரியர் டாக்டர் ஹர்ஷல் சால்வே, “இப்போது பரவி வரும் தொற்றால் மருத்துவமனைகளுக்குக் கூடுதல் சுமை ஏற்பட வாய்ப்பு இல்லை. பெரும்பாலானவர்களுக்கு இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி இருப்பதால் தீவிர பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை” என்றார்.
மத்திய சுகாதார ஆயுஷ் துறை இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் கொரோனா பரவல் பற்றிக் கூறும்போது, “அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவல் நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறையும் ஆயுஷ் அமைச்சகமும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. முந்தைய கொரோனா தாக்கத்தின்போது உருவாக்கப்பட்ட ஆக்சிஜன் ஆலைகள் ஐசியு படுக்கைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மறு ஆய்வு செய்து வருகிறோம். எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்க சுகாதாரத் துறை தயாராக உள்ளது,” என்றார் எனவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாட்ஸ்ஆப் ஸ்டேடஸ் கண்டு கல்லூரி மாணவியை கொன்ற முன்னாள் காதலன்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கோவையைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி முன்னாள் காதலனால் கொலை செய்யப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில், “வடுகபாளையத்தைச் சேர்ந்த கே அஷ்விகா பொள்ளாச்சியைச் சேர்ந்த 25 வயது ஆர் பிரவீன் குமார் என்பவரால் கொலை செய்யப்பட்டுள்ளார். பிரவீன் குமார் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். பிரவீன் குமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வடுகபாளையத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தபோது அஷ்விகாவை காதலித்து வந்துள்ளார். இது இரண்டு குடும்பத்தினருக்கும் தெரியும்.
இந்நிலையில் அஷ்விகா தனது கல்லூரியில் படிக்கும் ஆண் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வாட்ஸ் ஆப் ஸ்டேடஸாக வைப்பதற்கு பிரவீன் குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் அஷ்விகா அதைத் தொடர்ந்து செய்து வந்துள்ளார்,” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்தச் செய்தியில், இரண்டு மாதங்களுக்கு முன்பாகத் தனது நெருங்கிய உறவினரின் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வாட்ஸ் ஆப் ஸ்டேடஸ் ஆக வைத்துள்ளார். இது குறித்து பிரவீன்குமார் அஷ்விகாவின் பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
தங்கள் மகளை சந்தேகப்படும் வகையில் நடந்து கொள்வதால், அவர்களின் காதல் விவகாரத்தை நிறுத்திக் கொள்ளுமாறு அஷ்விகாவின் பெற்றோர் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர்களின் காதல் உறவு முறிந்தது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், “அஷ்விகா திங்கள்கிழமை தனது வாட்ஸ் ஆப் ஸ்டேடஸில் மிகவும் வெறுக்கத்தக்க மனிதர் என்று குறிப்பிட்டு, அனிமேட் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த புகைப்படத்தைப் பார்த்த பிரவீன்குமார் மிகவும் கோபமடைந்துள்ளார்.
அஷ்விகாவின் இல்லத்திற்குச் சென்று அவர் தனியாக இருக்கும்போது அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் சிறிய கத்தியால் அவரது கழுத்தில் தாக்கியுள்ளார். அந்தச் சிறிய கத்தி உடைந்து போகவே, சமையல் அறையில் இருந்த கத்தியைக் கொண்டு வந்து அவரைத் தாக்கியுள்ளார். அஷ்விகா மயங்கி விழுந்த பிறகு, பிரவீன் குமார் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்,” என்று அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
அஷ்விகாவின் தந்தை கண்ணன் மதியம் வீட்டுக்குத் திரும்பியபோது தனது மகள் ரத்தக் காயங்களுடன் மயங்கிய நிலையில் இருப்பதைப் பார்த்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டதாக செய்தியில் கூறப்பட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு