Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தனித்துவமான கேப்டன்சி: சவாலை முன்னின்று எதிர்கொண்டு பஞ்சாபை பைனலுக்கு அழைத்துச் சென்ற ‘தனி ஒருவன்’
பட மூலாதாரம், Getty Images
எழுதியவர், க. போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர்
2025 ஐபிஎல் சீசனில் சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும் நாளை நடக்கும்(3ம்தேதி) இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணியுடன் மோதுகிறது பஞ்சாப் கிங்ஸ் அணி.
ஆமதாபாத்தில் நேற்று நடந்த 2வது தகுதிச் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து பஞ்சாப் அணி 11 ஆண்டுகளுக்குப் பின் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. கடைசியாக கடந்த 2016-ஆம் ஆண்டு பைனலுக்கு பஞ்சாப் தகுதியாகி இருந்தது.
முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கல் சேர்த்திருந்தது. 204 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி ஒரு ஓவர் மீதமிருக்கையில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
தனி ஒருவன்
அதிக பரபரப்பு நெருக்கடி மிகுந்த இதுபோன்ற போட்டிகளில் 200 ரன்களை பதற்றமின்றி சேஸ் செய்வது என்பது கடினமானது. ஆனால், அந்த இலக்கை ஒற்றை மனிதராக இருந்து பவர்ப்ளே முடியு ம்போது களத்துக்கு வந்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தார் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர். ஸ்ரேயாஸ் ஆட்டமிழக்காமல் 41 பந்துகளில் சேர்த்த 87 ரன்களில் 8 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும். மும்பை பந்துவீச்சாளர்களை ஓடவிட்ட ஸ்ரேயாஸ் அய்யர் 212 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி அணியின் வெற்றிக்கு தூணாக இருந்தார். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
பும்ரா யார்க்கருக்கு பதிலடி
ஐபிஎல் சீசனில் ஆபத்தான பந்துவீச்சாளராக, சர்வதேச அளவில் பேட்டர்கள் பேட் செய்வதற்கு கடினமான பந்துவீச்சாளராக அறியப்படுபவர் ஜஸ்பிரித் பும்ரா. குஜராத் அணிக்கு எதிராக வாஷிங்டன் சுந்தருக்கு எதிராக பும்ரா இறக்கிய யார்கர் முக்கியமான உதாரணமாகும்.
அதனால் இந்த ஆட்டத்திலும் பும்ராவின் பந்துவீச்சு பஞ்சாப் அணிக்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஸ்ரேயாஸ் பேட்டிங்கின் முன் பும்ராவின் பந்துவீச்சு எடுபடவில்லை. பும்ராவின் யார்கர்களை கச்சிதமாக கையாண்ட ஸ்ரேயாஸ் அந்த யார்களை பலமுறை பவுண்டரிகளுக்கு பறக்கவிட்டார். டிரன்ட் போல்ட் வேகப்பந்துவீச்சு ஸ்ரேயாஸ் அய்யருக்கு எந்தவிதத்திலும் அச்சுறுத்தலாக இல்லை, பவுண்டரிகளாக விளாசியதால் எப்படி பந்துவீசுவது என குழம்பினர்.
கடைசி 8 ஓவர்களில் பஞ்சாப் அணி வெற்றிக்கு ஒரு பந்துக்கு 2 ரன்கள் தேவை என்ற ரீதியில் இருந்தது. 13வது ஓவரில் டாப்ளி ஓவரில் ஸ்ரேயாஸ் ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசிய பின் பஞ்சாப்பின் வெற்றி கணினியின் கணிப்பில் 25 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாக உயர்ந்தது. மும்பை அணியின் எந்த பந்துவீச்சாளரின் பந்துவீச்சையும் ஸ்ரேயாஸ் விட்டுவைக்கவில்லை. அஸ்வனி குமார், பும்ரா, போல்ட், டாப்ளி, ஹர்திக் என யார் பந்துவீசிலும் பவுண்டரிகளை விளாச ஸ்ரேயாஸ் தவறவில்லை.
ஸ்ரேயாஸ் அய்யரை ஆட்டமிழக்கச் செய்ய கேப்டன் ஹர்திக் பாண்டியா செய்த அனைத்து முயற்சிகளையும் ஸ்ரேயாஸ் தவிடுபொடியாக்கினார்
பட மூலாதாரம், Getty Images
ஸ்ரேயாஸுக்கு துணை செய்த பேட்டர்கள்
200 ரன்களுக்கு மேற்பட்ட இலக்கை ஸ்ரேயாஸ் வெற்றிகரமாக எட்டியதற்கு பஞ்சாப் அணியில் ஜோஸ் இங்கிலிஸ், நேஹல் வதேரா ஆகியோரின் பேட்டிங் பங்களிப்பு முக்கியமானதாகும். ஜோஸ் இங்கிலிஸ் சேர்த்த 21 பந்துகளில் 38 ரன்கள், பும்ரா ஓவரில் சிக்ஸர், பவுண்டரி என விளாசிய நேஹல் வதேரா 29 பந்துகளில் சேர்த்த 38 ரன்களும் முக்கியமானவை. நடுவரிசையில் ஸ்ரேயாஸ், வதேரா, இங்கிலிஸ் ஆகிய 3 பேரும்தான் ஆட்டத்தை மும்பையின் கரங்களில் இருந்து கைப்பற்றி கடைசிவரை தக்கவைத்திருந்தனர்.
தொடக்க ஆட்டக்காரர்கள் பிரப்சிம்ரன்(6), ஆர்யா(20) ரன்களி்ல் ஆட்டமிழந்தபின் ஆட்டம் மும்பையின் கரங்களுக்கு மாறியது. மும்பை பந்துவீச்சாளர்கள் மாறி, மாறி தாக்குதல் நடத்தியதில் பஞ்சாப் ரன்ரேட் சற்று குறைந்தது. ஆனால், ஸ்ரேயாஸ் அய்யர் களத்துக்கு வந்தது முதல் தனது அதிரடி ஆட்டத்தையும், தேவைப்படும் நேரத்தில் பவுண்டரி, சிக்ஸர் அடிக்கும் பாணியை கடைபிடித்தபின் பஞ்சாப் வெற்றிப்பாதைக்கு திரும்பியது.
பட மூலாதாரம், Getty Images
சிறந்த கேப்டனுக்கான முன்னுதாரணம்
இந்த சீசனில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி ஆடிய போது, கேப்டன் ஸ்ரேயாஸ், சஷாங் சிங் ஆட்டமிழக்காமல் இருந்து 243 ரன்கள் சேர்த்தனர். இந்த ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் சதம் அடிக்க 3 ரன்கள் தேவைப்பட்டது 97 ரன்களுடன் இருந்தார். கடைசி ஓவரை சிராஜ் வீசியபோது, சஷாங் ஸ்ட்ரைக்கில் இருந்து பவுண்டரி அடித்து, அடுத்தபந்தை தட்டிவிட்டபோது ஒரு ரன் ஓடி ஸ்ரேயாஸ் ஸ்ட்ரைக்கிற்கு வந்து சதத்தை நிறைவு செய்திருக்கலாம். வழக்கமான கேப்டன்கள் இதைத்தான் செய்திருப்பரார்கள்.
ஆனால், 2 ரன்களுக்கு சஷாங்க் சிங்கை விரட்டிய ஸ்ரேயாஸ், ஸ்ட்ரைக்கை சஷாங்கிடம் கொடுத்து, அவருக்கு வாய்ப்பளித்தார். அவரும் தொடரந்து 4 பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோர் உயர காரணமாகினார்.
இதை சஷாங்க் சிங் ஒரு பேட்டியில் கூறுகையில் ” ஐபிஎல் தொடரில் சதம் அடிப்பது சாதாரண விஷயமல்ல. ஆனால், குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் 97 ரன்களில் இருந்த போது, நான் அடித்த ஷாட்டில் 2 ரன்கள் ஓடிவா என்றார். உண்மையில் 2 ரன்கள் கடினமானதுதான்.
ஆனால், சதத்தை பற்றி அவருக்கு கவலையில்லை அணியின் ஸ்கோர்தான் முக்கியம். பல வீரர்கள் ஸ்ட்ரைக்கை கைப்பற்றி 3 ரன்கள் அடித்து சதத்தை நிறைவு செய்திருப்பார்கள். ஆனால், ஸ்ரேயாஸ் அய்யர் அப்படி செய்யவில்லை. சுயநலமில்லாமல் ஸ்ரேயாஸ் விளையாடக்கூடியவர். அணிதான் முக்கியம் என்று எப்போதுமே பேசக்கூடிய கேப்டனாக நான் ஸ்ரேயாஸை பார்க்கிறேன். இதுதான் எங்களின் கண்ணோட்டத்தை மாற்றியது, தனிநபர் சாதனைக்கான ஆட்டம் இல்லை, அணிக்கான ஆட்டம் என்று எங்களை உணரவைத்தது” எனத் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
ரிக்கி பாண்டிங் புகழாரம்
பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறுகையில் “டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து ஸ்ரேயாஸை பார்த்து வருகிறேன், பஞ்சாப் அணி பைனல் செல்லவும், கோப்பையை வெல்லவும் ஸ்ரேயாஸ் தேவை என்பதை தொடக்கத்திலேயே அணி நிர்வாகத்திடம் தெரிவித்தேன்.
சக வீரர்களை அரவணைத்துச் செல்வதிலும், அணியை வழிநடத்துவதிலும் ஸ்ரேயாஸ் அய்யர் சிறந்த கேப்டன். பிரியன்ஸ் ஆர்யாவை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க எங்களுக்கு விருப்பமில்லை. ஜோஸ் இங்கிலிஸ், பிரப்சிரம்தான் ஜோடியைத்தான் சீசனில் தொடக்கத்திலிருந்து களமிறக்க முடிவு செய்திருந்தோம்.
ஆனால், 23வயது பிரியன்ஸ் ஆர்யாவின் பேட்டிங்கை பார்த்த ஸ்ரேயாஸ் அய்யர் அவருக்கு தொடக்க வீரராக வாய்ப்பளிக்க வேண்டும் என்று சிஎஸ்கே அணிக்கு எதிராகவும், ராஜஸ்தானுக்கு எதிராகவும் களமிறங்கவைத்தார். ஆர்யாவின் அச்சமற்ற பேட்டிங் பாணி, ஷாட்கள் சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக்கொடுத்தது.
இந்த சீசனில் பஞ்சாப் அணி 7 முறை 200ரன்களைக் கடந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், அணியில் இருக்கும் அன்கேப்டு வீரர்கள் பிரப்சிம்ரன், பிரயன்ஸ் ஆர்யா, சஷாங் சிங், நேஹல் வதேரா ஆகியோர்தான். ஆனால், இந்த அன்கேப்டு வீரர்களை அணிக்கு எப்படி பயன்படுத்த முடியுமே அதை ஸ்ரேயாஸ் சிறப்பாகச் செய்தார். பல போட்டிகளில் ஆர்யா, பிரப்சிம்ரன் ஜோடி வலுவான ஸ்கோர் அமைத்து நடுவரிசை வீரர்களின் சுமையைக் குறைத்துள்ளனர்.
பிரப்சிம்ரன், ஆர்யா மீது ஸ்ரேயாஸ்மிகுந்த நம்பிக்கை வைத்து செயல்பட்டார். அவர்களும் அவரின் நம்பிக்கயை காப்பாற்றும் வகையில் செயல்பட்டனர். இளம் வீரர்களை எவ்வாறு கையாள வேண்டும், அவர்களை எப்படி வளர்த்துவிட வேண்டும் என்பதில் ஸ்ரேயாஸ் சிறந்தவர்” எனத் தெரிவித்தார்.
பல அணிகள் வெளிநாட்டு வீரர்களை அதிகமாக நம்பியிருந்து சீசனை வழிநடத்திய நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணி மட்டும் அதிகமான உள்நாட்டு வீரர்களுக்கு வாய்ப்பளித்தது. அதிலும் சொந்த மாநில பஞ்சாப், சண்டிகர் வீரர்களுக்கு வாய்ப்பளித்து அதை வெற்றியாகவும் பஞ்சாப் மாற்றியது. ஐபிஎல் சீசனில் அதிகபட்சமாக அன்கேப்டுவீரர்கள் பஞ்சாப் வீரர்களே 1519 ரன்கள் சேர்த்துள்ளனர், 163 ஸ்ட்ரைக் ரேட்டிலும், 34 சராசரியும் வைத்துள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
தனித்துவமான கேப்டன்சி
ஐபிஎல் அணிகளில் உள்ள கேப்டன்களில் சிறந்த கேப்டன்களில் ஒருவராக ஸ்ரேயாஸ் அய்யர் இருந்து வருகிறார், இதற்கு முன் இருந்து கோப்பையையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.
இந்த சீசனில் சஷாங் சிங் சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை, ரன்கள் ஸ்கோர் செய்யவில்லை. இதனால் சஷாங் சிங் மனவேதனையுடனும், அழுத்தத்துடனும் இருப்பதை ஸ்ரேயாஸ் கண்டுள்ளார். அப்போது சஷாங்சிங்கிற்கு மொபைலில் மெசேஜ் செய்த ஸ்ரேயாஸ் ” என்ன சஷாங் நல்லா இருக்கிறாய்தானே. மனதிற்கும் உடம்பிற்கும் ஒன்றுமில்லைதானே. லீக் போட்டிகள் அனைத்திலும் நீ களமிறங்குவார் அதற்காக உறுதியளிக்கிறேன். நானும், ரிக்கியும், அணியும்உன்னை நம்புகிறோம் நீதான் சிறந்த ஃபினிஷர்” என்று தெரிவித்ததாக சஷாங் சிங் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சகவீரர்களை அரவணைத்துச் செல்வதிலும், அவர்களுக்கு துணையாக இருந்து தேவையான வாய்ப்புகளை அளித்து அவர்களை அணியின் வெற்றிக்கு பயன்படுத்துவதிலும் ஸ்ரேயாஸின்கேப்டன்ஷி தனித்துவமானது.
அதேபோல, சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் தோனி களமிறங்கியவுடன் சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது குறிப்பாக சஹலை பயன்படுத்தியது ஆகியவை ஸ்ரேயாஸின் சமயோஜிதமான கேப்டன்ஷிக்கு சிறந்த உதாரணம் என்று துணைப் பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ் தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
சவால்களை, நெருக்கடிகளை ரசிப்பவர்
நெருக்கடியான கட்டங்களை, சவாலான தருணங்களை, போட்டிகளை ரசிப்பதிலும், சந்திப்பதிலும் ஸ்ரேயாஸ் அய்யருக்கு அலாதி விருப்பம். 2வது தகுதிச்சுற்று ஆட்டத்தையும் அவ்வாறுதான் ஸ்ரேயாஸ் அணுகினார். கடைசி 2 ஓவர்களில் 22 ரன்கள் பஞ்சாப் வெற்றிக்குத் தேவை என்ற கட்டத்தில் அஸ்வனி குமார் ஓவரில் 3 சிக்ஸர்களை ஸ்ரேயாஸ் அனாசயமாக விளாசி பரபரப்புக்கு முற்றுப்புள்ளிவைத்தார்.
கடைசி 5 ஓவர்களில் பஞ்சாப் அணி வெற்றிக்கு 57 ரன்கள் தேவைப்பட்டதிலிருந்து ஸ்ரேயாஸ் பேட்டிலிருந்து பவுண்டரிகளும், சிக்ஸர்களும் பறந்தன.அஸ்வனி குமார் வீசிய16வது ஓவரில் 2 சிக்ஸர்கள், போல்ட் வீசிய 17வது ஓவரில் 2 பவுண்டரிகள், பும்ரா வீசிய 18வது ஓவரில் பவுண்டிரி என ரன்ரேட்டை உயர்த்தி, அஸ்வனி வீசிய 19வது ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசிய ஸ்ரேயாஸ் எளிதாகவெற்றிக்கு அழைத்து வந்தார். ஆர்சிபிக்கு எதிராக ஸ்ரேயாஸ் ஆடிய ஆட்டம், ஷாட்கள் குறித்து பல விமர்சனங்கள் வந்தநிலையில் நேற்றையஆட்டம் பிரமிக்க வைத்தது.
அது குறித்து ஸ்ரேயாஸ் கூறுகையில் ” இதுபோன்ற சவாலான, பெரிய போட்டிகளை நான் மிகவும் விரும்புவேன். மிகப்பெரிய போட்டிகளின்போதுதான், அமைதியாக இருந்து, சிறந்த முடிவுகளைப் பெறமுடியும். ஆர்சிபிக்கு எதிரான ஒரு ஆட்டம் மட்டுமே அணியை தீர்மானித்துவிடாது. எங்களின் தோல்வியும் இந்த சீசனை தீர்மானித்துவிடாது. அனைத்து வீரர்களும் முதல் பந்திலிருந்து தீர்க்கமாக இருக்க முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் களத்தில் விளையாடினோம். ஒவ்வொரு பேட்டரும், பந்துவீச்சாளர்களும் சிறப்பான பணியை செய்தனர்.
பட மூலாதாரம், Getty Images
அன்கேப்டு வீரர்களின் அதிகமாக அது தேவை, இது தேவை அப்படி பேட் செய் என்றெல்லாம் பேசமாட்டேன். அவர்களுக்கு ஆதரவு தேவை அதை வழங்குவேன். அவர்களின் அச்சமற்ற கிரிக்கெட்டை ஊக்குவிக்கிறேன். அவர்களின் ஆலோசனைகளை ஏற்கிறேன். அவர்களின் எந்த சூழலிலும் பேசி அவர்களிடமும் ஆலோசனைகளைப் பெற்று செயல்படுத்துகிறேன் அவர்களுக்கு அனுபவம் குறைவு என்றபோதிலும், பெரிய தருணங்களின்போது அவர்களிடமும் ஆலோசிப்பது அவர்களுக்கு பெருமயைாகவும், ஊக்கமாகவும் இருக்கிறது.அவர்களும் புதிய அனுபவத்தை பெறமுடியும். என்னைப் பொருத்தவரை அருமையான சூழல் அணிகக்குள்ளும், நிர்வாகத்திலும் நிலவுகிறது. அதனால்தான் இந்த அளவுவெற்றிகரமாக பயணிக்க முடிகிறது” எனத் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.வர்ணனையாளர்கள் விமர்சனம்
ஸ்ரேயாஸ் அய்யர் இதுவரை தான் கேப்டனாகப் பொறுப்பேற்ற அணிகளை முடிந்தவரை பைனலுக்கு அழைத்து வந்துள்ளார். இது 3வது முறையாக தான் கேப்டனாக பொறுப்பேற்று அணியை பைனலுக்கு கொண்டு வந்துள்ளார். இதற்குமுன் டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை பைனலுக்கு அழைத்து வந்திருந்தார், இப்போது பஞ்சாப் அணியை 11 ஆண்டுகளுக்குப்பின் இறுதிப்போட்டிக்கு அழைத்து வந்துள்ளார்.
ஸ்ரேயாஸ் அய்யரை விடுவித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ அணியும் தவறு செய்துவிட்டது, இந்திய டெஸ்ட் அணியிலும், டி20 அணியிலும் ஸ்ரேயாஸ் அய்யருக்கு இடம் அளிக்காதது பிசிசிஐ தேர்வுக்குழுவினர் செய்த மிகப்பெரிய குற்றம் என்று நேற்று வர்ணனையாளர்களே கடுமையான வார்த்தைகளால் விளாசினர்.
தொடர்ந்து 2வது முறையாக ஒரு அணியை ஐபிஎல் பைனலுக்கு அழைத்து வந்த பெருமையை எம்எஸ் தோனி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு அடுத்தார்போல் இப்போது ஸ்ரேயாஸ் அய்யர் செய்து அவர்களின் சாதனையை சமன் செய்துள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு