வணிகத்தில் சீனாவிடம் நெருக்கம் காட்டும் வங்கதேசம் : இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

பட மூலாதாரம், in.china-embassy.gov.cn

படக்குறிப்பு, வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பின் இந்தப் படத்தை இந்தியாவில் உள்ள சீனத் தூதரகம் வெளியிட்டது.எழுதியவர், ஆனந்த் மணி திரிபாதிபதவி, பிபிசி செய்தியாளர் 19 நிமிடங்களுக்கு முன்னர்

ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற மாநாட்டில், வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் பேராசிரியர் முகமது யூனுஸ், வங்கதேசத்தில் முதலீடு செய்யுமாறு சீன முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

டாக்காவில் நடைபெற்ற ‘சீனா-வங்கதேச முதலீடு மற்றும் வர்த்தக மாநாட்டில்’ பேராசிரியர் முகமது யூனுஸ் பேசிய போது, சீன முதலீட்டாளர்கள் வங்கதேசத்தில் உள்ள வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தெற்காசியாவில் பல நாடுகளின் பொருளாதாரங்களை சீன முதலீட்டாளர்கள் மாற்றியமைத்ததைப் போலவே, வங்கதேசத்திலும் அதுபோன்ற மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற விருப்பத்தையும் யூனுஸ் வெளிப்படுத்தினார்.

வங்கதேசத்தில் முதலீடு செய்யுமாறு சீனாவுக்கு முகமது யூனுஸ் அழைப்பு விடுப்பது இதுவே முதல் முறையல்ல.

இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில், டீஸ்டா திட்டம் உள்ளிட்ட பிற திட்டங்களில் முதலீடு செய்யுமாறு சீனாவிடம் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

ஆனால், சீனா உதவி செய்வதில்லை, கடன்களை வழங்கி, எல்லா வகையிலும் அவற்றை மீட்டெடுத்துக்கொள்கிறது என்பதை முகமது யூனுஸ் புரிந்து கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்முகமது யூனுஸ் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பேராசிரியர் முகமது யூனுஸ்பேராசிரியர் முகமது யூனுஸ் ஞாயிற்றுக்கிழமை டாக்காவில் நடைபெற்ற சீனா-வங்கதேச முதலீடு மற்றும் வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டார்.

150க்கும் மேற்பட்ட சீன முதலீட்டாளர்கள் மற்றும் வணிகப் பிரதிநிதிகள் அம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

கடந்த 10 மாதங்களில் வங்கதேசத்தில் சீன வணிகப் பிரதிநிதிகளுடன் நடைபெறும் மிகப்பெரிய வணிக மாநாடு இது என்று முகமது யூனுஸ் கூறுகிறார்.

மாநாட்டின் போது, சீன முதலீட்டாளர்களை வங்கதேசத்தில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்த அவர், சீனாவும் வங்கதேசமும் இணைந்து செயல்பட்டால் பல வாய்ப்புகள் உருவாகும் என்றும் கூறினார்.

“சீன முதலீட்டாளர்கள் தெற்காசியாவின் பல நாடுகளின் பொருளாதாரத்தை மாற்றியுள்ளனர், வங்கதேசத்திலும் இதே போன்ற மாற்றங்கள் ஏற்படும் என நம்புகிறேன்” என்று முகமது யூனுஸ் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “இளைஞர்களுக்காக புதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது வங்கதேசத்தின் விருப்பம். இதற்காக முதலீட்டைப் பெருக்கும் நோக்கில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 10 மாதங்களுக்கு முன்பு இடைக்கால அரசு அமைக்கப்பட்டதிலிருந்து மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களின் பலன்கள் இப்போது வெளிப்படத் தொடங்கியுள்ளன,” என்று கூறினார்.

முந்தைய ஷேக் ஹசீனா அரசாங்கத்தை குறிப்பிடும் விதமாகப் பேசிய முகமது யூனுஸ், “பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டன, ஆனால் அவை காலியாகவே இருந்தன. பசுக்களும் எருமைகளும் அங்கு மேயத் தொடங்கின” என்றார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்ட எழுச்சியுடன் நாட்டில் ‘முக்கியமான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின’, என்று பேசிய முகமது யூனுஸ்,

“முதலீட்டாளர்கள் வங்கதேச வரலாற்றின் ஒரு பகுதியாக இருந்து, முன்னேற்றத்தின் பாதையில் எங்களுடன் ஒன்றாக நடக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,” என்று சீன முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

மேலும், முதலீட்டாளர்களுக்கு உதவுவதற்காக தனது இடைக்கால அரசாங்கம் மேலாளர்களை நியமித்துள்ளதாக கூறிய முகமது யூனுஸ்,

“வங்கதேசத்தில் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், வங்கதேசத்தை தங்கள் வீடாகவும், அதை தங்கள் உற்பத்தி மையமாகவும் மாற்றுங்கள் என்று சீன முதலீட்டாளர்களிடம் நான் கூற விரும்புகிறேன்” என்றும் தெரிவித்தார்.

சீனாவைச் சேர்ந்த தொழிலதிபர்களைத் தவிர, வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ மற்றும் வங்கதேசத்திற்கான சீனத் தூதர் யாவ் வென் ஆகியோரும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

“வங்கதேசத்தின் ஏற்றுமதி திறனை மேம்படுத்தவும், வர்த்தகம் மற்றும் முதலீட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பலதரப்பு வர்த்தக அமைப்பை கூட்டாகப் பராமரிக்கவும், உலகப் பொருளாதாரத்தில் இன்னும் அதிகமான உறுதித்தன்மையையும் நிலைத்தன்மையையும் ஏற்படுத்த உதவுவதற்கும், சீனா தயாராக உள்ளது,” என்று வாங் வென்டாவோ கூறியதாக டாக்கா ட்ரிப்யூன் தெரிவித்துள்ளது.

“இதற்கு முன்பும் சீனாவை அழைத்துள்ளோம்”

முன்னதாக இந்த ஆண்டு மார்ச் மாதம் நான்கு நாட்கள் சீனாவுக்குச் சென்றிருந்த முகமது யூனுஸ், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து உரையாடினார்.

டீஸ்டா நதி திட்டத்தில் சீன அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் பங்கேற்கலாம் என முகமது யூனுஸ் ஜி ஜின்பிங்கிடம் தெரிவித்தார்.

டீஸ்டா திட்டத்திற்கு உதவத் தயாராக இருப்பதாகவும், அதைப் பற்றி ஆய்வு செய்ய ஒரு குழுவை அனுப்பத் தயாராக இருப்பதாகவும் இந்தியா முன்பு கூறியிருந்த நேரத்தில் தான் இந்தச் சந்திப்பும் நடந்தது.

இந்த நேரத்தில், மோங்லா துறைமுகத்தை நவீனமயமாக்குவதிலும், விரிவுபடுத்துவதிலும் சீனாவின் உதவி குறித்து வங்கதேசம் பேசியது.

மேலும், சிட்டகாங்கில் சீனாவுடன் சேர்ந்து ஒரு சீன பொருளாதார மற்றும் தொழில்துறை மண்டலத்தை உருவாக்கும் திட்டத்திலும் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியது.

முகமது யூனுஸ் தனது பயணத்தின் போது, பெல்ட் அண்ட் ரோட் ஒத்துழைப்பு திட்டம் மற்றும் நவீனமயமாக்கலை முன்னெடுக்க சீனாவுடன் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டார்.

இந்த நேரத்தில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு கடல் வழியே செல்லும் வாய்ப்பு இல்லையென்பதால், இந்தப் பகுதியில் வங்கதேசம் முக்கியப் பங்காற்றுகிறது என்றும் அவர் பேசியிருந்தார்.

சீனாவுக்கும், உலகச் சந்தைக்கும் பொருட்கள் உற்பத்தி செய்யும் வகையில், சீனப் பொருளாதாரம் அங்கு விரிவடைய வாய்ப்பு உள்ளதாகவும் முகமது யூனுஸ் கூறினார்.

நிபுணர்கள் கூறியது என்ன?

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து, வங்கதேசத்தில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது.புது டெல்லியில் உள்ள ஜேஎன்யுவின் சர்வதேச ஆய்வுகள் பள்ளியின் முன்னாள் ராஜ்ஜீய அதிகாரி மற்றும் பேராசிரியர் எமரிட்டஸ் எஸ்டி முனி கூறுகையில், “வங்கதேசம் எப்போதும் சீனாவுடன் நெருக்கமாக இருந்துள்ளது.

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் காலத்திலும் அது வங்கதேசத்துடன் நெருக்கமாக இருந்துள்ளது.

1975 க்கு முன்பு, சீனா வங்கதேசத்தை அங்கீகரிக்கவில்லை, அதுவரை உறவுகளில் இடைவெளி இருந்தது. இதற்குப் பிறகு, அது தொடர்ந்து வங்கதேசத்தில் முதலீடு செய்து வந்தது” என்று தெரிவித்துள்ளார்.

“சீனா அங்கு உள்கட்டமைப்பில் பெரும் முதலீடு செய்ததால் ஷேக் ஹசீனாவும் சீனாவுடன் சமநிலையைப் பேணி வந்தார்.

அது ராணுவத் திட்டத்திலும் உதவியுள்ளது. அவர்கள் பாலங்களையும் கட்டி வருகின்றனர்.

வங்கதேசமும் அவர்களின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. அது மின் திட்டங்களையும் செய்து வருகிறது, எனவே வங்கதேசம் எப்போதும் சீனாவுடன் நெருக்கமாக இருந்து வருகிறது என்று நீங்கள் கூறலாம்” என்று எஸ்.டி. முனி கூறுகிறார்.

மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தின் ஆராய்ச்சி நிபுணர் முனைவர் ஸ்மிருதி எஸ். பட்நாயக் கூறுகையில், “யூனுஸ் அரசாங்கம் சீனாவுடன் உள்ள தொடர்பை விட, அதிக நெருக்கமாக இருப்பது போல வெளிப்படுத்த முயல்கிறது. அவர் இவ்வாறு செய்வது, இந்தியாவில் வேறுவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அவருக்குத் தெரியும்” என்று கூறுகிறார்.

“பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் (BRI) சீனா 42 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக உறுதியளித்திருந்தது, ஆனால் கடந்த சில ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர்கள் மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

தொடர்ந்து பேசிய முனைவர் ஸ்மிருதி எஸ். பட்நாயக், “அமெரிக்காவின் ஆதிக்கம் அங்கு அதிகரிக்கக்கூடாது, இந்தியாவின் செல்வாக்கு அதிகமாக அதிகரிக்கக்கூடாது என்று சீனா கவலைப்படுவதால், வங்கதேசத்தில் தனது இருப்பை அதிகரிக்க விரும்புகிறது. தனது செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ள, பாகிஸ்தானுக்குப் பிறகு வங்கதேசத்திற்கு சீனா அதிக ராணுவ உதவியை வழங்கி வருகிறது. அது நீர்மூழ்கிக் கப்பல்களையும் வழங்கியுள்ளது, ஆனால் அதன் முறை வேறுபட்டது.”என்றார்.

இந்தியாவுக்கு எதிராக எத்தகைய ஆதரவு கிடைத்தாலும் அதை நோக்கி வங்கதேசம் நகரும் என்று எஸ்.டி. முனி கூறுகிறார்.

“முகமது யூனுஸ் அரசாங்கத்தைப் பொறுத்தவரை, ஷேக் ஹசீனாவுக்குப் பிறகு அது ஆட்சிக்கு வந்துள்ளது, மேலும் அவரது இடைக்கால அரசாங்கத்தின் அடிப்படையே ஷேக் ஹசீனாவுக்கு எதிரானது.

ஷேக் ஹசீனா இந்தியாவிடமிருந்து எல்லா வகையான ஆதரவையும் பெற்று வந்தார் என்றும், அவர் இந்தியாவை ஆதரித்தார் என்றும் வங்கதேசத்தில் நம்பப்படுகிறது,” என்று விளக்குகிறார் எஸ்.டி. முனி.

“ஷேக் ஹசீனாவுக்குக் கிடைத்த முன்னுரிமையை, இந்தியா முகமது யூனுஸுக்கு வழங்கவில்லை. அதனால்தான் அவர் இந்தியாவுக்கு எதிரான அமைப்பை எங்கு கண்டாலும், அங்கு செல்வார். இது அவருக்கு அரசியல் மற்றும் பொருளாதார நன்மைகளைத் தருகிறது” என்றும் முனி கூறுகிறார்.

முனைவர் ஸ்மிருதி கூறுகையில், “சமநிலையைக் கடைபிடிக்கும் வழக்கமான ஒரு அரசியல் விளையாட்டில் வங்கதேசம் ஈடுபட்டு வருகிறது. சிக்கன்நெக் அருகே உள்ள விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளும் இந்த விளையாட்டின் ஒரு பகுதி தான். ‘உங்களுக்கு எரிச்சலூட்டும் விஷயத்தை நாங்கள் கொண்டு வருவோம்’ என்ற வகையில் இந்தியாவை ஒரு வகையில் கிண்டல் செய்கிறது. தற்போது டீஸ்டா திட்டமும் இதில் குறிப்பிடப்படுகிறது”என்றார்.

மேலும், “மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நிலைமையை இயல்பாக்கி, தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பு உடைய அரசாங்கம் தற்போது உலகளாவிய அரசியலில் ஈடுபட்டு வருகிறது.

இது நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்பதே இதன் பொருள். அத்தகைய சூழ்நிலையில், வங்கதேசத்தில் ஒரு அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படும் வரை இந்தியா காத்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது,” என்றும் அவர் கூறுகிறார்.

சீனாவிலிருந்து முதலீட்டைப் பெறுவது எவ்வளவு எளிதானதோ, அதே அளவு பின்னர் அதைத் திருப்பிச் செலுத்துவது கடினம் என்ற கருத்தை இரு நிபுணர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

“சீனா யாருக்கும் எதையும் இலவசமாகக் கொடுப்பதில்லை. கடன்களைக் கொடுத்து அவற்றை மீட்டெடுக்கிறது. இலங்கை, மாலத்தீவுகள் உள்ளிட்ட பல நாடுகளுக்குக் கடன்களைக் கொடுத்துள்ளது, அவற்றின் நிலையைக் காணலாம்” என்று முனைவர் ஸ்மிருதி விளக்குகிறார்.

மறுபுறம், “சீனா மானியங்களையோ , உதவிகளையோ வழங்குவதில்லை. அது கடன்களை மட்டுமே வழங்குகிறது, மேலும் அந்தக் கடன்களை எல்லா வழிகளிலும் மீட்டெடுக்கிறது என்பதை முகமது யூனுஸ் புரிந்துகொள்ள வேண்டும்.

இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் என எந்த நாடாக இருந்தாலும் இது பொருந்தும்.

இதன் மூலம் சீனாவின் உத்திசார்ந்த மற்றும் அரசியல் சக்தி அதிகரிக்கிறது,” என்று எஸ்.டி. முனி கூறுகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு