மனிதர்களைப் போன்று யானைகளை அடையாளம் காண முடியுமா? – ப்ராஜெக்ட் தடம் திட்டம் செய்யவிருப்பது என்ன?

எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ் 56 நிமிடங்களுக்கு முன்னர்

யானை-மனித மோதலைத் தடுக்கும் முயற்சியாக, தமிழக வனத்துறையின் ‘ப்ராஜெக்ட் தடம்’ (Project Thadam) திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து யானைகளையும் அடையாளம் கண்டு தனித்தனி எண்கள் கொடுக்கும் பணி துவங்கியுள்ளது.

இதன் மூலமாக, தமிழகத்தில் யானை-மனித மோதலுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியுமென்று வனத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். வனத்துறையின் இந்த முயற்சியை சூழலியல் அமைப்பினர் வரவேற்கின்றனர்.

யானை தாக்கி மனிதர்கள் உயிரிழப்பதில் ஒடிஷா முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த ஆண்டில் மட்டும் 154 பேர் யானை தாக்கி பலியாகியுள்ளனர். இந்த பட்டியலில் தமிழகம் ஐந்தாமிடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டில் தமிழகத்தில் யானை தாக்கி 61 பேர் மரணமடைந்துள்ளனர். ஆனால், நாட்டிலேயே யானை-மனித மோதல் அதிகம் நடக்கும் பகுதியாக கோவை வனக்கோட்டம் இருப்பதாக அமெரிக்காவின் ஹார்வர்டு மற்றும் இண்டியானா பல்கலைக்கழக மாணவர்கள், 2006 முதல் 2018 வரை 12 ஆண்டுகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக கடந்த ஆண்டில் அறிக்கை வெளியானது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்மத்திய அரசின் யானை பாதுகாப்புத் திட்டத் தரவுகளின்படி, இந்தியாவிலுள்ள 29 ஆயிரம் ஆசிய யானைகளில் தமிழகத்தில் 10 சதவிகிதம், அதாவது 2,961 யானைகள் இருக்கின்றன. இந்த யானைகளின் வலசைப்பாதைகளில் ஏற்படும் பலவித தடங்கல்களால் யானை–மனித மோதல் ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இதைத் தடுக்கும் ஒரு முயற்சியாக, தமிழகத்திலுள்ள ஒவ்வொரு யானையையும் அடையாளம் கண்டு ஆவணப்படுத்தும் முயற்சி துவங்கியுள்ளது. இது சாத்தியமா என்று எல்லோரிடமும் கேள்வி எழுந்தாலும், இதுவே யானை–மனித மோதலுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான அறிவியல்ரீதியான அணுகுமுறையாக இருக்குமென்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

”தமிழகத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவுள்ள காட்டில் 2,700-3,000 யானைகள் உள்ளன. ஆனால், இலங்கையில் 65 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவில் 7000–8000 யானைகள் இருக்கின்றன. அவற்றில் எங்கள் அமைப்பே 2 ஆயிரம் யானைகளைக் கண்காணிக்கிறது. தனிப்பட்ட முறையில் நானே 700 யானைகளை கண்காணித்து, இதுவரை 40 யானைகளுக்கு ‘காலர்’ பொருத்தியுள்ளேன்.” என்கிறார் இலங்கையில் 2 ஆண்டுகளாக யானை ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் ஸ்ரீதர் விஜய கிருஷ்ணன்.

இந்தியாவைச் சேர்ந்த யானை ஆராய்ச்சியாளரான இவர், இலங்கையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சூழல் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் (CCR-Centre for Conservation and Research) கீழ், கடந்த 2 ஆண்டுகளாக இலங்கையில் பணியாற்றி வருகிறார் .

சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்துடன் (International Union for Conservation of Nature) இணைந்து பணியாற்றும் ஸ்ரீதர் விஜய கிருஷ்ணன், இலங்கையிலும் யானை–மனித மோதல் அதிகமிருந்தாலும் அங்கே மனித உயிரிழப்புகள் குறைவு என்பதை புள்ளி விபரங்களுடன் விளக்கினார்.

பட மூலாதாரம், Sridhar Vijay Krishnan

படக்குறிப்பு, இதுவரை 40 யானைகளுக்கு ‘காலர்’ பொருத்தியுள்ளதாகக் கூறுகிறார் ஸ்ரீதர் விஜய கிருஷ்ணன் ”இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் காட்டு யானைகள் தாக்கி 500 பேர் உயிரிழக்கின்றனர். அதேபோல, 200 யானைகளும் இறக்கின்றன. ஆனால், இலங்கையில் ஆண்டுக்கு 500 யானைகள் இறக்கின்றன. அதிலும் இயற்கைக்கு மாறான மரணம் மிகக்குறைவு. அதே நேரத்தில், அங்கே யானைகள் தாக்கி 100–150 மனிதர்கள் மட்டுமே உயிரிழக்கின்றனர்.” என்கிறார் ஸ்ரீதர்.

யானைகளை அடையாளம் காண்பதன் அவசியம் குறித்து, கோவையில் தமிழக வனத்துறை அலுவலர்களுக்கு நடந்த பயிற்சியில் தனது அனுபவங்களை ஸ்ரீதர் பகிர்ந்தார்.

‘பிராஜெக்ட் தடம்’–திட்டமும் நோக்கமும்!

தமிழக வனத்துறையின் காலநிலை மாற்றத்துக்கான பல்லுயிர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ‘பிராஜெக்ட் தடம்’ எனும் திட்டத்தில்தான், யானை–மனித மோதலைக் குறைப்பதற்காக, தமிழகத்திலுள்ள காட்டு யானைகளை தனிப்பட்ட முறையில் அடையாளம் கண்டு ஆவணப்படுத்தி (Elephant Profiling) அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அடையாள எண் கொடுக்கும் நடவடிக்கை துவங்கியுள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள தமிழக வனத்துறை வனச்சரக அலுவலர், வன அலுவலர், வனக்காவலர் போன்ற வனத்துறை அலுவலர்களுக்கு, இவற்றை அடையாளம் கண்டு ஆவணப்படுத்துவதற்கான பயிற்சி, கோவை வனக்கல்லுாரி வளாகத்திலுள்ள இந்திய வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் வழங்கப்படுகிறது.

படக்குறிப்பு, இந்த திட்டத்தின்கீழ், தமிழகத்திலுள்ள காட்டு யானைகளை தனிப்பட்ட முறையில் அடையாளம் கண்டு ஆவணப்படுத்தும் பணி நடைபெறுகிறது தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாகத்தான் யானை–மனித மோதல் அதிகரித்து வருவதாகக் கூறும் காலநிலை மாற்றத்துக்கான பல்லுயிர் பாதுகாப்புத் திட்ட இயக்குநர் அன்வர்தீன், 105 கிராமங்களைக் கண்டறிந்து, அந்தப் பகுதிகளில் அதைக் குறைப்பதற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பரீதியாக தீர்வு காணும் முயற்சிதான் யானைக்கான தனி அடையாள எண் என்கிறார்.

பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத் தோன்றும் யானைகளை தனித்தனியாக அடையாளம் காண்பதற்கான பயிற்சியை, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் உயிரியலாளர் (Biologist) பீட்டர் வழங்கி வருகிறார். பெண் யானை, ஆண் யானை ஒவ்வொன்றுக்கும் உடலில் உள்ள எந்த பாகத்தைக் கொண்டு எப்படி அடையாளம் காண்பது என்பது குறித்து புகைப்படங்களுடன் அவர் விரிவாக விளக்கினார்.

”ஒவ்வொரு யானைக் கூட்டத்தையும் (Herd) (ஒரு பெண் யானைதான் (Matriarch) வழி நடத்தும். அதன் மத்தகம் (முன்னந்தலை) ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். சில யானைகளுக்கு பின்னங்கால்கள் மற்றும் முன்னங்கால்களில் உயர வித்தியாசம் இருக்கும். முதுகுத்தண்டிலும் ஒன்று அல்லது அதற்கு மேலும் சில மேடுகள் காணப்படும். இப்படி சில அடையாளங்களை வைத்து ஒரு பெண் யானையை அடையாளம் கண்டு, அது இந்த யானைக்கூட்டம் தான் என்பதை கண்டு கொள்ள முடியும்.” என்கிறார் உயிரியலாளர் பீட்டர்.

ஆண் யானைகளை தந்தத்தை வைத்து அடையாளம் காணலாம் என்று கூறும் பீட்டர், அதிகமாக குறும்பு செய்யும் சில ஆண் யானைகளுக்கு பிற யானைகளால் கடிபட்டு, வால் துண்டிக்கப்பட்டு இருக்கும் என்பதையும் புகைப்படங்களுடன் விளக்கினார்.

யானைகளை புகைப்படம் எடுத்து, அவற்றின் குணாதிசயங்களை தொடர் கண்காணிப்பின் மூலமாகக் கண்டறிந்து, அவற்றுக்குத் தனித்தனி எண் கொடுத்து அவை அனைத்தையும் ஆவணப்படுத்தும் முறையையும் அவர் விளக்கமாகத் தெரிவித்தார்.

படக்குறிப்பு, யானை–மனித மோதல் அதிகம் நடக்கும் 105 கிராமங்கள் இந்த திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டுள்ளது ஒவ்வொரு யானைக்கும் அடையாள எண் தருவது எப்படி?

உதாரணமாக, கோவை வனக்கோட்டத்தில் போளுவாம்பட்டி வனச்சரகத்தில் முதலில் அடையாளம் காணும் ஆண் யானைக்கு CBT 01 (Coimbatore Boluvampatti Tusker 01) என்று குறிப்பிடப்படுகிறது. இதுவே, பெண் யானையாக இருந்தால் CBF 01 (Coimbatore Boluvampatti Female 01) என்று அடையாளப்படுத்தப்படுகிறது.

இந்த முறையில் யானைகளை வன அலுவலர்கள், யானை ஆராய்ச்சியாளர்கள், களப்பணியாளர்கள் மற்றும் சூழல் மற்றும் காட்டுயிர் அமைப்புகளின் தன்னார்வலர்கள் பலரும் புகைப்படம் எடுத்துப் பதிவு செய்வதோடு, காட்டுக்குள் வனத்துறையால் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில் (Camera Trap) பதிவாகும் புகைப்படங்களையும் வைத்து ஒவ்வொரு யானைக்கும் அடையாளங்கள் குறிக்கப்படுகின்றன.

இதுவரை கோவை, கூடலுார் மற்றும் ஓசூர் ஆகிய 3 வனக்கோட்டங்களிலும் சேர்த்து 300 யானைகள் வரையிலும் புகைப்படம் எடுத்து, அவற்றுக்கு அடையாள எண் கொடுக்கப்பட்டுள்ளதாக உயிரியலாளர் பீட்டர் தெரிவித்தார். தற்போது நடந்து வரும் பயிற்சி முடிந்து, ஒரே நேரத்தில் மாநிலம் முழுவதும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளும்பட்சத்தில், இரண்டே மாதங்களில் தமிழகம் முழுவதும் உள்ள யானைகளை அடையாளம் கண்டு ஆவணப்படுத்திவிட முடியும் என்கிறார் பீட்டர்.

யானைகளை உருவத்தால் அடையாளம் காணும் அதே நேரத்தில், நீண்ட கால கண்காணிப்பின் மூலமாக அவற்றின் குணாதிசயங்களைப் பதிவு செய்யும்போதுதான், இந்த முயற்சி முழுமையடையும் என்கிறார் யானை ஆராய்ச்சியாளர் ஸ்ரீதர் விஜயகிருஷ்ணன்.

”பெரும்பாலான யானைகளுக்கு தனிப்பட்ட பிரச்னை ஏதுமிருப்பதில்லை. உணவுக்கும் குறைவு இருப்பதில்லை. ஆனால் சூழ்நிலைதான் பல இடங்களில் பிரச்னையை உருவாக்குகிறது. உதாரணமாக ஆண்டுதோறும் நெல்லியாம்பதியிலிருந்து பொள்ளாச்சி சர்க்கார்பதிக்கு வரும் ஒரு யானை, நெல்லியாம்பதியில் வீட்டுக்குப் பின்னால் சாதாரணமாக வந்து போகிறது. ஆனால் சர்க்கார்பதியில் இதே யானை வருடந்தோறும் ஏதாவது ஒரு தாக்குதலை நடத்துகிறது. அதற்குக் காரணம், அந்த யானைக்கு அந்த பகுதியில் ஏற்பட்ட ஒரு தனிப்பட்ட அனுபவம்தான்!” என்கிறார் ஸ்ரீதர் விஜயகிருஷ்ணன்.

காட்டு யானைகளை தனித்தனியாக அடையாளம் காணும் அதே நேரத்தில், யானை–மனித மோதல் அதிகம் நடக்கும் கிராமங்களையும், அங்குள்ள மக்களின் வாழ்வியல் முறை மற்றும் யானைகளுடனான புரிதல் குறித்தும் சில ஆய்வுகளை ‘பிராஜெக்ட் தடம்’ திட்டத்தின் கீழ் வனத்துறை மேற்கொள்கிறது.

தனித்தனியாக கிராமங்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டி அவற்றை ஆவணப்படுத்தும் பணியை (Village Profiling) செய்கிறார், சென்னை கேர் எர்த் அறக்கட்டளையைச் சேர்ந்த சூழலியல் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு ஆராய்ச்சி விஞ்ஞானி டானிஷ் பாஸ்கர்.

பட மூலாதாரம், Danish Bhaskar

படக்குறிப்பு, காட்டுக்குள் யானைகளுக்கு இருக்கும் பாதிப்பையும் அளவிடுவதாகக் கூறுகிறார், சூழலியல் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு ஆராய்ச்சி விஞ்ஞானி டானிஷ் பாஸ்கர் மேலும் தொடர்ந்த அவர், ”ஒவ்வொரு கிராமத்திலும் 10 வீடுகளை எடுத்து, அங்குள்ள மக்களின் காட்டுயிர் குறித்த புரிதல், சகிப்புத்தன்மை, எதிர்பார்ப்புகளை ஆய்வு செய்கிறோம். கிராமத்துக்கு அருகேயுள்ள காடு எப்படி இருக்கிறது, அதை அந்த கிராம மக்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள், யானைகள் ஊருக்குள் வராமல் தடுப்பதற்கு அமைக்கப்பட்ட அகழி, சூரிய மின்வேலி போன்றவை எப்படி செயல்படுகின்றன என்பதையும் கருத்தில் கொண்டு பல்வேறு தரவுகளையும் திரட்டி வருகிறோம்.” என்கிறார் டானிஷ் பாஸ்கர்.

படக்குறிப்பு, கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள தடம் குழுவினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வனத்துறையினர் கிராமங்களையும் ஆவணப்படுத்தும் ‘பிராஜெக்ட் தடம்’

இந்தத் தரவுகளை வைத்து, ஜிபிஎஸ் முறையில் வரைபடம் தயாரித்து, யானை–மனித மோதலால் அதீத பாதிப்புக்குள்ளான மண்டலங்களை அடையாளம் காணும் பணியை இவரது குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். ஒரு காலத்தில் யானைகள் மட்டுமே பயன்படுத்தி வந்த தடங்கள், தற்போது மக்களால் எந்தெந்த விதங்களில் பயன்படுத்தப்படுகிறது, கிராமங்களில் உள்ள கால்நடைகள் காட்டுக்குள் எந்தளவுக்கு பயிர்களை மேய்கின்றன, வாழை, கரும்பு போன்ற சிறப்பு உணவுகளை தேடி வரும் யானைகள் எவை என்பது உள்ளிட்ட பலவிதமான தகவல்களையும் திரட்டி ஆவணப்படுத்துகின்றனர்.

தனித்தனியாக யானைகளையும், கிராமங்களையும் அடையாளம் கண்டு அவை குறித்த தகவல்கள், புகைப்படங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு தொகுப்பாக இணையத்தில் பதிவு செய்வது, ‘பிராஜெக்ட் தடம்’ திட்டத்தில் முக்கியப் பணியாகவுள்ளது. இவ்வாறு பதிவு செய்யும்போது, யானை–மனித மோதல் நிகழ்வின்போது, எந்தப் பகுதியில் எந்த யானை வருகிறது என்பதை அதன் புகைப்படம் மற்றும் அதன் குணாதிசயம் குறித்த தகவல்களை வைத்து அதை எளிதில் கையாளலாம் என்கிறார் டானிஷ்.

ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம் ஆகிய புலிகள் காப்பகங்கள், கோவை, ஓசூர், தருமபுரி, திண்டுக்கல், வேலுார், கூடலுார் உள்ளிட்ட 7 வனக்கோட்டங்கள் என மொத்தம் 10 இடங்களில் 45 கிராமங்களை இந்த குழுவினர் இதுவரை அடையாளம் கண்டு ஆவணப்படுத்தியுள்ளனர். இவ்வாறு கிராமங்களின் தன்மையையும் ஆவணப்படுத்துவதால், ஒரு பகுதியிலுள்ள வன அலுவலர் மாறினாலும் புதிதாக வரும் அலுவலரும் இதைப் பார்த்து அந்த கிராமம் குறித்த அடிப்படைப் புரிதலுடன் யானை–மனித மோதலைக் கையாள முடியும் என்று வனத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இனிமேல் யானைக்கு பெயர் இல்லை… எண்ணே அடையாளம்!

சமீபத்திய ஆண்டுகளாக, விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் ஊடுருவும் யானைகளுக்கு பொதுமக்களாகவே பெயர் சூட்டுவது வழக்கமாகவுள்ளது. அரி கொம்பன், சின்னதம்பி என்று பெயர் வைக்கும் மக்கள் அவற்றை வைத்து பலவிதமான தகவல்களையும், யூகங்களையும் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரப்புவதும் தொடர்ந்து வருகிறது.

”இதுபோன்று யானைகளுக்கு பெயர் வைப்பதால், ஏதாவது ஒரு பிரச்னையென்றால், அந்த யானைதான் இதற்குக் காரணமென்று கூறி, அதனால் உயிருக்கு ஆபத்து என்று கூறி, அதைப் பிடிக்கச் சொல்வது வழக்கமாகி விட்டது. அதற்குப் பதிலாக யானைகளை இத்தகைய எண்களால் அடையாளப்படுத்தி, அவற்றின் குணாதிசயம், உடல்மொழிகளை ஆவணப்படுத்துவது நல்லது. அப்போது எந்த யானை, எத்தகைய தன்மையுடையது என்பதை துல்லியமாகக் கண்டறிவது எளிதாகும்.” என்கிறார் மாநில வனப்பணிக்கான மத்திய உயர் பயிற்சி மையத்தின் முதல்வர் திருநாவுக்கரசு.

காட்டு யானைகள் மற்றும் காட்டை ஒட்டியுள்ள கிராமங்களை தனித்தனியாக அடையாளப்படுத்தி ஆவணப்படுத்தும் பணியை, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மறுபரிசீலனை செய்யவும் வனத்துறை திட்டமிட்டுள்ளது. இந்த பணி இன்னும் 3 ஆண்டுகளில் முடிவடைந்து, முழுமையாக நடைமுறைக்கு வரும்போது, யானை–மனித மோதலுக்கு ஓரளவுக்கு தீர்வு கிடைக்குமென்று நம்பிக்கை தெரிவிக்கிறார், தமிழக வனத்துறையின் முதன்மை தலைமை வனப்பாதுகாவலரும், காலநிலை மாற்றத்துக்கான பல்லுயிர் பாதுகாப்புத் திட்டத்தின் இயக்குநருமான அன்வர்தீன்.

பட மூலாதாரம், Anwardeen

படக்குறிப்பு, இத்திட்டத்தின் மூலம், யானை–மனித மோதலுக்கு ஓரளவுக்கு தீர்வு கிடைக்குமென்று நம்பிக்கை தெரிவிக்கிறார் அன்வர்தீன் இவர், கோவை மண்டல வனப்பாதுகாவலராக இருந்தபோதுதான், 2016–2017 ஆம் ஆண்டில் ‘பிராஜெக்ட் களிறு’ என்ற திட்டம் துவக்கப்பட்டு, கோவை வனக்கோட்டத்திலுள்ள 65 கிராமங்களில் வனத்துறையினர் மற்றும் பொதுமக்களுக்கு இடையே இணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பல புதிய முயற்சிகள் துவங்கின.

கோவையில்தான் முதல் முதலாக ‘தடம்’ என்ற வாட்ஸ்ஆப் குழு துவக்கப்பட்டு, அதில் காட்டை ஒட்டியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள், வனத்துறையினருடன் இணைக்கப்பட்டனர். அதில் யானைகள் ஊடுருவல் குறித்த தகவல்கள் இப்போது வரையிலும் உடனுக்குடன் பதியப்பட்டு, அதற்கேற்ப இரு தரப்பிலும் பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் நீட்சியாகவே இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டிருப்பதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார் அன்வர்தீன். தமிழகம் முழுவதும் இப்போது 105 கிராமங்களில் தடம் குழுக்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தகவல் பகிர்ந்தார்.

”யானை–மனித மோதலைத் தடுப்பதில் மக்களின் பங்களிப்பை அதிகப்படுத்துவதுதான் தீர்வுக்கு வழிவகுக்கும் என்பதை நாங்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறோம். அதற்கேற்ப ‘பிராஜெக்ட் தடம்’ திட்டத்தில் பலவிதமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. யானையையும், கிராமங்களையும் அடையாளப்படுத்தி ஆவணப்படுத்தும் நடவடிக்கை சிறந்தது. ஆனால் இது தொடர் நடவடிக்கையாக அமைந்தால் மட்டுமே ஓர் உறுதியான தீர்வை எட்ட முடியும்.” என்கிறார் சூழலியலாளர் ஓசை காளிதாசன்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு