மத நிகழ்ச்சியில் பங்கேற்காத ராணுவ அதிகாரி பணிநீக்கம் – உயர்நீதிமன்றம் கூறியது என்ன? இன்றைய முக்கியச் செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்2 ஜூன் 2025, 04:11 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இன்றைய தினம் (ஜூன் 2, திங்கட்கிழமை) செய்தித்தாள்கள் மற்றும் இணையதளங்களில் வெளியாகியுள்ள முக்கியமான செய்திகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

மத நிகழ்ச்சியில் பங்கேற்காத கிறித்தவ ராணுவ அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடர்ந்து மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்த வழக்கில் அவரின் பணி நீக்கத்தை நீதிமன்றம் உறுதி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்தியில், “ராணுவத்தில் கடந்த 2017-ம் ஆண்டு லெப்டினன்ட்டாக பணியில் சேர்ந்தவர் சாமுவேல் கமலேசன். இவர் சீக்கியர் படைப்பிரிவில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இந்தப் படைப்பிரிவினர் தங்கியிருக்கும் முகாமில் கோயில் ஒன்றும், குருத்துவாரா ஒன்றும் இருந்தது. இங்கு வீரர்கள் பங்கேற்கும் வழிபாடு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சாமுவேல் கமலேசன் மறுப்பு தெரிவித்தார். தான் கிறித்தவ சமயத்தை சேர்ந்தவர் என்றும், சீக்கியர் படைப்பிரிவு முகாமில் தேவாலயம் மற்றும் அனைத்து மதத்தினரும் வழிபாடு நடத்தும் சர்வ தர்ம தலம் போன்றவை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இவருக்கு பல கவுன்சலிங் நிகழ்ச்சிகளுக்கும் ராணுவம் ஏற்பாடு செய்தது. ஆனால் லெப்டினன்ட் சாமுவேல் கமலேசன் பிடிவாதமாக இருந்ததால் அவர் ராணுவ ஒழுங்கு விதிமுறைகளுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி பணி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நவீன் சாவ்லா மற்றும் சலிந்தர் கவுர் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த மாதம் 30-ம் தேதி அளித்த தீர்ப்பில் கூறியதாவது:

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

நமது ராணுவத்தில் அனைத்து மதத்தினரும், சாதியினரும் உள்ளனர். அவர் தங்கள் சீருடையால் ஒன்றுபட்டவர்கள். மதத்தாலோ, சாதியாலோ வேறுபட்டவர்கள் அல்ல. ராணுவத்தில் மதம் மற்றும் மண்டலத்தின் பெயருடன் சீக்கியர், ஜாத், ராஜ்புத் போன்ற பல படைப்பிரிவுகள் பாரம்பரியமாக உள்ளன. ஆனாலும், இந்தப் பிரிவில் நியமிக்கப்படும் நபர்களின் மதச் சார்பற்ற கொள்கைகளை குறைத்து மதிப்பிடுவதில்லை.

ராணுவத்தில் பணியாற்றும் நபர்களின் மத நம்பிக்கைகளுக்கும் உரிய மரியாதையை ராணுவம் அளிக்கிறது. ஆனால், தனது மேல் அதிகாரியின் உத்தரவுக்கு மேலாக தனது மதத்துக்கு சாமுவேல் கமலேசன் முக்கியத்துவம் அளிக்கிறார். இது ஒழுங்கீனம் என்பது தெளிவாக தெரிகிறது.

பாதுகாப்பு படைக்கு தேவையான ஒழுங்கு, மதச் சார்பற்றதன்மை அவரிடம் இல்லை. இவரது ஒழுங்கீனமான நடவடிக்கை, இந்திய ராணுவத்தின் மதச் சார்பற்ற விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது. இது ராணுவ படைப்பிரிவில் அதிகாரிகள் மற்றும் படைப் பிரிவினருக்கு இடையேயான பாரம்பரிய நட்புறவை கடுமையாக பாதிக்கிறது. அவரது பதவிநீக்கம் சரியானதுதான் என நீதிபதிகள் கூறினர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.தமிழக ரயில்வே திட்டங்களுக்கான நிதி திருப்பி அனுப்பபட்டதா? ரயில்வே விளக்கம்

பட மூலாதாரம், Getty Images

தமிழக ரயில்வே திட்டங்களுக்கான நிதி திருப்பி அனுப்பப்பட்டது தொடர்பாக பரவிய தகவலுக்கு தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் செயல்படுத்த வேண்டிய ரயில்வே திட்டங்களுக்கான நிதியை தெற்கு ரயில்வே நிர்வாகம் ரயில்வே வாரியத்திற்கு திருப்பி அனுப்பியதாக நேற்று செய்திகள் வெளியானது. இதற்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்வினை எழுந்த நிலையில் ரயில்வே நிர்வாகம் அதற்கு விளக்கம் அளித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே அளித்துள்ள விளக்கத்தில், “தமிழ்நாட்டின் ரெயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தாமல் ரெயில்வே வாரியத்துக்கு, தெற்கு ரெயில்வே திருப்பி அனுப்பியதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது. ரெயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி மற்றும் அதன் பயன்பாடு ஒவ்வொரு காலாண்டுக்கும் வேறுபடும். ரெயில்வே வாரியத்தால் காலாண்டுக்கு விடுவிக்கப்பட்ட தொகையானது திட்டத்தின் களநிலவரம், திட்டத்தின் திறன் ஆகியவற்றை பொறுத்து பயன்படுத்தப்படும். காலாண்டுக்கு விடுவிக்கப்பட்ட தொகையும், திட்டத்தின் மதிப்பீடும் வேறுபட்டதாக இருந்தால் அந்த திட்டத்திற்கு அதிக நிதி தேவை என்று அர்த்தம். ஒவ்வொரு திட்டமும் அதற்காக ஒதுக்கப்படும் நிதியை பொறுத்துதான் செயல்படுத்தப்படும்.

திட்டத்திற்கான வழித்தடத்தை இறுதி செய்தல், விரிவான திட்ட அறிக்கைக்கு ரெயில்வே வாரியம் ஒப்புதல் வழங்குதல், மாநில அரசு உதவியுடன் நிலம் கையகப்படுத்துதல் என எந்த திட்டமும் நிதியை பயன்படுத்துவதன் மூலமே செயல்படுத்தப்படும். தமிழகம் மற்றும் கேரளாவில் சில திட்டங்கள் பல்வேறு கட்டங்களை எட்டியுள்ளது. இதற்கிடையே, தற்போதைய காலாண்டில் பயன்படுத்தாத நிதி அடுத்த காலாண்டுக்கு மாற்றுவது வழக்கமாக நடைபெறும் நடைமுறைதான். அதனாலேயே குறிப்பிட்ட நிதி அடுத்த காலாண்டுக்கு பயன்படுத்தப்படும் சூழலில் அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.

மண்டல ரெயில்வே நிர்வாகம், ரெயில்வே வாரியத்துக்கும் இடையிலான நிதி பறிமாற்றம் என்பது வழக்கமான செயல்முறையாகும். தேசிய வளங்களை திறம்பட கையாள்வதை அது நோக்கமாக கொண்டுள்ளது. இந்திய ரயில்வேயில் நிதி பற்றாக்குறை இல்லை. தெற்கு ரெயில்வே திட்டங்களுக்கான நிதியை தேவைப்படும்போதெல்லாம் பெற்று வருகிறோம். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவதை தெற்கு ரெயில்வே இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு