சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறிய குற்றச்சாட்டில் , 37 வருடங்களின் பின்னர் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய நபர் பிணையில் செல்ல மல்லாகம் நீதிமன்று அனுமதித்துள்ளது.

உள்நாட்டு யுத்தம் காரணமாக தனது உயிரை பாதுகாப்பும் நோக்குடன் யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக ஏழாலையை சேர்ந்த சின்னையா சிவலோகநாதன் (வயது தற்போது 75) எனும் நபர் கடந்த 37 வருடங்களுக்கு முன்னர் தமிழகம் சென்று இருந்தார்.

தமிழக அகதி முகாம்களில் தனது வாழ்நாளில் 37 வருடங்களை கழித்தவர், யாழ்ப்பாணத்தில் உள்ள தனது மகனுடன் வாழ என கடந்த 29ஆம் திகதி அகதிகளுக்கான சட்ட ஆவணங்களுடன் , சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் திரும்பிய வேளை குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவரை விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.  இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவரை பிணையில் செல்ல இன்றைய தினம் திங்கட்கிழமை மன்று அனுமதித்தது.