Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரின் விஸ்வரூபம் – இந்திய அணியின் தேர்வுக்குழுவுக்கு சொல்லும் செய்தி என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஸ்ரேயாஸ் அய்யர்எழுதியவர், க.போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர்
“ஒரு சண்டையில்தான் தோற்றிருக்கிறோம், போரில் அல்ல. நேர்மையாகக் கூறுகிறேன் என்னுடைய முடிவுகள் மீது எனக்கு சந்தேகமில்லை. நாங்கள் என்னத் திட்டங்கள் வகுத்தோமோ, அதை ஈட்டிமுனைபோல் கூர்மையாக வைத்திருந்தோம். ஆனால், அதை களத்தில் சரியாகச் செயல்படுத்த முடியவில்லை”
ஆர்சிபி அணிக்கு எதிராக முதல் தகுதிச்சுற்றில் தோல்வி அடைந்தபின் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் இதைத் தெரிவித்தார். அவர் கூறியதை நிரூபிக்கும் வகையில் 2வது தகுதிச்சுற்றில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கோப்பைப்பான போராட்டத்தில் ஆர்சிபி அணியை எதிர்த்து நாளை விளையாடுகிறது பஞ்சாப் கிங்ஸ் அணி.
தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த ஸ்ரேயாஸ்
மகாரஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் ஸ்ரேயாஸ் சந்தோஷ் அய்யர். இவரின் தந்தை சந்தோஷ் தமிழகத்தைச் சேர்ந்தவர், தாயார் ரோஹினி அய்யர் துளுவ சமூதத்தைச் சேர்ந்தவர். இவர்களின் பூர்வீகம், கேரள மாநிலம் திரூச்சூர்.
சிறவயதிலயே ஸ்ரேயாஸ் அய்யரின் கிரிக்கெட் திறமையை கண்டறிந்த அவரை செதுக்கியவர் அவரின் பயிற்சியாளரும், முன்னாள் இந்திய வீரர் பிரவிண் ஆம்ப்ரே. சிறுவயதில் ஸ்ரேயாஸ் அய்யரை அவரின் சக நண்பர்கள், அணியினர் அவரை வீரேந்திர சேவாக்குடன் ஒப்பிட்டு பேசியுள்ளனர்.
கேப்டனாக வளர்க்கப்பட்டவர்
சிலர் பிறக்கும்போதே கேப்டன்ஷிப் திறமையோடு பிறக்கிறார்கள், சிலர் காலப்போக்கில் வளர்த்துக் கொள்கிறார்கள். அந்த வகையில் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக வளர்க்கப்பட்டவர் என்றுதான் கூற முடியும்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
மும்பையில் இருந்து ஏற்கெனவே ஒரு கேப்டனாக ோகித் ஷர்மா உருவாகி, இந்திய கிரிக்கெட்டில் கோலோச்சி வருவதால், மும்பையில் இருந்து உருவாகி வளர்ந்த ஸ்ரேயாஸ் அய்யரின் தனித்தன்மைகள், திறமைகள், சாதனைகள் அவ்வப்போது மழுங்கடிக்கப்பட்டு, தட்டிவைக்கப்பட்டது.
“ஞாயிற்றைக் கை மறைப்பார் இல்” என்ற பழமொழி ஸ்ரேயாஸ் அய்யருக்கு சிறப்பாகப் பொருந்தும். ஸ்ரேயாஸ் அய்யரின் திறமையை மறைக்கவும், அவரை மேலே வரவிடாமல் செய்யவும் பலவிதமான தடைகள் இந்திய அணிக்குள் வந்தாலும் அவர் அனைத்தையும் மீறி ஐபிஎல் மூலம் தற்போது தவிர்க்க முடியாத வீரராக உருவாகியுள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், இப்போது பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 3 அணிகளுக்கும் கேப்டன் பொறுப்பேற்று செயல்பட்ட ஸ்ரேயாஸ் 3 அணிகளையும் ப்ளே ஆஃப் சுற்றுக்கும், ஐபிஎல் பைனலுக்கும் அழைத்துச் சென்றுள்ளார்.
ஸ்ரேயாஸின் கேப்டன்ஷிப் திறமையைப் பார்த்து மெய்சிலிரித்துப் போன முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ஸ்ரேயாஸ் அய்யர் விரைவில் இந்திய அணியின் 3 விதமான டி20, ஒருநாள், டெஸ்ட் அணிக்கும் கேப்டனாகப் பார்க்கலாம்” என்று கணித்துள்ளார்.
கம்பீரால் வளர்க்கப்பட்டு, தவிர்க்கப்படும் ஸ்ரேயாஸ்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கம்பீர் – ஸ்ரேயாஸ்ஸ்ரேயாஸ் அய்யரை கடந்த 2015ம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ்(கேபிடல்ஸ்) அணி ரூ.2.50 கோடிக்கு வாங்கியது. ஒவ்வொரு சீசனிலும் ஸ்ரேயாஸ் அய்யரின் பேட்டிங் திறமை சிறப்பாகத்தான் இருந்து வந்தது. ஆனால் டெல்லி கேபிடல்ஸ் அணி மட்டும் லீக் சுற்றைக் கூடக் கடக்க முடியவில்லை. 2018ம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த கம்பீர் தன்னால் சரியாகச் செயல்படமுடியவில்லை எனக் கருதி ஒதுங்கிக்கொண்டார். அவருக்குப் பதிலாக அணியில் சிறப்பாகச் செயல்பட்ட ஸ்ரேயாஸ் அய்யருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. அப்போது அணியின் பயிற்சியாளராக இருந்தது ரிக்கி பாண்டிங்.
2018ம் ஆண்டில் மிக இளம் வயதில் ஐபிஎல் லீக்கில் கேப்டனாகப் பொறுப்பேற்ற வீரர் என்ற பெருமையுடன் கேப்டன்சி செய்த ஸ்ரேயாஸ் அய்யர் 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்விகளைப் பெற்று 8வது இடத்தையே பிடிக்க முடிந்தது. இவரின் கேப்டன்சி வெற்றி சதவீதம் 50 ஆக இருந்தது.
2019ம் ஆண்டில் டெல்லி கேபிடல்ஸ் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் முழுநேரமாக நியமிக்கப்பட்டு, துணைக் கேப்டனாக ரிஷப்பந்த் நியமிக்கப்பட்டார். இந்த சீசனில் 16 போட்டிகளில் 10 வெற்றிகளுடன் டெல்லி அணியை ப்ளே ஆஃப் சுற்றுக்கு ஸ்ரேயாஸ் அழைத்துச் சென்று 62 % வெற்றிகளைப் பெற்றார்.
2020ம் ஆண்டு டெல்லி அணியை வழிநடத்திய ஸ்ரேயாஸ் அய்யர் 17 போட்டிகளில் 9 வெற்றிகளுடன் 2வது இடத்துக்கு உயர்த்தினார், 59 சதவீத வெற்றிகளைப் பெற்றார். டெல்லி அணிக்காக 41 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் அதில் 23 வெற்றிகள் 18 தோல்விகளுடன் 56% வெற்றிகளுடன் முடித்தார்.
ஸ்ரேயாஸ் ஐயர் 2021 ஐபிஎல் சீசனில் தோள்பட்டை காயத்தால் விலகியதால் அவருக்குப் பதிலாக ரிஷப் பந்த் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 2022 ஐபிஎல் ஏலத்தில் ஸ்ரேயாஸ் அய்யரை கொல்கத்தா அணி வாங்கி கேப்டனாக நியமித்தது. அப்போது கொல்கத்தா அணியின் மெண்ட்டராக கெளதம் கம்பீர் இருந்தார். 2022 சீசனில் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் அய்யர் அணியை 7வது இடத்துக்குத்தான் உயர்த்த முடிந்தது.
இதையடுத்து, 2024ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணியை வழிநடத்திய ஸ்ரேயாஸ் அய்யர் 16 போட்டிகளில் 11ல் 68 சதவீதம் வெற்றியுடன் சாம்பியன் பட்டத்தைப் பெற்றுக் கொடுத்தார்.
கேப்டனாக ஸ்ரேயாஸ் சாதித்தது என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்திய அணியில் ஸ்யேராஸ் அய்யருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தால் அவர் இருக்கும் உயரம், உச்சம் வேறுமாதிரி இருந்திருக்கும்.கொல்கத்தா அணிக்கு 30 போட்டிகளில் கேப்டன்சி செய்த ஸ்ரேயாஸ் அய்யர் 17 வெற்றிகள், 11 தோல்விகளுடன் 56 சதவீத வெற்றிகளுடன் முடித்தார். ஒட்டுமொத்தத்தில் (இந்த சீசன் சேர்க்காமல்) ஸ்ரேயாஸ் அய்யர் ஐபிஎல் தொடரில் 71 போட்டிகளுக்கு கேப்டன்சி செய்து 40 போட்டிகளில் வெற்றியும், 29 போட்டிகளில் தோல்வியும் அடைந்து 56 % வெற்றிகளுடன் சிறந்த கேப்டனாகப் பதிவு செய்துள்ளார்.
அதேபோல டெல்லி அணியில் இருந்தபோது ஒரு வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் 1218 ரன்களும், கேப்டனாக பொறுப்பேற்றபின் 1157 ரன்களும் சேர்த்தார். கொல்கத்தா அணிக்கு கேப்டனாக வந்தபின் ஸ்ரேயாஸ் 2 சீசன்களில் 752 ரன்களும், தற்போது பஞ்சாப் அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்று 516 ரன்கள் என மொத்தம் 3643 ரன்களைக் குவித்துள்ளார். ஆகவே கேப்டனாகவும், ஒரு வீரராகவும் ஸ்ரேயாஸ் அய்யர் தன்னை நிரூபித்துள்ளார்.
ஆனால், இந்திய அணிக்கு பல்வேறு கால கட்டங்களில் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயருக்கு திடீரென வாய்ப்பு மறுக்கப்பட்டது. 14 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய ஸ்ரேயாஸ் ஒரு சதம் 5 அரைசதங்கள் என 811 ரன்கள் குவித்தபோதிலும் அவருக்கு இங்கிலாந்து செல்லும் டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 51 டி20 போட்டிகளில் ஆடி 1104 ரன்கள் சேர்த்து, 136 ஸ்ட்ரைக்ரேட்டில் ஆடும் ஸ்ரேயாஸ் அய்யருக்கு இந்திய டி20 அணியிலும் இடம் அளிக்கவில்லை.
இங்கிலாந்து தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்ந்தெடுக்கப்படாதது குறித்து தலைமைப் பயிற்சியாளர் கம்பீரிடம் நிருபர்கள் கேட்டபோது, “அணித் தேர்வு என்னுடைய பொறுப்பு அல்ல” என்று ஒற்றை பதிலில் நழுவிவிட்டார். ஆனால், கம்பீருக்கு அணியில் வீரர்களை நீக்கத்தான் தெரியும், சேர்க்கத் தெரியாது என்று கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் வீரர் அடுல்வாசன்.
இந்திய அணயில் ஸ்யேராஸ் ஐயருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தால் அவர் இருக்கும் உயரம், உச்சம் வேறுமாதிரி இருந்திருக்கும். ஆனால், தொடர்நது அவரை இருட்டடிப்பு செய்யும் செயல்கள் நடந்த போதிலும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தன்முன்னே இருக்கும் தடைகளை உடைத்து மேலெழும்பி நிற்கிறார். அதற்கு இந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணியை பைனலுக்கு நகர்த்தியதே சாட்சி.
ஸ்ரேயாஸை விட்டுக்கொடுக்காத பாண்டிங்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ரிக்கி பாண்டிங்கிங்கின் கவனத்தையும், அபிமானத்தையும் பெற்றார் ஸ்ரேயாஸ்டெல்லி அணிக்கு கேப்டனாக ஸ்ரோயஸ் அய்யர் செயல்பட்டபோதே ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும் பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங்கிங்கின் கவனத்தையும், அபிமானத்தையும் பெற்றார்.
கொல்கத்தா அணி சாம்பியன்ஷிப் பெற்றுக் கொடுத்தபின், ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்தபோது ஏலத்தில் எப்படியாவது பஞ்சாப் பக்கம் இழுக்கவும், வாங்கவும் முக்கியத் தூண்டுதலாக இருந்தது ரிக்கி பாண்டிங்தான். அதனால்தான் பஞ்சாப் அணி ரூ.26.75 கோடிக்கு வாங்கியது. பஞ்சாப் அணி கேப்டனாக்குவதற்காக மட்டுமே ஸ்ரேயாஸை வாங்குகிறது என்று அப்போதே தெரிந்துவிட்டது.
ஸ்ரேயாஸ் ஐயருக்கும், பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கிற்கும் கெமிஸ்டிரி சிறப்பாக ஒத்துப்போனது. அதன்விளைவுதான் அணியை பைனல்வரை ஸ்ரேயாஸால் அழைத்து வர முடிந்தது.
அணிக்குள் ஸ்ரேயாஸ் ஐயர் எடுக்கும் அனைத்து முடிவுகளையும் ஆதரித்து, செயல்பட்ட பாண்டிங் அதன் விளைவுகள் நல்ல பலன்களை தந்ததால் ஸ்ரேயாஸ் மீது முழு நம்பிக்கையுடன் இருந்தார். பஞ்சாப் அணிக்கு தொடக்க வீரராக ஜோஸ் இங்கிலிஸை, பிரப்சிம்ரனுடன் சேர்ந்து களமிறக்கவே பாண்டிங் திட்டமிட்டிருந்தார். அதற்காகத்தான் ஏலத்தில் இங்கிலிஸை வாங்கினார். ஆனால் பிரயான்ஸ் ஆர்யாவை களமிறக்க வேண்டும் என்று ஸ்ரேயாஸ் கூறவும் அதற்கு மறுப்புக் கூறாமல் முடிவை பாண்டிங் ஆதரித்தார்.
ஸ்ரேயாஸ் அய்யரின் முடிவு, ஐபிஎல் சீசனில் நல்லபலனைக் கொடுத்தது. பிரப்சிம்ரன், ஆர்யா இருவருமே அன்கேப்டு வீரர்கள். இந்த ஜோடி இந்தசீசனில் 14 இன்னிங்ஸ்களில் 467 ரன்கள் குவித்து, அன்கேப்டு ஜோடி சேர்த்த அதிகரன்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தனர். உள்நாட்டு வீரர்களுக்கு அதிகமான முக்கியத்துவம், அன்கேப்டு வீரர்களுக்கு அதிக வாய்ப்பளித்து அவர்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த ஸ்ரேயாஸின் செயல்களுக்கு பாண்டிங் ஆதரவு அளித்தார். அதனால்தான் பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்கள் பிரப்சிம்ரன், பிரயான்ஸ் ஆர்யா அன்கேப்டு வீரர்கள், நடுவரிசையில் சஷாங் சிங், நேஹல் வதேரா, ஹர்பிரீர் பிரார் ஆகியோர் அன்கேப்டு வீரர்கள்.
சர்வதேச வீரர்களையும், நட்சத்திர வீரர்களையும் வைத்து தோல்வியால் மண்ணைக் கவ்வும் சாம்பியன் அணிகள் விளையாடிய சீசனில் அன்கேப்டு வீரர்களை வைத்துக்கொண்டு பைனல் வரை அணியை ஸ்ரேயாஸ் நகர்த்தியுள்ளார். ஸ்ரேயாஸின் முடிவு அனைத்துக்கும் தலைமைப் பயிற்சியாளர் பாண்டிங்கின் ஆதரவு பக்கபலமாக இருந்தது.
கேப்டன்சிக்கு ‘பெஞ்ச்மார்க்’ கொடுத்த ஸ்ரேயாஸ்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஸ்ரேயாஸ் அய்யர்கேப்டன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், இவ்வாறு செயல்பட வேண்டும் என்ற ‘பெஞ்ச்மார்க்’ வகுத்துவிட்டார் ஸ்ரேயாஸ் அய்யர். 3 வெவ்வேறு அணிகளுக்கு கேப்டனாகப் பொறுப்பேற்று செயல்பட்ட ஸ்ரேயாஸ் 3 அணிகளையும் ப்ளேஆஃப் சுற்றுக்கும், பைனலுக்கும் நகர்த்தி ‘பெஞ்ச்மார்க்’ வைத்துவிட்டார்.
டெல்லி அணிக்கு கேப்டனாக ஸ்ரேயாஸ் பொறுப்பேற்றபோது 7 ஆண்டுகளாக அந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கே சென்றது இல்லை. ஆனால், ஸ்ரேயாஸ் கேப்டனாக வந்தபின் முதல்முறையாக ப்ளே ஆஃப் சென்றது. அதேபோல பஞ்சாப் அணி கடந்த 2014ம் ஆண்டுக்குப்பின் ப்ளே ஆஃப் செல்லாமல் இருந்த நிலையில் 10 ஆண்டுகளுக்குப்பின் ப்ளே ஆஃப் செல்லவைத்ததோடு இறுதிப்போட்டிவரை ஸ்ரேயாஸ் அழைத்து வந்துள்ளார்.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ஸ்ரேயாஸ் தலைமையில் கோப்பையை வெல்வதற்கு முன்பாக 10 ஆண்டுகளாக கோப்பையை வெல்லாமல் இருந்தது. ஸ்ரேயாஸ் கேப்டனாக வந்தபின்புதான் 10 ஆண்டு பஞ்சம் தீர்ந்து சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றுக் கொடுத்தார். கேப்டன்ஷிப் என்ற வார்த்தைக்கு தனியாக பெஞ்ச் மார்க்கை ஸ்ரேயாஸ் உருவாக்கிவிட்டார்.
பிசிசிஐ தேர்வுக்குழு, கம்பீருக்கு சொல்லும் பாடம்
பட மூலாதாரம், Getty Images
ஐபிஎல் பைனலுக்கும், ப்ளே ஆஃப் சுற்றுக்கும் 10 ஆண்டுகளுக்குப்பின் பஞ்சாப் அணியை ஸ்ரேயாஸ் அழைத்துச் சென்றுள்ளார். 204 ரன்கள் இலக்கை ஒரு ஓவர் மீதமிருக்கும்போதே எட்டிவிட்டார் ஸ்ரேயாஸ் ஐயர். ஆனால், முகத்தில் எந்தவிதமான சலனமும், ஆர்ப்பரி்ப்பும், துள்ளலும் இல்லாமல் வெளிக்காட்டிக்கொள்ளாமல் சாதாரணமாகவே ஸ்ரேயாஸ் ஐயர் இருந்தார்.
மும்பை அணி இதுவரை முதலில் பேட்டிங் செய்த ோது 18 முறை 200 ரன்களுக்கு மேல் குவித்து ஒருமுறைகூட தோற்காத நிலையில் முதல்முறையாக ஸ்ரேயாஸ் ஐயரின் பஞ்சாப் அணியிடம் தோற்றுள்ளது. ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பும்ரா, சூர்யகுமார் யாதவ் என 4 கேப்டன்களைக் கொண்ட அணி, சச்சின் டெண்டுல்கர், ஜெயவர்த்தனா, ஜெயசூர்யா என ஜாம்பவான்களை பயிற்சியாளர்களாகவும், மெண்டர்களாகவும் வைத்திருக்கும் அணியை அனாயசமாக சாய்த்துவிட்டு ஸ்ரேயாஸ் ஐயர் மெளனமாக இருந்தார்.
ஸ்ரோயஸ் அய்யரைப் பொருத்தவரை என்னுடைய இலக்கு மும்பை இந்தியன்ஸ் அணி அல்ல, அந்த அணியைச் சாய்ப்பதும் அல்ல. அடுத்த இலக்கு சாம்பியன்ஷிப் கோப்பைதான் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார். அது மட்டுமல்லாமல் ஸ்ரேயாஸ் ஐயரைவிட சிறியவர், அனுபவத்திலும், பேட்டிங்கிலும் சிறியவராக இருக்கும் சுப்மான் கில்லுக்கு கேப்டன்ஷிப் கொடுத்து, டெஸ்ட் அணியில் தேர்ந்தெடுக்காத பிசிசிஐ தேர்வுக்குழுவுக்கு ஸ்ரேயாஸின் இந்த வெற்றி இடியாக இறங்கியுள்ளது.
அது மட்டுமல்ல ஸ்ரேயாஸ் அய்யரின் வெற்றியை அருகே இருந்து பார்த்து பிரமித்துப் போயிருக்கும் பயிற்சியாளர் கெளதம் கம்பீருக்கும், டெஸ்ட் அணியில் ஸ்ரேயாஸ் அய்யரை சேர்க்க வலியுறுத்தாத குற்ற உணர்ச்சியும் இனி இருக்கும். மும்பைக்கு எதிரான வெற்றியின் மூலம் பிசிசிஐ தேர்வுக்குழுத் தலைவர் அகர்கருக்கும், பயிற்சியாளர் கம்பீருக்கும் சொல்லாத பாடங்களை சொல்லியுள்ளார் ஸ்ரேயாஸ்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு