Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ரஷ்யாவுக்குள் பல ஆயிரம் கி.மீ. ஊடுருவி தாக்கியதன் மூலம் புதின், டிரம்புக்கு யுக்ரேன் சொல்லும் சேதி என்ன?
பட மூலாதாரம், Ukraine Presidential Press Service/EPA-EFE/Shutterstock
படக்குறிப்பு, வாசில் மல்யுக்குடன் யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி.எழுதியவர், பால் ஆடம்ஸ்பதவி, ராஜ்ஜீய செய்தியாளர் 38 நிமிடங்களுக்கு முன்னர்
ரஷ்யாவின் விமானப்படை தளங்களை இலக்காகக் கொண்டு யுக்ரேன் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது.
மிகவும் தைரியமாகவும் புத்திசாலித்தனமாகவும், யுக்ரேன் திட்டமிட்டு நடத்தியுள்ள இந்தத் தாக்குதல், எவ்வளவு துணிச்சலானது அல்லது புத்திசாலித்தனமானது என்பதை விவரிப்பது கடினம் தான்.
இந்தத் தாக்குதல்களால் 7 பில்லியன் டாலர் (5.2 பில்லியன் யூரோ) அளவுக்கு சேதம் விளைவித்து விட்டதாக யுக்ரேன் கூறியுள்ளதை நம்மால் உறுதி செய்ய முடியாவிட்டாலும், “ஆபரேஷன் ஸ்பைடர்ஸ் வெப்” என்பது, தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு வெற்றிகரமான நடவடிக்கையாக இருந்தது என்பது தெளிவாகத் தெரிகிறது.
யுக்ரேனியர்கள் இந்தத் தாக்குதலை, ரஷ்யாவின் முழுமையான படையெடுப்புக்குப் பிறகு கிடைத்த மற்ற முக்கிய ராணுவ வெற்றிகளுடன் ஒப்பிட்டு பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
அதாவது 2022-ஆம் ஆண்டில் கருங்கடல் பகுதியில் ரஷ்ய கடற்படையின் முக்கிய கப்பலான மோஸ்க்வாவை மூழ்கடித்தது, கெர்ச் பாலத்தின் மீதான தாக்குதல், அடுத்த ஆண்டில் செவாஸ்டோபோல் துறைமுகத்தில் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் போன்றவையும் அதில் அடங்கும்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
யுக்ரேனின் ராணுவ உளவுத்துறையான எஸ்பியூவின் மூலம் (SBU) ஊடகங்களுக்குக் கசிந்த தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், இந்த சமீபத்திய நடவடிக்கை இதுவரை யுக்ரேன் நடத்திய தாக்குதல்களில் மிகப் பெரிய ஒன்றாக கருதப்படுகின்றது.
இதற்கான திட்டமிடல் முதல் அதனைச் செயல்படுத்துவது வரையிலான முன்தயாரிப்புப் பணிகள் 18 மாதம் நீடித்ததாகக் கூறப்படுகிறது. பல சிறிய டிரோன்கள் ரஷ்யாவிற்குள் கடத்தப்பட்டு, சரக்கு லாரிகளின் பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மைல்கள் தாண்டி, குறைந்தது நான்கு தனித்தனி இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பின்னர், அருகிலுள்ள விமானத் தளங்களை நோக்கி அந்த டிரோன்கள் ஏவப்பட்டுள்ளன.
“உலகில் இதற்கு முன்பு எந்த உளவுத் துறையும் இதுபோன்ற எதையும் செய்ததில்லை,” என்று பாதுகாப்பு ஆய்வாளர் செர்ஹி குசான், யுக்ரேனிய தொலைக்காட்சிக்கு தெரிவித்துளார்.
பட மூலாதாரம், Reuters
“சக்தி வாய்ந்த ஏவுகணைகளை சுமந்து சென்று, நீண்ட தூரம் ஏவக்கூடிய ரஷ்யாவின் போர் விமானங்கள் எங்களுக்கு எதிராக நீண்ட தூர தாக்குதல்களை நடத்தும் திறன் வாய்ந்தவை,” என்று கூறிய அவர், “ரஷ்யாவிடம் அத்தகைய 120 போர் விமானங்களே உள்ளன. அவற்றில் நாங்கள் 40-ஐ தாக்கியிருக்கிறோம். அது நம்ப முடியாத எண்ணிக்கை” என்று அவர் குறிப்பிட்டார்.
சேதத்தை மதிப்பிடுவது கடினமாக இருந்தாலும் இந்தத் தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதம் மிகப் பெரியது என்று யுக்ரேனிய ராணுவச் செய்திகளைப் பதிவு செய்பவரான ஒலெக்சாண்டர் கோவலென்கோ கூறுகிறார்.
” ரஷ்யாவின் ராணுவ-தொழில்துறை அமைப்பு, தற்போதுள்ள நிலையில் அதை விரைவில் சரி செய்து பழைய நிலைக்கு கொண்டு வர முடியாத அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது” என்று அவர் தனது டெலிகிராம் சேனலில் பதிவிட்டுள்ளார்.
சக்தி வாய்ந்த ஏவுகணைகளை சுமந்து சென்று, நீண்ட தூர இலக்குகளை தாக்கக் கூடிய Tu-95, Tu-22 மற்றும் Tu-160 ஆகிய போர் விமானங்கள் ரஷ்யாவால் தற்போது உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பதால், அவற்றை பழுதுபார்ப்பது சவாலானதாக இருக்கும், அவற்றை மாற்றுவதும் சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, சூப்பர்சோனிக் Tu-160 ரக போர் விமானத்தின் இழப்பு, கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.
“இன்று, ரஷ்ய விமானப்படை தங்களின் இரண்டு சக்தி வாந்த விமானங்களை மட்டுமல்ல, மிகவும் சிறப்பு வாய்ந்த மற்றும் ஈடுசெய்ய முடியாத இரண்டு விமானங்களையும் இழந்துவிட்டது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
யுக்ரேனின் தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதம், இங்குள்ள ஆய்வாளர்கள் கூறுவது போல் பெரிதாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.
ஆனால் ‘ஆபரேஷன் ஸ்பைடர்ஸ் வெப்’ ரஷ்யாவிற்கு மட்டும் அல்லாமல், யுக்ரேனின் மேற்கத்திய நட்பு நாடுகளுக்கும் மற்றொரு முக்கியமான செய்தியைத் தருகிறது.
பிபிசி யுக்ரேனிய சேவைக்காக பணியாற்றிவரும் எனது சக ஊழியர் ஸ்வயடோஸ்லாவ் கோமென்கோ, சமீபத்தில் கீயவில் ஒரு அரசு அதிகாரியுடன் நடந்த சந்திப்பை நினைவு கூர்ந்தார்.
அந்த அதிகாரி மிகுந்த விரக்தியுடன் காணப்பட்டுள்ளார்.
“நாங்கள் ஏற்கனவே போரில் தோற்றுவிட்டோம் என்று அமெரிக்கர்கள் நம்பிக் கொண்டுள்ளனர். அந்த எண்ணத்திலிருந்தே மற்ற அனைத்தும் பார்க்கப்படுகின்றன. அதுதான் மிகப் பெரிய பிரச்னை” என்று ஸ்வயடோஸ்லாவிடம் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.யுக்ரேனிய பாதுகாப்புப் பத்திரிகையாளர் இல்லியா பொனோமரென்கோ, யுக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கிக்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையே அமெரிக்க அதிபர் அலுவலகத்தில் நடந்த சர்ச்சையான சந்திப்பை சுட்டிக்காட்டி, வேறொரு கோணத்தில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“யுக்ரேனுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ளன, உங்களுக்கு வேறு வழிகள் இல்லை, ரஷ்யாவை தோற்கடிக்க முடியாததால் அமைதிக்காக சரணடையுங்கள் என்பன போன்ற அனைத்து வகையான எச்சரிக்கைகளையும் தாக்குதலுக்கு உள்ளான ஒரு நாடு எதிர்கொள்ளும்போது இதுதான் நடக்கும்”. என்கிறது அந்தப் பதிவு.
பிசினஸ் யுக்ரேன் எனும் காலாண்டு இதழ் எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்த ட்வீட் இன்னும் சற்று துல்லியமாக இதனைப் பற்றி குறிப்பிட்டிருந்தது.
“யுக்ரேனுக்கு சில வாய்ப்புகள் இருப்பது போல் தெரிகிறது. இன்று டிரோன்களின் ராஜாவாக ஸெலன்ஸ்கி தோன்றினார்” என்று அந்த இதழ் பதிவிட்டிருந்தது.
அதாவது, ‘யுக்ரேன் இன்னும் போராடிக் கொண்டுள்ளது’ என்பது தான் ரஷ்ய பிரதிநிதிகளுடன் புதிய போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்காக இஸ்தான்புல் சென்றுள்ள யுக்ரேனியப் பிரதிநிதிகள் எடுத்துச் செல்லும் செய்தியாக உள்ளது.
“எங்களுக்காக பேசுவதாக இருந்தால் அது அதிக பாதிப்பை ஏற்படுத்தாத சரணடைதலை உறுதி செய்வதே என்பது போல் அமெரிக்கர்கள் நடந்து கொள்ள தொடங்கிவிட்டனர்” என்று அந்த அரசாங்க அதிகாரி ஸ்வயடோஸ்லாவ் கோமென்கோவிடம் பகிர்ந்துள்ளார்.
“நாங்கள் அவர்களுக்கு நன்றி சொல்லாதபோது அவர்கள் கோவப்படுகிறார்கள். ஆனால் நிச்சயமாக நாங்கள் அப்படிச் செய்வதில்லை. ஏனென்றால் தோற்கடிக்கப்பட்டுவிட்டோம் என்று நாங்கள் நம்பவில்லை.”
டான்பாஸ் போர்க்களங்களில் ரஷ்யா மெதுவாக முன்னேறி வந்தாலும், தங்களுக்குள்ள வாய்ப்புகளை அவ்வளவு எளிதில் புறக்கணித்துவிட முடியாது என்று ரஷ்யாவுக்கும், டிரம்ப் நிர்வாகத்திற்கும் யுக்ரைன் கூறுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு