Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பஞ்சாப் கிங்ஸ் டாஸ் வெற்றி: குறுக்கிட்ட மழை – ஆடுகளம் மாறுமா?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பஞ்சாப் – மும்பை மோதல்44 நிமிடங்களுக்கு முன்னர்
ஐபிஎல் 2025 சீசனின் ப்ளே ஆஃப் சுற்றில் இன்று ஆமதாபாத்தில் நடக்கும் 2வது தகுதிச் சுற்றுப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து பஞ்சாப் அணி மோதுகிறது.
முதல் தகுதிச் சுற்றில் ஆர்சிபி அணியிடம் மோசமாகத் தோல்வி அடைந்த பஞ்சாப் அணி 2வது தகுதிச்சுற்றுக்கு வந்துள்ளது. அதேபோல எலிமினேட்டர் சுற்றில் குஜராத் அணியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி 2வது தகுதிச்சுற்றுக்கு வந்துள்ளது.
ஆமதாபாத் மைதானத்தில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடிய மும்பை அணி அதில் ஒன்றில் மட்டுமே வென்று 5ல் தோற்றுள்ளது.
டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். டாஸ் நிகழ்வுக்கு சிறிது நேரத்தில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மழை நின்றதால், மீண்டும் ஆட்டம் தொடங்கி, பஞ்சாப் வீரர்கள் மைதானத்துக்குள் நுழைந்த சில நிமிடங்களில் மீண்டும் பலத்த மழை பெய்ததையடுத்து, ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப் அணியில் கடந்த சில போட்டிகளாக காயத்தால் அணியில் இடம் பெறாமல் இருந்த அனுபவ லெக் ஸ்பின்னர் யுஜுவேந்திர சஹல் இந்தப் போட்டியில் ஹர்பிரித் பிராருக்குப் பதிலாக விளையாடுகிறார். மும்பை இந்தியன்ஸ் அணியில் கிளீசனுக்குப் பதிலாக ரீஸ் டாப்ளி சேர்க்கப்பட்டுள்ளார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
ஆடுகளம் எப்படி?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானம்ஆமதாபாத்தில் இருக்கும் இதுபோன்ற ஆடுகளத்தைத்தான் ஒவ்வொரு பேட்டரும் எதிர்பார்ப்பார்கள், பேட்டர்களுக்கான சொர்கபுரி என்று சொல்லலாம். பந்து நன்றாக வேகமாக, பேட்டரை நோக்கி வரும் என்பதால் அடித்து ஆடலாம். முதலில் பேட் செய்யும் அணி எளிதாக 200 ரன்களைக் கடந்தால், நெருக்கடி கொடுக்கலாம்.
சேஸிங் செய்யும் அணியும் 200 ரன்களுக்குள் இருந்தால் எளிதாக துரத்த முடியும் அளவுக்கு அற்புதமான ஆடுகளம். பனிப்பொழிவு பெரும்பாலும் இருக்காது என்பதால், 2வதாக பந்துவீசும் அணியும் பந்துவீச்சில் நெருக்கடியளிக்க முடியும். இந்த ஆடுகளத்தில் 6 போட்டிகள் நடந்துள்ளன அதில் 5 முறை முதலில் பேட் செய்த அணிகளே வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆடுகளத்தில் சராசரி ஸ்கோர் 221 என பிட்ச் ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஜஸ்ப்ரித் பும்ரா தான் அணிக்குத் தேவையான திருப்பு முனைகளை ஏற்படுத்தி தருகிறார்.பஞ்சாப்பின் பேட்டிங் பலம்
பஞ்சாப்பின் அணியின் பேட்டிங் இந்தத் தொடரில் உச்சக்கட்ட ஃபார்மில் உள்ளது. அணியின் அனைத்து பேட்டர்களுமே சீராக ரன்கள் சேர்த்து வருகின்றனர். ஜோஷ் இங்லிஸும் கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாபின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.
ஆமதாபாத் ஆடுகளம் பேட்டிங்கிற்குச் சாதகமாக இருக்கும் என்பதால் இன்றைய போட்டி அதிக ரன்கள் குவிக்கும் ஆட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரில் இங்கு நடைபெற்ற 14 போட்டிகளில் ஒன்பது முறை 200 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளது.
வரலாறு என்ன சொல்கிறது?
ஐபிஎல்-ல் ப்ளே ஆப் முறை அறிமுகம் ஆனதில் இருந்து எலிமினேட்டர் விளையாடிய அணி இறுதிப் போட்டி வரை சென்று கோப்பையை வென்றது ஒரு முறை தான் நிகழ்ந்துள்ளது. 2016ம் ஆண்டு டேவிர் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதனை சாதித்து காட்டியது.
இந்தத் தொடரில் மும்பை அணி அதனைச் செய்து காட்டுமா என்கிற எதிர்பார்ப்பு கூடியுள்ளது. மும்பை அணி கோப்பை வென்ற ஐந்து முறையும் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களிலே இருந்துள்ளது.
பஞ்சாப் அணி 2014ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அந்த ஆண்டு இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியிடம் கோப்பை வாய்ப்பை தவறவிட்டிருந்தது. முன்று வெவ்வேறு அணிகளை கேப்டனாக ப்ளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்ற பெருமை ஸ்ரேயாஸ் அய்யருக்கு உள்ளது. கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்கு தலைமை தாங்கி கோப்பை வாங்கிக் கொடுத்திருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
அடுத்தடுத்து இரண்டு ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் விளையாடிய கேப்டன்கள் என்கிற பெருமை தோனி, ரோகித் ஷர்மா மற்றும் ஹர்திக் பாண்டியாவிடம் மட்டுமே உள்ளது. தொடர்ந்து இரண்டு கோப்பைகளை வென்ற கேட்பன்கள் என்கிற பெருமை தோனி மற்றும் ரோகித்திடம் மட்டுமே உள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர் இந்த முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் அவர்களின் சாதனையை சமன் செய்வார். கோப்பையை வென்றால் இரு வெவ்வேறு அணிகளுக்கு கேப்டனாக அடுத்தடுத்த கோப்பைகளை வாங்கிக் கொடுத்த பெருமை அவருக்கே கிடைக்கும். மும்பை அணி தகுதிபெற்று கோப்பையை வென்றால் ஹர்திக் பாண்ட்யாவும் இந்தச் சாதனைக்குச் சொந்தக்காரர் ஆவார்.
ஐபிஎல்-ல் அதிக முறை இறுதிப் போட்டிகளில் விளையாடிய பெருமை சென்னை அணிக்கு உள்ளது என்றாலும் அதிக வெற்றி சதவிகிதம் மும்பைக்கே உள்ளது. மும்பை அணி விளையாடிய ஆறு இறுதிப் போட்டிகளில் ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளது. மும்பை அணியின் இறுதிப் போட்டி ஆதிக்கம் அவர்களுக்கு சாதகமாக இருக்கும் எனப் பல வீரர்களும் பேசி வருகின்றனர். இன்றைய போட்டியின் முடிவு பல வரலாறுகளை மாற்றி எழுதும் என்பதில் ஐயம் இல்லை.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு