‘கிலி’ கொடுக்கும் கிம்: தென் கொரியாவுடனான மறைமுக போரில் முந்தும் வட கொரியா

எழுதியவர், ஜீன் மெக்கன்ஸிபதவி, சியோல் பத்திரிகையாளர் 53 நிமிடங்களுக்கு முன்னர்

அடர்த்தியாக இருக்கும் முள்கம்பி வேலிகளாலும், நூற்றுக்கணக்கான பாதுகாப்புப் படையினராலும் வட மற்றும் தென்கொரியாவின் எல்லை பிரிக்கப்பட்டுள்ளது. அந்த எல்லையின் நடுவே ஆங்காங்கே வழக்கத்திற்கு மாறாக பெரிய, பச்சை நிறத்தில் ஒலிபெருக்கிகளும் இடம் பெற்றுள்ளன.

கடந்த மாதம் ஒரு மதிய வேளையில் நான் வட கொரியாவில் நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லையில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிபெருக்கியில் இருந்து புரட்சிகரமான கருத்துகளை உதிர்க்கும் பாடல்கள் இடையிடையே ஒலித்துக் கொண்டிருந்தன.

“நாங்கள் வெளிநாடு சென்றால், அது உத்வேகம் அளிக்கும்,” என்று பொருள் தரக் கூடிய பாடல் ஒன்று பெண் ஒருவரின் குரலில் ஒலித்துக் கொண்டிருந்தது. வட கொரியர்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை என்ற அரசு முடிவை சுட்டிக்காட்டும் வகையில் அந்த பாடல் இருந்தது.

வட கொரியாவில் இசைக்கப்படும் ராணுவ பிரசார பாடலின் இசையையும் என்னால் கேட்க முடிந்தது.

வட கொரியாவும் தென் கொரியாவும் இன்னும் போரில் தான் இருக்கின்றன. ஆனால் ஆயுதங்கள் ஏந்தி நடத்தப்படும் போர் அல்ல. அமைதியான முறையில் அங்கே ஒரு மறைமுக போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

தென் கொரியா, வட கொரியாவுக்கு தகவல்களை அனுப்ப முயல்கிறது. ஆனால், வெளியில் இருந்து வரும் தகவல் மக்களிடம் சேராத வகையில் வட கொரியத் தலைவர் கிம்-ஜோங்-உன் தடுக்க தீவிரமாக முயற்சித்து வருகிறார்.

உலகிலேயே இணையம் ஊடுருவாத ஒரே ஒரு நாடாக வட கொரியா உள்ளது. தொலைக்காட்சிகள், ரேடியோ நிலையங்கள் மற்றும் செய்தித்தாள்கள் அனைத்தும் அரசாங்கத்தால் நடத்தப்படுகின்றன.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். மறைமுக போர்

“கிம் குடும்பம் குறித்து பரவி வரும் செய்திகளை கட்டுப்படுத்தவே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக காரணம் கூறப்படுகிறது. மக்களிடம் அவர்கள் கூறும் பெரும்பாலான தகவல்கள் பொய்யாகவே உள்ளன,” என்று கூறுகிறார் மார்டின் வில்லியம்ஸ்.

அவர் வாஷிங்டனை மையமாக கொண்டு செயல்படும் ஸ்டிம்சன் மையத்தில், வட கொரிய தகவல் மற்றும் தொழில்நுட்ப நிபுணராக இருக்கிறார்.

வடகொரியாவில் இத்தகைய பொய்களை மக்களிடம் வெளிச்சமிட்டால், அங்கு ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற எண்ணம் தென் கொரியாவில் உள்ளது.

இதற்காக தென்கொரிய அரசாங்கம் பயன்படுத்தும் கருவிகளில் ஒன்று தான் ஒலிபெருக்கி. ஆனால் இதற்கு பின்னால், மிகவும் மேம்படுத்தப்பட்ட ஒரு இயக்கம் உருவாகியுள்ளது.

தகவல் ஒளிபரப்பும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் லாப நோக்கமற்ற அமைப்புகள் மூலமாக தகவல்கள் வடகொரியாவுக்குள் நள்ளிரவில் அனுப்பப்படுகிறது. இவை குறு மற்றும் நடுத்தர ரேடியோ அலைகள் வழியாக, வட கொரியர்கள் ரகசியமாக கேட்கும் வகையில் செய்திகள் ஒலிபரப்பப்படுகின்றன.

ஆயிரக்கணக்கான யூ.எஸ்.டி. டிவைஸ்கள், மைக்ரோ எஸ்-டி கார்டுகள் ஒவ்வொரு மாதமும் எல்லையில் கடத்தப்படுகின்றன. தென்கொரிய படங்கள், டிவி நாடகங்கள், பாப் பாடல்கள், செய்திகள் உள்ளிட்ட வெளியுலக தகவல்கள் பலவும் அந்த கருவிகள் மூலம் வட கொரியாவுக்குள் அனுப்பப்படுகின்றன. இவை அனைத்தும் வட கொரியாவின் பிரசாரங்களை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டவை.

இந்த விவகாரத்தில் வடகொரியாவின் கைகள் தற்போது ஓங்கி வருவதால், களத்தில் பணியாற்றும் நபர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்த தகவல்களுடன் பிடிபடுபவர்களை கிம் கடுமையாக தண்டிக்கிறார். வருங்காலத்தில் இப்பணியை மேற்கொள்வதும் சிக்கலாகியுள்ளது. இந்த பணிக்கான நிதியை அமெரிக்க அரசாங்கம் வழங்கி வந்தது. தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நிதி அளிப்பை குறைத்துள்ள காரணத்தால் இப்பணி சிக்கலாகியுள்ளது.

அப்படியென்றால், நீண்ட காலமாக தொடரும் தகவல் போரில் இரு தரப்புகளின் நிலை என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பி.டி.எஸ். இசைக்குழுவினர் பாப் பாடல்கள், சினிமா

ஒவ்வொரு மாதமும், தென்கொரியாவில் இயங்கி வரும் யூனிஃபிகேஷன் மீடியா குழு (UMG) என்ற லாப நோக்கமற்ற அமைப்பானது, சமீபத்திய செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு உள்ளடக்கங்களை தரம் பிரித்து, வட கொரியாவின் அரசியல் சூழலுக்கு ஏற்ற உள்ளடக்கங்களை தயார் செய்கிறது.

பிறகு அவற்றை முறையே தகவல் பரிமாற்ற கருவிகளில் ஏற்றி, ஆபத்தின் தன்மைக்கு ஏற்ற வகையில் வகைப்படுத்துகிறது. ஆபத்து குறைவான கருவி என்றால், அதில் தென் கொரிய படங்களும், பாப் பாடல்களும் இருக்கும் என்று அர்த்தம். சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான, தென் கொரிய பாடகர் மற்றும் ராப் இசைக்கலைஞர் ஜெனி நடிப்பில் வெளியான “வென் லைஃப் கிவ் யூ டேங்கரின்ஸ்” என்ற வலைத்தொடரையும் இந்த பட்டியலில் இணைத்துள்ளனர்.

அதிக ஆபத்து கொண்ட அல்லது அதிக எச்சரிக்கையுடன் அணுக வேண்டிய கருவிகள் என்று வகைப்படுத்தப்பட்டிருந்தால், அதில் கற்றல் திட்டங்கள் இடம் பெற்றிருக்கும். வட கொரியர்களுக்கு ஜனநாயகம், மனித உரிமைகள் தொடர்பான உள்ளடக்கங்கள் அதில் வழங்கப்படுகின்றன. இது தான் கிம்மிற்கு அதிக அச்சத்தை அளிக்கும் உள்ளடக்கமாக கருதப்படுகிறது.

வகைப்படுத்தப்பட்ட கருவிகள் பிறகு சீன எல்லைக்கு அனுப்பப்படுகின்றன. அங்கே இந்த நிறுவனத்தின் நம்பிக்கைக்குரிய கூட்டாளிகள் மூலமாக, ஆற்றைக் கடந்து, அதிக ஆபத்துகளை தாண்டி வடகொரியாவுக்குள் அவை கொண்டு செல்லப்படுகின்றன.

தென் கொரிய டிவி நாடகங்கள் மிகவும் இயல்பானவை. சராசரி மனிதர்களின் சாதாரண வாழ்க்கையை வெளிப்படும் ஒன்றாக இருக்கும். அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழும் மக்கள், வேகமாக இயக்கப்படும் கார்கள், உணவகங்களில் பரிமாறப்படும் உணவுகள் என்று இயல்பான காட்சிகளைக் கொண்டவை அவை. ஆனால் இது அவர்களின் சுதந்திரமான உணர்வைக் காட்டுகிறது. வடகொரியா எவ்வளவு தூரம் பின்தங்கியுள்ளது என்பதையும் வெளிப்படுத்துகிறது.

தென் கொரியா மிகவும் ஏழ்மையான நாடு, அங்கு மக்கள் ஒடுக்கப்படுகின்றனர் என்று கிம் தன் நாட்டு மக்களிடம் உருவாக்கியுள்ள தவறான பிம்பத்தை இந்த படங்களும் நாடகங்களும் கேள்விக்குள்ளாக்குகின்றன.

“இந்த நிகழ்ச்சிகளை பார்த்து கண்ணீர் விட்ட சில மக்கள், முதல்முறையாக அவர்களின் வாழ்க்கை குறித்த சொந்த கனவுகள் பற்றி சிந்தித்ததாக தெரிவித்தனர்,” என்று யூனிஃபிகேஷன் மீடியா குழுவின் இயக்குநர் லீ க்வாங்க்-பீக் தெரிவிக்கிறார்.

எத்தனை நபர்களுக்கு இந்த தகவல்கள் சென்று சேர்கின்றன என்பதை கண்டறிவது மிகவும் கடினம். ஆனால் அந்த நாட்டைவிட்டு வெளியேறியவர்களிடம் இருந்து சமீபத்தில் கிடைத்த தகவலின் படி, தென் கொரியாவில் இருந்து அனுப்பும் தகவல்கள் பரவுகின்றன. அதன் தாக்கம் உணரப்படுகிறது என்று தெரிய வந்துள்ளது.

“நாட்டைவிட்டு வெளியேறியவர்கள் மற்றும் அகதிகள், இந்த உள்ளடக்கங்கள் தான் அவர்களை நாட்டு விட்டு வெளியேற உத்வேகம் அளித்தது என்று கூறுகின்றனர்,” என்கிறார் சொகீல் பார்க். அவருடைய ‘லிபர்டி இன் நார்த் கொரியா’ என்ற அமைப்பு, தென் கொரியாவில் இருந்து கடத்தப்பட்ட தகவல்களை வட கொரிய மக்களுக்கு பரப்பும் பணியில் ஈடுபட்டிருக்கிறது.

எதிர்க்கட்சிகளோ, மாற்றுக் கருத்து கொண்டவர்களோ வட கொரியாவில் இல்லை. அங்கே ஒன்று கூடி போராட்டம் நடத்துவதும் அபாயகரமானது. ஆனால் சிலர் தனிமனித நடவடிக்கைகள் மூலம் எதிர்ப்பை காட்டுவார்கள் என்று நம்புவதாக பார்க் கூறுகிறார்.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, தென் கொரிய டிவி நாடகங்கள் மிகவும் இயல்பானவை. சராசரி மனிதர்களின் சாதாரண வாழ்க்கையை வெளிப்படும் ஒன்றாக இருக்கும். வட கொரியாவில் இருந்து தப்பிப் பிழைத்தல்

24 வயதான காங்க் க்யூரி வட கொரியாவில் வளர்ந்தவர். அவர் அங்கே மீன்பிடி தொழில் செய்து வந்தார். 2023-ஆம் ஆண்டு அவர் தென் கொரியாவுக்கு படகு மூலம் தப்பித்து வந்தார்.

“மிகவும் அழுத்தமாக உணர்ந்தேன். பிறகு ஒரு நாள் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது,” என்று கூறும் அவர், வெளிநாடுகளில் எடுக்கப்படும் டிவி நிகழ்ச்சிகள் அந்த முடிவை எடுக்க ஒரு உந்து சக்தியாக இருந்தன என்று கூறுகிறார்.

சியோலில் ஒரு பூங்காவில் அவரை கடந்த மாதம் சந்தித்த போது, சிறு வயதில் அவர் அம்மாவுடன் அமர்ந்து ரேடியோ நிகழ்ச்சிகளை கேட்டு மகிழ்ந்ததை நினைவு கூறுகிறார். 10 வயது இருக்கும் போது கொரிய நாடகங்களை பார்க்கும் வாய்ப்பைப் பெற்றார் க்யூரி. பிற்காலத்தில் பழங்களை ஏற்றி வரும் அட்டைப் பெட்டிகளில் யூ.எஸ்.பி மற்றும் எஸ்.டி. கார்டுகள் கடத்தி வரப்படுவதை அறிந்தார்.

அவர் அதில் இருந்து கிடைத்தவற்றை அதிகமாக பார்க்க நேர்ந்த போது, அவருடைய அரசாங்கம் அவரிடம் பொய் கூறுகிறது என்பதை உணர்ந்தார்.

“அரசாங்கம் எங்களை ஒடுக்குவது என்பது மிகவும் இயல்பானது என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். மற்ற நாட்டினரும் இப்படியான கட்டுப்பாடுகளுடன் தான் வாழ்கின்றனர் என்று நினைத்தேன். ஆனால் வட கொரியாவில் அந்த நிலை நிலவுகிறது என்பது பின்னர் புரிந்தது,” என்று அவர் விளக்கினார்.

அவருக்குத் தெரிந்த அனைவரும் தென்கொரிய நாடகங்களை பார்த்து ரசித்துள்ளனர். அவரும் அவருடைய நண்பர்களும் தங்களிடம் இருக்கும் படங்களை கைமாற்றிக் கொள்வார்கள்.

“நாங்கள் பிரபலமடைந்த நாடகங்கள், நடிகர்கள், அழகாக இருக்கிறார்கள் என்று நினைத்த பி.டி.எஸ். இசைக்குழுவின் சில உறுப்பினர்கள் பற்றியும் பேசிக் கொள்வோம்.”

“தென்கொரியாவின் பொருளாதாரம் எப்படி வளர்ந்துவிட்டது என்பது குறித்தும், வட கொரிய அரசை எங்களால் விமர்சிக்க இயலவில்லை என்பது குறித்தும் நாங்கள் நிறைய பேசியதுண்டு.”

இந்த நாடகங்கள் க்யூரி மற்றும் அவரின் நண்பர்கள் பேசுவது நடந்து கொள்வது உட்பட அனைத்திலும் தாக்கம் செலுத்தியுள்ளது.

“வடகொரிய இளைஞர்கள் வேகமாக மாறி வருகின்றனர்.”

படக்குறிப்பு, நாட்டை விட்டு வெளியேறும் உத்வேகத்தை தென் கொரிய படங்கள் மற்றும் நாடகங்கள் அளிக்கின்றன என்று இளைஞர்கள் கருதுகின்றனர் தண்டனைகள்

இத்தகைய நடவடிக்கையால் தன்னுடைய ஆட்சிக்கு ஆபத்து வரலாம் என்று கிம் ஜோங் உன் உணர்ந்திருக்கிறார். அதனால் இத்தகைய போக்குகளுக்கு எதிராக அவர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

கொரோனா பொதுமுடக்கத்தின் போது சீனாவுடனான எல்லைப் பகுதியில் மின்சார வேலி அமைத்து, தகவல் கடத்தப்படுவதை கடினமாக்கினார்.

வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் நிகழ்ச்சிகளை பார்ப்பது மற்றும் பகிர்வது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை அதிகரித்து 2020-ஆம் ஆண்டில் சட்டம் இயற்றினார். இத்தகைய உள்ளடக்கத்தை விநியோகிக்கும் நபர்கள் சிறையில் அடைக்கப்படலாம், அல்லது கொல்லப்படலாம் என்று கூறப்படுகிறது.

இது உடலை சில்லிட வைக்கும் தாக்கத்தை கொண்டுள்ளது. “இந்த படங்கள் பொதுவாக சந்தைகளில் கிடைக்கும். மக்கள் அதனை விற்பனை செய்வார்கள். ஆனால் தற்போது, இத்தகைய உள்ளடக்கங்களை நீங்கள் நம்பும் நபர்களிடம் இருந்தே வாங்குவீர்கள்,” என்று கூறுகிறார் லீ.

இந்த சட்டமும், தேடுதல் நடவடிக்கையும் அமலுக்கு வந்த பிறகு க்யூரியும் அவருடைய நண்பர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டனர். “இந்த விவகாரம் குறித்து மேற்கொண்டு நாங்கள் பேசிக் கொள்வதில்லை. நாங்கள் மிகவும் நெருக்கமாக இருந்தாலும் கூட, இது மிகவும் ரகசியமாக இருந்தது,” என்று அவர் ஒப்புக்கொண்டார்.

தென் கொரிய உள்ளடக்கங்களுடன் பிடிபட்ட வட கொரிய இளைஞர்கள் கொல்லப்பட்டது குறித்து நன்றாக அறிந்திருப்பதாக கூறுகிறார் அவர்.

சமீபத்தில் கொரிய நாடகங்கள் பார்ப்பது மட்டுமின்றி அது தொடர்புடைய நடவடிக்கைகளையும் கிம் கண்டித்துள்ளார். 2023-ஆம் ஆண்டு தென் கொரிய பேச்சுவழக்கில் இருக்கும் சொற்றொடர்களை பேசுவதையும், அவர்களின் உச்சரிப்பில் பேசுவதையும் குற்றம் என்று அறிவித்தார் கிம்.

தென் கொரிய உள்ளடக்கங்களை பார்ப்பது மற்றும் பகிர்வது தொடர்பாக சோதனை மேற்கொள்ள படைகள் உருவாக்கப்பட்டன. அவர்கள் சாலைகளில் ரோந்து பணிகளை மேற்கொள்வார்கள். இளைஞர்களின் நடவடிக்கைகளை அவர்கள் கண்காணிப்பார்கள். நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன்பு, தென் கொரிய பெண்களைப் போன்று சிகை அலங்காரம் மற்றும் உடைகள் உடுத்தியிருப்பது தொடர்பாக பலமுறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக க்யூரி பிபிசியிடம் தெரிவித்தார்.

தென் கொரிய உள்ளடக்கங்களை பயன்படுத்தவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள இப்படையினர் அவரின் போனை வாங்கி சோதனை நடத்தினார்கள் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

2024-ஆம் ஆண்டு வடகொரிய செல்போன் ஒன்று அந்த நாட்டில் இருந்து டெய்லி என்.கே என்ற செய்தி சேவை நிறுவனத்தால் கடத்தப்பட்டது. இந்த செய்தி நிறுவனம் சியோலைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் யூனிஃபிகேஷன் மீடியா குழுவின் செய்தி சேவைப் பிரிவாகும்.

அந்த போனை சோதனைக்கு உட்படுத்திய போது, தென்கொரிய வார்த்தை ஒன்றை உள்ளீடாக செலுத்தினால் அது திரையில் தோன்றாமல் மறைந்து வட கொரிய வார்த்தை தெரியும் வகையில் போன் வடிவமைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

வடகொரிய மக்களுக்கு போதிக்கும் வகையில் எடுக்கப்படும் முயற்சிகளில் ஸ்மார்ட்போன்கள் ஒன்றாகிவிட்டன என்று வில்லியம்ஸ் கூறுகிறார்.

தகவல் பரிமாற்றத்தை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை வட கொரியா தீவிரமாக மேற்கொண்டு வருவதால் இந்த தகவல் போரில் வட கொரியாவின் ஆதிக்கம் தற்போது அதிகமாகியுள்ளது என்று அவர் நம்புகிறார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வட மற்றும் தென்கொரியாவின் எல்லை கம்பி வேலிகளால் பிரிக்கப்பட்டு, ராணுவ வீரர்களின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது டிரம்ப் ஆட்சியின் தாக்கம்

டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி நிறுத்தப்பட்டது. இதனால் பாதிப்புக்கு ஆளான அமைப்புகளில், வட கொரிய மக்களுக்கு தகவல் பரிமாறும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட அமைப்புகளும் அடங்கும். இரண்டு செய்தி சேவைகளான ரேடியோ ஃப்ரீ ஏசியா மற்றும் வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவுக்கான நிதிகளும் நிறுத்தி வைக்கப்பட்டன.

வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா “தீவிரமாக” இருப்பதாகவும், டிரம்பிற்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருப்பதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டினார். தீவிர பிரசாரம் செய்பவர்களுடன் வரி செலுத்துபவர்களின் தொடர்பு துண்டிக்கப்படுவதை அரசு உறுதி செய்யும் என்று மீண்டும் ஆட்சிக்கு வந்த போது டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

ஆனால் சியோலைச் சேர்ந்த வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஹெர்மன், “வட கொரிய மக்களுக்கு வெளியுலகத்தைக் காண கிடைத்திருக்கும் வெகு சில வாய்ப்புகளில் இதுவும் ஒன்று. தற்போது எந்தவிதமான விளக்கமும் இன்றி இது அமைதியாக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

யூனிஃபிகேஷன் மீடியா குழு, தங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த நிதி நிறுத்தப்பட்டிருப்பது நிரந்தர முடிவா என்பதை அறிந்து கொள்ள இன்னும் காத்துக் கொண்டிக்கிறது.

லிபர்டி இன் நார்த் கொரியாவின் பார்க் இது குறித்து பேசும் போது, டொனால்ட் டிரம்ப் ‘தற்செயலாக’ கிம்மிற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார் என்று கூறுகிறார். இது குறுகிய பார்வை கொண்ட ஒரு நடவடிக்கை என்றும் அவர் விமர்சித்தார்.

வடகொரியாவில் அணு ஆயுதங்களை குவிப்பது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று வாதிடும் அவர், தற்போது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதார தடை, ராஜாங்க மற்றும் ராணுவ அழுத்தம் போன்றவை, அணு ஆயுத குறைப்பை ஊக்குவிக்கவும் தகவல் பரிமாற்றமே சிறந்த கருவி என்பதை நிரூபிக்கவும் தவறிவிட்டது என்று விளக்குகிறார்.

நாங்கள் வட கொரியாவின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை. அதற்கான தீர்வைக் காண விரும்புகிறோம். “அதனை செய்ய நாட்டின் தன்மையை மாற்ற வேண்டும்,” என்று கூறுகிறார் அவர்.

“நான் அமெரிக்காவின் ஜெனரலாக இருந்திருந்தால், “இதற்கு ஆகும் விலை என்ன? நம்முடைய வளத்தை இப்படி ஒரு நல்ல காரியத்திற்காக பயன்படுத்தலாம் கூறியிருப்பேன்.”

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, வட கொரிய மக்களுக்கு வெளியுலகத்தைக் காண கிடைத்திருக்கும் வெகு சில வாய்ப்புகளையும் டிரம்பின் நிர்வாகம் மூடிவிட்டது என்று குற்றம்சாட்டுகிறார் ஸ்டீவ் ஹெர்மன் இனி யார் நிதி அளிப்பார்?

இந்த பணிகளுக்கான நிதியை யார் வழங்குவார் என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. இதை ஏன் அமெரிக்கா மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது.

தென்கொரியா இதற்கான நிதியை வழங்கலாம் என்று கூறினாலும், வட கொரிய விவகாரம் அதிகமாக அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவின் தாராளவாத எதிர்க்கட்சி வட கொரியாவுடனான உறவுகளை மேம்படுத்த முயற்சிக்கிறது. இது தகவல் பரிமாற்ற போருக்கான தடையாக பார்க்கப்படுகிறது. அடுத்த வாரம் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் இக்கட்சியின் வேட்பாளர், தேர்தலில் வெற்றி பெற்றால் எல்லையில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிபெருக்கிகள் நீக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இருப்பினும் பார்க் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார். “நல்ல விசயம் என்னவென்றால் தற்போது வட கொரிய அரசு, ஏற்கனவே மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்கப்பட்ட தகவல்களை திரும்பப் பெற இயலாது,” என்று சுட்டிக்காட்டுகிறார்.

தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருவதால், தகவல்களை பரப்புவது இனி எளிமையாகிவிடும் என்று நம்புகிறார் அவர். “நீண்ட காலத்தை கருத்தில் கொண்டால், இது வட கொரியாவை மாற்றும் ஒரு அம்சமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.”

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு