Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் முதல் இந்தியர் ‘பாசிப் பன்றிகளை’ ஆராய திட்டமிட்டிருப்பது ஏன்?
பட மூலாதாரம், Axiom Space
படக்குறிப்பு, கிட்டத்தட்ட ஈர்ப்பு விசையே இல்லாத நிலையில் வாழ்வதற்கான பயிற்சி ஆக்ஸியம் 4 குழுவின் விண்வெளி வீரர்களுக்கு வழங்கப்படுகிறது.எழுதியவர், க. சுபகுணம்பதவி, பிபிசி தமிழ்26 நிமிடங்களுக்கு முன்னர்
விண்வெளி மீதான மனித குலத்தின் நாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் பெரும் வல்லரசுகள் மட்டுமே ஈடுபட்டிருந்த நிலை மாறி, இன்று மூன்றாம் உலக நாடுகள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் கூட முனைப்புடன் ஈடுபட்டுள்ளன.
விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதற்கு எடுத்துக்காட்டான ஒரு விண்வெளித் திட்டம்தான் ஆக்ஸியம் 4.
ஒரு இந்தியர் உள்பட நான்கு விண்வெளி வீரர்களைச் சுமந்துகொண்டு ஆக்ஸியம் 4 விண்கலம் ஜூன் 8ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்கிறது. இந்திய விமானப்படையின் கேப்டன் சுபான்ஷு சுக்லா, இந்தக் குழுவின் கமாண்டராக விண்வெளிக்குச் செல்கிறார்.
கடந்த 1984ஆம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த ராகேஷ் ஷர்மா சோவியத் விண்கலமான சோயுஸ் டி-11இல் விண்வெளிக்குப் பயணித்தார். அவருக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லப்போகும் இரண்டாவது இந்தியரும், சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லப்போகும் முதல் இந்தியரும் சுபான்ஷு சுக்லாதான்.
ஆக்ஸியம் 4 திட்டத்தில் அவர் பங்கேற்பது இந்தியாவுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கும். அதுமட்டுமின்றி, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பத் திட்டமிட்டிருக்கும் ககன்யான் திட்டத்திற்கும் சுபான்ஷுவின் இந்தப் பயணத்தில் கிடைக்கும் அனுபவம் உதவிகரமாக இருக்கும்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
விண்வெளியின் சூழலில், குறிப்பாக விண்வெளி நிலையத்தில் தங்கிப் பணிபுரிவதில் முதல்முறை அங்கு செல்லும் அவருக்கு என்ன மாதிரியான சவால்கள் இருக்கும்? அவற்றில் கிடைக்கும் அனுபவம் ககன்யான் திட்டத்திற்கு எத்தகைய நுண்ணறிவுகளை வழங்கும்?
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.முதல் விண்வெளிப் பயணத்தில் உள்ள சவால்கள் என்ன?
சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றுவதில் இருக்கும் மிகப்பெரிய சவால், நுண்ணீர்ப்பு விசையில், அதாவது கிட்டத்தட்ட ஈர்ப்பு விசையே இல்லாத சூழலில் பணியாற்ற வேண்டும்.
அதோடு, விண்வெளி நிலையத்தின் பணிகளையும் அங்கு சென்ற நோக்கம் தொடர்பான பணிகளையும் அதே சூழலில் தினசரி மேற்கொள்ள வேண்டும்.
நுண்ணீர்ப்பு விசை சூழலில் வாழ்வதை, தண்ணீருக்குள் இருப்பதோடு ஒப்பிட்டுப் புரிந்துகொள்ளலாம் என்கிறார், மொஹாலி இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியரும் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முன்னாள் விஞ்ஞானியுமான முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.
அதுகுறித்துப் பேசிய அவர், “தண்ணீருக்குள் ஒருவர் மூழ்கிவிட்டால், அவரது உடலுக்கு உறுதியாக நிற்கவோ செயல்படவோ எந்தப் பிடிமானமும் இருக்காது. இப்படிப்பட்ட சூழலில் உடல் சுய உந்துதலின்பேரில் எதிலாவது கால்களை ஊன்றிக்கொள்ளவோ அல்லது கைகளால் பிடித்துக்கொண்டு சமாளிக்கவோ முயலும்.
பட மூலாதாரம், Axiom Space
படக்குறிப்பு, சுபான்ஷு சுக்லா ஆக்ஸியம் 4 திட்டத்தின் கமாண்டராக செயல்பட்டு விண்கலத்தை இயக்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அப்படித்தான் கிட்டத்தட்ட ஈர்ப்பு விசையற்ற சூழலில் இருக்கும். உறுதியாக நிற்கவோ, செயல்படவோ முடியாமல் மிதந்துகொண்டே தனது அன்றாடப் பணிகளை மேற்கொள்வது சிரமமாக இருக்கும். இதற்கென சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு இருந்தாலும்கூட, முதன்முதலில் அத்தகைய உண்மையான சூழலை எதிர்கொள்ளும்போது அதற்கேற்ப தன்னைப் பழக்கப்படுத்திக்கொள்ள சிறிது நேரம் பிடிக்கும்,” என்று விளக்கினார்.
இதுமட்டுமின்றி, விண்வெளி நிலையத்தில் உள்ள கருவிகளை நுண்ணீர்ப்பு விசை சூழ்நிலையில் இயக்குவதிலும் முதல் முறை செல்லும் விண்வெளி வீரர் சவால்களைச் சந்திக்கக்கூடும்.
பூமியைப் போன்று ஈர்ப்பு விசையுள்ள இடத்தில் கருவிகளை இயக்குவதில் பெரிய சிக்கல் இருக்காது. ஆனால், விண்வெளியில் ஒரு லிவரை திருகினால்கூட, அதை இயக்கும் நபர் மிதந்துகொண்டே இருப்பதால் அவரும் அதனுடன் சேர்ந்து சுற்றுவார். அதனால் கருவிகளைச் சரிவர இயக்குவது சவாலாகவே இருக்கும்.
அதைத் தவிர்க்கவே, சர்வதேச விண்வெளி நிலையத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கைப்பிடிகள் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் த.வி.வெங்கடேஸ்வரன். “ஒருவர் ஏதேனும் கருவியை இயக்கும்போது, ஒரு கையால் அந்தக் கைப்பிடிகளில் ஒன்றைப் பிடித்து, தன்னைத் திடப்படுத்திக்கொண்டு, மற்றொரு கையால் கருவியை இயக்குவார்.”
இதுபோக, ஆக்ஸியம் 4 திட்டத்தில், நாசா, ஐரோப்பிய விண்வெளி நிலையம், இஸ்ரோ எனப் பல்வேறு விண்வெளி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஆகவே, விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள், அந்தந்த நாட்டின் நிறுவனங்களுக்கான சர்வதேச விண்வெளி நிலையத்தின் மாடியூல்களை நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். அதேவேளையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உபகரணங்களும் அங்கு இருக்கும் என்பதால், அவற்றை இயக்குவதற்கான நுண்ணறிவையும் பெற்றிருக்க வேண்டும்.
ஆக்ஸியம் 4 விண்வெளிப் பயணம் ககன்யான் திட்டத்திற்கு எப்படி உதவும்?
பட மூலாதாரம், ISRO/ANI
படக்குறிப்பு, ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் செல்லப்போகும் இந்தியர்கள். பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன், சுபான்ஷு சுக்லா.கடந்த ஜனவரி மாதம், ஆக்ஸியம் 4 விண்வெளிப் பயணம் குறித்துப் பேசிய குழுவின் கமாண்டர் சுபான்ஷு சுக்லா, இதில் கிடைக்கும் அனுபவங்களும் படிப்பினைகளும் ககன்யான் திட்டத்திற்குப் பேருதவியாக இருக்குமென்று தெரிவித்தார்.
“ஆக்ஸியம் 4 திட்டத்தில் பங்குபெறும் வாய்ப்பு இந்தியாவுக்கு மிக முக்கியமான தருணத்தில் கிடைத்துள்ளது” எனக் குறிப்பிட்ட சுக்லா, “கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இந்தியாவின் மகன் அல்லது மகள் விண்வெளிக்குச் செல்வார் என்று உத்தரவாதம் அளித்தார். அதைத் தொடர்ந்து ககன்யான் திட்டம் தொடங்கியது” என்றார்.
அந்தக் கனவை நனவாக்க பலரும் ஓய்வின்றி உழைத்து வரும் நிலையில், ஆக்ஸியம் 4 பயணத்தில் கிடைக்கும் விலைமதிப்பற்ற படிப்பினைகள் அதற்குப் பெரிதும் உதவும் என்று முழு நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதோடு, இந்த விண்வெளிப் பயணத்தை மேற்கொள்வதும் அங்கு 2 வாரங்கள் தங்கிப் பணியாற்றுவதில் கிடைக்கும் அனுபவமும் ககன்யான் திட்டத்தை முழுமைப்படுத்துவதில் இருக்கக்கூடிய சவால்களைச் சரிசெய்யக் கைகொடுக்கும் என்று நம்புகிறேன்,” என்றும் கூறினார் சுக்லா.
ககன்யான் திட்டத்தின் கீழ் இந்தியா விண்வெளி அனுப்பவுள்ள குழுவிலும் சுபான்ஷு சுக்லா இருப்பதால், இந்தப் பயணத்தில் அவருக்குக் கிடைக்கும் அனுபவம், ககன்யான் பயணத்தை எளிதாக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக, நுண்ணீர்ப்பு விசையில் பணியாற்றுவது, கருவிகளை இயக்குவது, விண்வெளியில் ஆய்வுகளை மேற்கொள்வது, அன்றாட வாழ்வை இயல்பாகக் கொண்டு செல்வது போன்றவற்றில் கிடைக்கும் நுண்ணறிவு, ககன்யான் பயணத்தை எளிதாக்கும் என்கிறார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.
“மனிதர்கள் பூமியில் இருப்பதைப் போல் அங்கு சராசரி வாழ்வை மேற்கொள்ள இயலாது. நுண்ணீர்ப்பு விசையில், சாப்பிடுவது, கழிவறை பயன்படுத்துவது போன்ற சாதாரண செயல்பாடுகளுக்கே தனிப் பயிற்சி அவசியம்.
அத்தகைய பயிற்சிகள் இருந்தாலும்கூட, அவற்றை முதல்முறை அங்கு செய்யும்போது சில சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். அப்படிப்பட்ட பயிற்சிகளை நேரடியாக விண்வெளியிலேயே பெறுவதற்கான வாய்ப்பு இது. அவை ககன்யான் பயணத்திற்குப் பெரிதும் உதவும்” என்கிறார் வெங்கடேஸ்வரன்.
ஆக்ஸியம் 4 குழுவினருக்கு வழங்கப்படும் பயிற்சிகள் யாவை?
பட மூலாதாரம், Axiom Space
படக்குறிப்பு, ஆக்ஸியம் 4 குழுவினர் ஜூன் 8ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் பயணிக்கின்றனர்விண்வெளிப் பயணத்தில் இருக்கும் நடைமுறை சவால்களைச் சமாளிக்க, ஆக்ஸியம் 4 குழுவினருக்குச் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
நுண்ணீர்ப்பு விசையின் விளைவுகளை எதிர்கொள்ளவும், தங்கள் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் தேவையான உடற்பயிற்சிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட்டை இயக்குவதற்கு சுற்றுப்பாதை இயக்கவியல், சர்வதேச விண்வெளி நிலையத்துடன் டாக்-இன் செய்வதற்கான நடைமுறைகள், அவசர கால நெறிமுறைகள் பற்றிய ஆழமான புரிதல் அவசியமாகிறது.
ஆக்ஸியம் 4 பயணத்தில், சுபான்ஷு சுக்லா தான் விண்கலத்தின் விமானியாகச் செயல்படப் போகிறார். ஆகவே, இந்தச் சிக்கலான அமைப்புகளில் அவர் அனுபவப்பூர்வமாகத் தேர்ச்சி பெறுவது இந்தியாவின் எதிர்கால திட்டத்திற்குப் பயனளிக்கும்.
இதுபோக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் வீரர்கள், கேபினில் காற்றழுத்தம் குறைவது, தீ விபத்து அல்லது நச்சு வாயுக்கள் கசிவது போன்ற அவசர நிலைகளையும் எதிர்கொள்ளும் சூழல் ஏற்படலாம். அதற்கும் அவர்கள் தயாராக இருக்க வேண்டும். இதற்கென, அத்தகைய சூழ்நிலைகளை செயற்கையாக உருவகப்படுத்தி தீவிர பயிற்சிகள் விண்வெளி வீரர்களுக்கு வழங்கப்படுகின்றன.
ஆக்ஸியம் 4 பயணத்தில் சுபான்ஷு சுக்லா என்ன செய்வார்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் பாசிப் பன்றிகள், நுண்பாசிகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளார்.சுபான்ஷு சுக்லா குறித்த சுவாரஸ்யமான விஷயம் ஒன்று உண்டு. அவர் இந்திய விமானப் படையின் விமானியும் விண்வெளி வீரரும் மட்டுமல்ல, சுக்லா ஒரு ஆராய்ச்சியாளரும்கூட.
சுபான்ஷு சுக்லா, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் ஆய்வு நிறுவனத்தில் (IISc) இருந்தபோது இரண்டு ஆய்வுக் கட்டுரைகளின் இணை ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
அதில் ஓர் ஆய்வு, சந்திரன் மற்றும் செவ்வாய் கோள்களுக்குப் பயணம் மேற்கொள்வதற்குத் தேவையான விண்வெளி வாழ்விடங்களை உருவாக்குவது குறித்தானது. பீம் (BHEEM) எனப் பெயரிடப்பட்ட வேற்றுக்கிரகங்களில் விரிவாக்கிப் பயன்படுத்தவல்ல மாதிரி வாழ்விடத்தை வடிவமைப்பது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ஆய்வுக் குழுவில் சுபான்ஷு சுக்லாவும் இடம் பெற்றிருந்தார். .
இந்நிலையில், தற்போதைய பயணத்தில் அவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் காலகட்டத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளார்.
அவற்றில் முக்கியமான ஆய்வு பாசிப் பன்றிகள் பற்றியது. எட்டு கால்களைக் கொண்ட, உருளை வடிவத்திலான ஒரு நுண்ணுயிர்தான் இந்த பாசிப் பன்றிகள்(Tardigrade).
பாசிப் பன்றிகள், அதிகபட்ச கதிர்வீச்சு, சுமார் 140 டிகிரி செல்ஷியஸுக்கு மேற்பட்ட வெப்பநிலை, ஆழ்கடல் பகுதிகளில் காணப்படும் அழுத்தத்தைவிட ஆறு மடங்கு அதிக அழுத்தம் என மிகக் கடுமையான சூழல்களிலும் உயிர் பிழைக்கக்கூடியவை.
பட மூலாதாரம், Axiom Space
படக்குறிப்பு, ஆக்ஸியம் 4 திட்டத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரியை சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லவிருக்கிறார்கள்.பூமியில் சுமார் 600 மில்லியன் ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நுண்ணுயிர்கள், விண்வெளியில் காணப்படும் நுண்ணீர்ப்பு விசையில் அவற்றின் உயிர் பிழைக்கும் திறன், இனப்பெருக்க நடத்தைகள் போன்றவற்றை சுக்லா ஆய்வு செய்யப் போகிறார்.
விண்வெளியில் பாசிப் பன்றிகளின் தகவமைப்பு செயல்பாடுகளை ஆராய்வது, நீண்டதூர விண்வெளிப் பயணங்களை மேற்கொள்வதற்கான உயிரி தொழில்நுட்பங்களை உருவாக்க உதவலாம் என்று நம்பப்படுகிறது.
அதேபோல, நுண்ணீர்ப்பு விசையில் நுண்பாசிகளின்(Micro algae) வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றங்களையும் இஸ்ரோ ஆய்வு செய்யும். இவை புரதச்சத்து மிக்கவை என்பதால், நீண்டதூர விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ளும்போது இவற்றை வளர்த்து உணவாகப் பயன்படுத்த முடியுமா என்பதைத் தெரிந்துகொள்வதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும்.
மேலும், மைக்ரோகிராவிட்டி சூழலில் எலும்புத்தசை செயலிழப்பு (Skeletal muscle dysfunction) குறித்தும் அதற்கான சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்வதும் இந்தப் பயணத்தின் நோக்கமாக உள்ளது.
அதோடு, நுண்ணீர்ப்பு விசை சூழலில் பயிர் விதைகள் எப்படி முளைவிடுகின்றன, என்பதை ஆராய்ந்து விண்வெளி விவசாயத்திற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறியும் முயற்சியையும் நாசாவுடன் இணைந்து இஸ்ரோ மேற்கொள்ளவிருக்கிறது.
இந்த விண்வெளிப் பயணம், இந்தியாவின் கனவுத் திட்டமான ககன்யானுக்கு, ஆக்ஸியம் 4 விண்வெளிப் பயணத்தில் கிடைக்கும் படிப்பினைகள் உறுதுணையாக இருக்கும் என்பதால் இஸ்ரோவுக்கு மிக முக்கியமான திட்டமாகப் பார்க்கப்படுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு