“இழப்புகளை ஒப்புக் கொண்ட இந்தியா, இதனை பாகிஸ்தானும் செய்யுமா?” – முப்படை தலைமைத் தளபதி கூற்று விவாதிக்கப்படுவது ஏன்?

பட மூலாதாரம், MOHD RASFAN/AFP via Getty

படக்குறிப்பு, ஷாங்க்ரி-லா பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக இந்திய பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி அனில் செளகான் சிங்கப்பூருக்கு சென்றிருக்கிறார்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அண்மையில் பாகிஸ்தானுடனான ராணுவ மோதலின் போது இந்தியாவின் போர் விமானங்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பாக இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் செளகான் அளித்த பதில் தொடர்பான சர்ச்சைகள் மும்முரமாகிவிட்டன.

இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் செளகானின் கருத்தை பல நிபுணர்கள் விமர்சிக்கின்றனர். அதேவேளையில், சர்வதேச ஊடகங்கள் மற்றும் வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் மீது கேள்விகளை எழுப்பும் சிலர், அவர்கள் ‘பாகிஸ்தானுக்கு ஆதரவாக கதைகளை உருவாக்குகிறார்கள்’ எனக் குற்றம் சாட்டுகின்றனர்.

நிபுணர்களின் ஆமோதிப்பு மற்றும் எதிர்ப்பு ஒருபுறம் என்றால், இந்திய அரசியல் கட்சிகளும் முப்படைத் தலைமைத் தளபதியின் கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ளன. ஜெனரல் அனில் செளகானின் கருத்துக்களை முன்வைத்து, ஆளும்கட்சியான பாஜகவிற்கு முட்டுக்கடை போட, எதிர்க்கட்சியான காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

ஷாங்க்ரி-லா பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக இந்திய பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி அனில் செளகான் சிங்கப்பூருக்கு சென்றிருக்கிறார். அங்கு அவர் சனிக்கிழமை ப்ளூம்பெர்க் டிவி மற்றும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமைக்கு இரண்டு தனித்தனி நேர்காணல்களை வழங்கினார்.

“விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது முக்கியமல்ல, அது நடந்ததற்கான காரணம் என்ன என்பதுதான் முக்கியம்” என்று அவர் ப்ளூம்பெர்க் டிவியிடம் கூறினார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இருப்பினும், 6 இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் சேதம் விளைவித்ததாக வெளியான கூற்றை அவர் மறுத்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் செளகான்மே மாதம் பாகிஸ்தானுடனான நான்கு நாள் ராணுவ மோதலின் போது இந்திய போர் விமானம் ஏதேனும் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்று சிடிஎஸ் அனில் செளகானிடம் கேட்கப்பட்டது.

சிடிஎஸ் அனில் செளகானுடனான பேட்டியின் ஒரு நிமிடம் ஐந்து நொடிகள் கொண்ட ஒரு பகுதியை ப்ளூம்பெர்க் டிவி தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டது.

ஒன்றுக்கும் மேற்பட்ட இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தானின் கூறுவதை உறுதிப்படுத்த முடியுமா என்று ப்ளூம்பெர்க் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஜெனரல் அனில் செளகான், “ஜெட் சுட்டு வீழ்த்தப்பட்டது முக்கியமல்ல, இது ஏன் நடந்தது என்பதுதான் முக்கியம்” என்றார்.

இது குறித்து பத்திரிகையாளர் அவரிடம் மீண்டும் ஒருமுறை கேட்டார், “குறைந்தபட்சம் ஒரு ஜெட் விமானமாவது சுட்டு வீழ்த்தப்பட்டது என்பது சரியா?”

இதற்கு பதிலளித்த ஜெனரல் அனில் செளகான், “ஆம், அது ஏன் சுட்டு வீழ்த்தப்பட்டது? இதில் நல்ல விஷயம் என்னவென்றால், எங்களது உத்தி சார்ந்த தவறுகளை நாங்கள் அறிந்து கொள்ள முடிந்தது. அவற்றை நாங்கள் இரண்டு நாட்களில் சரிசெய்து விட்டு பிறகு செயல்படுத்தினோம். இதற்குப் பிறகு எங்கள் அனைத்து ஜெட் விமானங்களையும் பறக்கவிட்டு தொலைதூர இலக்குகளை குறிவைத்தோம்” என்று சொன்னார்

“ஆறு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுகிறது. அந்த நாடு சொல்லும் கணக்கு சரியானதா?” என்று பத்திரிகையாளர் மறுபடியும் கேட்டார்.

“இது முற்றிலும் தவறு. ஆனால் நான் முதலிலேயே சொன்னது போல், இந்த தகவல் முக்கியமில்லை. ஜெட் விமானங்கள் ஏன் விழுந்தன, அதன் பிறகு நாங்கள் என்ன செய்தோம் என்பதுதான் முக்கியம்.” என்று ஜெனரல் அனில் செளகான் பதிலளித்தார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

CDS ஜெனரல் அனில் செளகானின் பேட்டி குறித்து கருத்து தெரிவித்த பாதுகாப்பு நிபுணர் சி உதய் பாஸ்கர், மிகவும் பொருத்தமான பதிலை பாதுகாப்பு படைகளின் தலைமைத் தளபதி அளித்துள்ளதாகக் கூறினார்.

“சிடிஎஸ் கூறியது மிகவும் பொருத்தமானது. ஏனெனில் இந்தியாவைப் பொறுத்தவரை இது இழப்பு என்பதைவிட உத்தி ரீதியிலான சேதம் ஆகும். இதனை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பது முக்கியம். இந்த இழப்புக்கு வழிவகுத்த தவறுகள் மற்றும் குறைபாடுகளைப் பற்றி தெரிந்து கொண்டோம். அவை எவ்வாறு சமாளிக்கப்படவேண்டும் என்ற படிப்பினை கிடைத்தது என்று அவர் சொல்வது சரியானதே” என்று சி உதய் பாஸ்கர் கூறினார் .

இதற்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில், நமது தரப்பின் இழப்புகள் குறித்து இந்தியா ஏற்கனவே தெரிவித்துள்ளதாக உதய் பாஸ்கர் கூறினார். “ராணுவத்தின் விளக்கங்கள் உங்கள் நினைவில் இருந்தால், ஏர் மார்ஷல் ஏ.கே. பார்தி சொன்னதை நினைத்துப் பாருங்கள். “நாம் போர் சூழ்நிலையில் இருக்கிறோம், இழப்புகளும் அதில் ஒரு பகுதி தான் என அவர் தெரிவித்தார்” என்று அவர் கூறினார்.

“சிடிஎஸ் சரியான கண்ணோட்டத்தில் பேசினார் என்று நான் நினைக்கிறேன். இதை அவர் சிங்கப்பூரில் சொன்னதால் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. ஷாங்க்ரி-லா பேச்சுவார்த்தைக் கூட்டம் என்பது பிராந்தியத்தின் அனைத்து பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் உயர் ராணுவ அதிகாரிகள் ஒன்றுகூடும் மிக முக்கியமான மாநாடு” என்று உதய் பாஸ்கர் கூறினார்.

மூலோபாய விவகார நிபுணர் பிரம்மா செலானி, முப்படைகளின் தலைமைத் தளபதியின் அறிக்கைக்கு எதிர்வினையாற்றுகையில், இது மோசமான ராஜதந்திரம் என்று கூறியுள்ளார்.

“மோசமான ராஜதந்திரம் இது, மோதி அரசாங்கம் தேவையில்லாமல் இந்தியாவின் பாதுகாப்புப் படைத் தலைவரை சிங்கப்பூருக்கு அனுப்பியது, அங்கு அவர் ராய்ட்டர்ஸுக்கு அளித்த பேட்டியில் இந்திய போர் விமானங்களின் இழப்பை ஒப்புக்கொண்டு பாகிஸ்தானுக்கு வெற்றியை வழங்கினார்,” என்று அவர் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

“இத்தகைய ஒப்புதல் வாக்குமூலம் இந்திய மண்ணில்தான் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த மோதலில் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்த தரவுகளை இந்தியாவும் வழங்க வேண்டும்” என்று பிரம்மா செலானி எழுதினார்.

மற்றொரு பதிவில், “ராணுவ நடவடிக்கையை முன்கூட்டியே நிறுத்துவது பற்றிய விமர்சனங்களை நிறுத்த பிரதமர் மோதி பிரசார நிகழ்ச்சிகளை நடத்தினார். ஆனால் முப்படை தலைமைத் தளபதியின் அறிக்கை மோடியின் முயற்சிகளை சிக்கலாக்கியுள்ளது” என்று பிரம்மா செலானி எழுதியுள்ளார்.

“பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றியின் கதையை வலுப்படுத்தவும், ராணுவ நடவடிக்கை முன்கூட்டியே நிறுத்தப்பட்டது என்ற கருத்தை மறுக்கவும் மோதி பிரசாரங்களை நடத்தியுள்ளார் . இருப்பினும், இந்தியா மீது வர்த்தகத் தடைகளை விதிக்கப் போவதாக அச்சுறுத்தி ஒரு ராணுவ மோதலைத் தடுத்ததாக டிரம்ப் பலமுறை கூறிவிட்டார். எனவே, அவருடைய கூற்று மோதியின் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது” என்று அவர் எழுதினார்.

“தற்போது இந்தியாவின் பாதுகாப்புப் படைத் தலைவர் சிங்கப்பூரில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின் மூலம், மோதலுக்குப் பிந்தைய கதையைக் கட்டுப்படுத்தும் மோதியின் முயற்சிகளை மேலும் சிக்கலாக்கிவிட்டார்” என்று அவர் மேலும் கூறினார்.

படக்குறிப்பு, இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் செளகான்அமெரிக்காவிற்கான முன்னாள் பாகிஸ்தான் தூதர் ஹுசைன் ஹக்கானி, ஒரு ராணுவ வீரர் என்ற முறையில், இந்தியாவின் இழப்பை ஜெனரல் செளகான் ஏற்றுக்கொண்டதாகக் கருதுகிறார்.

“தோல்வியை ஏற்காமல் இருப்பது அரசியல் முடிவாக இருக்கலாம். ஆனால் ஒரு ராணுவ வீரராக, இந்தியாவின் சிடிஎஸ் ஜெனரல் செளகான் இந்தியா சந்தித்த இழப்புகளை ஏற்றுக்கொள்கிறார். இது ஏன் நடந்தது என்பதில் தான் தனது கவனம் இருப்பதாக அவர் கூறுகிறார். இதைத் தவிர, அவர்களின் வான் பாதுகாப்பு மீறப்பட்டது என்ற மற்றொரு பிரச்னை குறித்தும் பேசுகிறார்” என்று ஹக்கானி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஹுசைன் ஹக்கானியின் இந்தப் பதிவிற்கு பதிலளித்த இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் கன்வல் சிபல், சர்வதேச ஊடகங்களும் வெளியுறவுக் கொள்கை சமூகமும், பாகிஸ்தானிய எதிர்ப்பு மற்றும் வெற்றியின் கதையை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார்.

“இந்திய விமானப்படை பாகிஸ்தானின் விமான தளங்களில் ஏற்படுத்திய இழப்புகளையும் அதற்கான ஆதாரங்களையும் இந்தியா வழங்கியதே, அவற்றை அந்நாடு ஏற்றுக்கொண்டதா? பாகிஸ்தானில் பீல்ட் மார்ஷல் வீரர்கள் இல்லையா? ராணுவ வீரர்களாக அவர்கள், தங்கள் தரப்பின் இழப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டாமா?” என்று கன்வல் சிபல் கேள்வி எழுப்புகிறார்.

“சர்வதேச ஊடகங்களும், வெளியுறவுக் கொள்கை சமூகமும் ஏன் இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்புகளில் மட்டும் கவனம் செலுத்துகின்றன? இந்தியாவின் வெற்றியின் அளவைக் குறைத்து மதிப்பிடுவதும், பாகிஸ்தானிய எதிர்ப்பு மற்றும் வெற்றியின் கதையை உருவாக்குவதும்தான் முழுப் பிரச்னை” என்று அவர் கூறினார்.

இந்தோ-பசிபிக் நிபுணர் டெரெக் ஜே கிரோஸ்மேன் அல் ஜசீரா ஊடகத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, எக்ஸ் சமூக ஊடகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “சீனாவில் தயாரிக்கப்பட்ட ராணுவ அமைப்பைப் பயன்படுத்தி, குறைந்தபட்சம் ஒரு இந்திய போர் விமானத்தையாவது பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக இந்தியா இறுதியாக ஒப்புக்கொண்டதால் சீனா இன்று புன்னகைக்கிறது.”

பட மூலாதாரம், Kabir Jhangiani/NurPhoto via Getty

படக்குறிப்பு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேஎதிர்க்கட்சித் தலைவர்களின் கருத்து

சி.டி.எஸ் அறிக்கைக்குப் பிறகு தனது சமூக ஊடகங்களில் அது குறித்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் அப்போதுதான் கேள்விகளை கேட்க முடியும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

“மோதி அரசாங்கம் நாட்டை தவறாக வழிநடத்தியுள்ளது. இப்போது நிலைமை மெதுவாக தெளிவாகி வருகிறது. கார்கில் மறுஆய்வுக் குழுவின் மாதிரியில் ஒரு சுயாதீன நிபுணர் குழுவால் நமது பாதுகாப்பு தயாரிப்புகளை விரிவான மதிப்பாய்வு செய்யவேண்டும் என காங்கிரஸ் கட்சி கோருகிறது” என்று கார்கே பதிவிட்டுள்ளார்.

சமாஜ்வாதி கட்சி எம்.பி. வீரேந்திர சிங், “முப்படைகளின் தலைமைத் தளபதி என்பது மிகவும் பொறுப்பான பதவி, எனவே, ஜெனரல் அனில் செளகானின் அறிக்கையை நாம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று கூறினார் .

இதற்கிடையில், சிங்கப்பூரில் பேசப்பட்ட விஷயங்கள் பகுப்பாய்வு செய்யப்படும் என்று தான் கருதுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

“நமது சிடிஎஸ் ஜெனரல் செளகான் சிங்கப்பூரில் பல விஷயங்களைச் தெரிவித்துள்ளார் . அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் இதைச் சொல்ல வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பிரதமர் இதையே சொல்ல வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், ஆனால் சிங்கப்பூரிலிருந்து நமக்கு செய்திகள் வருகின்றன. இது பகுப்பாய்வு செய்யப்பட்டு ஆழமாக ஆய்வு செய்யப்படும் என்று கருதுகிறோம்” என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

“கார்கில் போர் முடிந்த மூன்று நாட்களுக்குப் பிறகு, அப்போதைய வாஜ்பாய் அரசாங்கம் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட கார்கில் மறுஆய்வுக் குழுவை அமைத்தது. அந்தக் குழு தனது அறிக்கையை டிசம்பர் 15, 1999 அன்று அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட அந்த அறிக்கை பிப்ரவரி 23, 2000 அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 150 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை, போரில் நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் என்ன? உண்மை என்ன, எதிர்காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பகுப்பாய்வு செய்தது.”

“தற்போது, மோதி அரசு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதிக்கும் என்று கருதுகிறோம், நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறும். பிரதமர் எதிர்க்கட்சிகளின் மீதும் நம்பிக்கை வைக்கவேண்டும்.”

பட மூலாதாரம், ani

மத்திய அரசுக்கு ஆதரவாக பேசிய கட்சிகள்

எதிர்க்கட்சித் தலைவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக பாஜகவும், அரசாங்கத்தில் உள்ள அதன் கூட்டாளிகளும் முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் செளகான் மற்றும் மத்திய அரசுக்கு ஆதரவாகப் பேசின.

“நமது ஆறு ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறிய பாகிஸ்தானின் கூற்றை நமது சிடிஎஸ் தெளிவாக நிராகரித்தார். ஆனால் நமது எதிர்க்கட்சிகளுக்கு இதனால் திருப்தி ஏற்படாது” என்று பாஜக தலைவர் அஜய் ஆலோக் கூறினார் .

“நமது ஜெட் விமானங்கள் பாகிஸ்தானின் 11 விமானப்படை தளங்களை அவர்களின் இடத்திற்குள் நுழைந்து அழித்ததில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை. முதல் முறையாக, நமது ஜெட் விமானங்கள் பஞ்சாபில் உள்ள கைபர் பக்துன்க்வாவிற்குள் நுழைந்து, சிந்து வரை சென்று குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசின. நமது பிரம்மோஸ் அந்த இடம் வரை சென்றிருக்கிறது. இவற்றை அறிந்து கொள்வதில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை” என்று அவர் கூறுகிறார்.

“நமது விமானங்களில் எத்தனை சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதை அறிய எதிர்க்கட்சி ஆர்வமாக உள்ளது. இது பாகிஸ்தானின் ஆர்வத்தைப் போன்றே இருக்கிறதே?” என்று அஜய் ஆலோக் கூறினார்.

இதற்கிடையில், ஐக்கிய ஜனதா தள (ஜேடியு) கட்சியைச் சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் பிரசாத், எதிர்க்கட்சிகள் தங்கள் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கக் கூடாது என்றும் கூறினார்.

“பாகிஸ்தானின் ஒன்பது பயங்கரவாத மறைவிடங்களை இந்தியா அழித்தது, நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளைக் கொன்றது. இது இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி” என்று ராஜீவ் ரஞ்சன் பிரசாத் கூறுகிறார் .

“ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றி குறித்து ஏதேனும் ஒரு வழியில் அவர்கள் கேள்வி எழுப்புபவர்கள், உலகின் பல்வேறு நாடுகளில் அனைத்துக் கட்சிகளின் எம்.பி.க்கள் ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியைப் பற்றியும், இந்த நடவடிக்கை ஏன் மேற்கொள்ளப்பட்டது என்பதற்கான காரணங்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், எதிர்க்கட்சிகள் இந்த முழு சம்பவத்தின் மீதான தனது அணுகுமுறையை சந்தேகத்திற்கு இடமின்றி பரிசீலிக்க வேண்டும்” என்று ராஜீவ் ரஞ்சன் பிரசாத் தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு