Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
துப்பாக்கி முனையில் உணவு, கூட்டத்தை கலைக்க வெடிபொருள் – காஸாவில் மனிதாபிமான உதவிகளின் நிலை என்ன?
படக்குறிப்பு, காஸா எழுதியவர், மாட் மர்பி & கெவின் நுயென்பதவி, பிபிசி வெரிஃபை ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
முகமூடி அணிந்து, ஆயுதம் ஏந்திய தனியார் (ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ள) பாதுகாப்புக் காவலர் ஒருவர், மண் மேட்டின் மேல் நின்று, வேலிகளால் பிரிக்கப்பட்ட குறுகிய பாதைகளில் ஒட்டுமொத்தமாகக் கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான பாலத்தீனியர்களைக் கண்காணிக்கிறார்.
பின்னர், அந்த பாதுகாப்பு காவலர் தனது கைகளால் ஒரு இதய வடிவத்தை உருவாக்குகிறார். அதற்கு பதிலளித்த மக்கள் கூட்டம், அந்த வேலியை எதிர்த்துத் தள்ளும்போது, அது வளையத் தொடங்குகிறது.
இந்த மகிழ்ச்சியான தருணம், உதவிப் பொருட்களை விநியோகிக்கும் மையம் திறக்கப்பட்ட செவ்வாய்க்கிழமையன்று (மே 27) பதிவு செய்யப்பட்டது.
இஸ்ரேலின் முற்றுகையால், இரண்டு மாதங்களுக்கும் மேலாக புதிய உதவிப் பொருட்களைப் பெறாத காஸா மக்களுக்கு இந்த மையம் மிகவும் முக்கியமானது.
ஆனால் அன்று பிற்பகலில், நிலைமை மிகவும் குழப்பமானதாக மாறியது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
அவநம்பிக்கையுடன் காணப்பட்ட மக்கள், உதவிப் பொருட்களை வழங்கும் மையத்தில் விழுந்து கிடந்த தடைகளை மிதித்துக் கொண்டு செல்வதை வீடியோக்கள் காட்டின. துப்பாக்கிச் சூட்டின் சத்தம் கேட்டதும், மக்கள் பீதியடைந்து அலறத் தொடங்கினர்.
உதவிப் பொருட்களை விநியோகிக்கும் புதிய திட்டம், இவ்வாறு குழப்பமான முறையில் தொடங்கியது.
சமீபத்தில் உருவாக்கப்பட்ட காஸா மனிதாபிமான அறக்கட்டளையால் (GHF), இந்த சர்ச்சைக்குரிய புதிய திட்டம் நிர்வகிக்கப்படுகிறது. இந்த அமைப்பு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் ஆதரிக்கப்படுகின்றது.
மிகவும் பசியால் வாடும் காஸா மக்களுக்கு உணவளிக்கும் பணியை காஸா மனிதாபிமான அறக்கட்டளை மேற்கொண்டுள்ளது. காஸாவில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் பட்டினியால் வாடும் அபாயத்தில் இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பட மூலாதாரம், Telegram
படக்குறிப்பு, உதவி வந்ததை இதய குறியீடு மூலம் உணர்த்தும் காவலர்ஆயுதமேந்திய அமெரிக்கப் பாதுகாப்பு ஒப்பந்ததாரர்களைப் பயன்படுத்தும் இந்த அறக்கட்டளை, காஸாவில் உதவி வழங்கும் முக்கிய அமைப்பான ஐ.நா.வை புறக்கணிக்க முயல்கிறது. உதவி வழங்கும் பிற அமைப்புகள் மற்றும் ஐ.நா.வால் கடுமையாக கண்டிக்கப்பட்டுள்ளது இந்த அமைப்பு.
இருப்பினும், மக்களுக்குச் செல்லவேண்டிய உதவிப் பொருட்களை ஹமாஸ் திருடுவதைத் தடுப்பதற்காக, தற்போதைய உதவி முறைக்கு மாற்றாக புதிய அமைப்பு தேவை என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது, ஆனால் அந்த குழு இதனை மறுக்கிறது.
உதவிப் பொருட்களை விநியோகிக்கும் புதிய முறையானது, அது தொடங்கப்பட்ட சில நாட்களில் எவ்வாறு செயல்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள, பிபிசி வெரிஃபை உதவிப் பொருட்களை விநியோகம் செய்யும் இடங்களில் இருந்து பெறப்பட்ட பல்வேறு புகைப்படங்களைச் சரிபார்த்தது.
மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்பவர்கள் மற்றும் உதவிப் பொருட்கள் எவ்வாறு திட்டமிடப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகின்றன என்பது குறித்து அறிந்துகொள்ள நிபுணர்களை நேர்காணல் செய்துள்ள பிபிசி வெரிஃபை, இஸ்ரேலில் இருந்து உதவிப் பொருட்கள் எவ்வாறு கொண்டு செல்லப்படுகின்றன என்பது பற்றிய தரவுகளையும், காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளையும் ஆய்வு செய்தது.
மேலும், உதவிப் பொருட்களை நாடியுள்ள காஸா மக்களிடமும் பேசியுள்ளது.
விநியோக மையங்களில் காணப்பட்ட குழப்பமான காட்சிகள்
நான்கு பாதுகாப்பான விநியோக மையங்களின் மூலம், முதல் வாரத்தில் காஸாவில் ஒரு மில்லியன் மக்களுக்கு உணவு வழங்க திட்டமிட்டுள்ளதாக காஸா மனிதாபிமான அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
நான்காவது நாளாக உதவிப்பொருட்களை வழங்கி வந்த காஸா மனிதாபிமான அறக்கட்டளை, இரண்டு மில்லியன் உணவுப் பொட்டலங்களை வழங்கியுள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமையன்று கூறினார்.
பிபிசியால் இந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை. அந்த தகவல் உண்மையென்றால், காஸாவில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் அந்த இரண்டு மில்லியன் உணவைப் பிரித்தால், 4 நாட்களில் தலைக்கு ஒருவேளை உணவு கூட முழுமையாக கிடைத்திருக்காது.
அவற்றை யார் பெறுகிறார்கள் என்பதைக் கண்காணிப்பது குறித்த பிபிசியின் கேள்விகளுக்கு காஸா மனிதாபிமான அறக்கட்டளை பதிலளிக்கவில்லை.
வியாழக்கிழமை, நுசைராட் அருகே உள்ள காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் வடக்குத் தளத்தில் எடுக்கப்பட்ட ஒரு காணொளியில், அறக்கட்டளையின் சார்பாக ஒப்பந்தத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள பாதுகாவலர்கள் ஒரு வெடிபொருளை எறிவதையும், அதனால் அந்தத் தளத்தைச் சுற்றிப் போடப்பட்டிருந்த வேலிக்கு அருகே இருந்த பாலத்தீனியர்கள் அதிர்ச்சியடைந்து ஓடிச் செல்வதையும் காணமுடிந்தது. வீசப்பட்ட அந்த வெடிபொருள் பலத்த சத்தத்தையும், ஒளியையும், புகையையும் உருவாக்கியது.
காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் பணியாளர்கள், “கலைந்து செல்ல மறுத்த பதற்றமான மற்றும் ஆபத்தான கூட்டத்தை எதிர்கொண்டனர்” என்று காஸா மனிதாபிமான அறக்கட்டளை கூறியது.
“கூட்டம் மேலும் அதிகரிப்பதைத் தடுக்கவும், பொதுமக்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தாத தடுப்புகள் பயன்படுத்தப்பட்டன. அதில் புகையும், எச்சரிப்பதற்காக தரையில் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டன” என்று அந்த அறக்கட்டளைக் கூறியது.
“இந்த நடவடிக்கைகள் பயனுள்ளதாக இருந்தன,” என்று கூறி, “எந்த காயமும் ஏற்படவில்லை” என்றும் காஸா மனிதாபிமான அறக்கட்டளை குறிப்பிட்டது.
பிபிசி வெரிஃபையால் இதை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
சம்பவம் நடந்த அன்று மாலையில், எந்த இடத்தில் கொள்ளை நடந்தாலும், அந்த இடத்தை மூடுவோம் என்று காஸா மனிதாபிமான அறக்கட்டளை, காஸா மக்களிடம் பேஸ்புக்கில் கூறியது.
கடுமையான சவால்களை எதிர்கொள்ளும் ஒரே உதவி அமைப்பு காஸா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) மட்டுமல்ல.
அந்த அமைப்பு எச்சரிக்கை கொடுப்பதற்கு முந்தைய இரவு, உலக உணவு திட்டத்தின் (WFP) ஒரு கிடங்கு சூறையாடப்பட்டது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர், அது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாக, மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் உள்ள சவால்கள், “கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிட்டன” என்றும், காஸாவிற்கு உடனடியாக “பாதுகாப்பான மற்றும் தடையற்ற மனிதாபிமான உதவிப் பொருட்களை அனுமதிக்குமாறு” உலக உணவுத் திட்டம் (WFP) வலியுறுத்தியது.
உலக உணவுத் திட்டத்தின் கிடங்குகளில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்த பிபிசியின் கேள்விகளுக்கு அந்த அமைப்பு பதிலளிக்கவில்லை.
ஒழுங்கற்ற காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் தகவல்தொடர்பு
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, காஸாவில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் பட்டினியால் வாடும் அபாயத்தில் இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.காஸா மனிதாபிமான அறக்கட்டளை தலைமையிலான நடவடிக்கையை, ஒழுங்கற்றது என உதவியை எதிர்நோக்கியுள்ள பாலத்தீனியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வாரம் ஏற்பட்ட குழப்பங்களுக்கு, தகவல் தொடர்பு இல்லாததே காரணம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். தவறான தகவல்களால் நிலைமை மேலும் குழப்பமடைந்துள்ளது.
‘காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ கணக்குகள்’ என விவரிக்கும் இரண்டு பேஸ்புக் பக்கங்களை பிபிசி வெரிஃபை கண்டறிந்துள்ளது. இவை உதவி விநியோக மையங்களின் நிலை குறித்த தவறான தகவல்களைப் பகிர்ந்து வருகின்றன.
4,000-க்கும் மேற்பட்டவர்களால் பின்தொடரப்படும் ஒரு பேஸ்புக் பக்கம், காஸா மனிதாபிமான அறக்கட்டளை மையங்களில் உதவி நிறுத்தப்பட்டது எனவும், அந்த மையங்களில் உள்ள பொருட்கள் அதிகமாக கொள்ளையடிக்கப்படுவதாகவும், சில சமயங்களில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட படங்களுடன் கூடிய தவறான தகவல்களைப் பகிர்ந்தது.
இந்த இரண்டு பேஸ்புக் பக்கங்களும் போலியானவை என்பதை பிபிசி வெரிஃபைக்கு உறுதிப்படுத்திய காஸா மனிதாபிமான அறக்கட்டளைச் செய்தித் தொடர்பாளர், அறக்கட்டளை அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தைத் தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
உதவிப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் தொடங்கியதன் மறுநாளான புதன்கிழமையன்று, அந்த பேஸ்புக் பக்கம் முதன்முதலில் உருவாக்கப்பட்டது என்பதை ஆன்லைன் வெளிப்படைத்தன்மை தரவுகள் (Transparency information online) வெளிப்படுத்துகின்றன.
உதவிப் பொருட்கள் எப்போது கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள, மக்கள் வாய்மொழித் தகவல்களையே நம்பியுள்ளனர் என்று உதவிப் பொருட்கள் வழங்கும் அமைப்பான ஆக்ஸ்பாமும், காஸாவில் வாழும் உள்ளூர் மக்களும் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.
“எல்லா மக்களும் பசியுடன் இருக்கிறார்கள். எல்லோரும் தங்களுக்குத் தேவையானதைப் பெற போராடுகிறார்கள், அந்தச் சூழலில் நாங்கள் எப்படிப் பெற முடியும்?” என்று வியாழக்கிழமையன்று உதவிப் பெட்டியைப் பெற முடியாமல் போன உம்மு முகமது அபு ஹஜர் கூறினார்.
உதவிப் பொருட்கள் வழங்கும் நிறுவனத்தின் கவலைகள்
காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் உதவி விநியோக மையங்கள் அமைந்துள்ள இடங்களை விமர்சித்த ஆக்ஸ்ஃபாம், “உதவிப் பணிகள் மீது ராணுவக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது” என்று பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தது.
அந்த அமைப்பின் கொள்கை ஆலோசகரான புஷ்ரா காலிடி, மக்கள் வாழும் பகுதிகளிலிருந்து சிறிது தொலைவில் உள்ள இந்த உதவி மையங்களை, முதியவர்கள் போன்ற பலவீனமான மக்கள் எப்படிச் சென்று அடைய முடியும்? என்ற கேள்வியை எழுப்பினார்.
மனிதாபிமான உதவிப் பொருட்கள் காஸாவுக்குக் கிடைப்பதை, இஸ்ரேல் முடக்குவதற்கு முன், ஐ.நா. உதவிகளை வழங்கி வந்தது.
அப்போது காஸா முழுவதும் 400 விநியோக மையங்கள் இருந்தன. ஆனால் தற்போது, காஸா மனிதாபிமான அறக்கட்டளை அமைப்பின் கீழ், நான்கு தளங்கள் மட்டுமே செயல்படுகின்றன என அறியமுடிகின்றது.
“பெரும்பாலும், உணவு கிடைக்கும் இடங்களை மிகக் குறைந்த எண்ணிக்கையில் வைத்திருப்பதன் மூலம்,மக்கள் தொகை ஒரே இடத்தில் அதிகமாக கூடும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று பிரஸ்ஸல்ஸை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான நெருக்கடி குழுமத்தின் மூத்த ஆய்வாளர் கிறிஸ் நியூட்டன் கூறினார்.
“நீங்கள் அவர்களின் அனைத்து விதிகளையும் பின்பற்றி, இந்த தளங்களைச் சுற்றியுள்ள ஒரு சிறிய பகுதியில் உயிர்வாழலாம், இல்லையெனில் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பு குறைவு.”
விநியோகத் தளங்களிலோ அல்லது அதற்கு அருகிலோ, ஆயுதமேந்திய பாதுகாப்புப் படை மற்றும் இஸ்ரேலிய வீரர்கள் இருப்பது நிபுணர்களுக்கு கவலை அளித்துள்ளது. இது உதவிப் பொருட்கள் வழங்கும் நடவடிக்கை மீதான நம்பிக்கையை பாதிக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
“இந்த மாதிரியான சூழலில் உதவிப் பொருட்களை விநியோகிப்பது மிகவும் கடினம். ஆயுதம் ஏந்தியவர்களின் துப்பாக்கி முனையில் அல்லாமல், அங்குள்ள மக்களுடன் இணைந்து பணியாற்றும் போது இதை பலமடங்கு திறம்படச் செய்ய முடியும்,” என்கிறார் லண்டன் பொருளாதாரக் கல்லூரியின் பேராசிரியர் ஸ்டூவர்ட் கார்டன்.
“அழுத்தத்தின் கீழ் செயல்படக்கூடிய எங்கள் திறனும், விருப்பமும் தான், காஸா மனிதாபிமான அறக்கட்டளை இன்றும் காஸாவுக்கு முக்கியமான உணவு உதவிகளை வழங்கக்கூடிய ஒருசில அமைப்புகளில் ஒன்றாக இருப்பதற்கான காரணம்” என்று காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
நேரில் இருந்த சாட்சிகளும், இஸ்ரேலிய ராணுவம் எடுத்த படங்களும் வீடியோக்களும் காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் உதவிப் பெட்டிகளில் பதப்படுத்தப்பட்ட உணவு, பாஸ்தா, அரிசி, சமையல் எண்ணெய் மற்றும் சில பிஸ்கட்களும், பருப்பு வகைகளும் மட்டுமே இருந்ததைக் காட்டின.
“மனிதாபிமான உதவி என்பது, வெறும் உணவுப் பெட்டியை ‘மனிதாபிமான உதவி’ என்று பெயரிட்டு அதை மனிதாபிமான உதவி என அழைப்பதல்ல,” என்றார் காலிடி.
குடும்பங்களுக்கு வழங்கப்படும் பொருட்களுடன் மருத்துவ உதவிப் பொருட்கள், சுகாதாரப் பொருட்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு கருவிகளும் இணைந்திருக்க வேண்டும் என்று பேராசிரியர் கார்டன் குறிப்பிட்டார்.
பிபிசி ஆய்வு செய்த காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் 14 பக்க ஆவணம், அந்த இடங்களில் தண்ணீர் மற்றும் சுகாதாரக் கருவிகள் வழங்கப்படும் என உறுதியளித்திருந்தது.
பட மூலாதாரம், Israeli Defense Forces
படக்குறிப்பு, நேரில் இருந்த சாட்சிகளும், இஸ்ரேலிய ராணுவம் எடுத்த படங்களும் வீடியோக்களும் காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் உதவிப் பெட்டிகளில் பதப்படுத்தப்பட்ட உணவு, பாஸ்தா, அரிசி, சமையல் எண்ணெய் மற்றும் சில பிஸ்கட்களும், பருப்பு வகைகளும் மட்டுமே இருந்ததைக் காட்டின.வெள்ளிக்கிழமை, காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் நான்கு தளங்களில், ஒரு தளம் மட்டுமே உதவிப் பொருட்களை விநியோகித்துக் கொண்டிருந்தது.
அந்தத் தளமும், ஒரு மணி நேரத்துக்கும் குறைவாகவே திறந்திருந்தது.
பின்னர், அனைத்து பொருட்களும் “முழுமையாக விநியோகிக்கப்பட்டதால்” அதுவும் மூடப்பட்டதாக காஸா மனிதாபிமான அறக்கட்டளை பேஸ்புக்கில் அறிவித்தது.
ஒரே ஒரு தளம் மட்டும் ஏன் இயங்குகிறது, அதன் பெட்டிகள் ஏன் இவ்வளவு விரைவாக தீர்ந்து போயின என்று பிபிசி வெரிஃபை கேள்வி எழுப்பியது.
அதற்கு, காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், விநியோகம் “நாளுக்கு நாள் மாறுபடும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “நல்ல செய்தி என்னவென்றால், நாங்கள் நான்கு நாட்களில் இரண்டு மில்லியன் உணவுகளை வழங்கியுள்ளோம், அடுத்து வரும் நாட்கள் மற்றும் வாரங்களில் இது அதிகரிக்கும்” என்றும் அறக்கட்டளையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஆனால் இன்னும் பலர் தங்கள் குடும்பங்களுக்கு உதவிப் பெட்டிகள் கிடைக்காமல் விநியோகத் தளங்களிலிருந்து வெறுமனே திரும்பிச் செல்கின்றனர்.
“கடவுள் என்னைப் படைத்தது போலவே, நான் வெறுங்கையுடன் இருக்கிறேன்” என்று நெட்சாரிமுக்கு அருகிலுள்ள மையத்திற்கு வெளியே ஹனி ஆபேட் என்பவர் வியாழக்கிழமையன்று கூறினார்.
“வெறுங்கையுடன் வந்த நான், வெறுங்கையுடன் செல்கிறேன்.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு