Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ரூ.575 கோடி கொள்ளை: ஓடும் ரயிலில் இந்த கும்பல் கச்சிதமாக திட்டமிட்டு பணத்தை கொள்ளையடித்தது எப்படி?
பட மூலாதாரம், Getty Images
எழுதியவர், மைல்ஸ் பர்க்பதவி, 31 மே 2025, 02:09 GMT
புதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர்
பிரிட்டனில் 1960களில் நடந்த ஒரு துணிச்சலான ரயில் கொள்ளை, அதில் திருடப்பட்ட மிகப்பெரிய அளவிலான பணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏப்ரல் 1964இல் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டபோது, இதுபோன்ற குற்றங்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்ற செய்தியைச் சொல்வதில் நீதிபதி உறுதியாக இருந்தார். அதிலிருந்து பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, குற்றவாளிகளில் பலர் பிபிசியிடம் பேசினர்.
ஏப்ரல் 16, 1964 அன்று, அந்த மோசமான கொள்ளைச் சம்பவம் தொடர்பாக அய்ல்ஸ்பரி கிரவுன் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில், குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட 12 பேரில் ராபர்ட் வெல்ச்சும் ஒருவர்.
பதினான்கு ஆண்டுகள் கழித்து, 1978 இல், அவர் பிபிசியின் மேன் அலைவ் (Man Alive) என்ற ஆவணப்பட நிகழ்ச்சியில் பங்கேற்றார். உள்ளூர் பிரமுகர்கள் தன்னுடைய தண்டனை அறிவிப்பை கேட்க நீதிமன்ற அறையில் இருக்கைகளுக்கு முட்டி மோதியதை அவர் நினைவு கூர்ந்தார்.
“அவர்கள் அனைவரும் பார்க்க வந்தது, அந்த வழக்கின் கிளைமாக்ஸ் காட்சியை,” என வெல்ச் கூறினார்.
பிரிட்டன் அதுவரை கண்டிராத மிகவும் துணிச்சலான திருட்டுகளில் ஒன்றான கிரேட் ரயில் கொள்ளையில் ஈடுபட்ட பிறகு, வெல்ச்சு அவரது கூட்டாளிகளுக்கு கருணை காட்டக்கூடாது என்பதில் சட்டம் உறுதியாக இருந்தது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இன்றைய மதிப்பில் ரூ.575 கோடிக்கும் அதிகமான பணம்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கொள்ளையடிக்கப்பட்ட ராயல் மெயில் வண்டிவெல்ச்சும் அவரது கூட்டாளிகளும் கிளாஸ்கோவிலிருந்து லண்டனுக்குச் செல்லும் ராயல் மெயில் இரவு ரயிலைத் தடுத்து நிறுத்திக், கொள்ளையிட்ட ஒரு குழுவின் அங்கமாக இருந்தனர்.
கொள்ளையர்கள் 2.6 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள பயன்படுத்தப்பட்ட பணக்கட்டுகளை எடுத்துச் சென்றுவிட்டனர். அப்போது இது மிகப்பெரிய தொகையாகும். இன்றைய மதிப்பில் 50 மில்லியன் பவுண்டுகளுக்கு (இந்திய மதிப்பில் சுமார் 575 கோடி ரூபாய்) சமமானதாகும்.
வெல்ச்சின் வழக்கு விசாரணையின் போது, அந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட மேலும் மூன்று நபர்களை போலீசார் அப்போது தேடி வந்தனர்.
கவனமாக திட்டமிடப்பட்ட இந்தக் கொள்ளையைச் செயல்படுத்த, லண்டனின் இரண்டு பெரிய குற்றக் கும்பல்களைச் சேர்ந்த 15 உறுப்பினர்கள் ஒன்றாகச் செயல்பட்டனர், ஒவ்வொருவருக்கும் சதித்திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கு இருந்தது.
“அவர்கள் குற்றவியல் உலகின் ‘சூப்பர்ஸ்டார்கள்’ எனக் கருதப்பட்டனர்,” என்று அப்போது இளம் நிருபராக பிபிசிக்காக இந்தக் குற்றத்தை செய்தியாக வெளியிட்ட ரெஜினால்ட் அபிஸ், 2023இல் விட்னஸ் ஹிஸ்டரி பாட்காஸ்டில் கூறினார்.
“இந்த அளவிலான ஒரு கொள்ளையை கச்சிதமாக நிறைவேற்ற துணிச்சல் மற்றும் குறிப்பிட்ட சில திறன்கள் இருக்க வேண்டும். இதற்கு பல திறமைசாலிகளின் பங்கு தேவைப்பட்டதால் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தனர்.” என்றார் அபிஸ்.
1963 ஆகஸ்ட் 8ஆம் தேதி அதிகாலை 03:00 மணிக்குப் பிறகு இந்த துணிச்சலான கொள்ளை நடந்தது. குற்றவாளிகள் எடுத்த முதல் நடவடிக்கை, அலாரம் ஒலிப்பதை நிறுத்த தொலைபேசி இணைப்புகளைத் துண்டிப்பதாகும். பின்னர் அவர்கள் ரயில் சிக்னல்களை சிவப்பு நிறத்திற்கு மாற்றினர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கொள்ளையில் ஈடுபட்ட பெரும்பாலான கொள்ளையர்கள் ஒரு வருடத்திற்குள் கைது செய்யப்பட்டனர்.”அவர்கள் பச்சை விளக்கின் மீது கையுறையை வைத்தார்கள், மலிவான பேட்டரியை கம்பி மூலமாக சிவப்பு விளக்கில் இணைத்தார்கள். இதன் மூலம், ஓட்டுநர் ரயிலின் வேகத்தைக் குறைக்க வேண்டியிருந்தது” என்று அபிஸ் கூறினார்.
சிவப்பு விளக்கைப் பார்த்ததும், ரயிலின் ஓட்டுநர் ஜாக் மில்ஸ் ரயிலை நிறுத்தினார், அவரது சக ஓட்டுநர் டேவிட் விட்பி, தண்டவாளத்தின் ஓரத்தில் இருந்த ‘ட்ராக்சைடு தொலைபேசியில்’ பிரச்னை என்ன என்பதைக் கண்டறிய வெளியே வந்தார்.
அப்போதுதான், தொலைபேசி லைன் துண்டிக்கப்பட்டிருப்பதை விட்பி கண்டுபிடித்தார். உடனே, முகமூடி அணிந்தவர்கள் அவரைத் தாக்கினர். இதற்கிடையில், முகமூடி அணிந்த ஒரு கொள்ளையர், ஓட்டுநர் மில்ஸை தடுக்க ரயிலின் என்ஜின் கேபினுக்குள் நுழைந்தார். மில்ஸ் சண்டையிட முயன்றபோது, மற்றொரு கொள்ளையன் அவரது தலையில் தாக்கியதால் அவர் மயக்கமடைந்தார்.
“இதில் கொள்ளையர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை என்னவென்றால், ரயில் ஓட்டுநர் கொள்ளையர்களை எதிர்க்க முயன்றது தான். கொள்ளையர்களில் ஒருவர் அவரது தலையில் ஒரு கோஷ் (Cosh) ஆயுதத்தால் அடித்தார். ஓட்டுநருக்கு நிறைய ரத்தம் வழிந்து அவர் கீழே விழுந்தார்.” என்று அபிஸ் கூறினார்.
ரயிலின் முன்பக்க இரண்டு பெட்டிகளில் பணம் மற்றும் அதிக மதிப்புள்ள பார்சல்கள் வைக்கப்பட்டிருப்பதாக கொள்ளை கும்பலுக்கு ரயிலுக்குள் இருந்த ஒருவரே தகவல் கொடுத்துள்ளார். அது வங்கி விடுமுறை நாட்களைத் தொடர்ந்து வந்த வார இறுதி என்பதால், வழக்கத்தை விட அதிக பணம் அந்த ரயிலில் எடுத்துச் செல்லப்பட்டது.
பணம் நிறைக்கப்பட்ட நூற்று இருபது பைகள்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கொள்ளைச் சம்பவம் நடந்த பகுதிரயிலில் போலீசார் யாரும் இல்லை என்றாலும், 70க்கும் மேற்பட்ட தபால்துறை ஊழியர்கள் இருந்தனர். ஆனால் அதில் பெரும்பாலானோர் பின்புற பெட்டிகளில், கடிதங்களை வரிசைப்படுத்துவதில் மும்முரமாக இருந்தனர்.
ரயிலின் செயல்பாடு மற்றும் அமைப்பை ஏற்கனவே அறிந்திருந்த குற்றவாளிகள், பணம் நிறைந்த இரண்டு பெட்டிகளையும் விரைவாக மற்ற பெட்டிகளிடமிருந்து பிரித்தனர். பணப் பைகளை எடுப்பதை எளிதாக்குவதற்காக, பெட்டிகளை தனியாகப் பிரித்து, வேறொரு குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டுசெல்வதே கொள்ளையர்களின் திட்டமாக இருந்தது.
அப்போதுதான் அவர்களுக்கு ஒரு பிரச்னை ஏற்பட்டது. “ரயிலை ஓட்ட அவரது குழுவில் ஒரு டிரைவர் இருந்தார். ஆனால், அவரால் ரயிலை இயக்க முடியவில்லை. இதனால் அவர்கள் காயமடைந்த ஓட்டுநர் ஜாக் மில்ஸை தரையிலிருந்து தூக்கி, ‘ரயிலை ஓட்டு’ என்று மிரட்ட வேண்டியிருந்தது,” என்று அபிஸ் விவரிக்கிறார்.
“அவர் ரயிலை ஒரு மைல் தொலைவில், கொள்ளைக் கும்பலின் மற்ற உறுப்பினர்கள் காத்திருந்த இடத்திற்கு கொண்டு சென்றார். மற்ற எட்டு அல்லது ஒன்பது பெட்டிகள் தனியே பிரிந்தன. தபால்துறை ஊழியர்களுக்கு பெட்டிகள் பிரிந்தது கொஞ்சமும் தெரியவில்லை”
ரத்தம் வழிந்து கொண்டிருந்த மில்ஸிடம், பிரிடெகோ பிரிட்ஜில் இரண்டு முன்பக்க பெட்டிகளை மட்டும் கொண்ட ரயிலை நிறுத்தச் சொன்னார்கள். அங்கே, மீதமுள்ள கும்பல் பெட்டிகளுக்குள் நுழைந்து, அவற்றில் பணிபுரிந்துகொண்டிருந்த தபால் அலுவலக ஊழியர்களை மிரட்டி, தரையில் குப்புற படுக்க வைத்தது. அவர்கள் மில்ஸ் மற்றும் விட்பியையும் அழைத்து வந்தனர், இருவருக்கும் கைவிலங்குகள் மாட்டப்பட்டன.
கொள்ளையடித்த பணப்பைகளை ரயிலில் இருந்து இறக்குவதற்கு 15 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்குவது என்றும், அதற்குள் எடுக்கமுடியாத மீதமுள்ள பணத்தை அப்படியே விட்டுவிடுவது என்றும் அந்த கும்பல் முடிவு செய்திருந்தது.
அவர்கள் ஒரு மனிதச் சங்கிலியை உருவாக்கி, இரண்டரை டன் பணம் அடங்கிய 120 சாக்குப் பைகளை அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லேண்ட் ரோவர் வானங்களில் விரைவாக ஏற்றினர். 15 நிமிடங்களுக்குப் பிறகு, ரயிலில் இருந்த தபால் அலுவலக ஊழியர்களை அசையாமல் இருக்க வேண்டும் என்றும், அடுத்த 30 நிமிடங்களுக்கு போலீஸைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கக் கூடாது என்றும் மிரட்டி உத்தரவிட்ட கொள்ளையர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கொள்ளைச் சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை நடத்தும் காவல்துறைஇவ்வளவு துணிச்சலாக மேற்கொள்ளப்பட்ட அந்த திருட்டும், கொள்ளையடிக்கப்பட்ட மிகப்பெரிய அளவிலான பணமும் பிரிட்டன் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. அதைத் தொடர்ந்து வந்த வாரங்களில், குற்றவாளிகளைத் தேடும் காவல்துறையின் முயற்சிகளை விவரிக்கும் பரபரப்பான தலைப்புச் செய்திகள் நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டது.
ஆனால், கொள்ளைச் சம்பவம் கச்சிதமாக திட்டமிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டும் கூட, ஒரு வருடத்திற்குள் பெரும்பாலான கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணையை எதிர்கொண்டனர்.
“மேலோட்டமாக அது நன்கு திட்டமிடப்பட்ட ஒரு கொள்ளைச் சம்பவம் தான். ஆனால், அதன் முடிவு அழிவுக்கு தான் அவர்களை இட்டுச் சென்றது. தங்களது புத்திசாலித்தனம் குறித்து அவர்கள் தவறாக எடைபோட்டுவிட்டனர் என்பது தெளிவானது.” என்றார் கொள்ளை தொடர்பான விசாரணைகளுக்கு தலைமை தாங்கிய முன்னாள் டிடெக்ட்டிவ் கண்காணிப்பாளர் மால்கம் ஃபியூட்ரெல். 1964 இல் பிபிசியிடம் இதை அவர் கூறினார்.
கொள்ளையர்களின் செயல்களை பொதுமக்களில் சிலர் ‘ஹீரோயிசம்’ என்று கருதியது போல் வழக்கின் நீதிபதி கருதவில்லை. குற்றவாளிகளிடம் கருணை காட்டினால் அது பெரும் தவறாக இருக்கும் என்று நீதிபதி கூறினார்.
குற்றமும் தண்டனையும்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ரயில் ஓட்டுநர் மில்ஸ்”நீதிபதி லார்ட் எட்மண்ட் டேவிஸ் அரை மணி நேரத்திற்குள் 307 ஆண்டுகளை (12 பேருக்கான தண்டனை) அறிவித்தபோது, நீதிமன்ற அறையில் ஒரு அதிர்ச்சி அலை வீசியது எனக்கு நினைவிருக்கிறது,” என்று அபிஸ் 2023இல் பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
அந்த சமயத்தில், கொள்ளைக்காக அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் பிரிட்டிஷ் குற்றவியல் வரலாற்றில் மிகக் கடுமையானவை, குறிப்பாக அந்த கொள்ளைச் சம்பவத்தில் யாரும் கொல்லப்படவில்லை மற்றும் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படவில்லை எனும்போது.
“நான் அப்படியே அதிர்ந்து விட்டேன், 30 வருடங்கள்- அது மட்டுமே என் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. எப்போது நாம் சிறையிலிருந்து வெளியேறப் போகிறோம்? நம்மால் ஒருபோதும் விடுதலை பெற முடியாது என்று நினைத்தேன்” என்று கொள்ளையர்களில் ஒருவரான டாமி விஸ்பே 1978இல் ‘மேன் அலைவ்’ நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
“இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் எங்களுக்கு எவ்வளவு கடுமையான தண்டனை கிடைத்துள்ளது என்பதை உணர்ந்தோம்” என்று இந்தக் கும்பலைச் சேர்ந்த கோர்டன் கூடி பிபிசியிடம் கூறினார். “உளவியல் ரீதியாக நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டோம்” என்றார்.
தண்டனையின் கடுமைக்கு நீதிபதி கூறிய காரணம், ரயில் ஓட்டுநர் மில்ஸ் மீதான தாக்குதல்.
“தாக்கப்பட்ட அந்த ரயில் ஓட்டுநரைப் பார்த்த எவருக்கும், ஆயுதமேந்திய கொள்ளையர்களின் இத்தகைய கூட்டுத் தாக்குதல்கள், சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் மீது எந்தளவு பயங்கரமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை புரிய வைத்திருக்கும்,” என்று நீதிபதி டேவிஸ் வழக்கு விசாரணையில் கூறினார்.
மில்ஸ், மீண்டும் ஒருபோதும் முழுமையாக பணிக்குத் திரும்பவில்லை. 1970இல் ரத்த புற்றுநோயால் அவர் இறந்தார். அவரது சக ஓட்டுநராக பணிபுரிந்த விட்பி, அதற்கு அடுத்த ஆண்டு, தனது 34வது வயதில் மாரடைப்பால் இறந்தார்.
சிறையிலிருந்த தப்பித்த குற்றவாளிகள்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ‘கொள்ளையர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும்’ என்பதைத் தெரிவிக்கும் காவல்துறையின் போஸ்டர்ஆனால், இந்த கொள்ளைச் சம்பவம் பிரிட்டன் அரசை சங்கடப்படுத்தியதால் தான், இவ்வளவு கடுமையான தண்டனை வழங்கப்பட்டது என்ற உணர்வு கொள்ளையர்கள் மத்தியில் இருந்தது.
“நீதிபதி டேவிஸ் இரண்டு காரணங்களுக்காக கடுமையாக நடந்து கொண்டார் என்ற உணர்வு இருந்தது. ஒன்று ரயில் ஓட்டுநருக்கு எதிராகக் காட்டப்பட்ட வன்முறை. மற்றொன்று, பிரிட்டிஷ் ரயில்வே துறை, தபால் துறை, மற்றும் பிரிட்டன் அரசுக்கு இந்தக் கொள்ளைச் சம்பவத்தால் ஏற்பட்ட அவப்பெயர். அரசு துறைகளில் உள்ளவர்கள் கவனக்குறைவாக இருந்திருக்கலாம் என்பதை இது காட்டியது.” என்று கூறினார் அபிஸ்.
குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குற்றவாளிகளில் இருவர் திடீரென சிறையில் இருந்து தப்பிச் சென்றதால், அவர்களின் புகழ் மேலும் அதிகரித்தது. அந்த குழுவில் முககிய அங்கம் வகித்த சார்லஸ் வில்சன், நான்கு மாதங்களுக்குப் பிறகு சிறையில் இருந்து தப்பினார்.
நான்கு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பிறகு கனடாவில் மீண்டும் கைது செய்யப்பட்டார், மேலும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார். தண்டனை விதிக்கப்பட்ட 15 மாதங்களுக்குப் பிறகு, ரோனி பிக்ஸ் லண்டனின் வாண்ட்ஸ்வொர்த் சிறையிலிருந்து ஒரு கயிற்றைப் பயன்படுத்தி தப்பினார்.
அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். மேலும் ஸ்பெயின், ஆஸ்திரேலியா மற்றும் பிரேசிலில் சில காலம் வசித்து வந்தார், கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கைது நடவடிக்கையிலிருந்து தப்பி வந்தார். 2001ஆம் ஆண்டில், அவர் தானாக முன்வந்து, மருத்துவ சிகிச்சைக்காக பிரிட்டன் திரும்பினார், மீதமுள்ள சிறைத் தண்டனையை அனுபவித்தார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.காவல்துறை இறுதியாக தலைமறைவாக இருந்த மூன்று கொள்ளையர்களையும் கைது செய்தது. கொள்ளையின் மூளையாகக் கருதப்பட்ட புரூஸ் ரெனால்ட்ஸ், ஐந்து ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். அதன் பிறகு பிரிட்டன் திரும்பியபோது அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, ஆனால் 10 ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை அனுபவித்தார்.
மற்றொரு குற்றவாளி, ரொனால்ட் ‘பஸ்டர்’ எட்வர்ட்ஸ், கொள்ளையைத் தொடர்ந்து மெக்சிகோவிற்கு தப்பிச் சென்றார். அவர் 1966இல் சரணடைந்தார், ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மற்றொரு நபரான ஜேம்ஸ் வைட், மூன்று ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். பிறகு கென்ட்டில் பிடிபட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டார். அவர் 1975 இல் விடுவிக்கப்பட்டார்.
நீண்ட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், ரயில் கொள்ளையில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளும் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர். இந்தக் குற்றத்திற்காக யாரும் 13 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை அனுபவிக்கவில்லை. இருப்பினும் அவர்களில் பலர் அடுத்தடுத்த ஆண்டுகளில் வெவ்வேறு குற்றங்களுக்காக மீண்டும் சிறைக்குச் சென்றார்கள்.
கொள்ளையின் போது திருடப்பட்ட பெரும் தொகையைப் பொருத்தவரை, 1964ஆம் ஆண்டில் காவல்துறையினர், பணத்தை மீட்க உதவும் வகையில் தகவல் அளிப்பவர்களுக்கு நல்ல வெகுமதி (திருடப்பட்ட பணத்தின் மதிப்பில் 10%) அறிவித்தும், பெரும்பாலான பணம் கடைசிவரை மீட்கப்படவில்லை.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.